Total Pageviews

Friday, December 16, 2011

திருக்கண் நோக்கம்







மாஸ்டர், உண்மையில் நோக்குவர்மம் என்றால் என்ன? எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா?.........bhaskar raja



தியானம் கற்றுத்தருமாறு கேட்டான் சீடன், "நான்" இறந்தபின்பு வா என்றார் குரு.  சீடனோ, குருவைக்கொன்றான். இது ஒரு ஜென் கவிதை. இன்றைய கால கட்டத்தில் நோக்குவர்மம் பற்றி எழுதுவது கூட ஆபத்தானதோ என நினைக்கத் தோன்றுகிறது........ ஏழாம் அறிவுக்குப்பின் நோக்கு வர்மம் மிகவும் மலிவு விலைச் சரக்காகிவிட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது. நோக்குவர்மம் பற்றித் தெரியாதவர்கள் இன்றையத் தேதியில் இருக்க முடியாது, கற்றுக்குட்டிகளால் ஆரம்பிக்கப்படும் யோகப்பள்ளிகள் போல நோக்குவர்மா வகுப்புகளும் இனி நடத்தப்படலாம்.!!!!!!! பணத்திற்காக யோகச்சான்றிதழ் வழங்கிய பல்கலைகழகங்கள் நோக்குவர்மத்திற்கும் சான்றிதழ் வழங்கலாம்!!!!!!!

நோக்கு வர்மம் என்பது தனது பார்வையினால் எதிரிகளைத் தாக்கும் ஒரு போர்க்கலையாக மட்டுமே அரங்கேற்றப்பட்டுவிட்டது. ஒரு தகுதி வாய்ந்த குரு, தான் பெற்ற ஆன்ம அனுபவத்தை, அறிவை, தனது பிராண சக்தியைத், தனது மேம்பட்ட சீடனுக்குப் பகிர்ந்து கொடுக்கக்கூடிய "நயன தீட்சை" முறையையும், ஒரு மேம்பட்ட யோகி, நோயாளியைத் தொடாமலேயே தனது பார்வையால் நோயாளிக்குப் பிராண ஆற்றலை வழங்கி அவரைக் குணப்படுத்தும் மருத்துவ முறையையும் உள்ளடக்கியதே "நோக்குவர்மம்" நமது ஒப்பற்ற ஞான குரு, ரமண பகவான், தனது அணுக்கத் தொண்டர்களான முருகனாருக்கும், தேவராஜமுதலியாருக்கும், இன்னும் சிலருக்கும் ,தான் பெற்ற ஞான அனுபவத்தைக், கண்களின் மூலமாகக் கடத்திக் கொடுத்ததும், சீரடி மகான், குஷ்ட நோயாளியின் உள்ளுக்குள் இருந்த கர்மக் கழிவுகளைத் தனது பார்வை தீட்ஷணியத்தால் விரட்டி அடித்து நோயைக் குணமாக்கியத் திருக்கண் நோக்கமும், நோக்கு வர்மமே! 




நோக்குவர்மத்தின் மர்மம் என்ன? திறவுகோல் எங்கு உள்ளது? இதைக்கற்றுக்கொள்ளும் வழிமுறை என்ன? இதற்கான விடையைப் போதிதர்மரின் வரலாற்றுக் குறிப்புகளையும், சித்தர்களது யோகப்பயிற்சிகளையும் இணைத்து ஒப்பீடு செய்வதின் மூலம் அறிய முடியும்.


போதிதர்மர் தென்னிந்தியாவிலிருந்து முதலாவதாக தென் சீனப்பகுதியை அடைகிறார்.அங்கு அவரது போதனைகள் வரவேற்பு அற்றுப் போகிறது. அதனால் அவர் வடசீனப்பகுதி ராஜதானியான "வேயி" னை அடைந்து அங்குள்ள புத்த விகாரத்தினை அடைகிறார். திரவிடப்பிக்குவான இவரை அந்தஆலயத்தினுள் செல்ல விடாமல் தடுக்கின்றனர். அதனால் அருகில் உள்ள குகையினுள்சென்று அந்த குகையின் சுவரினைக் கண்ணினால் உற்று நோக்கியவண்ணம் ஒன்பதுவருடம் தொடர்ச்சியாகப் பயிற்சியில் ஈடுபடுகிறார். இந்த பயிற்சியின் போது கண்மூடுவதைத் தவிர்ப்பதற்காகத் தனது கண்ணிமைகளை வெட்டி எறிந்ததாகவும், அந்த இமைகள் நிலத்தின் மீது விழுந்தபோது உருவான தாவரம் தான் "தேயிலை" எனவும் அவரது வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இதன் உண்மைத்தன்மை என்னவெனில் தேயிலை மனதை விழிப்புணர்வில் வைத்திருக்கும் என்பதுதான். அதனால் தான் இன்றும் ஜென் கலாச்சாரத்தில் தேனீர் விருந்து ஒரு முக்கியமான ஒரு விழிப்புணர்வு விழாவாகக்கொண்டாடப்படுகிறது.


இதன் பின் அவர் புத்த குருமார்களால் வரவேற்கப்பட்டார், ஷாவலின் ஆலயத் துறவிகள் உடல் வலுவற்று இருப்பது கண்டு உடல் நலத்திற்காக அவர்களுக்குப் பகிரங்க யோகப்பயிற்சியான ஆசனப்பயிற்சிகளையும், மனநலத்திற்காக அந்தரங்க யோகப்பயிற்சிகளானப் பிராணயாம, பிரத்தியாகாரத், தாரணைப் பயிற்சிகளையும் கற்றுக்கொடுத்தார். 


சரி நோக்கு வர்மத்திற்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்?


போதிதர்மர் எப்படி நோக்கு வர்ம சித்தியடைந்தார் என்பது பற்றிய குறிப்புத்தான் இந்தக்கதை. அதாவது குகைச் சுவரை உற்று நோக்கியவண்ணம் ஒன்பது ஆண்டுகள் தவமிருந்தார் என்பதுதான் இதில் முக்கியச்செய்தி.


இந்தப்பயிற்சியின் இரகசியம் என்ன வென்பது பற்றி அறிய வேண்டுமானால் நாம்திரும்பவும் இந்திய யோகிகளிடம் வரவேண்டும். ஆம் யோகக்கலையின் அடிப்படைதெரியவேண்டும்.


அஷ்டாங்க யோகத்தின் ஆறாவது படியான "தாரணை" பற்றித் தெரியவேண்டும். அட்டாங்கயோகத்தின் இறுதி நிலையான சமாதியினை அடைவதற்கு தாரணைப்பயிற்சி மூலம் சாதனை பயின்று புத்த நிலையினை அடைந்தார் என்பது தான் இந்தக்கதையின் உண்மை விளக்கம். சமாதி எனும் இந்த புத்த நிலைச் சித்தியினைப் பெறுவதற்காகத்தான் ஒன்பது வருடங்கள் போதிதர்மர் குகைச் சுவரினை உற்றுப்பார்த்த வண்ணம் "திராடகச்"சாதனையிலிருந்தார். திருமூலரது திருமந்திரம், போகர் 7000, அகஸ்தியர் பாடல்கள்,பதஞ்சலி முனிவரது யோக சூத்திரம், ஔவையாரின் ஞானக்குறள் என்பவற்றில் தாரணையைப் பற்றியக் குறிப்புகள் உள்ள‌ன.


மகரிஷிபதஞ்சலியின் உபதேசப்படிக் "கட்டுப்படுத்தப்பட்டு அசைவற்றிருக்கும் சித்தமே தாரணை" எனப்படும், அதாவது மனதில் ஏற்படும் எண்ண அலைகளுக்கும் மூலமான சித்த விருத்திகளை உருவாக்கும் சித்தத்தினைக் கட்டுப்படுத்தி ஒரு இடத்தில் நிலைகொள்ளச்செய்யும் செயல் முறைதான் "தாரணை" எனப்படும்.12 வினாடிகள் சித்தம் செயல்படாமல் இருந்தால் அது ஒரு தாரணை எனப்படும். 12 தாரணைகள் சேர்ந்ததே ஒரு தியானம் எனப்படுகிறது.


யோகத்தின் ஆறாவது நிலையான "தாரணை"யே, நோக்கு வர்மத்தின் அடிப்படை , "தாரணா" சித்தியின் ஒரு பிரயோகம்தான் நோக்குவர்மமே ஒழிய அது தனியாக பயிலவேண்டிய கலை அல்ல, யோகத்தின் படிநிலையில் அடையப்படுகின்ற ஒரு உப அன்பளிப்புதான் நோக்குவர்மம். இயமம், நியமம், பிரத்தியாகாரம் பழகுவதாலும், தனது நோக்கம் சமாதிநிலையே என உணர்ந்து கொண்டதாலும், ஒரு தகுதி வாய்ந்த யோகி, எந்தச் சூழ்நிலையிலும் இந்த சித்தியினை மற்றவரைத் தாக்குவதற்கு உபயோகிப்பதில்லை. மாறாகத் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், தவத்தால் தான் பெற்ற தனதுப் பிராண சக்தியை, அறிவாற்றலைத், தகுதி வாய்ந்த மாணவர்களுக்குப் பரிசாகப் பகிர்ந்து கொடுக்கவும், நோயால் அவதிப்படும் மனிதர்களைக் காப்பாற்றுவதற்காகவும் இந்தத் தாரணசித்தி இன்றளவும் யோகியரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

தென்பொதிகைச் சித்தர்களால் யோகத்தாரணப்பயிற்சி சில தகுதிவாய்ந்த போர்வீரர்களுக்கும், ராஜாக்களுக்கும், நல்லெண்ணம் கருதி கற்பிக்கப்பட்டது என்பதையும், சில சித்தர்குறிப்புகளில் காணமுடிகிறது. குறிப்பாகத் தென்காசிக் கோவிலைக் கட்டிய மன்னன் பராக்கிரமபாண்டியனுக்கு சில ஒழுக்க நிபந்தனைகளுக்குப் பிறகு அஸ்வினியாத்தேவர் எனும் சித்தகுருவால் நோக்குவர்மம் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது. இந்த சித்தகுருவின் ஜீவசமாதி இன்றும் தென்காசிக் கோவிலினுள் யோக அருள் வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஜீவசமாதியில் ஒரு தூணில் பராக்கிரமபாண்டியன் சித்தகுருவை வணங்கியவண்ணம் நிற்கும் உருவம் செதுக்குச் சிற்பமாகப் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றளவும் காணமுடிகிறது. இந்த சமாதியில் தியானம் செய்தபோது ஏற்பட்ட அனுபவங்களை என்றுமே மறக்கமுடியாது.



அஷ்டாங்க யோகம் என்பது ஒருவர் ஆதியுடன் கலக்கும் சமாதி எனும் நிலைக்கு செல்வதற்கான மிகச்சரியான வழியில், ஒழுங்கு படுத்தப்பட்ட, முறைப்படுத்தப்பட்ட ஒரு பயிற்சி முறையாகும். பதஞ்சலியார், திருமூலர் ஆகிய சித்தர்கள் இதனை தெளிவாக விரிவாக முறைப்படுத்தி வைத்தனர். இந்தப் பயிற்சி முறையின்படி ஒரு யோகசாதகன் தன் உடலையும், உள்ளத்தையும் இயம, நியமங்களால் சுத்தி செய்து, பின் சூஷ்ம ஸ்தூல உடலை ஆசன, பிராணாயாமங்களால் பக்குவப்படுத்தி, பின் மனதை பிரத்தியாகாரத்தினால் புறப்பொருட்களில் இருந்து பிரித்தெடுத்து, குறித்த ஒரு இலக்கில் தாரணை எனும் பயிற்சியால் ஒருமுகப்படுத்தி, பின் ஒருமைப்படுத்திய வஸ்துவில் மனதை கரைத்து (தியானம்), மனமற்ற நிலையுடன், ஆதியான பரம்பொருளுடன் ஒன்றாதல் (சமாதியாகும)


ஒருவன் நோக்கு வர்மத்தினை பிரயோகிக்க தியானம், சமாதி ஆகிய இருநிலைகளை மட்டும் தவிர்த்து அஷ்டாங்க யோகத்தின் மற்ற ஆறு படிமுறைகள் அனைத்தையும் அறிந்திருத்தல் அவசியம். 

இயம, நியமம் அவனது மனம் தவறு செய்ய தூண்டாமல் வைத்திருக்கும். 
ஆசனம் - உடலைப் பக்குவப் படுத்தி, அதனைப் பிராணனைத் தேக்கி வைத்துக் கொள்ளும் கொள் களமாக மாற்றும். 
பிரணாயாமம் - பிராண சக்தியினைச் சீர் செய்யும். பிராண சக்தியினைக் கட்டுப்படுத்தும் 
பிரத்தியாகாரம் - உணர்ச்சி வசப்பட்டு தாக்குதல் நடத்தாமல் இருக்க மனதை பண்படுத்தும். 
தாரணை - நோக்கு வர்ம தாக்குதல் நடத்தும் முறை. 



மனிதமனம் மேல்மனம், ஆழ்மனம், மறைமனம் என்ற மூன்று அடுக்குகளை உடையது. சாதரணமாகப் பெரும்பாலானோர்க்கு மேல்மனம் மாத்திரமே உபயோகத்தில் இருக்கும், எப்படியென்றால் கேள்வி கேட்டுத் தர்க்கத்தின் மூலம் அறிதல் மேல் மனத்தின் செயல்முறை, சற்று ஆழ்ந்து சிந்திப்பவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களுக்கு ஆழ்மனம் செயல்பாட்டில் இருக்கும், இதைத்தான் பதஞ்சலி முனிவர் சித்தம் என்று கூறுகிறார். இந்த சித்தம்தான் மனதில் வரும் எண்ணங்களுக்குத் தூண்டுகோல், சக்தியின் இருப்பிடம், இந்த சித்தத்தினை ஒரு நிலைப்படுத்தி ஒரு இடத்தில் பாய்ச்சும் சக்தி பெற்றால் அது பல சித்திகளை கொடுக்கும். இதனைப் பொதுவாக தாரணா சக்தி/ஏகாக்ர சக்தி எனக் கூறலாம். 


நோக்குவர்மத்தைப் பிரயோகப் படுத்தத் தாரணாசக்தி மட்டும் போதுமா? ஆண்டெனா இருந்தால் மட்டும் போதுமா, மின்சாரமும் வேண்டுமல்லவா! ஆதாலால் இதனைச் சாதிப்பதற்குப் பிராணசக்தியும் அவசியம். அதற்கு பிராணாயாம பயிற்சி கட்டாயம் சித்தியாகியிருக்க வேண்டும். தாரணா சித்தியுடன் பிராண சக்தியும் கலக்கும் போது மட்டுமே நோக்கு வர்மம் சாத்தியம்.


நோக்குவர்மத்தைச் சாதிப்பதற்கான பயிற்சிமுறை "யோகத்திராடகம்" எனப்படும். இதனை (அந்தர்)அகத்திராடகம், (பாஹ்ய)புறத்திராடகம் என இருவகைப்படுத்தலாம். நோக்கு வர்மத்திற்கு தேவையானது புறத்திராடகம். அதாவது கண்களால் சித்த சக்தியினையும், பிராணசக்தியினையும் செலுத்தும் ஆற்றலைப்பெறுவது. இப்படி கண்களால் பிராண, சித்த சக்திகளை செலுத்தும் ஆற்றலைப்பெற்ற ஒரு தகுதி வாய்ந்த யோகியே நோக்கு வர்மத்தினைப் பிரயோகப்படுத்தமுடியும்.


"திராடகம்" என்ன என்பது பற்றி ஒரு நல்ல குருவிடம் பயிற்சி பெறுதலே சித்தியைத் தரும், முறையானப் பயிற்சி இல்லாமலும், தேர்ந்த வழிகாட்டுதல் இல்லாமலும் இதனை செய்தால் கண்கள் பழுதாகும் அபாயம் உண்டு, ஆதலால் இங்கு அதன் செயல்முறை பற்றி விளக்கம் தரவில்லை. முறையானத் திராடகப் பயிற்சியினால் மட்டுமே தாரணையில் திடம் பெறுவது சாத்தியம்.

"பிராண சக்தி", தமிழில் "வாசி" எனவும், சீன மொழியில் "Chi- சீ" எனவும்,ஜப்பானிய மொழியில் "Ki-கீ" எனவும் அழைக்கப்படுகிறது. இது சுவாசத்தினால் பெறப்படும் ஆக்ஸிஜன் வாயுவல்ல! பிராணன் என்பது பிரபஞ்ச சக்தி, அதனது ஓட்டம் மூச்சுடன் தொடர்புடையதேதே அன்றி உட்சுவாசிக்கும் மூச்சு பிராணன் அல்ல, பிராணனைக் கட்டுப்படுத்தும் இலகுவான வழி மூச்சுப்பயிற்சியாகிய பிராணாயாமம், அதே வேளையில் பிராணனைக் கட்டுப்படுத்தும் வேறு பயிற்சி முறைகள் இருக்கிறதா? எனக்கேட்டால் மற்றைய சாதனைகளான மந்திரம், முத்திரைகள், சிலவகையான மூலிகை மருந்துகள் போன்றவற்றாலும் பிராணணைக் கட்டுப்படுத்தமுடியும்.

இந்த பிராணன், உடலிலுள்ள சூட்சும பஞ்சபூத குழிகளின் மூலமாக ஈர்க்கப்பட்டு(பஞ்சபூத சங்கமம்) பின் ஆறாதாரங்களில் சேமிக்கப்பட்டு(நாத சங்கமம்), பின் எழுபத்தீராயிரம் நாடிகளின் வழியாக தச வாயுக்களாக(பிராண சங்கமம்) உடல் முழுவதும் பரவுகிறது. இந்த பிராண ஓட்டம், குறிபிட்ட நாழிகைகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடிகளில் மாறி ஓடும். அந்த ஓட்டத்தின் படியே உடலியக்கம், மனவியக்கம் என்பன ஆளப்படுகின்றன என்பதுவே சித்தர்களது யோகமருத்துவ சாஸ்திர அடிப்படை, சீன மருத்துவத்தின் அக்குபிரசர், அக்குபஞ்சர் என்பவற்றின் அடிப்படையும் இதுவே. 


 நோக்கு வர்மத்தில் ஒரு யோகி தன்னுடைய தாரணா சக்தியையும், பிராணசக்தியையும் ஒன்று திரட்டி, தீட்சண்யப் பார்வை மூலமாக பிறிதொரு மனித உடம்பிலுள்ள 72000 நாடிகளில் மூன்று விதங்களில் தாக்கத்தை உண்டாக்க முடியும்.. 


1. நாடிகளில் அதிக பிராணனை உட் செலுத்துதல்.


2. நாடிகளில் பிராண ஓட்டத்தினை தடைப்படுத்துதல்


3. நாடிகளிளுள்ளப் பிராணணை உறிஞ்சுதல்


அதிக பிராணனை உட் செலுத்தும் இந்த முறை பாதிப்பில்லாதது, இதனால் பிராணனைச் செலுத்துபவரிடம் இருந்து வாங்குபவர் அதிகப் பிராணனைப் பெற்று அதனைத் தாங்க முடியாமல் மயங்கி, நிலை குலைந்து போவர். அல்லது ஆரோக்கியம், அமைதி பெறுவார். பிராணனைச் செலுத்தும் யோகியின் நோக்கத்தினைப் பொறுத்து விளைவுகள் வேறுபடும். உயிர் போய்விடும் நிலையிலுள்ள ஒரு நோயாளியைக்கூட இந்த முறையினால் இன்னும் கொஞ்சநாள் உயிருடன் வாழவைக்கமுடியும். அங்குலிமாலன் போன்ற மிகப்பெரிய கொலைகாரனைக்கூட புத்தபெருமான் அமைதியடையச் செய்தது இந்த முறையினால்தான்.


பிராண ஓட்டத்தினைத் தடைப்படுத்தும் முறை ஆபத்தானது, மரணத்தினை ஏற்படுத்தவோ, அல்லது பஞ்சபூத உள்ளுறுப்புகளைச் செயலிழக்கச் செய்யவோ வல்லது. மறுபடி சரியான நேரத்தில் பிராண சக்தி கொடுக்கப்படாவிட்டால் பாதிப்பு அதிகமாகும்.  



பிராணனை உறிஞ்சும் முறை ,அதி ஆபத்தான முறை, இதனைத்தான் மெய்தீண்டாகாலம் என்பர், அதாவது மெய் (உடலினை) தீண்டாமல் பிறிதொரு மனிதனிடம் உள்ள பிராண சக்தியை யோகி கிரகித்துக் கொள்ளும் முறை. இதனை ஒரு பக்குவப்பட்ட யோகி செய்யமாட்டார். உயிர் பிரிய முடியாமல் வலியினால் வேதனைப் படும் நோயாளிக்கு இந்த முறை பயன்பட்டதாகச் சித்தர் குறிப்புகள் காணப்படுகிறது.


நோக்குவர்மா சாதனையில் சித்த சக்தியினையும் பிராணசக்தியினையும் செலுத்தும் சாதனமாக கண் விளங்குகிறது. எனவே கண்களைப் பலப்படுத்தும் பயிற்சிகளையும், சில மருத்துவ வழிமுறைகளையும் சாதகன் பின்பற்றவேண்டியது அவசியமாகிறது.


இவைதான் நோக்கு வர்மத்தின் அடிப்படை, நோக்குவர்ம பயிற்சியைக் குருவில்லாமல் கற்பது கற்பவர்களுக்கே ஆபத்தினை விளைவிக்க வல்லது, ஏனெனில் தமது உடலிலுள்ள பிராண ஓட்டத்தின் மூலம் மற்றவரை கட்டுப்படுத்தும் போது சரியான முறையில் அணுகவில்லையானால் தாக்க விளைபவரையே பாதிப்புறச் செய்யும்.







வள்ளல்பெருமான் தாரணைத் தவத்தாலேயே ஜோதியுடன் ஐக்கியமானார் என்பது குறிப்பிடத் தக்கது.பகவான் ஓஷோவின் வழியிலுள்ள "சுரக்க்ஷா"தியானமும், பிரம்மராஜகுமாரிகளின் ராஜயோக வழிமுறையும் தாரணத்திராடகாவை மையப்படுத்திய பயிற்சி முறைகளே.

இந்தப்பதிவின் நோக்கமே ஆர்வமுள்ள இளைஞர்கள் உண்மையினை உணர்ந்து விஞ்ஞான பார்வையுடன் இக்கலைகளைக் கற்க முற்பட வேண்டும். நமது "சிவராஜயோகம்" எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது என்பதனை உணரவேண்டும் என்பதே. 


நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்-  -   எட்டையபுரச் சித்தன்.


நோக்கியேக் கருதி மெய்தாக்கியேப் பக்குவம் 
ஆக்கியே ஆண்டெனை அருணாச்சலா-ரமண பகவான்



6 comments:

gayathri said...

யோகா என்னும் கடலை ஒரு சிறு துளியில் மிகவும் அற்புதமாக ,தெளிவாக புரியவைத்து விட்டீர்கள் மாஸ்டர் ,மிக்க நன்றி மாஸ்டர்.

dass said...

நன்றி மாஸ்டர்.

. said...

சிவா அவர்களுக்கு வணக்கம்! இயமம், நியமம், பிரத்தியாகாரம் என்றால் என்ன?

தாரணை என்றால் என்ன? வள்ளலார் அவர்கள் தாரணை தவம் தான் புரிந்தார் என்பதை அவர்கள் எழுதிய திரு அருட்பாவில் இருந்தால் எனக்கு தெரியபடுத்துங்கள்.

Unknown said...

mikka arumai

Unknown said...

நான் உங்கள் சீடனாக வேண்டும்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்...
இது எனது துளைபேசி எண் 6591601284 ....சிங்கப்பூர்...நீங்கள் என்னை ஏற்றுக்கொள்வீர்..
நன்றி குருவே சரணம்

vv9994013539@gmail.com said...

vaalthukal aya.

Post a Comment