Total Pageviews

Wednesday, April 26, 2017

வெட்டவெளி ரகசியம்







தவசீலர்களுக்கு ஆத்ம வணக்கம்!
பிரபஞ்சம் என்றால் ‘ஒளியிலிருந்து ஐந்து பூதங்களாக விரிந்தது’ எனப்பொருள். ஒளியிலிருந்து விரிந்த அல்லது விரிந்து கொண்டிருக்கும் ஒன்றிற்கே பிரபஞ்சம் எனப்பெயர். இது ஒரு சமகிருத பதம். தமிழில் இந்த சொல்லை பேரண்டம் எனச் சொல்லலாம். பிரபஞ்சத்தை ஒருபோதும் இந்த ஊனக்கண்களால் ழுமையாக புறத்தில் கண்டுவிடவே முடியாது. அறிவியல் கூட அனுமானத்தினால் மட்டுமே அதனை வரையறுத்திருக்கிறது. ஆக, பிரபஞ்சத்தின் வடிவம் உத்தேசமானது என்பதையும் விஞ்ஞானத்தாலும் அதனுடய முடிந்த முடிவை உறுதிசெய்ய முடியவில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

பிரபஞ்சம் மட்டுமல்லாது நாம் காணுகின்ற தரிசனத்திற்கோ, காட்சிக்கோ, அல்லது காணாத காட்சிக்கோ எல்லாவற்றுக்கும் அடிப்படையாய் இருப்பது வெளி ஆகும். (இங்கு வெளி என குறிப்பது பஞ்ச பூதங்களிலுள்ள ஆகாயம் அல்ல) இதனை வெட்டவெளி எனச் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். அதுவே மெய்ப்பொருள் அல்லது ஆதிமூலம் என்றும் நம்பப்படுகிறது. 

வெட்டவெளி 
 பேரண்டங்கள் 
 அண்டங்கள் 
 விண்மீன் குடும்பங்கள் 
சூரியக்குடும்பம் 
பூமி 
உயிரினங்கள் 
 மனிதன் என்பதாகவே இங்கு பரிமாணம் நடந்தேறியிருக்கிறது என்பதை ஓரளவு விளங்கிக் கொள்தல் அவசியம். வெட்டவெளியில் பிரபஞ்சம் தோன்றியதை பெருவெடிப்புக் கொள்கையின் மூலமாக அறிவியலாரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் பெருவெடிப்புக்கு சில வினாடிகள் முன்பு என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை அறிவியல் இன்றும் ஆய்வாக மட்டுமே வைத்திருக்கிறது. மெய்ஞானமோ முடிந்த முடிவை சித்தாந்தம் ஆக்கியிருக்கிறது.

பேரண்டத் தோற்றத்தை எளிமையான வழியில் புரிந்து கொள்ளப் பார்ப்போம். எவ்வித அசைவும் இல்லாதிருக்கும் வெட்டவெளியில் திடீரென ஒரு அசைவு நிகழ்கிறது. அந்த அசைவு ஏற்பட எந்த இயக்கம காரணமோ அவ்வியக்கமே பேரண்டம் உள்ளிட்டவைகளுக்கு அடிப்படையாகவும் அமைகிறது. வெட்டவெளியின் ஒரு புள்ளியில் நிகழும் இந்த அசைவு பெரிதாகிறதுது. அவ்விரிவால் அண்டங்கள் உள்ளிட்ட அமைப்புகள் முளைக்கின்றன. அசைவின்றி இருக்கும் வெட்டவெளியில் திடும்மென்று நிகழும் அசைவைக் காட்சியாக்கிக் கொண்டால் பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் நமது அறிவால் உணர்ந்துகொள்ள முடியும்.




வெட்டவெளி, பேரண்டம் உள்ளிட்டவற்றை இன்னும் எளிதாகப் புரிந்து கொள்ள . சிவம், சக்தி எனும் குறியீடுகளைப் பார்ப்போம். சிவம் என்பது வெட்டவெளியைக் குறிப்பது. சவம் என்றால் உயிரற்றது என நாமறிவோம். அப்படியானால் சிவம்? ஆம், உயிருள்ளது. சவத்தை இன்னும் நுட்பமாக சிந்தித்தால் உயிரற்றதோடு அசைவற்றது எனத் தெரிந்து கொள்ளலாம். சிவத்தை நுட்பமாக சிந்தித்தால் இயக்கமற்று ஆனால் உயிருள்ளதாகக் காட்சியளிக்கும். அதாவது, இயக்கமில்லாமல் உயிரோடு இருக்கும் வெளியே சிவம். திடீரென வெளியில் நிகழும் அழுத்தமே வெடிப்பு அல்லது விரிவாகிறது என்று ஏற்கனவே பார்த்தோம். அந்நிலையில் சிவம் உயிருள்ள இயக்கமாக மாறுகிறது. அவ்விடத்தில் அதன் பெயர் சிவமல்ல, சக்தி. உயிருள்ள இயக்கமற்ற வெளியான சிவம் இயக்கத்திற்கு வரும்போது சக்தி எனச்சொல்லப்படுகிறது. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், உயிருள்ள இயக்கமற்ற வெளியைச் சிவம் என்றும் உயிருள்ள இயக்கங்கள் நிகழும் வெளியை சிவசக்தி என்றும் கொள்ளலாம்.

வெட்டவெளியின் சிறுபுள்ளியில் திடீரென நிகழும் இந்த அசைவால் உண்டாகும் சத்தமும்(நாதம்), வெளிச்சமும்(ரூபம்) பேரண்டத்திற்கான தோற்றப்புள்ளிகள். நமது மதங்களில் அவ்வொலியை ஓங்காரம் என்றும், ஆமென், ஆமீன், என்றும், வெளிச்சத்தை சோதி என்றும் குறிப்பிடுகிறார்கள். இங்கு ஒன்றைத் தெளிவுபடுத்துவது அவசியமாக இருக்கிறது. வெளிச்சம் வேறு, ஒளி என்பது வேறு, பேரொளி என்பது வேறு, சுயம்சோதி என்பது வேறு. மீண்டும் ஒலி, ஒளிக்கு வருவோம். நாதம், விந்து என இரண்டு சொற்களை சமயத்தில் தோற்றக்குறியீடுகளாகக் குறிப்பிடுவர். நாதம் என்பது ஒலி; விந்து என்பது ஒளி. ”நாத விந்து கலாதி நமோநம” எனும் அருணகிரிநாதரின் திருப்புகழ் ஒரு சான்று. நாதம்(ஒலி) முதலிலும், விந்து(ஒளி) பிற்பாடும் என்பதாகவே அப்பாடலே சொல்கிறது. சமயத்தில் இறைவனை நாதன் என்றே குறிப்பிடுகிறார்கள், சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி,சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி என்றும், நாதன் நாமம் நமச்சிவாயவே எனச்சொல்வதையும் இங்கு நினைவுகூரவும். ஆக பிரபஞ்சத்தோற்றத்திற்கு அடிப்படையான நாதத்திற்கு மூலமான பொருளைச் சுட்டும் குறியீடு நாதன்.

இப்போது பிள்ளையார், முருகன் குறியீடுகளுக்கு வருவோம். சிவசக்தி என்பது வான்காந்த ஆற்றல் தத்துவம் இந்தப் பிள்ளையார் முருகன் என்பது மின்னாற்றல் தத்துவம், வான் காந்தத்திலிருந்தே மின் காந்தம் தோன்றி அது மின்னற்றலாகிறது. (இந்த ஆற்றல்களைப் பற்றி இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்) ஓங்கார வடிவாகச் சொல்லப்படுபவர் பிள்ளையார். வெட்டவெளிக்குள் நிகழும் இயக்கத்தின் துவக்கமாய் வெளிப்படும் ஒலியைச் சுட்டி நிற்பவர் அவர். அதனால் அவர் நாத முதல்வர். ஒலியைத் தொடர்ந்து உதிக்கும் ஒளியைச் சுட்டும் குறியீடே முருகன். “ஆதிநடுஅந்தம் கடந்த நித்தியானந்தப் போதமாய் பந்தம் தண்ந்த பரஞ்சுடராய்” எனும் குமரகுருபரரின் கந்தர்கலி வெண்பா வரிகளைக் கவனியுங்கள். ”சோதிப்பிழம்பதோர் மேனியாக” எனும் கந்தபுராண வரியையும் நினைவு கூர்வோம். ”ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகனுருவங் கண்டு” என்று கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்.

பிள்ளையார் , முருகன் எனும்போது அதனை ஆற்றல்களாக புரிந்துகொள்ளாமல் நபர்களாகப் புரிந்துகொள்ளும் அபக்குவ நிலையே இங்கு தன்னை அறிவதற்குத் தடையாக இருக்கிறது. வெட்டவெளியின் ஓரிடத்தில் திடீரென நிகழும் அசைவு அல்லது விரிவே பிரபஞ்சத்தோற்றத்துக்கான அடிப்படை என்பதை நினைவுக்குக் கொண்டு வருவோம். “ஓமென்ற சிறுமுட்டை உள்வீடு அவன்வீடு நம்வீடும் அந்த இடமே” எனும் கண்ணதாசனின் எளிய பாடல்வரிகளை அக்காட்சியோடு பொருத்திப்பார்ப்போம். அறிவியல் விளக்கங்களால் பெற்றுவிட முடியாத ஆனந்தத்தை நாம் உணரலாம். அதுதான் நம் குருமார்களின் விருப்பமும் .

விஞ்ஞானத்தை அறிவு எனக்கொண்டால், மெய்ஞானத்தை அனுபவம் எனக்கொள்ளலாம். விஞ்ஞானம் தான் கண்ட அறிவை பொதுப்படையானதாக மாற்ற முயல்கிறது. அந்த அறிவை அனுபவத்தைத் தனிப்பட்டதாக உணரச்செய்வது மெய்ஞானம். விஞ்ஞானக் கலைச்சொற்கள்(வாக்கு) நேரிடையானவை; அதனாலேயே நமக்குச் சலிப்பூட்டுபவை. மெய்ஞானச் சொற்கள் (எழுத்து) உருவகங்களாலும், உவமைகளாலும் ஆனவை. அதனாலேயே நமக்குத் தொடர்ந்து உற்சாகம் தருபவை. பொருள்சார் உலகத்திற்கு வேண்டுமானால் புறத்தில் வளர அறிவியல் முக்கியமானதாக இருக்கலாம். தனிமனிதனுக்கோ அகத்தில் வளர மெய்ஞானமே முக்கியம். மெய்ஞானம் என்பதை தயவுசெய்து நவீனகால மதமாக அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். ஒருவனை அவனிலிருந்து விடுவித்து வெட்டவெளியின் சிறுதுகளாக அவனை உணரச் செய்வதே உண்மையான மெய்ஞானமாக இருக்க முடியும். மற்றவை எல்லாம் – எப்படிப்பட்ட புனித அடையாளங்களை முன்வைத்தாலும் – போலிகளே.

நமது குருமார்கள் நமக்களித்திருக்கும் மெய்ஞானத்தை அறிவியல் துணைகொண்டு இங்கு நிரூபிக்க முயலவில்லை. அப்படியாக முயற்சிப்பது நம்மை நாமே கேவலப்படுத்தும் செயல் என்பதும், மெய்ஞானத்திலிருந்தே இந்த விஞ்ஞானம் தோன்றியது என்பதும் நமது தீர்மானமான முடிவு. இருப்பினும் நமது குருமார்கள் நமக்களித்திருக்கும் குறியீடுகளைக் கொண்டும், நமது குருமார்கள் நமக்களித்த மெய்யறிவைக் கொண்டும் பிரபஞ்சம் உள்ளிட்டவை குறித்த என் பார்வையை உங்கள் முன்வைக்கிறேன், அவ்வளவே.......