Total Pageviews

Friday, April 29, 2011

ஆவுடையக்காள்





சித்ரா பெளர்ணமிக்கு ரமணாஸ்ரமம் போயிருந்தபோது சந்திரமௌலி சாரை பார்க்க நேர்ந்தது.

"வாங்க சிவா, உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். உங்க ஊரு ஆவுடையக்காப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க"

”................................................................"

"என்ன சிவா ஆவுடையக்காப் பேரு கேட்டிருக்கேளா?”


"ஆவுடையக்கா, செங்கோட்டையைச் சேர்ந்த்தவர்கள்-னு தெரியும். அவங்களோட முழுவிபரம் தெரியல சார்."


“ செங்கோட்டை ஆவுடையக்காளைக் கேட்டதில்லையா? பாரதியாருக்கு முன்னோடி.ரமணபகவான் ஆவுடையக்காளின் பாடல்களை விரும்பி படித்திருக்கிறார், எனக்கும் இப்பத்தான் தெரிய வந்தது பாத்துகிடுங்கோ.”

செங்கோட்டைப் பகுதியில் நிறைய பேர் ஆவுடையம்மாள், ஆவுடையப்பன் எனும் பெயரில் இருக்கும் காரணம் என்ன என்பது எனக்குப் புரிய வந்தது. பிள்ளைமார் இனத்தைச் சேர்ந்தவர்களும், பிராமணக் குடும்பங்களிலும் இந்தப் பெயர் அதிகமாகக் காணப்படுகிறது.

ஊருக்கு வந்தவுடன் தம்பி ராஜேஜையும், திரவியத்தையும் தொடர்பு கொண்டு விசாரித்ததில் சில செய்திகள் கிடைத்தது. தென்காசி கோவிலில் மேலகரத்தில் வசிக்கும் ஒரு பெரியவரிடமிருந்து சிறு பிரசுரங்கள் கிடைத்தன. அந்தப் பெரியவர் ஆவுடையக்காளின் பாடல்கள், மணிப்பிரவாளத் தமிழ் நடையில் அமைந்துள்ள மொழி அமைப்பு என்றும் அக்காள் அத்வைதி என்றும், இளம் விதவை என்றும் துண்டு துண்டான தகவல்கள் சொன்னார்.


செங்கோட்டையில் நமது யோகயுவகேந்திரா இருந்த தெருவின் அருகில்தான் ஆவுடையக்காளின் பூர்வீக வீடு இருந்தது எனக் கேட்கும் போது எனக்கு சற்று வெட்கமாகவும், கஷ்டமாகவும் இருந்தது. 


இன்று காலை தற்செயலாகப் புத்தக அலமாரியைப் புரட்டும்போது "ஆவுடையக்காளின் பாடல்கள்" என் கண்ணில் பட்டதும் ஆனந்தம் கரை புரண்டோடியது. எனது உடற்கல்வி ஆசிரியர் திரு பாலசுப்ரமணியம் அவர்களிடம் இருந்து ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகப் பெறப்பட்டப் புத்தகம். சித்தர் பாடல்களில் எனக்கிருந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்டு பால் சாரால் எனக்கு வழங்கப்பட்டப் புத்தகம்

(இந்த இடத்தில் ஆசிரியர் பாலசுப்ரமணித்தை நினைவு கூறாமல் இருக்க முடியவில்லை. முரட்டுத்தனமான உடற்பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்த என்னை யோகத்தின் முக்கியத்தை எடுத்துக்கூறி யோகப்பாதையில் மடைமாற்றி விட்டவர் இவர்தான். இன்று இவர் நம்மோடு இல்லை. காலம் புற்றுநோய் கொடுத்து இவரைக் கூட்டிச்சென்று விட்டது. என்னால் மறக்க முடியாதாத மனிதர்களுள் இவரும் ஒருவர். )

செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் (பக்தி, யோக, ஞான, வேதாந்த ஸமரஸ) பாடல் திரட்டு. 325 பக்கங்கள், டெமி அளவு, 2002 ஆம் ஆண்டுப் பதிப்பு, விலை ரூ 100.00, வெளியீடு: ஸ்ரீ ஆனந்த நிகேதன், ஸ்ரீ ஞானானந்த தபோவனம். தபோவனம் அஞ்சல் – 605 756. விழுப்புரம் மாவட்டம்.

சமர்ப்பணம் பகுதியில் ஸ்ரீ ஞானானந்த நிகேதனம், நித்தியானந்த கிரி சுவாமிகள், ஆவுடையக்காளை தமிழ் நாட்டின் பெருமை மிக்க பெண்டிர் ஞானிகளில் ஒருவர் என்றும், சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டத்து செங்கோட்டை தாலுகாவில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும் சொல்கிறார்.

மிகவும் சிறிய வயதிலேயே, வயதுக்கு வரும் முன்பே விதவையானவர். திருவிசை நல்லூர், ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் எனும் புகழ்பெற்ற மகானின் அனுக்கிரகமும் மந்திர தீட்சையும், வேதாந்த ஞான உபதேசமும் பெற்றவர், ஆத்ம அனுபூதியில் லயித்து, மௌனியாக, பித்த நிலையில் இருந்தவர், படித்தவர், படிக்காதவர் என எல்லோராலும் கொண்டாடப் பெற்றுப் பிரபலமடைந்தார், என்பது நித்யானந்தகிரி சாமிகளால் கூறப்படும் தகவல்கள்.

ரிஷிகேசம் ஸ்ரீ சிவானந்த சரஸ்வதி சுவாமிகள், ‘மகாத்மாக்கள் சரித்திரம்,’என்ற நூலில், “ஆவுடையக்காள் அருளிய அருட்பாக்களில் உபநிஷத்துகளின் ஆன்மீக உண்மையே தொடர்ந்து இழையோடுகின்றது,” என்கிறார்.

சிறுசிறு புத்தகங்களாக அவ்வப்போது பதிப்பித்து வெளியிடப்பட்ட ஆவுடையக்காள் பாடல்கள் பலவற்றையும் தொகுத்து வெளியிட்டவர் ஆய்குடி திரு.வெங்கட ராம சாஸ்திரிகள்.


பகவான் ரமண மகரிஷியின் முன்னிலையில் ஆவுடையக்காள் எழுதிய பாடல்கள் சிலவற்றைப் பாடுவது வழக்கமாக இருந்திருக்கிறது.


‘பிரம்ம மேகம்’ எனும் ஆவுடையக்காளின் சிறு பாட்டுப் புத்தகம், 1910-ம் ஆண்டுப் பதிப்பு, ஆவுடையக்காள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்தார் என்ற குறிப்புத் தருவதால், ஆவுடையக்காள் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் எனக் கொள்ளலாம். ஆனால், நாம் விவாதிக்கும் மேற்சொன்ன நூலின் சமர்ப்பணப் பகுதியில், நித்யானந்தகிரி சுவாமிகள் ஆவுடையக்காள் 250 ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவர் என்கிறார். ஆய்குடி வெங்கடராம சாஸ்திரிகள் கூற்றுப்படி ஆவுடையக்காள் இன்றைக்கு 460 ஆண்டுகளுக்கு முந்தியவராக இருக்க வேண்டும். அதை ஆய்வாளர்கள்களின் பணிக்கு விட்டுவிடலாம்.


ஔவையார், காரைக்காலம்மையார் வரிசையில் வைத்து எண்ணத்தக்க ஆவுடையக்காள் பாடல்களைச் செங்கோட்டைப் பிராமணப் பெண்கள், பாராயணமாகவும், கல்யாண காலங்களிலும் பாடுவார்கள். ஆனால் அது ஆவுடையக்காள் பாடல்கள் என்பது எனக்குத் தெரியாமல் போயிற்று. 


ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஆன்மீக எழுத்தாளர், காசியில் சிருங்கேரி மடத்தில் பல்லாண்டுகள் வாழ்ந்தவர் திருமதி.கோமதி ராஜாங்கம். ஆவுடையக்காளைப் பற்றி விரிவாக ஆராய்ந்து பாடல்களையும் தகவல்களையும் சேகரித்துள்ளார்.


“அக்காலத்து இளம் விதவைகளுக்கு அக்காளின் பாடல்களே தாரகம். மத்தியான உணவுக்குப் பின் பத்துப்பெண்கள் கூடிக் கொண்டு, அக்காளின் பாட்டைச் சொல்லிக் கொண்டு, தங்களுக்கே ஆறுதல் அடைந்து கொள்வது வழக்கம்”, என்கிறார்.


இந்த கோமதி ராஜாங்கம், மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் மனைவி செல்லம்மாளின் தங்கை மகள். அவர் ஒரு நூலில் தரும் தகவல் சுவாரசியமானது.


”ஸ்ரீ சுப்ரமணிய பாரதியார் அவர்களுக்கு ஸ்ரீஅக்காள் அவர்களின் பாடல்கள் என்றால் உயிர். அவரும் ஸ்ரீ அக்காளின் வரலாற்றை அறிய முயற்சி செய்ததாகத் தெரிகிறது. அவருடைய அநேகப் பாடல்களின் கருத்துக்களை ஒட்டியே அவரும் அநேக வேதாந்தப் பாடல்களை எழுதியிருக்கிறார். அவர் எனது தாயார் அவர்களின் சகோதரியின் கணவராகையால் சிறுவயதில் அவர் மூலமாகவும் சில தகவல்கள் அறியும் பாக்கியம் கிட்டியது,” என்கிறார் கோமதி ராஜாங்கம்.


ஆவுடையக்காள் வசதியான குடும்பத்தில், செங்கோட்டை ஆற்றங்கரைத் தெருவில் பிறந்தவர். பாவாடை கட்டத் தெரியாத வயதில் திருமணமாகி மஞ்சள் கயிற்றின் மணம் மாறுமுன் விதவையாகவும் ஆகிறார். சமுதாயத்தை எதிர்த்து நின்று கல்வி கற்றார். பருவம் அடைந்ததும் தலை மொட்டையடிக்கப்பட்டு , வெள்ளாடை அணிந்து, கைம்மை நோன்பு. ஸ்ரீ வெங்கடேச சாமியின் ஆசியால் ஞானம் பெறுகிறார்.


கதை அத்துடன் தீர்ந்து போகவில்லை. பிராமண இளம்பெண், கைம்மை நோற்பவள், ஞானம் பெற்றாள், பாடல்கள் எழுதுகிறாள் எனில் இருநூறோ, நானூறோ ஆண்டுகள் முந்தைய சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? கடும் தண்டனையாக ஜாதியாய் விட்டேத் தள்ளி வைக்கிறார்கள். சற்று யோசித்துப் பாருங்கள், ஜாதியை விட்டு ஒதுக்கப்பட்டுக் கன்னி கழிந்திராத இளம் விதவை எங்கு போவாள், எதை உண்பாள், , எங்ஙனம் உயிர் தரித்திருப்பாள்?


இறைப்பித்து பிடித்தவள் போல இருந்திருக்கிறாள், தீர்த்த யாத்திரை போயிருக்கிறாள், அத்வைதப் பாடல்கள் எழுதியிருக்கிறாள், உலக வாழ்க்கையில் போராடி இருக்கவும் வேண்டும்.


பின்பு அக்காளுடைய மகிமை ஊரெல்லாம் பரவி, செங்கோட்டை திரும்பி, ஊர்க்காரர்களிடம் மரியாதை பெற்று, வெகுகாலம் வசித்தும் இருக்கிறார். ஒரு ஆடி மாத அமாவாசை அன்று திருக்குற்றாலம் சென்று அருவியில் நீராடுகிறாள் ஆவுடை அக்காள். 


பின்பு பொதிகை மலைமேல் ஏறிச் சென்றாள் எனவும் என்ன ஆனாள் என யாருக்கும் தெரியவில்லை என்பதும் வரலாறு.


ஆவுடையக்காள் பாடல்களின் தாக்கத்தை சித்தர் பாடல்களில் காணமுடிகிறது.ஆவுடையக்காளின் ‘அத்வைத மெய்ஞ்ஞான ஆண்டி’ என்றொரு பாடல்.


’கடத்தை இடித்தால் தாண்டி
கடம் ஆகாசம் ஆகும் என்றாண்டி
புரத்தை இடித்தால் தாண்டி
பரிபூரணம் ஆகும் என்றாண்டி’ என்பது அக்காளின் வரிகள் . இதை படிக்கும்போது


’நந்தவனத்திலோர் ஆண்டி- அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி- அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி’ எனும் கடுவெளிச்சித்தரின் வரிகள் ஞாபகம் வருகிறது.


‘சப்த கோடி மந்திரம் சாஸ்திரங்கள் உள்ளதும் போச்சே
சத்துமயமான சாட்சியே நானென்ப தாச்சே’ என ஆவுடையக்காள் பாடிய பாடலோடு 
‘மண்வெட்டி கூலிதினல் ஆச்சே- எங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே’ எனும்பாரதியின் பாடல் பாணியை ஒப்பிடலாம்.

‘ஜாதி வர்ணாசிரமம் போச்சே
வேத சாஸ்திரம் வெறும் பேச்சே’என்று அக்காள் பாடினால்,
‘ஜாதிச் சண்டை போச்சோ- உங்கள்
சமயச் சண்டை போச்சோ’ என்று பாரதி பாடுகிறார்.

‘காம குரோதமும் போச்சே
மோக இருளும் போச்சே’ என்று அக்காள் பாடுகிறாள், பாரதியோ,
‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே- வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே’ என்று பாடுகிறார்.

‘வேதாந்தக் கும்மி’ என்றொரு பாடலை ஆவுடையக்காள் பாடியிருக்கிறார்,
‘கும்மியடி பெண்கள் கும்மியடி
அகோர சம்சார சாகரத்தில்
ஜென்மக் கடலைக் கடத்தினவர் பாதம்
சிந்தித்துக் கும்மியடியுங்கடி- தினம்
வந்தித்துக் கும்மியடியுங்கடி’ என.
இத்துடன் பாரதியின் ‘பெண்கள் விடுதலைக் கும்மியை’ ஒப்பிடலாம்.

‘மனமும் பொய்யடியோ, குயிலே
மனக் கூடும் பொய்யடியோ
இனமும் பொய்யடியோ, குயிலே
தனமும் பொய்யடியோ!’ என்று’குயில் கண்ணி’யில் அக்காள் பாட்டு:

‘கோலமும் பொய்களோ- அங்கு
குணங்களும் பொய்களோ’. இது பாரதி

‘பாருக்குள் நபும்சகன் ஸ்த்ரீபோகம் புஜித்ததும்
பட்டணத்து அலங்காரம் பொட்டையன் கண்டதும்’
என்று அக்காள் பாடுகிறாள்
’நடிப்புச் சுதேசிகள்’ பாடலில் கிளிக்கண்ணிகளில், பாரதி,
சொந்த அரசும் புவிச்சுகங்களும் மாண்புகளும்
அந்தகர்க் குண்டாகுமோ- கிளியே
அலிகளுக்கு இன்பமுண்டோ?’
என்கிறார்.
அத்வைதத் தத்துவத்தில் அக்காளின் ஆளுமை மிகவும் வியக்க வைக்கிறது. ‘வேதாந்த அம்மானை’ பாடல்களில்,
‘அக்கினியை தூமம் மறைத்தாப்போல அம்மானை
அதிஸ்டானம் தன்னை மறைத்தாய் அம்மானை
பானுவை மேகம் மறைக்கும் அதுபோல
பரமார்த்தம் தன்னை மறைத்தாயே அம்மானை’
என்பதுவும்,
‘அன்னே பின்னே கும்மி’ பாடலில்,
‘என்னிடத்திலே யுதித்து என்னைப் பயமுறுத்தி
எனக்குப் பயந்தொளித்தது எங்கடி யன்னே’
என்பதுவும்,
‘சூடாலைக் கும்மி’யில்,
‘தேகத்தை விடும்போது தரிசனம் எனக்குத் தந்து
மோகத்தை வெல்லாமல் மோசம் போகாதே’
என்பதுவும் எடுத்துக் காட்டாய்ச் சில வரிகள். ‘மோகத்தைக் கொன்றுவிடு, அல்லால் எந்தன் மூச்சை நிறுத்தி விடு’ எனப் பாரதி பாடுவதும் நினைவில் வராமற் போகாது.

தூமைதூமை என்றுளே துவண்டு அலையும் ஏழைகாள்
தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்
ஆமைபோல முழுகிவந்து அநேகவேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.
என்று தீட்டு பற்றி சித்தர்களின் பாடல்களில் உள்ள வரிகள் உங்களில் பலருக்கும் நினைவில் இருக்கலாம்.இந்தப் பாடலுக்கு சமபாவத்தோடு

‘தீட்டு திரண்டு உருண்டு சிலைபோலே பெண்ணாகி வீட்டிலிருக்க
தீட்டு ஓடிப் போச்சோ- பராபரமே’ என்றும்
‘உக்கத்துப் பிள்ளையும் உன் கக்கத்துத் தீட்டன்றோ
உன்னுடைய வெட்கத்தை யாரோடு சொல்வேன் பராபரமே’

என்றும் வேகமாய்ப் பாடுகிறார் ஆவுடையக்கா.

அக்காள் சாதிப்பிரஷ்டம் செய்யப் பட்ட போது சாதி பேதமற்று வாங்கிப் புசித்திருப்பாள் போலும், எச்சில் உண்டிருப்பாள் போலும், எச்சிலுண்டதை யாரும் கேலி பேசி இருப்பார் போலும், அல்லது அவரது தத்துவ தரிசனம் போலும்! இதோ பாடல் வரிகள் ’பராபரக் கண்ணி’யில்.
‘எச்சிலெச்சில் என்று புலம்புகிறாய் மானுடர்கள்
எச்சில் இல்லாத இடமில்லை- பராபரமே
சில்லெச்சில் மூர்த்தி கையில் ஈ எச்சில் தேனல்லவோ
என்றைக்கும் உண்ணும் தாய் முலை எச்சிலன்றோ- பராபரமே
மச்சமெச்சில் நீரில் வந்து மூழ்கும் மறையோர்கள் எச்சில்
பச்சைக் கிளி கோதும் பழம் எச்சில் அன்றோ- பராபரமே
தேரை எச்சில் தேங்காய் சிறு பூனை எச்சில்
தேசமெல்லாமே எச்சிலென்றறிவேன் – பராபரமே
நாதமெச்சில் பிந்து எச்சில் நால்மறையோர் வேதம் எச்சில்
மந்திரங்கள் சொல்லும் வாய் எச்சிலன்றோ- பராபரமே
அண்ட பிண்ட லோகமெல்லாம் அடங்கலும் எச்சிலாச்சே
வண்ட மத வாதிகட்கு வாயுண்டோ- பராபரமே
……….. ………………. ……………………
எச்சிலுன் வாயும் உடலும் ஏகமாயிருக்கையிலே
பாதம் எச்சிலென்று அலம்ப சுத்தமாச்சோ- பராபரமே’
என்று வெகு உக்கிரமாய்ப் பாடுகிறார்.

இந்தப் பாடல்,
வாயிலே குடித்த நீரை எச்சில்என்று சொல்கிறீர்
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ?
வாயில் எச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில் எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே.
எனும் சிவவாக்கியார் பாடலை நினைவு படுத்துகிறது.

‘வேதாந்த நொண்டிச் சிந்து’ என்றொரு பாடல். அக்காள் பாடிய சில வரிகளை மட்டும் துண்டு துண்டாய்க் குறிக்கிறேன்.

‘சுவர்க்க நரகமென்னும் அல்ப பிசாசு வந்து அச்சுறுத்துகிறதே’
‘வனத்தில் துர்க்கந்தம் கடந்து வரவே வந்தாளே மதவாதியர்கள்
‘ஜாதி வர்ணங்களும் ஆசிரம தர்மமும் சாஸ்திர கோத்திர
சூத்ராதிகளும் க்ஷணிகத்தில் தகனமாய்ப் போச்சுதய்யா’
‘அனிருத்த மால’யில் அக்காளின் தத்துவ வீச்சு அபாரமாய் இருக்கிறது.
‘அம்புலியில் தெய்வமென்று சாதிப்பார் சீமையிலே
தாருவிலே தெய்வமென்று சாதிப்பார் வையகத்தே
தாமிரத்தை தெய்வமென்று சாதிப்பார் தரணியிலே
மிருத்யுவே தெய்வமென்று விடுவார் உலகினிலே
அப்புவே தெய்வமென்று ஆடுவார் தீர்த்தாதி
அக்கினியே தெய்வமென்று ஆகுதிகள் பண்ணிடுவார்’
என்று மொழியும் ஆவுடையக்காள் இறுதியாய்க் கேட்பது,
‘தத்துவமாம் மெய்ப்பொருளைத் தப்பவிட்டு நின்றோமோ?’ என்று.

தொடர்ந்து வரும் பாரதியின் கூற்று,

‘உண்மையின் பேர் தெய்வம்- அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்.’

அக்காள் சொல்வது,

‘தன்னைத் தானறிய வேணும் தத்துவத்தால்
தன்னைத் தான்றிய வேணும்’ என்று.


’ஞான ரஸக் கீர்த்தனைகள்’ என்று சாவேரி, நாதநாமக் கிரியா, பூபாளம், ஆன்ந்த பைரவி, ஆரபி, தோடி, கல்யாணி, மத்யமாவதி, மோகனம், சௌராஷ்ட்ரம், காம்போதி, தன்யாசி, சங்கராபரணம், யதுகுல காம்போதி, முகாரி, புன்னாக வராளி, பைரவி, சுருட்டி, கேதார கௌளம், சகானா என ஏகப்பட்ட ராகங்களில் இசை உலகுக்கும் ஆன்மீக உலகுக்கும் அக்காளின் கொடைகள்.


மக்கள் மொழியில் ஏராளமான பழமொழிகளைத் தடையின்றி எடுத்தாள்கிறார்.


"உறியில் தயிர் நிரம்பி இருக்க, ஊரில் வெண்ணெய் தேடுவார் போல".
"ஒக்கலில் பிள்ளையிருக்க ஊரிலெங்கும் தேடுவார் போல."
"மண்குதிரையை நம்பி மடுவில் இறங்குவார் போல."
"வெள்ளரிப்பழம் வெகுகாலம் இருக்குமென்று வெடிக்காமல் பூண் கட்டி வைப்பார் போல".
"எழுகடல் ஜலத்தையும் எறும்பொன்று குடித்ததும்".


எனப் பற்பல.


மோகன ராகத்தின் அனுபல்லவியில் ஆச்சரியமான மொழிப் பிரயோகங்கள்,

‘அம்மை இல்லாதொரு செல்வி பிறந்ததும்’
‘அப்பன் முலை குடித்து அபிவிருத்தி ஆனதும்’
‘கல்பசு கன்றுக்கு இரங்கிப் பால் கொடுத்ததும்’
‘காற்றைப் பிடித்துக் கண் கலசத்தில் அடைத்ததும்’

‘வேதாந்த வண்டு’, ‘அத்வைதத் தாலாட்டு’ என ஆன்மீகப் பாடல்கள் பல ஆவுடையக்கள் பாடியிருக்கிறார்

உண்மையில் அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என எதுவும் எனக்கு விரித்துரைக்கத் தெரியாது. ‘தத்வமஸி’யும் அறியேன், ‘அகம் பிரம்மாஸ்மி’யும் தெரியேன். ஆர்வமும் இல்லை தெரிந்து கொள்ள. ஆனால் ஆவுடையக்காள் நம் மாதிரிப் பாமரர்களுக்கு எனப் பாடி வைத்துப் போன பாடல்கள் என்னை யோசிக்க வைக்கிறது.

                                                      எந்தரு மகானு பாவலு
                                                      அந்தரிகின் வந்தனமுலு
நன்றி;  ஆசிரியர் பாலசுப்ரமணியம், சோதிடர் இளங்கோ,ஜெயமோகன் சார்

Thursday, April 28, 2011

செங்கோட்டைச் சித்தர்




நண்பர்களே!    இது யோகயுவகேந்திரா வலைப் பூக்களின் நூறாவது பதிவு




செங்கோட்டை மண்ணின் புனிதர்
சித்தர் ஸ்ரீஆறுமுக சுவாமிகள்!

சிவன்கோட்டை... சிவனடியார்கள், சித்தர்கள், மகான்கள், தவசீலர்கள் நிறைந்திருந்த பூமி. சுற்றிலும் மகான்களின் ஜீவ சமாதிகள். கேரளத்தின் திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த இந்தச் சிறிய நகரம், 1956-ஆம் ஆண்டுதான் தமிழகத்தின் திருநெல்வேலி ஜில்லாவுடன் இணைக்கப்பட்டது. 800 ஆண்டுகளுக்கு முன் நல்லூர்ராஜா ஆட்சி செய்த பகுதி இது என்கிறது சரித்திரம். நகருக்கு மேற்குப் புறத்தில் நல்லூர்கால் பகுதியில் கோட்டை அமைத்து, மகாதேவர் கோயில், தீர்த்தக் குளம் போன்றவற்றை அமைத்தாராம். இப்போது காலம் சிதைத்த எச்சங்களே உள்ளன. சிவன்கோட்டையே காலப்போக்கில் மருவி, செங்கோட்டை ஆனதாம்!

அன்றைய திருவாங்கூர் சமஸ்தானமே ஆன்மிக பூமியாக விளங்கியது. சமஸ்தானத்தின் நுழைவுப் பகுதியாக செங்கோட்டை இருந்ததால், அங்கே துவார பாலகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த அமைப்பை வேறு எங்கும் காணமுடியாது. இதைக் கடந்துதான், ஆரியங்காவு, அச்சங்கோயில், சபரிமலை என கேரளத்தின் புனிதத் தலங்களுக்குச் செல்ல வேண்டும்.

சென்னை, மதுரை, திருநெல்வேலி என எல்லா ஊர்களில் இருந்தும் செங்கோட்டைக்கு பஸ் வசதி உள்ளது. ரயில் வசதியும் உண்டு. ஊரின், காவல் நிலைய நிறுத்தத்தின் அருகில், பழைய சினிமா தியேட்டர் ஒன்று. அதை ஒட்டி, சாலையில் வலப்புறம் ஆற்றுப் பாலத்துக்கு முன்னதாக ஒரு சிறிய சிமென்ட் பாதை. சுற்றிலும் பச்சைப் பசேலென வயல். அடுத்து பொதிகை மலையின் வண்ணமயமான தோற்றம் மகிழ்ச்சியை அளிக்கிறது.

இயற்கையை ரசித்தபடியே அதில் செல்கிறோம். சற்று தொலைவில் ஆற்றங்கரையில் அழகான ஆலயம்... அது, சற்குரு ஆறுமுக சுவாமிகளின் சமாதி ஆலயம்.

ஒரு சிவாலயத்துக்கு உண்டான அம்சங்களோடு திகழ்கிறது. கருவறை கோஷ்டங்களில் தட்சிணா மூர்த்தி, முருகன், பிரம்மா சிலைகள். சமாதி ஆலயத்தின் இடப்புறம் ஒரு புற்று. ஆறுமுக சுவாமிகளுக்கு பாம்புகளோடு நெருங்கிய பழக்கம் இருந்ததாம். முன்னே ஒரு மண்டபம். அதைக் கடந்து உள்ளே சென்றால், சுவாமிகளின் சமாதி கருவறை. மேலே லிங்கப் பிரதிஷ்டை ஆகியுள்ளது.

நந்தி, பலிபீடம் எல்லாம் உள்ளன. அதனால், பிரதோஷ பூஜையும் நடக்கிறது. பூஜைக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். நாடி வருபவர்களின் வேண்டுதல் களை நிறைவேற்றி, இன்றும் தன் ஆன்மிக சாதனையின் மகிமையை எடுத்துக் காட்டுகிறார் சுவாமிகள்.

சற்குரு ஆறுமுக சுவாமிகளின் சரித்திரம்... சாதாரண மனிதராக வெளித் தெரிந்த ஒருவர், மகானாகப் பரிமளித்த உன்னத சரித்திரம்.
சைவ வேளாண் மரபில் வந்த பெரியநாயகம் பிள்ளை, தில்லை நடராஜப் பெருமான் மீது தீராக் காதல் கொண்டவர். இதே ஊரைச் சேர்ந்த பொன்னம்மாளை இவருக்கு மணம் முடித்து வைத்தனர். வருடங்கள் சென்றன. இல்லறம் நல்லறமாக நடந்ததாயினும் குலம் தழைக்க குழந்தைப் பேறு இன்றி இருவரும் மனவருத்தம் கொண்டனர். தெய்வம் பல வணங்கியும், தலம் பல சென்றும் நாட்கள் சென்றதுதான் மிச்சம். ஒருநாள் திடீரென தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பினர்.

பல்வேறு புண்ணிய நதிகளில் நீராடி, திருச்செந்தூர் கடலில் நீராடி முருகப் பெருமானைத் துதித்து தங்கள் குறை தீர மனமுருகி வேண்டினர் அந்தத் தம்பதி. முருகனும் அருள் புரிந்தான்.

கொல்லம் ஆண்டு 959 (கி.பி.1784) சித்ரா பௌர்ணமியில், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தது ஆண் குழந்தை. முருகன் கருணையால் பிறந்த குழந்தை ஆதலால், ஆறுமுகனின் பெயரையே வைத்தனர். அந்தக் குழந்தையே, நூறு வயது பூவுடலுடன் இருந்து, சித்துகள் பல புரிந்து, புத்தரைப் போல், வள்ளலாரைப் போல் பௌர்ணமியில் தோன்றி பௌர்ணமியிலேயே ஸித்தியான சித்தபுருஷர் ஸ்ரீஆறுமுக சுவாமிகள்.

இவர் பிறந்த பிறகு, சீனிவாசன், சிதம்பரநாதன் என இரு ஆண்களும், கல்யாணி என்ற பெண் குழந்தையும் உடன் பிறந்தனர். ஆறுமுகப் பெருமான் பிள்ளைக்கு இளவயதில் நற்கல்வி கொடுக்கப்பட்டது. வளர்ந்து வாலிப வயதடைந்த இவருக்கு தகுந்த பணியும் கிடைத்தது. அருகில் உள்ள சீவநல்லூர் கிராமத்தின் கிராம அதிகாரி பணிதான் அது!

ஆறுமுகப் பெருமான் பிள்ளையின் நிர்வாகத் திறனால் செழித்து வளர்ந்தது சீவநல்லூர். கொல்லம் ஜில்லா கலெக்டரும், செங்கோட்டை தாசில்தாரும் இவரைப் புகழ்ந்தனர். இந்த நிலையில், புளியரை கிராமத்தைச் சேர்ந்த ஆரியவடிவு என்ற பெண்ணை இவருக்கு மணம் முடித்து வைத்தனர்.
இல்லறமும் அரசுப் பணியும் நல்ல முறையில் தொடர்ந்தது ஆறுமுகம் பிள்ளைக்கு! இல்லறத்தின் பயனாக, பொன்னம்மாள், உலகம்மாள் என இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். வெளிப் பார்வையில் இவர் அதிகாரி; இல்லறவாசி! இருந்தாலும், அவர் மனத்துள் ஏதோ ஓர் தனிமை. தாம் இந்த உலகில் பிறந்தது, குழந்தைகளை வளர்ப்பதற்கும், வரி வசூலிக்கவும் மட்டுமா என்ற இனம் புரியாத எண்ணம் உள்ளத்தில்!

கிராம அதிகாரியான இவரிடம், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த கைலாசம் என்பவர் தண்டல்காரராகப் பணியாற்றினார். இட்ட வேலையை முகம் கோணாது செய்பவர்; சிவ பக்தர். மொத்தத்தில் பிள்ளைக்கு வலது கரமாகவே இருந்தார்!

ஒரு நாள் மாலை நேரம்! கணக்குப் பேரேட்டுக் கட்டுகளைச் சுமந்து சீவநல்லூரில் இருந்து வந்தனர் இருவரும். சற்று தொலைவு வந்ததும், ''ஐயா, வயிறு சற்று சரியில்லை. அதோ அந்தத் தோப்புக்குள் சென்று இதோ வந்துவிடுகிறேன்...'' என்று சொல்லிவிட்டு, பேரேட்டுக் கட்டுக்குக் காவலாக பிள்ளையவர்களையே நிறுத்திவிட்டுச் சென்றார் கைலாசம்.
நேரம் ஆனது. இருள் கவியத் தொடங்கியது. பாதையில் தனி ஆளாக நின்றிருந்த பிள்ளையவர்கள், கைலாசத்துக்கு என்ன ஆனதோ என்று எண்ணி, அவரைத் தேடி தோப்புக்குச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி, அவரை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

அப்படி என்ன கண்டார் அவர்..?

தோப்பில் உள்ள ஓடைக்கு அருகே, ஒரு பள்ளத்தில் கைலாசம் பத்மாசனம் போட்டு, வாயுஸ்தம்பம் மூலம், தரை மட்டத்திலிருந்து உயர்ந்து அந்தரத்தில் நிஷ்டை கூடி இருப்பதைக் கண்டார். தன்னிடம் பணியாற்றும் கைலாசமா இது. அவருக்கு அதிர்ச்சி. சாதாரண வேலையாள் இல்லை; இவர் ஒரு ஞானவான் என்று உணர்ந்தவர், தனது தேடல் இங்கேதான் முடிவடைய வேண்டும் என்று எண்ணினார்.

கைலாசத்துக்கு அருகே தானும் அமர்ந்தார். ஒரே ஒரு கண நேரம் கண் மூடி தியானித்தார். உலகம் சுழல்வது போல் இருந்தது. பல பிறவிகள் நினைவில் வந்து போயின. மனம் அலைக்கழிப்புக்கு உள்ளானது. எவையெல்லாமோ தன்னை விட்டு விலகுவது போன்ற மயக்கம். தலையில் இருந்து பெரும் சுமையை இறக்கி வைத்த உணர்வு. கண் திறந்து பார்த்தார். ஆனால், கைலாசம் இன்னும் தன்னுணர்வு வந்தபாடில்லை.

சாலையை நோக்கி நடந்தார். நடையில் அமைதி தெரிந்தது. கைலாசம்- தன் பார்வையில் ஒரு பணியாள்தான்! பிறப்பிலும் தொழிலிலும் தன்னைவிட தாழ்ந்த நிலையில் உள்ளவர். ஆனால், ஆண்டவன் பார்வையில் எவ்வளவு உயர்ந்தவர்! ஆத்மானுபவம் பெற்றும் எந்த கர்வமும் இன்றி எத்தனை பணிவு?! இறைவன் முன் சாதி பேதம் ஏது? திருப்பாணாழ்வாரும் திருநாளைப்போவாரும் இறைவனே போற்ற இருந்தவர்கள் ஆயிற்றே! - நினைக்க நினைக்க ஆறுமுகம் பிள்ளைக்கு ஞானம் மெள்ளப் புலப்படலாயிற்று.

அங்கே... கைலாசம் நிஷ்டை கலைந்து எழுந்தார். சாலையின் ஓரத்தே எஜமானரை நிறுத்திவிட்டு வந்த நினைவு எழுந்தது. பதைபதைப்புடன் ஓடி வந்தார். ''மன்னிக்கணும் ஐயா. நேரம் ஆகிவிட்டது.'' என்றார்.
''கைலாசம்... உமக்கு நேரம் ஆகி விட்டது; எனக்கு நேரம் வந்துவிட்டது. நடந்ததை அறிந்தேன். எனக்கும் அந்த ஆத்மானுபவத்தை அருள வேண்டும். உண்மை நிலையை உபதேசிக்க வேண்டும்'' என்று ஆறுமுகம் கைகூப்பி வணங்கினார் கைலாசத்தை!

''எஜமான்! இது பாவம். நான் தகுதியற்றவன்...'' என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் கைலாசம். ஆனால் பிள்ளையவர்கள் விடவில்லை. வேறு வழியின்றி அப்போதே பரம்பொருளை நினைத்து, சீவனைச் சிவமாக்கி புருவ மத்தியில் நிறுத்தி பிரம்மோபதேசத்தை பிள்ளையவர்களின் காதில் ரகசியமாக உபதேசித்தார் கைலாசம்.

இருள் மண்டிய குகையிலிருந்து பர ஒளி உலகுக்கு வந்த உணர்வு அவருக்கு! ஒரு நிமிட உபதேசத்தில் அவர் உலகமே மாறியது.

சில நாட்களில் இவரின் தந்தை உலக வாழ்விலிருந்து விடை பெற்றார். ஆறுமுகம் பிள்ளையின் அலுவலகப் பணியும் ஆத்ம விசாரமும் தொடர்ந்தது. இந்த நாட்களில் சில மகான்களின் தொடர்பும் கிடைத்தது. கடையம் அய்யம் பட்டர், கோடகநல்லூர் சுந்தர சாஸ்திரி, ஆம்பூர் ஹரிஹர சாஸ்திரி, இலத்தூர் ராமஸ்வாமி சாஸ்திரி ஆகிய மகான்கள், பிள்ளையின் சாவடியில் கூடி, ஆன்மிக விசாரம் செய்தனர். இது, இவரது ஆன்மிகப் பயிருக்கு நல்ல உரமாக அமைந்தது.

சுவாமி சிவானந்தர், ஒருமுறை இமயத்தை நோக்கி பயணப் பட்டார். வழியில் காசிக்குச் சென்றார். இந்தி மொழி புதிது. வடநாட்டுப் பழக்கவழக்கங்களும் தெரியாது. ஒரு கடைக்குச் சென்று பால் கேட்டார். அங்குள்ள வழக்கப்படி ஒரு மண்சட்டியில் பால் கொடுத்தான் கடைக்காரன். பாலைக் குடித்தபின், நம்மூர் வழக்கப்படி அதைக் கழுவி மீண்டும் கடைக்காரனிடம் கொடுத்தார் சிவானந்தர். அவ்வூர் வழக்கம்- அதைத் தூக்கி எறிந்துவிடுவது. சிவானந்தருக்கு இது தெரியாது. இவர் மீண்டும் அவனிடம் கொடுக்க முயல, கடைக்காரன் கோபத்துடன் கத்தினான்... ''தூக்கி எறி...''

அந்த ஒற்றை வார்த்தையே சிவானந்தருக்கு உபதேசமானது. அவ்வளவுதான்! அனைத்தையும் தூக்கி எறிந்து இமயத்தில் அமர்ந்தார். நெல்லை மாவட்டத்தின் பத்தமடையில் தோன்றி இமயத்தில் கரைந்த ஆன்மிக ஜோதி இவர்.

இங்கும் அப்படித்தான்! வைராக்கிய உணர்வு வரப்பெற்ற பிள்ளையவர்கள், தம் 35-ஆம் வயதில், பந்தம் பாசம் அறுத்து அனைத்தையும் தூக்கி எறிந்து வீதியில் இறங்கினார். கால்போன போக்கில் நடந்தார். தென்கயிலாயமான குற்றால மலை ஏறினார். செண்பகாதேவி அருவிப் பக்கம் சென்றார். அங்கே ஸ்ரீபராசக்தி கோயிலை ஒட்டி அருவிக்கரையில் இருந்த குகையை நோக்கிச் சென்றார். முற்றும் துறந்த முனிவர்கள் கூடும் குகை இது. அன்று அய்யம் பட்டர், ஹரிஹர சாஸ்திரி, சுந்தர சாஸ்திரி என மகான்கள் கூடியிருந்தனர். சுந்தரசதஸ் என்று அதற்குப் பெயர். இதனுள் சென்று அமர்ந்தாலே, அலைபாயும் மனது ஒருமுகப்பட்டுவிடும்.

அன்று சித்ரா பௌர்ணமி. ஞானவாராஹி அன்னையின் அருளைப் பெற தவத்தில் ஈடுபட்டனர் அனைவரும். மூவரும் குகைக்கு உள்ளேயும், ஆறுமுக சுவாமிகள் குகை வாயிலிலும் அமர்ந்து மோனத் தவம் புரிந்தனர். நள்ளிரவு. சலசலத்து ஓடும் அருவி நீர் சப்தம் தவிர வேறு ஏதுமில்லை. திடீரென அந்த நள்ளிரவில் குகையை நோக்கி உறுமியபடி பாய்ந்தது ஒரு புலி. அதன் கண்களில் தீ ஜ்வாலை. சித்தத்தை பரவெளியில் நிறுத்தி உணர்வற்ற நிலையில் இருந்த சுவாமிகளைக் கவ்விச் சென்ற புலி, சற்று தொலைவில் இருந்த சித்தர் குகையில் விட்டுச் சென்றது. இந்த சித்தர் குகைக்கு அருகில் உள்ளது சித்தர் ஓடை. சித்த புருஷர்கள் கூடுமிடம். அந்த குகையில், புரியாத மொழியில் கல்வெட்டுகளில் ஏதேதோ எழுதப்பட்டிருக்கும்.

பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தில் அந்தக் கானகம் நிறைந்திருக்க, சிறிது நேரத்தில் தன்னுணர்வு வரப்பெற்ற சுவாமிகள் மெள்ளக் கண் திறந்து பார்த்தார். அவ்வளவுதான்! காண்பதற்கரிய காட்சியைக் கண்டு சித்தம் லயிக்க நின்றார். அவர் கண்ட காட்சி...

குகைக்குள், அன்னை காட்சி தந்தாள். எதற்காகத் தவம் இருந்தாரோ அது நிறைவேறக் கண்டார். அந்தக் கணமே அவருள் ஒரு பேரொளி கிளர்ந்து எழுந்தது. ஞான வைராக்கிய சித்தராக எழுந்து நின்றார் சுவாமிகள். ஆனந்தக் கூத்தாடினார். அவ்வளவில் அந்தக் காட்சி மறைந்தது. ஒரு ஞானியாக மலையில் ஏறியவர், ஞானச் சித்தராக இப்போது கீழிறங்கினார்.

இவருடைய நடவடிக்கைகள் வீட்டினருக்கு ஒரு புதிராகவே இருந்தது. சுவாமிகளின் தம்பி சீனியாப்பிள்ளை, இவருக்கு பைத்தியம்தான் பிடித்துவிட்டது என்று எண்ணி வீட்டில் ஓர் அறையில் கால் விலங்கிட்டு அடைக்கவும் செய்தார். ஒரு கட்டத்தில் சுவாமிகளின் மனம் நோக, அந்தக் கணத்தில் கால்விலங்குகள் தெறித்து விழுந்தன. அறைக்கதவு திறக்க, சிங்கமென கர்ஜித்து வெளியேறினார். இவருடைய பரிபாஷையைக் கேட்டு, இவரிடம் மகிமை இருப்பதாக உணர்ந்த குடும்பத்தினர், பிறகு மன்னிப்பு வேண்டினர்.

ஆறுமுக சுவாமிகளின் மகத்துவம் எங்கும் பரவியது. அன்பர்கள், பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்து தரிசித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கைகாட்டி சுவாமிகள் வந்தார். மகான்களின் தொடர்பால், அந்தச் சாவடியே பரிபாஷைகளின் கூடாரமாக மாறியது. அன்னை பராசக்தி அருளால் முக்கால ஞானமும் அஷ்டமா சித்துகளும் கைவரப் பெற்றார் சுவாமிகள்.

சுவாமிகள், கடைவீதியில் நடந்துவரும்போது, வியாபாரிகள் கடையை விட்டு கீழே இறங்கி கைகட்டி நிற்பார்கள். சுவாமிகள் ஏதாவது ஒரு கடையின் கல்லாப் பெட்டியில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து யாருக்காவது கொடுப்பார். அன்று அந்தக் கடையில் வியாபாரம் அமோகம்தான்!

அநேகமாக யாரிடமும் பேசுவதில்லை சுவாமிகள்; பேசினாலும் மழலைச் சொல்தான்! கந்தல் துணிதான் உடுப்பு. சில நேரங்களில் அவதூதர் கோலம். எப்போதும் பாம்பு களுடன்தான் விளையாட்டு. 'டேய் சங்கரா' என்று அழைப்பார். எங்கிருந்தெல்லாமோ வரும் பாம்புகள், அவர் மேனியில் ஊர்ந்து விளையாடும். யாரேனும் வந்தால்... ''டேய் பாவிகள் வந்தாச்சு, கிளம்புங்க!'' என்பார். அவ்வளவில் அவை மறைந்துவிடும்.

சுவாமிகள் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் அதிக நாட்கள் தங்கியிருக்கிறார். அதனால் அங்கு இவருக்கு பக்தர்கள் அதிகம். மேலும், குற்றாலம்- செண்பகாதேவி அருவிக்கு அருகில் உள்ள அகத்தியர் குகை, தட்சிணாமூர்த்தி குகை, சித்தர் குகைகளில் அதிகம் தியானத்தில் இருந்திருக்கிறார். இங்கே சூட்சும ரூபமாக சித்தர்கள் இன்றும் வருகிறார்களாம்.

அந்த குகையை தரிசிக்கும் ஆவலில் நாமும் செண்பகாதேவி அருவிக்குச் செல்கிறோம். ஐப்பசி மாத மழையில் அருவியில் நிறையவே தண்ணீர். செண்பகாதேவி அருவியில் இருந்து தேனருவி செல்லும் கரடுமுரடான பாதையில் சிறிது தூரம் செல்கிறோம். ஒரு பாம்புப் புற்று. அதைக் கடந்து சற்று தூரம் மேலே ஏறினால், ஒரு செங்குத்தான பாறையின் அருகில் பாதை தெரிகிறது. அருகே விநாயகர் சந்நிதி ஒன்று. வணங்கி சற்று கீழே இறங்கிச் சென்றால், செண்பகாதேவி அருவிக்கு நீர் வரும் பாதை. மிகவும் ஆபத்தான பகுதி. இங்கிருந்துதான் மலையின் இரண்டு பெரிய பாறைகளுக்கு நடுவே நீர் ஓடி அருவியாக விழுகிறது. அதன் அருகில் குகையின் வாசல். தற்போது, 'இரும்பு கேட்' போட்டு பூட்டியிருக்கிறார்கள். செண்பகாதேவி கோயிலில் இருந்து சாவியை வாங்கி வந்திருந்தோம்.

குகைக்குள் ஒரே இருட்டு. குரங்கார் ஓரிருவர் நம்மைப் பின்தொடர, கையில் இருந்த செல்போன் டார்ச் வெளிச்சத்தில் உள்ளே செல்கிறோம். முகப்பில் சிவலிங்கம், அம்பிகை உருவங்கள்... சித்தர்கள் போன்ற சிலாரூபங்கள். உள்ளே அரைகுறை டார்ச் வெளிச்சத்தில், அகத்தியர், லோபமுத்திரை மற்றும் சிவலிங்கத் திருமேனிகளை தரிசிக்கிறோம். இன்னும் சற்று உள்ளே சென்றால், ஒரு மேடையில் தட்சிணாமூர்த்தி விக்கிரகம். என்றோ சாத்தப்பட்ட பூமாலை... வாடியிருந்தது. கற்பூரம் கொளுத்தி, வெளிச்சம் வர வழி ஏற்படுத்தி, அந்த வெளிச்சத்தில் தட்சிணாமூர்த்தி ஸ்வாமியையும் அகத்தியரையும் தரிசித்து, கொண்டு சென்ற பழத்தை நிவேதனம் செய்து, அமர்கிறோம். அங்கே சூட்சும ரூபமாக எழுந்தருளும் சித்தர் சுவாமிகளை தியானிக்கிறோம்.

கற்பூரம் எரிந்து முடிந்த சற்று நேரத்தில் இருளும் புகையும் சூழ, தட்டுத் தடுமாறி எழுந்து வெளியே வருகிறோம். வெளியேறும் இடத்தின் இடப்புறம், அந்த குகைக்குள்ளேயே ஒரு சிறிய குகை. அதனுள் கைத்தடி, சிறிய பாய், மாகாளி அன்னையின் விக்கிரகம் எல்லாம் இருக்கிறது. இங்குதான் குற்றாலம் மௌன சுவாமிகள் தவம் செய்தார். ஆறுமுக சுவாமிகள் உள்ளிட்ட சித்தர்கள் தவம் செய்த புனிதமான குகையில் இருந்து, சித்தர்களின் அருளால் எந்தவித ஆபத்தும் இன்றி வெளியே வருகிறோம். நைவேத்திய பழங்களை குரங்கார் சுற்றம் சூழ வந்து நம் கையில் இருந்து வாங்கிச் சென்றார். மனத்துள் ஆறுமுக சுவாமிகள் நிறைந்திருக்க, அவருடைய மகிமைகளை எண்ணியவாறே கீழிறங்கினோம்.

செங்கோட்டையில் கோர்ட் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம், கைலாசம் இருவரும் ஒரு பொது வேலையாக கொல்லத்துக்குச் சென்றார்கள். அதற்கு முன் சுவாமிகளை சந்தித்து, பிரச்னைகளைச் சொல்லி ஆசி வழங்கும்படி கேட்டார்கள்.

சுவாமிகளும் ''நல்லது நடக்கும். சென்று வாருங்கள்'' என்றார். பிறகு அவர்கள் சென்ற வழியில், ஆரியங்காவு, தென்மலை, புனலூர், கொல்லம் என ஒவ்வோர் இடத்திலும் சுவாமிகளும் தென்பட்டார். அங்கெல்லாம் அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினராம்.

மதுரையில் செல்வந்த ரெட்டியார் ஒருவரின் மகனுக்கு திருமணம். அன்றிரவு அவன் பாம்பு தீண்டி இறந்தான். மிகுந்த துக்கத்துடன் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று உடலை சிதையில் வைத்தனர். அப்போது அந்த வழியாக சுவாமிகள் சென்றதைப் பார்த்து, அன்பர் ஒருவர் இந்த விஷயத்தைச் சொல்லி ஆறுதல் அளிக்குமாறு வேண்டினார்.

சுவாமிகள் வந்து பார்த்து, சடலத்தின் மீது எச்சிலை உமிழ்ந்து, ''சீ போ... எழுந்திரு'' என்று சொல்லிச் சென்றார். அதிசயப் படும்படி சிதையிலிருந்து அவன் எழுந்தான். சுவாமிகளைத் தேடினால், அவரை எங்கும் காணமுடியவில்லை. பிறகு செங்கோட்டைக்கு வந்து அவரை வணங்கி மூட்டை நிறைய நாணயங்களை சமர்ப்பித்தார் ரெட்டியார். சுவாமிகளோ, ''நீ ஆட்கொல்லியுடன் அல்லவா வந்திருக்கிறாய். நில்லாதே போ...'' என்றார்.

அவர் வற்புறுத்தவே, ''சரி... நீயே இந்த நாணயங்களை தெருக்களில் எறிந்துவிட்டுப் போ'' என்றார். அவரும் மறு பேச்சின்றி அப்படியே செய்தாராம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்விளாகத்தில் இருந்த அந்தணர் ஒருவரின் மகன், தன்னுடைய மனைவியோடு மாடியில் உறங்கும்போது பாம்பு தீண்டி இறந்தான். தெருவே துக்கத்தில் இருந்தது. அப்போது ஓர் வேலையாக அப்பகுதிக்குச் சென்ற செங்கோட்டை கங்காதர ஐயர் (இசைமேதை எஸ்.ஜி.கிட்டப்பாவின் தந்தை), இதைக் கண்டு மிகவும் மனம் வருந்தி அருகே இருந்த கோயிலுக்கு வந்தார். அங்கே சுவாமிகள் இருப்பது கண்டு வணங்கி, விஷயத்தைச் சொல்லி ஏதாவது பரிகாரம் வேண்டினார். சுவாமிகள், ''அவன் அநியாயமாகப் போகிறான்...'' என்றாராம். உடனே கங்காதர ஐயர், ஓடிச் சென்று அவர்களிடம் சுவாமிகளின் மகிமையைக் கூறி, அவரை அழைக்குமாறு சொன்னார். சுற்றிலும் இருந்தவர் கள், 'மாண்டவனாவது... மீள்வதாவது?' என்று இவரை கேலி செய்தனர்.

சரி பார்ப்போமே என்று பையனின் மாமனார், ஆறுமுக சுவாமிகளை அழைத்து மன்றாட, சுவாமிகள் வந்து பார்த்துவிட்டு, எப்படி மனைவியுடன் மாடியில் படுத்திருந்தானோ அதே கோலத்தில் படுக்க வைக்கச் சொன்னார். சற்று நேரத்தில் எங்கிருந்தோ வந்த பெரிய பாம்பு ஒன்று படமெடுத்தபடி சுவாமிகள் முன் நின்றது.

அவர் கையசைக்க, அது மாடிக்குச் சென்று அவனின் காலில் கடிபட்ட இடத்திலிருந்து விஷத்தை உறிஞ்சி சுவாமிகள் முன் வைக்கப்பட்ட பசும்பாலில் கக்கிச் சென்றது. அந்தப் பையனும் எழுந்து அமர்ந்தானாம்!
சேத்தூர் ஜமீனைச் சேர்ந்த பக்தர்கள், சுவாமிகளுக்கு ஒரு மகாபிஷேகம் செய்ய விரும்பினர். சுவாமிகள் சிரித்தார். இருப்பினும் அன்பர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தார்.

ஜமீன் சங்கிலி வீரப்ப பாண்டியரும் உடனிருக்க அபிஷேகம் துவங்கியது. 107 குடம் நீரால் அபிஷேகம் செய்து, 108வது குடத்து நீரை அபிஷேகம் செய்யத் தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரம் அந்தக் குடத்தில் இருந்து தண்ணீர் விழுந்துகொண்டே இருந்தது. குடத்தைக் கையில் பிடித்தவர்களுக்கு கை வலி ஏற்பட்டு சுவாமிகளிடம் கெஞ்சினர். சுவாமிகள் ''தண்ணீர் போதும்'' என்றவுடன் குடத்து நீர் நின்றது. இறுதியில் சுவாமிகளை பல்லக்கில் தன் இல்லத்துக்கு வருமாறு ஜமீன்தார் வேண்டினார். ''எல்லாம் நீ போய்ச் சேரு'' என்றார் சுவாமிகள். மன விசனத்துடன் ஜமீன் தன் வீட்டுக்குச் செல்ல, அங்கே திண்ணையில் அமர்ந்திருந்தார் சுவாமிகள். அவருக்கு ஆச்சரியம். எப்படி இவ்வளவு விரைவாக அவரால் வரமுடிந்தது என்று!

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ள திருவண்ணாமலையில் பெருமாள் கோயில் உள்ளது. அந்த மலையின் அடிவார ஊருக்கு சுவாமிகள் சென்றார். ஊர் மக்கள் சுவாமிகளை வணங்கி, மூன்று வருடங்களாக மழை பொய்த்துப் போய் வறட்சி தாண்டவமாடுவதைச் சொல்லி, ஏதாவது செய்யும்படி கோரினர். மனம் இரங்கிய சுவாமிகள், சுனையில் இருந்து சேற்றை எடுத்து உடல் முழுதும் பூசிக்கொண்டு, ஒரு பாறையில் அமர்ந்து தியானித்தார்.

சுட்டெரித்தது வெயில். இதெல்லாம் பகல் இரண்டு மணிவரைதான். அடுத்து எங்கிருந்தோ சேர்ந்தது மேகக் கூட்டம். நல்ல மழை பெய்தது. சுவாமிகளின் உடலில் பூசிய சேறு கரைந்து ஓடியது. அருகில் இருந்த குளங்கள் நிரம்பும் வரை தொடர்ந்து தியானத்தில் இருந்த சுவாமிகள் ஓரிரு நாட்கள் கழித்தே பழைய நிலைக்கு வந்தாராம்.

அன்பர்கள் யாரேனும் வறுமையால் வாடினால் சுவாமிகளுக்குப் பொறுக்காது. ஏதாவது வழிசெய்வார். ஸ்ரீவில்லிபுத்தூர் சாலியர் தெரு கீழப்பட்டியில் பேச்சியம்மாள் என்ற மூதாட்டி இருந்தாள். சுவாமிகளுக்குப் பணிவிடை செய்வதை பாக்கியமாகக் கருதினாள். நாளாக நாளாக வேலை செய்து சம்பாதிக்க உடல்நிலை இடம் கொடுக்காமல் தவித்தாள்.

சுவாமிகளை வணங்கி தன் இயலாமையைச் சொன்னாள். அவரும், ''நீ கடைக்குச் சென்று வாங்கும் பொருள்களுக்குத் தேவையான பணம் உன் வீட்டில் இருக்கும், போ'' என்றார். அதன்படியே இருக்க, அவள் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. ஒருநாள் திடீரென, ஒரு விபரீத ஆசை அவளுக்கு! சுவாமிகளிடம் சென்று, ''சுவாமி இப்படி தினந்தோறும் நாலணா தருவதற்கு பதில், ஒரு மாதத்துக்குத் தேவையானதை மொத்தமாக அருளுங்களேன்...'' என்றாள்.

மௌனமாகச் சென்ற சுவாமிகள், வெளியே மண்ணில் சிறுநீர் கழித்தார். அந்த மண் தங்கமாக மின்னியது. சுவாமிகள் சொன்னார்... ''பார்த்தாயா..! அவ்வளவும் தங்கம். போதுமா?'' என்று சொல்ல, அவள் ஒன்றும் பேசாது நின்றாள். பிறகு சுவாமிகள், ''இது ஆட்கொல்லி. இதை நீ வைத்திருந்தால் உன் உறவினர்களே உன்னைக் கொன்றுவிடுவார்கள். பேசாமல் கிடைப்பதை வைத்து நிம்மதியாக இரு'' என்று சொல்லிச் சென்றாராம்!


திருவனந்தபுரத்தில், அனைவருக்கும் இலவசமாக உணவு அளிக்கும் இடமான ஊட்டுப்புரை இருந்தது. ஆறுமுக சுவாமிகள், அய்யம்பட்டர், ஹரிஹர சுவாமிகள் மூவரும் அங்கே செல்வது வழக்கம். அப்போது, இவர்கள் கையில் ஒரு சாராய பாட்டிலும் இருக்குமாம். இது ஊட்டுப்புரை விதிமுறைகளுக்கு முரணானது.

எனவே இவர்களைப் பற்றிய புகார் சமஸ்தானத்துக்குச் சென்றது. அன்று திருவாங்கூரை ஆண்ட இசைமேதையான ஸ்வாதித் திருநாள் மகாராஜா ராமவர்மா, இவர்களை அழைத்தார். அப்போதும் அய்யம் பட்டர் கையில் சாராய பாட்டில். மன்னர் விசாரித்தபோது, ஆறுமுக சுவாமிகள் ஒரு பாத்திரம் எடுத்துவரச் சொன்னார். அதில் சாராயத்தை ஊற்றி, மன்னரிடம் கொடுத்தார். பாத்திரத்தில் பால் இருந்தது கண்டு வியந்த மன்னர், சுவாமிகளின் உன்னதத்தை அறிந்து, எப்போது இவர்கள் வந்தாலும் இல்லையென்று சொல்லாமல் உணவு வழங்க கட்டளையிட்டாராம்!

ஒருநாள், சுவாமிகள் செங்கோட்டை குண்டாற்றுப் பாலத்தில் அமர்ந்திருந்தார். நீராடிவிட்டு வந்த பெண்கள், சுவாமிகளைக் கண்டதும், தங்களுக்கு குழந்தையில்லாத குறையைக் கூறி, விமோசனம் வேண்டினர்.

சுவாமிகள், தன் உணவில் இருந்து ஒரு பிடி எல்லோருக்கும் எடுத்துக் கொடுத்து, வீட்டு உணவில் சேர்த்து உண்ணும்படி கூறினார். அந்தக் கூட்டத்தில் ஆறுமுகம் செட்டியார் என்பாரின் இரண்டாவது மனைவி சிதம்பரத்தம்மாளும் இருந்தார். எல்லோரும் சுவாமிகள் சொன்னபடி செய்ய, சிதம்பரத்தம்மாளுக்கு மட்டும் அதை உண்ணத் தோன்றவில்லை. அப்படியே கழுநீர்ப் பானையில் போட்டார்.

காலம் கழிந்தது. சிதம்பரத் தம்மாளைத் தவிர, மற்ற அனைவருக்கும் குழந்தை பிறந்தது. சுவாமிகளிடம் மீண்டும் சென்ற அம்மாள், குழந்தைப் பேறு வேண்டிக் கேட்டபோது, ''அதற்கு ஏன் இங்கு வந்தாய்? உன் வீட்டு கழுநீர் பானையிடம் கேள்.'' என்றாராம் சுவாமிகள்.

சுவாமிகள் நூறு வயதை எட்டியதும்(கி.பி.1884), தாம் வந்த பணி நிறைந்துவிட்டதை உணர்ந்து, சமாதிக்கு தயாரானார். ஆனி மாதம் அனுஷம் கூடிய பௌர்ணமி நாளில், தான் எப்போதும் அமரும் நாற்காலியில் அமர்ந்தவாறே, சமாதி நிலை அடைந்தார். அவருடைய சமாதி தங்கள் இடத்தில் அமைய வேண்டும் என்று பலரும் போட்டியிட்டனர். இறுதியில் திருவுளச்சீட்டில், குண்டாற்றங்கரைத் தோப்பு என்று முடிவானது. அங்கே சுவாமிகளின் சமாதி அமைக்கப்பட்டு, சிவலிங்கப் பிரதிஷ்டையும் ஆனது. தற்போது சமாதிக் கோயிலாகக் காட்சி தருகிறது. சுவாமிகள் சமாதியாகி தற்போது, 125 ஆண்டுகள் ஆகிறது.

சுவாமிகளின் வம்சாவளியைச் சேர்ந்த ஆறுமுகம் (மற்றும் இசக்கி (90424 44156) இருவரும் சமாதிக் கோயிலில் தவறாமல் பூஜைகளைச் செய்து வருகிறார்கள். சுவாமிகளின் சரிதத்தை நமக்குச் சொன்ன நல்லாசிரியர் வி.ஜனார்த்தனனுக்கு நன்றி கூறி, சுவாமிகளின் கோயிலை வலம் வந்தோம்.






நன்றி ;  திரு செங்கோட்டை ஸ்ரீ ராம்
photos: senkottai sriram

Friday, April 22, 2011

சித்த பிரமை





இரவினில் உலகம் உறங்கி இருக்கையில்
இமைகள் மூடியும் உறக்கம் இல்லாமல்
தலையணை பாரம் தவிக்க வைக்க
தாங்கொணாத் துயரில் கண்கள் பனிக்க
இருட்டினில் எவரும் அறியாத வகையில்
இமைகளைத் தாண்டி துளிகள் வழிகையில்…


எங்கே இருக்கிறேன் நான்?
எப்படி அறிவேன் நான்…?


தேடல் என்பது சுகமானால் – தேடிப்
பெறுவது உண்மை என்றானால்
எத்தனை காலம் தேடுவது – அதை
எங்கே எப்படி நாடுவது…?


தாபம் என்பது தவறெனில்
விரகம் என்பது விபரீதமெனில்
அன்பு என்பது கனவெனில்
ஆசை என்பது துன்பமெனில்
பாசம் என்பது ஏமாற்றமெனில்
உறவுகள் என்பது வேசமெனில்
தனிமை என்பது சிறையெனில்
இளமையில் தனிமை கொடிதெனில்
இவ்வுலகம் என்பது மாயையெனில்
சிற்றின்பம் என்பது தவறெனில்
பேரின்பம் என்பது இறையெனில்
வாய்மை என்பது வெல்லுமெனில்
பொய்மை என்பது பொய்க்குமெனில்
உலகம் என்பது மேடையெனில் – அது
உயிர்கள் நடிக்கும் நாடகமெனில்


எதற்காக இந்த நாடகம்
யாருக்காக இந்த நடிப்பு…?
எதைக் கொண்டு வந்தோம்
எதைக் கொண்டு போகின்றோம்…?


கேள்விகள் ஆயிரம் தேனீக்களாய்
தேகம் முழுவதும் கொட்ட
அங்கம் எல்லாம் புண்ணாகி
ஒவ்வொரு செல்லும் வலித்தாலும்…
பதில்கள் என்றும் கிடைத்ததில்லை!


இறைவன் ஒருவன் இருக்கின்றானாம்
மதங்கள் அனைத்தும் போதிக்கின்றனவாம்
அவனைக் கண்டவரில்லையாம்…
கண்டு விண்டவரில்லையாம்…


சொர்க்கம் அது நல்லவருக்காம்
நரகம் அது பொல்லாதவருக்காம்


இரண்டையும் நேரில் கண்டவரில்லை
இறந்தபின் மீண்டு வந்தவரில்லை


எவரைத் தேடி நான் போவேன்…
எப்படி என் துயரம் தீர்ப்பேன்?

பிறந்தது தவறெனில்

தவறுக்குத் தண்டனை முறை…
ஆனால் தண்டனை எத்தனை முறை?


ஒரே தவறுக்குத் தண்டனை
உயிர் வாழும் வரையென்றால்…
எத்தனை உயிர் நான் எடுக்கவேண்டும்?
எத்தனை முறை நான் சாகவேண்டும்?

எல்லாம் சேர்ந்து அழுந்த
கனத்த மனதோடு தனிமையில்
வாடும் பல நாட்களில்…
ஒரே ஒரு நாள்…
ஒரே ஒரு கேள்வி…


உயிரின் தேடுதல் உணர்ச்சி
தவறிய மனதின் குற்றவுணர்ச்சி
தவறா ?


எதற்கோ ஏங்கி ஏங்கி
எப்போதும் அடையாத விரக்தி
எதிலும் இல்லாத நாட்டம்
எவரும் இல்லாத வாட்டம்
தேடல் இல்லாத மாற்றம்
தேடிக் கிட்டாத ஏமாற்றம்


இத்தனையும் சிறு சிறு ஊசிகளாகி…
இதயத்தை துளைத்துச் சிதைத்துவிட்டதால்,
இல்லாத இறைவனிடம் நான்கேட்ட கேள்வி… 
உனக்காவது தெரியுமா உன்னை ?

அரவிந்திற்கு விடுமுறை




ஒரு ஏட்டில் எழுதப்பட்ட நான்கு வரிகள் 
உரக்க வாசித்தப்பின்
உயிர் பெறுகிறது இறந்துபோன மயிர்களும்
"நாளை முதல் ஜூன் 1 வரை முழு 
ஆண்டுத் தேர்வு விடுமுறை" !


கேள்வியே புரியாதவன் 
வேகவேகமாய் கிறுக்குகிறான்
கேள்விகளுக்கு விடைத் தெரிந்தவன் போல 


கடைசி பரிட்சையின் விடைத்தாளில் 
கடைசி வரியில் முற்றுபுள்ளி வைத்துவிட்டு பெருமூச்சு
எவரெஸ்ட் மலை உச்சியில் கொடி நட்டவன் விட்ட அதே மூச்சு !


விடைத்தாளை வாத்திச்சி கையில் விட்டெறிந்துவிட்டு !
காலடி எடுத்து வைக்கிறான் 
அவன் ஒரு வருடமாய் சிறை பட்டுக் கிடந்த 
வகுப்பறையை விட்டு 

புத்தகங்களின் பக்கங்கள் பறக்கிறது !
இதழ்களில் புன்னகைகள் தெறிக்கிறது !


இவர்கள் விடுதலை கொடுத்த பேனா மையும் 
இவர்களை குஷிப் படுத்துகிறது 
அடுத்தவன் சட்டையில் கோலமிட்டு !


போட்டிப் போட்டு படிக்காதக் கூட்டம் 
போட்டிப் போட்டு சந்தோஷப் படுகிறது !


போதாக்குறைக்கு ஒருவன் 
சட்டை வேற கிழிந்து தொங்குகிறது 
இவர்களை இன்னும் சிரிக்க வைக்க !


கை, கண், கால், வாய் என 
உடம்பே சிரிக்கிறது !


வருடத்தில் ஒரு முறை வரும் 
இந்த காட்ச்சியைப் பார்க்கத்தான் 
ஏழைச் சூரியனும் பூமியில் தரை இறங்க முயற்சிக்கிறான் 
இதை உணர்த்துகிறது
கோடை வெயில் !

இதை பலர் புரிந்து கொள்வதில்லை 
என்பதனால் கண் கலங்குகிறது 
கோடை மழையாய் !

Thursday, April 21, 2011

தொலைந்து போன நான்!






என்னை தொலைத்து விட்டு
என்னுள்ளேயே தேடுகிறேன்!

என்னை எனக்கு அடையாளம் காட்ட.
என்னைத் தெரிந்தவர்களே
நீங்களும் வாருங்கள்
காணாமல் போனவர்களை
அறிவிக்கும் போதெல்லாம்
முதலில் சொல்வது
பெயர்தானே 

இங்கே எனக்குப் பல பெயருண்டு

உடல், உள்ளம், ஆத்மா

நிறைய புனைப்பெயர்

என் நிஜப்பெயர் நானறியேன்!

புகைப்படம் தேடும்

பத்திரிக்கை நண்பரே,

என்னுள்ளிருக்கும்

என்னின் புகைப்படம்

உமது தேடுதல் வேட்டைக்கு

நிச்சயம் உதவும்.

ஆனால் 

வெளிப்பூச்சுப் பூசிப்பூசி

தேய்ந்தே போனதால்

உள்ளபடி உண்மை முகம்

பார்த்தவர் யாருமில்லை.

நானே பார்க்காதபோது

வேறார் பார்த்திருப்பார்?

கண்ணாடி கூட

கண்டிப்பாய் பார்த்ததில்லை

கண்ணாடி பார்த்ததெல்லாம்

நிழலின்றி நிஜமில்லை

என் உயரம், நிறம்

எனக்கும் உறுதியாய்த் தெரியாது.

வானம் வரை உயர்வதும்

சிலசமயம்

தரையிலேயே புரள்வதுமாய்

உள்ளதுயரம்,

என்னுடையது

நொடிக்கு நொடி

மாறுவதால்

தேடுதல் வேட்டைக்கு

எனது உயரம் உதவாது

நிறம்

பாலைப் போலவென்று

பாலூட்டியவள்

சொல்லிச் சென்றாள்.

கள்ளைப் போலவென்று

கல்லூரி நண்பர் சொல்வார்

கருமை நிறமென்று -என்னைக்

காசாக்கும் ஆசைகொண்ட

கயவர் பலர் சொல்வார்.

செம்மை நிறமென்று -

என்னை செதுக்கிய

அண்ணாமலை அண்ணல் சொல்வார்

பயணிக்கும் பாதைதனில்

காலத்தின் மாற்றத்தால்

பச்சோந்தி நிறமென்று

பார்ப்பவர்கள்

எழுதினாலும் எழுதக்கூடும்

குணத்தைப் பற்றி மட்டும்

குறுந்தகவல் எனக்குளுண்டு

அப்பாவி இல்லை நான்

பாசத்தால்

பலியாக்கப்பட்டு

பரம ஞானம்

பெற்றவன் நான்

ஒருவேளை

என்னைக் கண்டு பிடித்தால்!

என்னிடம்

என் சார்பில்

ஒரே ஒரு கேள்வி கேட்டு

பகிர்ந்திடுவீர் பதிலெனக்கு

எனக்குள் இருந்தும்

என்னையே பாராமல்

எனேக்கே தெரியாமல்

என்னுள் ஒழிந்தே

என்ன "நான்" சாதித்தேன்?