Total Pageviews

Saturday, January 22, 2011

நானே முதல் குற்றவாளி- கவிதை

தூக்கம் இருண்டுபோன
இந்த மெல்லிய இரவில்
விழித்திருக்கும் என்
உணர்வுகளைச் சுட்டி
எதைப்பற்றி நான்
எழுதப் போகிறேன்?

பாசம் மனசு நட்பு
எல்லாமே பொய்யாகிவிட்ட
வாழ்க்கையை இனியும்
வாழ்ந்து எதை
சாதிக்கப்போகிறது
எனது எதிர்காலம்..

வலிக்கிறது
என் விரல்களும் இதயமும்..

கருகிப்போன கனவுகளை
மீண்டும் யாசிக்கிறது
என் கண்கள்..
உருகிப்போன நினைவுகளை
மீண்டும் வேண்டுகிறது
என் கணங்கள்

வலிகளில் நிறைந்து போன
என் விழிகளைப்பற்றி
ரணங்களில் புதைந்து போன
என் ஆத்மார்த்தம் பற்றி
துயரப்பாடல்கள் உச்சரிக்கும்
என் பேனா பற்றி
காயங்களின் சுவடுகளை ஏந்தி நிற்கும்
என் பாவப்பட்ட இதயம் பற்றி
இனிப்பேச யாருமில்லையா?

உலுக்கி எடுக்கும்
அதிர்வுகளைத் தாங்கி
வாழ்தல் மீதான பயணம்
நீள்வது அத்தனை எளிதில்லை

இனியும் என்ன இருக்கிறது?

சேரத்து வைத்த ஆசைகள்
அநாதையான பின்பும்
நம்பியிருந்த உறவுகள்
சுக்கு நூறான பின்பும்
தேக்கி வைத்த நம்பிக்கை
வேரிழந்த பின்பும்

இனியும் என்ன இருக்கிறது?

காலியாகிப்போன பாசப்பைகளில்
இனி நான் இடப்போவதில்லை
சில்லறை மனிதர்களை..

எல்லா இதயங்களிலும்
போர்வைகள்..
எல்லா முகங்களிலும
முகமூடிகள்..
எல்லா புன்னகைகளிலும்
விஷங்கள்..
எல்லா பார்வைகளிலும்
வக்கிரங்கள்..

உறவென்னும் தேசத்தில்
அகதியாக்கப்பட்டவன் நான்

மனிதர்களைத் தேடிய
என் நித்திய பயணத்தில்
எப்போது நிகழும்
திடீர் திருப்பம்?

யாரையும் குற்றம் சாட்டவில்லை
காரணம் முதல் குற்றவாளி
நான்தானே?

தூக்கம் இருண்டுபோன
இந்த மெல்லிய இரவில்
விழித்திருக்கும் என்
உணர்வுகளைச்சுட்டி
இன்னும்
எதைப்பற்றி நான்
பாடப்போகிறேன்?

No comments:

Post a Comment