Total Pageviews

Sunday, October 14, 2012

"எபிலெப்சி" எனும் கால் கை வலிப்பு நோய்

மாஸ்டர், காக்கை வலிப்புநோய் நரம்புநோய்தானே???இதற்கும் இரும்புக்குக்கும் என்ன சம்பத்தம்???????.......ராகவன்...



நண்பர் ராகவன் சொல்வது போல "எபிலப்சி" எனும் காக்கை வலிப்பு நோய்...நரம்புநோய்தான்...மறுக்கவில்லை, ஆனால்..... இந்த நோய்க்கு "கால்- கை வலிப்பு நோய்" என்பதுதான் சரியே தவிர காக்கைக்கும் இந்த நோய்க்கும் சம்பத்தமில்லை.






நமது பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவம்,மூர்ச்சை (மூர்ச்சா), கால்கைவலி எனும் காக்கை வலிப்பு (அபஸ்மார), பைத்தியம் (உன்மாத), மூளைக்கோளாறுகள் (அ) மனக்கோளாறுகள் (மானஸதோஷ), திக்குவாய் போன்ற உச்சரிப்புக் கோளாறுகள், ஞாபகமறதி (ஸ்மிருதிக்ஷய),போன்ற நோய்களுக்கு மூளையே காரணம் எனக்கூறுகிறது.


ஆனால்.....ஐம்பூதங்களாலான இந்த மனித சரீரத்தில்,"மஜ்ஜைகளின் குவியல் " என அழைக்கப்படும் மூளையும்,நரம்புகளும்,நீர் பூதத்தை வைத்து வேலை செய்யக்கூடிய "சிறுநீரகத்தின்"கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக, சீன மருத்துவமான அக்குபஞ்சரும்,நமது சித்தர்களின் மருத்துவமான வர்மமருத்துவமும் சான்று கூறுகிறது.



எபிலெப்சியும், ஸ்ட்ரேமெரிங் எனச் சொல்லக்கூடிய திக்குவாயும் கிட்னியின் சக்திக்குறைவு என்பதை, TCM(Traditional chinish medichine) எனச்சொல்லக்கூடிய சீன மருத்துவ சாஸ்திரம் தெளிவுபடக்கூறுகிறது. மனித உடலில் அதிகமான கோப உணர்வினால் கல்லீரல் பாதிப்பதாகவும், அதிகப்படியானத் துக்க உணர்வினால் நுரையீரல் பாதிப்பதாகவும் கூறுகிற இதே சீன மருத்துவம், பய உணர்வினால் கிட்னி பாதிப்பதாகவும் கூறுகிறது....ஒரு எல் -கே -ஜி படிக்கின்ற குழந்தை,.... வகுப்பாசிரியை பிரம்பை எடுத்தவுடன் பய உணர்வினால் சிறுநீர் கழித்துவிடுகிறதா, இல்லையா???????பயம் வரும்பொழுது வாந்தி வரலாமே , ஏன் சிறுநீர் வருகிறது???இப்பொழுது சொல்லுங்கள் பய உணர்வினால் கிட்னியில் ஏதோ ஒரு பாதிப்பு ஏற்படுகிறது என்பது உண்மைதானே!!!!!!.


நன்றாகப் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் பயத்தினால் திக்குவதை நாம் பார்த்திருக்கிறோமே!!! அதேபோல் பயத்தினால் நரம்புகள் வலுவிழந்து உடல் நடுங்குவதைப் பார்த்திருகிறோமே!!!!......அதிகப்படியான பய உணர்வினால் கிட்னி பாதிக்கப்பட்டு அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் நரம்புகளும் பாதிக்கப்பட்டு அதன் தொடர்விளைவாக எபிலெப்சி எனும் காக்கை வலிப்பு நோய் உண்டாகிறது.




நமது பாரம்பரிய மருத்துவமான சித்தமருத்துவம் யாருக்கு இரும்புச்சத்துக் குறைவோ, அவர்களுக்கு மனபயமும்,நரம்புத்தளர்ச்சியும் இருக்குமெனக் கூறுவதோடு ..இவர்களுக்கு அயச் செந்தூரம் கலந்த மருந்துகளை தரச் சொல்கிறது. ஹிஸ்டீரியா எனக் கூறப்படுகிற மன நோய்களுக்குக்கூட உடலின் இரும்புச் சத்துக் குறைவு ஒரு காரணம் என்பதை நவீன மருத்துவமும் ஏற்றுக்கொள்கிறது.




நமது கிராமங்களில் பெரியவர்கள், "பயமெனும்" பேய் பிடிக்காமல் இருக்க இரும்பை கையில் வைத்துக்கொள் எனச் சொன்னது பொய் இல்லை நண்பர்களே! நமது கிராமங்களில் பிள்ளைதாச்சி எனச் சொல்லக்கூடிய கர்ப்பஸ்ரிகளின் கால்களிலுள்ள குட்டிவிரல்களில் இரும்பு மெட்டி அணிவித்ததும், பூப்பெய்திய பெண்களுக்கு அருகில் இரும்பு பூண் பொருத்திய உலக்கைகளை வைத்ததும் மூடப்பழக்கமில்லை நண்பர்களே! இரும்பு அருகிருந்தால் பய உணர்வு குறையும் என்னும் அற்புத விஞ்ஞானம்....




நமது முன்னோர்கள் ஆன்மீக மெய்ஞானிகள், அவர்கள் சொன்னது என்றும் பொய்க்காது.....காக்கை வலிப்பு நோய் கண்டவருக்கு கையில் இரும்பை கொடுப்பதால் ..பய உணர்வு குறைகிறது...சிறுநீரகம் சக்தி பெறுகிறது...அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் நரம்புகளும், மூளையும் வலிமையடைந்து...நரம்பு நோயான காக்கை வலிப்பு தற்காலிகமாகக்குறைகிறது!!!!!!.




என்ன நண்பர்களே, முன்னோர்களின் வைத்தியம் முத்தான வைத்தியம் தானே!!!




சரி,யோக மருத்துவத்தில் இதற்கு என்ன தீர்வு?




நோயாளிக்கு ரத்த அழுத்தம் இல்லாத பட்சத்தில், சர்வங்காசனமும், மச்சாசனமும் நல்ல பலன் அளிக்கும்...புஜங்காசனம்,சலபாசனம், செய்யலாம்...."பஞ்சபூத சங்கமம்" நல்லபலனைக் கொடுக்கும். "நடனசந்தனா" , சாந்தி ஆசனம் மூளைக்கு ஓய்வும் , சக்தியும் அளித்து இந்நோயிலிருந்து மீண்டெழ உதவிசெய்யும்..கிரியாக்களில் "வமன தெளதி" பித்ததைக் குறைத்து நோயைக் கட்டுக்குள் கொண்டுவரும்.


பித்தமிலாது சித்தம் கெடாது என்பது பழமொழி.....பித்த பிரகிருதியில் உள்ளவர்களுக்கே இந்த நோய் அதிகமாகக் காணக் கிடக்கிறது. "கல்யாணக்கிருதம்' எனும் அருமருந்து இந்த நோய்க்குத் தீர்வாக அமையும். விபத்து போன்ற காரணங்களால் தலையில் அடிபட்டு அதன் விளைவாகத் தலைக்குள் ரத்தம் கட்டி அதன் மூலமாக இந்த நோய் உண்டாகும் பட்சத்தில் பஞ்சகர்மா சிகிச்சையில் ஒன்றான"சிரோதாரா" நல்ல பலன் கொடுக்கும்.


திரிதோஷ அறிவையும், உளவியலையும் இணைத்து செய்யப்படும் ஒரு சிகிட்சை முறையே இந்த நோயைக் கட்டுக்குள் கொண்டுவரும். 


Wednesday, October 10, 2012

"தொலைத்தவன்" போட்ட "கோலம்"


எனது நண்பரும் சமூக சேவகருமான காந்தியுடன் நேற்று மாலை குற்றாலத்தில் நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தேன். தார் சாலையில் நடப்பதைத் தவிர்த்து, அந்த மண் பாதையில் நடக்கத் துவங்கினோம். மாலை நேரத்தில் அதுவும் வெளிச்சத்தின் மேல் இருள் கசியும் அந்த இனிய மென்மையான பொழுதில் நடப்பது சுகமாகவே இருந்தது.. நான் சற்று வேகமாக நடக்கும் இயல்பு கொண்டிருப்பதால், தொடர்ச்சியான பேச்சு இல்லாமல். சீரான இடைவெளி விட்டுப் பேச்சு, இருவருக்கும் பொதுவான ஒரு தளத்தில் வந்து கொண்டிருந்தது.

கொஞ்சம் தொலைவிலிருந்தே கவனித்தேன், ஒரு ஆள் அந்த மண் சாலையின் மையத்தில் அமர்ந்திருந்ததை. என் பார்வைக்கு முதுகு மட்டும் தெரிந்தது. கொஞ்சம் நெருங்கி வரும் போது கவனித்தேன் அது ஒரு வயதான மனிதன், சுமார் 60 வயது இருக்கலாம். மேல்சட்டை எதுவும் இல்லை, உற்றுக் கவனிக்கும் முன்பே, உடையையும், தலையையும் வைத்து உள் மனது அடையாளப்படுத்தியது அது ஒரு மனநிலை பிறழ்ந்த மனிதனெற்று.

வழக்கமாக எல்லோரையும் போல எனக்கு இதுபோன்ற மனிதர்களை எளிதாகக் கடந்து போக மனம் இடம் கொடுப்பதில்லை முன்தினம்தான் தொலைக்காட்சியில்“மனம் அது செம்மையானால்” என்ற தலைப்பில் அன்பர் ஒருவர் உரையாற்றியிருந்தார். அந்த உரையில் மனப்பிறழ்வு, மனநோய் பற்றியும், அதற்கான யோக உளசிகிச்சை பற்றியும் அற்புதமாக உரை நிகழ்த்தியிருந்தார். இந்த மனிதனைப் பார்த்த விநாடி சட்டென அந்த அன்பர் சொன்ன ஒரு வாசகம் நினைவுக்கு வந்தது.

நடக்கும் வேகத்தைக் குறைக்காமல், சற்று ஒதுங்கி அந்த மனிதனைக் கடந்தோம். கடக்கும் போது அந்த மனிதன் ஏதோ தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருப்பது கேட்டது அதில் “அப்படியே பண்ணு” என்ற வார்த்தைகள் மட்டும் காதில் விழுந்தது. அதற்கு முன், பின் பேசிய வாசகங்கள் புரியவில்லை, என்னவாக இருக்கும் என்று ஒரு விநாடி கூர்ந்து யோசித்தேன். அந்த மனிதன் பரபரப்பாக அந்த மண் தடத்தில் தன் விரலால் எதோ செய்து கொண்டிருந்தார். ஏதாவது எழுதுகிறாரா என ஒரு ஆர்வத்தோடு பார்த்தேன். எழுத்துகள் இல்லை, வெறும் கோடுகள் வளைவுகளும், நெளிவுகளுமாக இருந்தது. தலையைச் சற்றேச் சிலுப்பிக்கொண்டு மீண்டும் நடையில் கவனமானேன்.

எப்படி அந்த துர்நாற்றத்தின் அருகே, புழுதியில் அந்த மனிதன் உட்கார முடிகிறது. துர்நாற்றம் சிரமமாக இருக்காதா என மனம் நினைத்தது. அடுத்த சில நிமிடங்களில் அந்த மனிதனை மறந்தும் போனேன். 25 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் அதே நீள் சுற்று வட்டத்தில் நடந்து, அந்த இடத்தை நெருங்கும்போது தெரிந்தது, அந்த மனிதன் இன்னும் அதே இடத்தில் பரபரப்பாக அந்த மண் தடத்தில், தன் விரல்கள் மூலம் இயங்கிக் கொண்டிருப்பது. நண்பரிடம் கேட்டேன் “இந்த மனிதனுக்கும் ஒரு வரலாறு இருக்கும் தானே” அவர் ஒற்றை வார்த்தையில் அழுத்தமாக சொன்னார் “கண்டிப்பாக”. மீண்டும் இருவரிடமும் மவுனம் அடர்த்தியாக ஒட்டிக் கொண்டது.
நெருங்கிய போது கவனித்தேன் அந்த மனிதன் முதல் தடவை பார்த்தபோது இருந்த இடத்தைவிட சில அடி தூரம் தள்ளி அமர்ந்து கிறுக்கிக் கொண்டிருந்தார். என்ன கிறுக்கியிருக்கிறார் என்று உற்றுப்பார்த்தேன். மனம் அதிர்ந்தது, அந்த புழுதி மண்ணில் வெறும் கோடுகளும், வளைவுகளும் கொண்டு பூ மாதிரியான ஒரு படத்தை பல முறை அச்சு எடுத்தது போல் ஒரு கோலத்தை மிக அழகாக வரைந்திருந்தார். கோலத்தைப் பார்த்ததும் "புள்ளியில் பூத்த புதுமலர்"வாசுகி அக்கா வரைந்த கோலம் போலவே மிக நுட்பமான கோலமாக அது தெரிந்தது. நண்பரிடம் “கோலத்தைப் பார்த்தீர்களா?” என்று கேட்டேன்.

சில அடிகள் தூரம் நடந்திருப்போம். மனம் பட படவன துடித்தது, திரும்ப ஓடிப்போய் அந்த மனிதனைப் பாராட்டலாமா என மனது தவித்தது. கொஞ்சம் செயற்கையாக இருக்குமோவென்று முட்டாள் தனமாக எண்ணம் தடைபோட்டது. எதுவோ என்னை அந்த இடத்தில் நிற்காமல் விரட்டியது. என மனது குறுக்கும் நெடுக்குமாக பரபரத்தது. அடுத்த சில நிமிடங்களில் மனது முழுக்க அந்த மனிதன் பற்றிய சிந்தனை என்னை கவ்வியது.

யாராக இருக்கும் இந்த மனிதன், இந்த மனிதனின் பெற்றவர்கள் நாம் நம் குழந்தையை வளர்ப்பது போல்தானே வளர்த்திருப்பார்கள். படித்திருப்பாரா? திருமணம் ஆகியிருக்குமா? எதன் காரணமாய் மனநிலை பிறழ்ந்திருக்கும். எந்த விநாடியில் இந்த மனிதன் மனிதனிலிருந்து பைத்தியகாரனாக தடம் புரண்டிருப்பான். சினிமாவில் காட்டுவது போல் சட்டென ஒரு விநாடியில், மின்னல் போல் நிகழ்ந்திருக்குமா? அல்லது தொடர்ச்சியான பற்பல தோல்விகள், துரோகங்களில்,இழப்புகளில் சிறிது சிறிதாக மனது விரிசல் விட்டுச் சிதறிப் போயிருக்குமோ? அந்த மனப்பிறழ்வு அணைக்கட்டில் கசியும் நீர்போல் மெலிதாக, சீரான இடைவெளியில் நிகழ்ந்திருக்குமா?. எல்லோரிடமும் இருக்கும் இயல்பான காதல், காமம், கோபம், பாசம், ஆசை போன்ற ஏதாவது உணர்வுகள் இவருக்கு இப்போதும் இருக்குமா?

மனநிலை பிறழும் நிலை வரை அவர்களை அவர் என்றோ, அவன் என்றோ, அல்லது அவள் என்றோ அழைத்த நாம், மனநிலை பிறழ்ந்த தருணத்திலிருந்து “அது” என்றே அழைக்கிறோமே, ஏன் அவர்களை மனிதனாகப் பார்க்க முடிவதில்லை. எதன்பொருட்டு சகமனிதனிடமிருந்து இவர்கள் தொலைந்து போகிறார்கள்?.

பேருந்து நிலையங்களிலும், கடைவீதிகளின் ஓரத்திலும், உணவு விடுதிகளின் அருகிலும் தவறாமல் அவர்களை தினம் தினம் சந்தித்துக் கொண்டு தானே இருக்கிறோம். ஆனாலும் நம்மால் அவர்களை ஒரு சக மனிதனாகப் பார்க்க முடிவதில்லையே, அது எதனால்?

எத்தனையோ முறை இப்படிப்பட்டவர்களைப் பார்த்திருந்தாலும், இன்று இந்த மனிதனைப் பார்த்த பின் கேள்விகள் சுனாமியாய் மனதினுள் அடித்தது. எந்தச் சுயநலம் நம்மை அவர்களிடமிருந்து பிரிக்கிறது. விடைதேட மனது வெட்கப்பட்டது.

அந்த மண் சாலையில் இவ்வளவு நுணுக்கமாகக் கிறுக்கப்பட்ட இந்த கோலத்திற்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆயுள் இருக்கப் போகிறது. அநேகமாக இந்த மண் தடத்தில் அடுத்து வரப்போகும் நாலு சக்கர வாகனம் வரை தானே!!!???

வாழ்க்கையும் ஒரு கோலம் போலத்தான்......அழிந்து விடக்கூடியதுதான் என்றாலும் நேர்த்தியாக வரைய வேண்டியது நமது கடமை என்பதை வாழ்க்கையைத் தொலைத்த இந்த மனிதனின் கோலத்தின் மூலமாக உள்ளுணர்வு எனக்கு உணர்த்துகிறது....


"கர்மயோகத்தின்" சாரத்தைப் பருகக் கொடுத்தது "தொலைத்தவன் போட்ட கோலம்"......










நன்றி; கதிர் அண்ணன்

இன்று உலக மனநல தினம்..




உலக மனநல தினம் 1992 முதல் அக்., 10ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது உடலால் நன்றாக இருந்து, மனதால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளங்களுக்கு, ஆறுதல் அளிக்க வேண்டிய தினம்..

மனது என்ன நினைக்கிறதோ, அதுதான் செயல் வடிவம் பெறுகிறது.. ஆரோக்கியமான வாழ்வுக்கு,உடல்நலத்தைப் போல, மனநலமும் முக்கியம்..

உலகளவில் 35 கோடி பேர், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்..என புள்ளிவிவரம் கூறுகிறது......எனினும்,நாம் எல்லோருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் மனநிலை பாதித்தவர்களாகவே இருக்கிறோம்...

அனைத்து வயதினரையும் மனநலம் பாதிக்கிறது..நீண்டகால சோகம்,
வேலையின்மை,ஏமாற்றம்,ஏக்கம்,தொடர்தோல்வி,மதுப்பழக்கம்,பிடிப்பு இல்லாமை ஆகியவை மன அழுத்தம் உருவாக காரணங்கள்..

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்,தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர்..
ஆண்டுதோறும் உலகம் முழுவதும், 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர்..இவர்களில் 15 முதல் 44 வயதுக்குட்பட்டோரே அதிகம்..

மனநலம் பாதிக்கப்பட்டால் உடல் நலனும் பாதிக்கப்படும் என்பதை மறக்க கூடாது..

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சைஅளிப்பது,மனநிலை மருத்துவர்களுக்கு சவாலாக உள்ளது..நீண்டகால சிகிச்சை மூலமே, அதுவும் மனப்பிறழ்வு நோயாளிகள் இதிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று நினைத்தால் மாத்திரமே ஓரவுளக்கு இதை தீர்க்க முடியும்..மேலும் இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப, மனநல மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லை..

கல்லூரிகளில் மனநிலை மருத்துவப் படிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்..

மனநலம் பாதித்தவர்களை, தீண்டத்தகாதவர் போலப் பார்ப்பது பிரச்னையை அதிகரிக்கிறது..அவர்களைப் புரிந்துகொண்டு அவர்களிடம் கருணையோடு நடந்து கொள்வது மட்டுமே 90 சதவீதம் அவர்களை நோயிலிருந்து விடுபட உதவி செய்யும். 

நகர்ப்புறங்களில் வாழ்வோரிடமும்,அதிகம் படித்தவர்களிடம்(!) இந்நோய் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது..

பாதிக்கப்பட்டவர்களை மதிப்பது,சிகிச்சை அளிப்பது, அவர்களுக்குரிய
உரிமைகளை வழங்குவது போன்றவை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாமல் உள்ளது..

மனநோயை பேய் பிடித்திருப்பதாக நினைக்கின்றனர்..இதனால் மை வைத்தல்,மருந்து வைத்தல், பேய் விரட்டுதல் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன..இவை மூடநம்பிக்கைகள்..

மனநலம் பாதிக்காமல் இருக்க, மனம் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவேண்டும்.மகிழ்ச்சியாகஇருக்கவேண்டும்..இசைகேட்பது,
விளையாடுவது,நண்பர்களுடன்கலந்துரையாடுவது,உடற்பயிற்சி,
யோகா,தியானம்செய்வது நல்லது..மற்றவர்களுடன் பழகவேண்டும்..தனிமையைத் தவிர்க்க வேண்டும்..

உடல்நலத்திற்கு உடற்பயிற்சியை மேற்கொள்ளுகிற விழிப்புணர்வு பெற்ற படித்தவர்கள் கூட மன நலத்திற்கான பயிற்சியைப் பற்றி யோசிப்பதில்லை. 

மனநலம் எனும் அஸ்திவாரத்தில் நின்றுகொண்டு உடல்நோயை சமாளிக்கலாம்.ஆனால் அஸ்திவாரமே ஆட்டம் கண்டால்?????