Total Pageviews

Saturday, August 25, 2012

கடவுள் இறந்துவிட்டார்.......




"கடவுள் இறந்து விட்டார்.நேற்று மாலைத் தூக்குப் போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.அன்னாரது ஈமக்கிரியைகள் வரும் 16ம் தேதி கண்ணம்மாப்பேட்டைச் சுடுகாட்டில் நடைபெறும்"இடி இறங்குவது போல் அந்த செய்தி மக்களிடையே இறங்கியது.ஆரம்பத்தில் யாரும் அதை நம்பவில்லை.ஆனால் கடவுளின் உடலை மக்களின் பார்வைக்கு வைத்ததும் தான் அதை அனைவரும் நம்பினர்."ஓ"வென அனைவரும் அழுது புலம்பினர்.அவரது உடலைச் சுடுகாட்டுக்குக் கொண்டு செல்ல பெரும் கூட்டம் கூடியது.அவரது உடலைத் தகனம் செய்து முடித்ததும் பெருத்த விவாதம் மூண்டது."உலகம் இதோடு அழிந்தது" என அலறினார்கள் . "நியாயம்,தர்மம்,நேர்மை,நீதி எல்லாம் கடவுளோடு புதைபட்டு விட்டது" என ஆருடம் சொன்னார்கள் பலர்.

ஆள்வோர் கூட இதை நினைத்துக் கவலை கொண்டனர்.கடவுளுக்கு 16ம் நாள் காரியம் முடிந்த பிறகு பெரிய கலவரம் வரலாம் என அரசு எதிர்பார்த்தது. அதற்குள் புதிய கடவுளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என ஆள்வோர் முடிவு செய்தனர். புதிய கடவுளையும் புதிய மதத்தையும் தீர்மானிக்க ஒரு சர்வதேசக் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது.கடவுளைத் தேர்ந்தெடுக்கும் முன் புனித நூல் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டுமல்லவா?கமிட்டியின் முன்பு இது தான் பெரிய பிரச்சனையாக இருந்தது.இறுதியில் கமிட்டி மெம்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜனநாயக அரசியல் சட்டமே உலகின் புதிய வேதநூலாக இருக்கும் என முடிவுசெய்தனர்.பெண்ணுரிமை,பேச்சுரிமை,சமத்துவம்,சுதந்திரம் ஆகியவை இந்த புதிய மதத்தின் கோட்பாடுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

"அவனவன் வேலையை அவனவன் பார்ப்பது" என்பது இந்த புதிய மதத்தின் முக்கிய கோட்பாடாக எற்கப்பட்டது. அடுத்தவனின் தனிமனித சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பது மிகப்பெரும் பாவமாக இந்த புதிய மதத்தில் கருதப்பட்டது.

கடவுளாக யாரை நியமிக்கலாம் என மிகப்பெரும் குழப்பம் ஏற்பட்டது. இறுதியில் தனிமனித சுதந்திரத்தை கடவுளாக ஏற்கலாம் என ஒருமித்த கருத்து உருவானது.ஒரே கடவுள் வழிபாடு இருந்தால் பிரச்சனை உருவாகலாம் என்பதால் சுதந்திரத்தோடு சமத்துவமும் சகோதரத்துவமும் கடவுளாகச் சேர்க்கப்பட்டு 3 கடவுள்கள் - ஒருவருக்கொருவர் சமமானவர்களாக உருவாக்கப்பட்டனர்

கடவுளின் வழிபாட்டு ஸ்தலங்களாகப் பள்ளிகளும் கல்லூரிகளும் இருக்கும் என கமிட்டியினர் முடிவு செய்தனர்.புதிய மதத்தை அனைவருக்கும் இந்த பள்ளியில் கற்றுத்தரலாம் என முடிவு செய்யப்பட்டது. புதிய மதத்தை கட்டாயமாக்கலாமா என பெருத்த விவாதம் நடந்து இறுதியில் அதை கட்டாயமாக்குவதில்லை என முடிவு செய்தனர். தன்னை கட்டாயாமாக அனைவரும் வணங்குவதைத் தான் விரும்பவில்லை என புதிய கடவுளானத் தனிமனித சுதந்திரம் கூறிவிட்டார்.மற்ற கடவுள்களானச் சமத்துவமும்,சகோதரத்துவமும் இதையே சொன்னார்கள்.

16ம் நாள் காரியம் முடிந்ததும் மக்கள் பெரும்திரளாக கூடினார்கள். வன்முறையில் அவர்கள் ஈடுபடுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் அப்படி வன்முறையில் ஈடுபடவில்லை. கட்டித் தழுவிக் கொண்டனர்.மதம்,ஜாதி,இனம் முதலிய அத்தனை வேறுபாடுகளயும் மறந்து அனைவரும் ஒருவரை ஒருவர் தழுவி மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள். இனிமேல் ஜாதி மத சண்டைகளேப் பிடிப்பதில்லை என அனைவரும் சத்தியம் செய்து கொண்டார்கள்.

திடிரென்று பார்த்தால் உலகின் அனைத்து பிரச்சனைகளும் மிகச் சுலபமாகத் தீர்ந்து விட்டன. ஜாதிச் சண்டை,மதச் சண்டை முதலிய அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விட்டன. நாடுகளுக்கிடையே இருந்த பல பிரச்சனைகள் விநாடி நேரத்தில் ஒழிந்து விட்டன.வலதுசாரி இடதுசாரி அரசியல் கட்சிகள் அனைத்தும் காணாமல் போய் விட்டன.

ஆள்வோர் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். கலவரம் வருவதற்குப் பதில் உலகம் அமைதியான பூங்காவாக மாறிவிட்டது. காதல் திருமணங்கள் செழித்து வளர்ந்தன. ஆண்கள் பெண்களுக்குச் சம உரிமை தந்தனர். ஜாதி கொடுமைகள் ஒழிந்து மேல் ஜாதியினரும் கீழ் ஜாதியினரும் பெண்கொடுத்துப் பெண் எடுத்து சம்மந்திகளானார்கள். மத வேறுபாடுகள் மறைந்து மனிதர்கள் அனைவரும் ஒன்றே குலம் என வாழத்துவங்கினர். பெண்கள் சுதந்திரம் பெற்று சம உரிமை பெற்ற மனைவிகளானார்கள். பிற்போக்குச் சட்டங்கள் அனைத்தும் ஒழிந்து அவர்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலையும் கிடைத்தது.

புதிய கடவுள்களை அறிமுகப்படுத்த இதுவே சரியான சந்தர்ப்பம் என ஆள்வோர் முடிவு செய்தனர். பெரும் கூட்டம் ஒன்றை கூட்டினர்."இதோ புதிய மதம்,இதோ புதிய கடவுளர்" என சமத்துவம்,சுதந்திரம்,சகோதரத்துவம் மூவரையும் அறிமுகப்படுத்தினர்."இது தான் இவர்களை வணங்கும் முறை" என சமதர்ம ஜனநாயக சட்டப்புத்தகத்தை அறிமுகப்படுத்தினர்.

மக்கள் அனைவரும் புதிய கடவுளரை வணங்க முற்பட்டனர்."வேண்டாம்" எனச் சமத்துவ கடவுள் அலறினார். "நான் உங்களை விட உயர்ந்தவனல்ல. உங்களில் ஒருவன்." என கூறினார். மேடையிலிருந்து இறங்கி மக்களிடையேக் குதித்து அவர்களை கட்டித்தழுவினார்."நான் உங்கள் சகோதரன். உங்களில் ஒருவன். என் பெயர் சமத்துவம்" என கூறினார். மக்கள் ஆர்பரித்து அவரை தழுவினர். ஆரவாரம் செய்து அவரை ஏற்றுக்கொண்டனர்.

அடுத்ததாகச் சகோதரத்துவத்தை வணங்க முற்பட்ட போது அவரும் அதை ஏற்காமல் மக்களிடையேக் குதித்தார்."நான் உங்கள் சகோதரன்.என்னை ஏன் வணங்குகிறீர்கள்?" எனச் செல்லமாக கோபித்தார்."நான் உங்களில் ஒருவன்.என் பெயர் சகோதரத்துவம்" என கூறினார். மக்கள் ஆர்ப்பரித்து அவரை தழுவினர். ஆரவாரம் செய்து அவரை ஏற்றுக்கொண்டனர்.

சுதந்திரமும் மக்களிடையே கலந்தார்."நான் சுதந்திரம்.என்னை ஏற்றுக்கொண்டால் நீங்களும் சுதந்திரம் பெற்றவர்களாவீர்கள்" எனக் கூறினார். மக்களிடையே மக்களாக இந்த மூன்று கடவுளர்களும் ஒன்று கலந்தனர். தம் வேதநூலை மக்களுக்குப் படிக்க கொடுத்தனர். கோடிக்கணக்கில் மக்கள் இப்புதிய மதங்களால் ஈர்க்கப்பட்டனர். இதை தழுவினர்.

இந்தக் கூத்தை எல்லாம் விண்ணில் இருந்தபடி கடவுள் ரசித்து சிரித்துக்கொண்டிருந்தார். இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று தானே அவர் தற்கொலை செய்தது போல் நாடகமாடினார். மனிதன் தன் பிரச்சனைகளைத் தானே தீர்த்துக்கொள்ள வேண்டும், உலகின் புதிய கடவுளாக அவன் உருவெடுக்க வேண்டும்,சாதி,மத சண்டையை அவன் நிறுத்த வேண்டும்,எதற்கெடுத்தாலும் கடவுளிடம் ஓடி அவருக்கு ஜால்ரா தட்டுவதை அவன் நிறுத்த வேண்டும் என அவர் நினைத்தார்.

அதை செய்ய சிறந்த வழி இதுதான் என அவருக்கு பட்டது. அதனால் தான் இந்த தற்கொலை டிராமாவை அவர் அரங்கேற்றினார்.

மக்கள் சிரித்து சந்தோஷமாக இருப்பதைக் கண்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார். அவருக்கும் இனி உலகின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வேண்டியத் தொல்லை விட்டுப்போனது.

ரிமோட்டை எடுத்து செய்திகளைப் பார்க்கத் துவங்கினார். மதக்கலவரம்,போர், சண்டை என எதுவும் இல்லாத மானிடஇனத்தின் முன்னேற்றத்தை,பெண்ணின்னேற்றத்தை,சமத்துவத்தை,சுதந்திரத்தை மட்டுமே செய்திகளில் பார்த்த கடவுள், ஆனந்த கண்ணீர் விட்டார். சிட்டுக்குருவிகள் போல் தன் குழந்தைகள் சிறகடித்துப் பறப்பதைக் கண்ட கடவுள் ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாயின் மனநிலையை அடைந்து சாந்தி பெற்றார்.




ஓம் சாந்தி.....சாந்தி....சாந்தி 







posted by முத்தமிழ்

Sunday, August 19, 2012

கோகுலாஷ்டமி 2012



பொன் அந்திச் சாரலில் ......... 




ஒரு மாத காலமாகவே கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.மிக எளிமையாக ,மிக உற்சாகமாக .......புன்னகைப் பூக்களின் சிதறல்களாக இந்த விழா அமைய வேண்டும் என்ற நினைப்பும் மனதில் இழையோடிக் கொண்டிருந்தது .




கிருஷ்ண ஜெயந்திக்கு பத்து தினங்கள் முன்னதாகவே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் இருந்து ஆண்டாளும்,பெருமாளும் இராஜபாளையம் யோகா யுவ கேந்திராவுக்கு வந்து விட்டார்கள்.அவர்களுக்கு எப்படியெல்லாம் அலங்காரம் செய்வது என்று கலந்து பேசி,அதற்கான ஆயத்தங்களில் கேந்திராத் தோழியர் ஈடுபட்டார்கள். தஞ்சாவூர் ஓவியக் கற்கள் ,பொன் நிறத்தினால் ஆன சின்னக் குண்டுமணிகள் இவற்றினை ஆரங்களில் பதித்து அழகுக்கு அழகு சேர்த்தார்கள்.ஆண்டாள் -அழகான வெட்கத்துடன் -அருகில் இருக்க ,பெருமாள் மந்தகாசப் புன்னகையில் கண்கள் மலர
சிரித்துக் கொண்டிருந்தார்.



கன்னியாகுமரியில் இருந்து இஸ்கான் அன்பர்கள் பஜன்ஸ் பாடிக் கொண்டு வீதி உலா வந்தனர்.அவர்களை இதமான சாரல் -பன்னீர்த் தூவலாய் வரவேற்றது.அவர்கள் கேந்திராவினுள் வந்து,தாங்கள் எடுத்து வந்த விக்ரகங்களை வரிசைப் படுத்தி,ஆரத்தி எடுத்தனர்.மீண்டும் பஜன்ஸ் தொடர்ந்தது.



"ஹே முரளி ஸ்ரீதரா ராதே கிருஷ்ண ராதே ஷ்யாம் "

என்று செர்ந்திசைத்தனர் நம் அன்பு செல்வங்கள் ,இசை கேட்பதும் ,பூ முகங்களைப் பார்ப்பதும் ரம்மியமாக இருந்தது




குழந்தைகளுக்கான உலகம் எப்படி இருக்க வேண்டும்?என்பதை ஹர்ஷா அழகாக எடுத்துரைத்தார்.கண்ணன் பிறந்த நாளை -குழைந்தைகள் தின விழாவாக நாம் ஏன் கொண்டாடக் கூடாது என்ற ஆழமான கேள்வியை நம்முள் விதைத்துச் சென்றார்.யோசிக்க வேண்டிய விசயம்தான்




கண்ணணைத் துதி பாடும் ராதையாய் ஸ்ரீமதி அழகிய பாவங்களுடன் அபிநயித்தது மகிழ்வாய் இருந்தது . 



அன்பின் புன்னகையும்,மலரின் மென்மையும் ததும்ப -"கருணையினால் கசிந்து கண்ணீர் மல்கி ...."எனும் அழகான தலைப்பில் மனம் உருகக் கனிவானக் கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ரஜினி.



மாறி வரும் பருவ காலங்களை -அதன் தன்மையை இதமாய் எடுத்துச் சொன்னவிதம் சிறப்பாக இருந்தது.மார்கழி மாதக் குளிர்ச்சியை இவரது பேச்சில் உணர்ந்தோம்.



திருமாலுக்கு படைக்கும் பிரசாதங்கள் என பதார்த்தங்களைப் பட்டியலிட்டுக் காட்டியது தேன்சுவையாய் இருந்தது.




கருணைக்கு அவர் கொடுத்த விளக்கம் -வியந்து பார்க்க வைத்தது. இரக்கம், பரிவு ,கனிவு என பக்குவமாய் சொன்னது ஈரம் உணர வைத்தது. இவரது கருத்துக்கள் அன்பால்ஆனது, ஆழமானது, ஆணித்தரமானது ,கருணையினால் ஆனது.பேச்சினில் கலந்தோம்.கரைந்தோம்.







இனி கவிதைகள் நேரம் ...........




காக்கைச் சிறகினிலே -கண்ணனின் கரிய நிறத்தைக் கண்டவன் பாரதி!

பார்க்கும் மரங்களெல்லாம் -கண்ணனின் பச்சை நிறம் தோன்றுவதாகச் சொன்னவன் பாரதி !

கேட்கும் ஒலியில் எல்லாம் -கண்ணனின் கீதம் இசைக்கக் கேட்டவன் பாரதி !



இத்தனைக்கும் மேலாக ................



தீக்குள் விரலை வைத்தால் -கண்ணணை தீண்டும் இன்பம் தோன்றுவதாகச் சொன்னவன் பாரதி!



இந்த உணர்வு அன்பின் ,ஆனந்தத்தின் உச்சம் என்று சொல்லலாம் .

கவிதையை வாசிக்கும் போதோ ......

இந்த பாடலை கேட்கும் போதோ .....

நாமும் பரவச நிலை அடைவோம் என்பது உண்மை. 


கண்ணணைத் தாயாகவும் ,தந்தையாகவும் 

தோழனாகவும் ,தோழியாகவும் 

எஜமானனாகவும் ,சேவகனாகவும் 

காதலனாகவும் ,காதலியாகவும் 

குலதேய்வமாகவும்,குழந்தையாகவும் 

இப்படி பலவாகவும் உருவகித்து,கவிதைகள் எழுதி,நம் மனசை வசபடுத்தி உள்ளான் பாரதி !

"அனைத்திலும் ஒன்றை .....ஒன்றை அனைத்திலுமாய்...."

காணும் அற்புதத்தை நமக்கு உணர்த்துகிறான் அவன். பாரதி -கண்ணனின் பக்தன் என்று நம் எல்லோர்க்கும் தெரியும்.பல சமயத்தில் கண்ணனின் பித்தனும் ஆகிவிடுகிறான். 




பாரதியின் கண்ணனுக்காக கண்ணனின் பாரதிக்காக,

தன் தோழமைக்காக ஒரு கவிதை வாசித்தார் ஆனந்தி .




அன்பின் ஆராதிப்பாய் 

அழகின் அற்புதமாய் 

அபூர்வ பொக்கிஷமாய் ......எனத் தொடங்கி 




ஆகாச சஞ்சாரத்தில் அதர்ஷம் நீ 

அனந்த சாகரத்தில் அமிர்தம் நீ .....என தொடர்ந்து 




என்றென்றும் நீ எனக்காக-

என் ஜீவிதத்தின் உயிர்ப்பாக ! என நிறைவு செய்தது 

அருமையாக இருந்தது.




அந்த காலத்தில் ......

கிருஷ்ணனுடன் ஆடி பாடி -நாட்களை கொண்டாடிட கோபியர்கள் கோகுலத்தில் கூட்டம் கூடினார்கள் ......என்று பல பாடல்களில் கேட்டிருக்கிறோம்.காட்சிகளாய் பார்த்திருக்கிறோம்.




இன்று .....இந்த நாளில் 

பிருந்தாவனத்தில் உள்ள யோக யுவ கேந்திராவில் 

எங்கள் கோபியர்கள் ஒன்று கூடி உள்ளார்கள் 

நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்கிறார்கள்.

கண்களுக்கு விருந்து படைக்கிறார்கள்.

காட்சிக்கு எழில் கூட்டுகிறார்கள் 

நம் சிந்தையை வசப் படுத்துகிறார்கள் 

அவர்கள் கோல்கள்-மட்டும் ஆடவில்லை 

கூடவே நம் மனசையும் ஆட வைக்கிறார்கள்.

ஆடவும், பாடவும்,கொண்டாடவுமே இந்தப் பண்டிகைகள் -என்பதை அழகாய் சித்தரிக்கிறார்கள்.

இவை எல்லாம் காணும் போது -கண்ணனுடன் கரைகிறோம் என்பதோடு நாம் காணாமல் போய் விடுகிறோம் என்பதே உண்மையாகிறது.




இதை எழுதும் இந்தப் பொழுதிலும் பாரதியின் கவித் துளிகள் நினைவில் மின்னுகிறது.




"உருவாய் அறிவில் ஒளிர்வாய் -கண்ணா 

உயிரின் அமுதாய் பொழிவாய் -கண்ணா 

கருவாய் என்னுள் வளர்வாய் -கண்ணா 

கமலத் திருவோ டிணைவாய் -கண்ணா 

இணைவாய் எனதாவியிலே -கண்ணா

இதயத்தினிலே அமர்வாய் -கண்ணா "




சுகமாக,சுதந்திரமாக,சுந்தரமாக வந்து அமர்ந்து கொண்டான் மாயக் கண்ணன் வேணுகானம் இசைத்த வண்ணம் !







இதன் தொடர்ச்சியாக ........





எங்கும் நிறைந்திருக்கும் பிரியத்திற்குரியப் பால கோபாலனை 

உற்சாகமாக அழைத்து களி நடனம் ஆடினார்கள்.





இசை,நடனம் -ஒரு வகை தியானம் அல்லவா ?




தியானம் 'ஒன்றும் நிலை 'என்று சொல்லலாம் 

ஒன்றும் அற்ற நிலை 'என்றும் சொல்லலாம் .

மாஸ்டர் அவர்களின் அதிவேக ஆட்டத்தில் லயித்து காணாமல் ஆனோம் .


இதனைத் தொடர்ந்து இஸ்கான் அன்பர்கள் பஜன்ஸ் பாடிக் கொண்டிருந்தனர் .

"இசை கேட்டால் புவி அசைந்தாடும் " எனும் போது நாங்கள் எம்மாத்திரம் ?

"பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் 

பாடலுடன் தேன்கனி சேர வேண்டும் 

கலைகளைத் தெய்வமாய் காண வேண்டும் "

-கண்ணதாசன் அனுபவத்தில் மலர்ந்த

இந்தப் பாடலுக்கு ஏற்ப சில காட்சிகள் ஆனந்தமாய் அமைந்தன.




"பாட்டில் சுவையிருந்தால் ஆட்டம் தானே வரும் 

கேட்கும் இசைவிருந்தால் கைகள் தாளம் இடும் "





ஆடலுடன் பாடலைக் கேட்டு ,ரசித்து ,தன் வயமாகும் நிலை பேரானந்த நிலை அல்லவா ?




நிறைவின் நிறைவாக "கோகுலாஷ்டமி " பற்றி மாஸ்டர் சிவா அவர்கள் அற்புதமான உரை நிகழ்த்தினார்கள் .




அவற்றிலிருந்து சில முத்துக்கள் .............



கோகுலாஷ்டமின்னா "கிருஷ்ணன் பிறந்த நாள்ன்னு" நினைக்கிறோம்.இது ஒரு பக்கம் சரி தான்.இருந்தாலும் இதன் உண்மையான உள்ளார்ந்த அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும். கிருஷ்ணன் ஒரு ஆள் இல்லை, மனதின் பரி பக்குவ நிலையே கிருஷ்ணன் ,கிருஷ்ணன் என்றால் கிருஷி செய்ய வந்தவன் எனப்பொருள்.கிருஷி என்றால் 


"உழுதல்"எனபொருள். இன்னும் பார்த்தோம்னா மனசை அழ உழுது ,இளக்கமாக்கி,பக்குவப்படுத்தி,பண்படுத்துறதுகுன்னு வந்த அவதாரமே கிருஷ்ணன். மனதின் உச்சக்கட்ட ஆனந்த நிலைக்கே கிருஷ்ணன் எனப்பெயர். அந்த நாள்ல கோபிகள் எல்லாரும் ஒண்னு சேர்ந்து ஆடிப் பாடி சந்தோஷமா இருக்கணும்னு சொல்லுவாங்க. அரி வேறு அயன் வேறு என எண்ணலாகாது. "அரியும்அல்ல அயனுமல்ல அப்புறத்தில் அப்புறம் கருமை செம்மை வென்மையைக் கடந்து நின்ற காரணம்".எனும் சிவ வாக்கினைக் கருத்தில் கொண்டு கிருஷ்ண நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும், இளக்கமான மனசுக்கு எல்லாமே சாத்தியப்படும் !......





இன்னைக்கு வழுக்கு மரம் ஏறும் போட்டி ஏன் வைக்கிறாங்க தெரியுமா ?




வாழ்க்கையும் கிட்டதட்ட வழுக்கு மரம் மாதிரி தான்.

சாண் ஏறினா முழம் சறுக்கும். ஆனாலும் முயற்சி பண்ணி மேலே ஏறி,வெற்றி பெறத் தான் வேணும்னு குறிப்பாகச் சொல்றதுக்குதான் வழுக்குமரம்! வழுக்குமரத்துல வழுக்கக்கூடிய பொருள்களைத் தடவி இருப்பாங்க, சுண்ணாம்பைக் கொஞ்சம் கையில் எடுத்துக்கொண்டு ஏறினால் சீக்கிரம் ஏறிவிடலாம் இது ஒரு யுக்தி. அதுபோல வாழ்க்கை எனும் வழுக்குமரத்தில் "பாசம்" எனும் பசை இருக்கும் இதனை நீக்க "கிருஷ்ணா" எனும் கெமிக்களைப் பயன்படுத்தினால் கஷ்டப்படாமல் கரையேறி விடலாம்........இத யுக்திக்கு "பக்தியோகம்னு" பெயர். வாழ்க்கை எனும் வழுக்குமரத்தில் ஏறி கரை சேர்ந்துவிட்டால் நமக்குக் கிடைக்கும் பரிசு என்ன தெரியுமா????....."முக்தி"






இப்படியாகச் சில செய்திகளை இனிமையாகப் பகிர்ந்து கொண்டார்.




விழா நிறைவு பெற்றுத் திரும்புகையில் ....




மறுபடியும் சாரல் !- மனதை நனைத்துச் சென்றது ஆனந்தமாய் !






அன்புடன்
ஆனந்தி 






Thursday, August 16, 2012

சிவராஜயோகி பிரம்மபாந்தவன்




இன்று சுதந்திர தினம்! 


யோகயுவகேந்திராவின் சுதந்திரதின வாழ்த்துக்கள்!


நாம் இன்று சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்குத் தனது வாழ்வையே அர்ப்பணித்த அந்தத் தியாக ஆத்மாக்களை நினைத்துப் பார்த்து நன்றி செலுத்துகிறது யோகயுவகேந்திரா.


தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்! .. 

எனச் சுதந்திரம் பெறப் பெற்றப் பாடுகளைப் பற்றிச் சொல்கிறான் ,வாழையடி வாழையாக வந்த சித்தர் கூட்டத்தில் தானும் ஒருவன் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட எட்டயப்புரத்துச் சித்தன் பாரதி.


எனதுப் பால்யப் பருவத்தில்,சுதந்திரப்போராட்ட வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது வீரன் பகத்சிங், சுகதேவ்,ராஜகுரு, செங்கோட்டைச்சிங்கம் வீரன் வாஞ்சிநாதன்,போன்ற வீர இளைஞர்களின் தியாகம் எனக்குள் ஒரு துடிப்பை உருவாக்கி இருக்கிறது,


வரியாக, நெல் கட்டமாட்டேன் எனச் சூளுரைத்த நெல் கட்டான் செவல் பூலித்தேவன் ,......வீரபாண்டியக்கட்டபொம்மன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி,மருது சகோதரர்கள், வீரமங்கை வேலு நாச்சியார், போன்ற அஞ்சா நெஞ்சர்களின் வீரமான மன உறுதியாலேயே நாம் சுதந்திரம் பெற்றிருக்கிறோம். 


இதையெல்லாம் அரசியல்வாதிகள் மேடை மேடையாகப் பேசுகிறார்களே நமது வலைத்தளத்தில் இது நமக்கு எதுக்கு என நீங்கள் கேட்பது 
எனக்குப் புரிகிறது.



நண்பர்களே! 


சுதந்திரப் போராட்டத்தில் இந்த வீரப் படையுடன் ஒரு "யோகப்படையும் " களமிறங்கியிருக்கிறது, ஞானச்சித்தன் பாரதி, ஆன்மீக விஞ்ஞானி அரவிந்தர், சுப்ரமணிய சிவா, நீல கண்ட பிரமச்சாரி....போன்ற இந்த யோக கூட்டத்தில் ஒரு முக்கியமான சிவராஜயோகியைப் பற்றியதுதான் இந்தப் பதிவு...


பராசக்தி தவிர மற்ற யாருக்கும் தான் அடிமையில்லை என்று தன்னைப் பறை சாற்றிக்கொண்டவன் ஞானச்சித்தன் பாரதி.........ஆனால் அவனே மூவருக்குத் தான் அடிமையென்றும், அதிலும் ஒரு சிவராஜ யோகியின் பாதங்களுக்கு நான் அடிமையென்றும் பறைசாற்றி இருக்கிறான் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா????? அந்த சிவராஜயோகியைப்பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?



மண்ணிய புகழ் பாரத தேவி 

தன்னிருத் தாழினைக்கடிமைக்காரன்

இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம்

திலக முனிக்கொத்த அடிமைக்காரன்,

வெய்ய சிறைக்குள்ளே புன்னகையோடுபோம்

அய்யன் பூவேந்திரனுக்கு அடிமைக்காரன்,

காலர் முன் நிற்பினும் மெய்தவறாத

பாலர்தனக் கடிமைக்காரன்

தான் தணலிட்டாலும் தருமமிடறாத 

பிரம்மபாந்தவன் தாழினைக்கடிமைக்காரன். ......என்கிறான் பாரதி




இந்தப்பாடலில் தான், பராசக்திக்கு அடிமை,திலகருக்கு அடிமை, பூவேந்திரனுக்கு அடிமை எனக்கூறிய பாரதி.......பிரம்மபாந்தவன் எனும் இருபத்து மூன்று வயதே நிரம்பிய இளைஞரின் பாதங்களுக்குத் தான் அடிமை எனக்கூறுகிறான்.




யார் இந்த பிரம்ம பாந்தவன்??




திலகர் நடத்திய பத்திரிகையில் "கருப்பு ஆடுகளை பலியிட்டது போதும் இனி என் அன்னை காளிக்கு வெள்ளை ஆடுகளை பலியிடுங்கள்" என மறைமுகமாக ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கட்டுரை எழுதுகிறார் இளம் சிவராஜ யோகியான பிரம்மபாந்தவன். இதனை உணர்ந்துகொண்ட ஆங்கில அரசு, திலகர் மீதும்,அலுவகத்தில் அச்சடிக்கும்வேலை செய்து வரும் பூவேந்திரன் எனும் இளைஞர் மீதும், யோகி பிரம்மபாந்தவன் மீதும் வழக்குத் தொடர்கிறது.....

இதில் யோகி பிரம்மபாந்தவனை நாடு கடத்த உத்தரவிடுகிறது ஆங்கில அரசு.......இளம் யோகியை மாட்டு வண்டியில் ஏற்றி நாட்டின் எல்லைக்கு அழைத்து செல்கின்றனர் ஆங்கிலத் தளபதிகள் . "எனதுயிர் யோகபூமியான பாரத மண்ணிற்கேச் சொந்தம், இந்தப் பூதவுடலை மட்டுமே நீங்கள் அந்நிய மண்ணிற்கு எடுத்துச் செல்ல முடியும்,எனது மெய்யுடலை நீங்கள் கொண்டு செல்ல இயலாது" எனச் சூளுரைத்தவாறு தான் கற்ற யோக வித்தையினைப் பயன்படுத்தி அந்த மாட்டுவண்டியிலேயே "ஜீவசமாதி" அடைகிறார் பிரம்மபாந்தவன். நினைத்தவுடன் தனது உயிரைப் பிரித்துவிடுகின்ற இந்த அமரத்துவ நிலை கண்டு அதிர்ச்சியடைகிறார்கள் ஆங்கில அதிகாரிகள்.




என்ன நண்பர்களே!!! 

"பாம்பின் கால் பாம்பறியும்" எனும் நிலைக்கேற்ப யோக வித்தை உணர்ந்த பாரதி, பிரம்மபாந்தவன் என்னும் இந்த சிவராஜயோகியின் பாதங்களுக்கு தான் அடிமை எனக்கூறியதில் வியப்பேதுமில்லையே!!!!!!!!!


இந்தப் புண்ணியநாளில் பிரம்மபாந்தவன் என்னும் அந்த யோகியின் பொற்பாதங்களை வணங்குவதை பெருமையாகக் கருதுகிறது யோகயுவகேந்திரா


ஜெய்ஹிந்த்!




Saturday, August 11, 2012

தத்தரிகிட..தத்தரிகிட..தித்தோம்





புகைக்கு நடுவே இருந்து ஒரு வன்மம்

மனதிற்குள் கனன்று கொண்டிருக்கிறது ..



திருப்பி அடிக்கச்சொல்லிக் கேட்டுக்கொண்டேயிருக்கிறது

விடாது மூளைக்குள் ஒரு சிலந்தியின் குரல் …



என்றோ கற்றுக்கொண்ட

கெட்ட வார்த்தைகள்

தொண்டைகுழி தாண்டி நாவிற்குள்

சற்று முன்பு தூண்டிலில் இருந்து பிரிக்கப்பட்ட மீன் போல

வெடுக்கென்று தெறித்து விழ தருணம் பார்த்து

இறந்தது போல நடித்துக் கொண்டிருகின்றன …



யாரையும் காயப்படுத்திவிடுவேனோ

என மௌனித்திருந்த


பேசப்படாத வார்த்தைகள் மொத்தமும்

பரிசீலனைக்கு அருகதை இல்லாதவர்களுக்காய்

தன்னைத் தானே வதைத்துக் கொள்வது

படு முட்டாள்தனமான காரியமென

மீண்டுமொருமுறை காட்டிவிட்டன …



நான் காயப்படக்கூடும் என்ற

எவ்விதப் பிரக்ஞையுமின்றி

என்னைப் பற்றிய மதிப்பீடொன்று 

எய்யப்பட்டு விடும் முன்

எதிராளியை வீழ்த்த என்ன அவதூறு

பேசலாமென்ற சிந்தனையிலேயே

அர்த்தமற்ற வார்த்தைகளால்

நிரம்பிவிடுகின்றன 

எல்லா உரையாடல்களும் …



கவனிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன்

எனது ஒவ்வொரு செயல்களுக்குமாய்

தரம்பிரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன்

என் படுக்கை அறையின் ஜன்னல்கள்

களவாடப்பட்டிருக்கின்றன

எனது வார்த்தைகள் யார் யாராலோ தீர்மானிக்கப்படுகின்றன

எனது நாட்குறிப்புகள் எவனோ ஒருவனால்

எழுதப்படுகின்றன

குடைக்குள் வர மறுக்கின்றன

மழையும் மழை சார்ந்த எதுவும் …



கண்ணீரும் கவிதையும் இசையும்

தருவிக்கப்பட்ட புன்னகையும்

நிரந்தர ஆறுதல்கள் இல்லையென்று

தெரிந்துபோன

இச்சபிக்கப்பட்ட தருணத்தில்------மீண்டும்

ரௌத்திரம் பழகத் துவங்கியிருக்கிறேன்.......

Saturday, August 4, 2012

கூர்ம யோகம்




இந்த பிரபஞ்சத்தில் 84 இலட்சம் ஜீவ ராசிகள் இருப்பதாக யோக நூல்கள் கூறுகின்றன.



ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்

நீர்பறவை நாற் காலோர் பப்பத்துச் - சீரிய

பந்தமாந் தேவர் பதினா லயன்படைத்த

அந்தமில் சீர்த்தாவரநா லைந்து.


ஊர்வன : 11

மானுடம் : 9

நீர் :10

பறவை :10

நாற்காலோர் :10

தேவர் :14

தாவரம்(4*5) : 20


மொத்தம் = 84

ஆக 84 இலட்சவகை ஜீவராசிகளாகும். 


மேற்கண்ட பாடலில் 7 வகையான ஜீவராசிகளின் உற்பத்தி பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஜீவராசிகள் நான்குவகை யோனி வாயிலாக தோன்றுகின்றன. குறிப்பாக கருப்பை, முட்டை மற்றும் வெப்பம், வியர்வைகளால் தோன்றுகின்றன.. 



இந்திய யோக மரபில் 84 இலட்சவகை ஆசனங்கள் இருப்பதாக யோக நூல்கள் கூறுகின்றன...இந்த 84 இலட்ச யோகாசன இருக்கை நிலைகளும் ஜீவராசிகளின் இருக்கை நிலைகளை ஒத்ததே . யோக கலாசாரத்தில்,உலக மதங்களில் எந்த கண்டத்திலும் இல்லாத அளவுக்கு மனிதன் அல்லாத மற்றைய ஜீவராசிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து புனிதமாக்கப்பட்டுள்ளது..



எலி முதற்கொண்டு யானை வரை, புல் முதற்கொண்டு புள்ளினம் வரை அனைத்து உயிர்களின் இருக்கை நிலைகளுக்கும் முக்கியத்துவம் தந்திருப்பது நமது யோக மரபு . உருவ அளவில் வேறுபாடு இருந்தாலும்,ஆத்ம நோக்கில் அனைத்து ஜீவராசிகளும் இங்கு ஜீவர்களாகவே மதிக்கப்படுகின்றனர்.


இந்திய யோக மரபாண்மை என்பது, "மரம்,செடி,கொடி.மண்,மலை,பறவை, விலங்கு,உயிருள்ள பொருள்,உயிரற்ற பொருள் என அனைத்தையுமே தெய்வாம்சம் பொருந்தியதாக பார்கக் கூடியது" என்று மிகச் சாதாரணமாக ஒரு கருத்தை எல்லோரும் கூறிவிடலாம்.உண்மைதான், அதனால்தான் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வள்ளலாரால் வாட முடிந்தது. எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும் என்கிற கருத்தியலுக்கு இது பொருந்தகூடியதுதான் என்றாலும், அதற்குரிய சரியான காரணத்தை உணர வேண்டியதுள்ளது.


அந்த வகையில் நீண்ட வருடங்களாக நமது யோக மரபில் எனது சிந்தனையைத் தூண்டிவிட்ட ஒரு விஷயம், ஆமை!. மிகவும் மெதுவாகச் செயல்படக்கூடிய ஆமை யோகிகளிடம் 'பச்சக்கென்று' ஒட்டிக்கொண்டதெப்படி..?சிந்தனை செய்ய வேண்டிய விஷயமாக எனக்குப்பட்டது.

பாற்கடலைக் கடையும்போது மேருமலைக்கு அடி ஆதாரமாக இருந்த ஆமை பற்றியும், தசாவதாரங்களில் ஒன்றான கூர்ம அவதார ஆமை பற்றியும் , வெவ்வேறு மதிப்பீடுகளை உற்றுனோக்கி, உணரவேண்டியதிருக்கிறது.

ஆமை விஷயத்திலும், நாம் வழக்கம் போல் சுட்டுவிரல் காட்டும் நிலாவைப் பார்ப்பதற்குப் பதிலாகச் சுட்டு விரலையே நிலாவாகப் பார்க்கும் பாமர நிலையில் இருக்கிறோமோ? என எனக்குத்தோன்றியது.


ஆமைகள் இன்னமும் பல சந்தேகங்களுக்கு விடை சொல்லமுடியாத ஒரு உயிரினம். ஆயிரம் ஆண்டுகள் உயிர்வாழக்கூடிய உயிரினம் எனச் சொல்லப்படுவதுண்டு..சில கோவில்களில் காணப்படும் ஆமை உருவங்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த உருவங்களின் மூலமாக யாரோ எனக்கு யோகபாடம் கற்றுத்தருவதாகவே ஒரு உள்ளுணர்வு...அந்த உள்ளுணர்வை துணைகொண்டு ஆமையை ஆராயத்தொடங்குவோமா???? ......




ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடத்து
-திருக்குறள் 126-

ஒரு பிறவியில் ஒருவன் ஆமை போல் ஐம்பொறிகளயும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அந்த அடக்கம் அவன் எடுக்கும் ஏழு பிறவிகளுக்கும் பாதுகாவலாக அமையும் என்பது திருவள்ளுவரின் கூற்றாகும்.


ஆமை போல் ஐந்தும் அடக்கித்திரிகின்ற ஊமைக்கு முத்தியடி குதம்பாய்.

ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்துப் பாதுகாப்பது போல ஒருவன் ஐந்து புலன்களயும் உள்ளுக்குள் இழுத்து ஒடுக்கி விட்டால் ஆன்ம ஒளி பிறக்கும் என்று குதம்பை சித்தர் கூறினாலும், திருமந்திரம் இதற்கும் மேலாக ஒரு படி செல்கிறது.

இன்றைய உயிரியல்(Biology) படித்தோருக்கு உலகிலேயே நீண்ட நாள் வாழும் பிராணி ஆமை தான் என்று தெரியும். இதை கின்னஸ் சாதனை நூலிலும் காணலாம். 



இதையே திருமூலரும் 


ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்

ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள

வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல்

ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே. (-திருமந்திரம் 2304-) 


என்கிறார்...................



இந்த மந்திரத்தில்,மரணம் இலாப் பெருவாழ்வு வாழ வேண்டுமானால், .............ஆமையை விட ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழ வேண்டுமானால் - என்ன செய்ய வேண்டும் என்று திருமூலர் கூறுகிறார்:

இதிலுள்ள தத்துவ விஷயங்களை மறந்து விட்டு ஆமையை விட ஆயிரம் ஆண்டு உயிர் வாழ்வது எப்படி என்ற வரிகளை மட்டும் கவனிக்கவும். 



ஆமை தான் உலகில் நீண்ட காலம் வாழும் பிராணி என்பதை நமது சித்த பெருமக்கள் அறிந்திருந்தனர்.மனிதனைப் போல மூன்று மடங்கு ஆயுள் உடையது ஆமை. இதைக் கண்டுபிடித்து எழுதி வைக்கக் கூட ஒருவர் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்திருக்க வேண்டும் அல்லவா?. அல்லது சரியான தகவலை உணர்ந்துகொள்ளும் உத்தி இருந்திருக்க வேண்டும். திருமூலநாயனார் 3000 ஆண்டு வாழ்ந்திருக்கிறார். ஆமையிடமிருந்து ஒரு சரியான யோக யுக்தியைக் கற்று, இந்தப் பாடல் மூலமாக நமக்கு ஒரு யோகபாடம் நடத்தியிருக்கிறார்.


நீண்ட நாள் வாழ்வது எப்படி?


ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் . இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அந்தளவுக்கு ஆயுள் கூடும்!


நாம் சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு பாங்கில் பணம் சேமிப்பது போல. பாங்கிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் உயிர் வாழும் ஆண்டுகளும். 



இந்த சுவாச ரகசியமே யோகத்தின் அடிப்படை...




திருமூலர் தனது பாடலில்:-


விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்

தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்

வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து

விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே


விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.


இந்த சுவாச தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''சிதம்பர இரகசியம்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருகிறது. 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கிறது. 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடிகளைக் குறிக்கிறது.


ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் 

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர் இல்லை 

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளருக்கு 

கூற்றை உதைக்கும் குறியதுவாமே. என்கிறார் திருமூலர்.

இந்தப் பாடலில், ஒரு சுவாசக் கணக்கு இருப்பதாகவும்,.அதன்படி சுவாசிக்கத் தொடங்கினால் கூற்றுவன் எனச் சொல்லக்கூடிய எமனையும் விரட்டி விடலாம் என்கிறார் திருமூலர். அந்தக்கணக்கின்படி ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.




ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்


18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு

0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இந்த நிலை யோகியரால்மட்டுமே முடியும்)


ஆமை ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை தான் சுவாசிக்கிறதாம். அதனாலேயே அதற்கு வாழ்நாள் அதிகம்.


ஒரு மனிதன் பிராணாயாமம் செய்தால் அவனுடய சுவாசத்தின் நீளம் குறைந்து சுவாசம் மிச்சப் படுகிறதாம். ஆகையால் பிராணாயாம ரகசியம் அறிந்தவர்களும் நீண்ட நாள் வாழலாம் என்கிறார் திருமூலர். 


சரி நண்பர்களே!ஆமை என்ன பிராணாயாமம் செய்கிறது? அதற்கு மட்டும் ஏன் ஆயிரம் வயது?


அடுத்த பதிவில் பார்ப்போமா?




(ஆமை இன்னும் வரும்)

Thursday, August 2, 2012

மீண்டும் ஒரு தேடல் 17



ரகசிய தீட்சை பெற தகுதிகள் என்ன?






ரகசிய தீட்சை பெற தகுதிகள் என்ன?



ஓசிரிஸ் கோயில்களில் மட்டுமல்லாமல் பழங்கால எகிப்தில் வேறுசில கோயில்களிலும் ரகசிய தீட்சை முறைகள் இருந்தன. அங்கும் தகுதி இருப்பதாக நினைப்பவர்களுக்கு மட்டுமே ரகசிய தீட்சை தரப்பட்டது. மதம், மொழி, இனம், சமூக அந்தஸ்து ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டே, தனிமனித பக்குவத்தைப் பொறுத்தே, தகுதி நிர்ணயிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் ரகசிய தீட்சைக்காகச் சென்ற போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் பொருத்தமானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


ரகசிய தீட்சை பெற்றவரும், தத்துவாசிரியரும், கணித மேதையுமான பித்தகோரஸ் அக்காலத்தில் சிறப்பு கல்வி பயிற்றுவிக்க ஒரு அகாடமி நடத்தி வந்தார். அக்காலத்தில் அங்கு கல்வி பயில தேர்ந்தெடுக்கப்படுவது பெரிய விஷயமாக கருதப்பட்டது. பலர் சென்றாலும் சிலர் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட்டார். காரணம் கேட்ட போது ஒரு முறை பித்தகோரஸ் சொன்னார். “எல்லா மரங்களும் சிற்ப வேலைக்குப் பொருத்தமாக இருக்காது”.
அவர் சொன்னது அந்த சிறப்புக்கல்வியை விட ரகசிய தீட்சைக்கு மிகவும் பொருத்தமான பதிலாக இருந்ததாக பால் ப்ரண்டன் நினைத்தார்.


ஒரு ரகசிய தீட்சை முறையில் தீட்சைக்கு பெறுவதற்கு முன் கடைசியாக சொல்லி அனுப்பும் வாக்கியம் இதுவாக இருந்தது. “இது வரை அனுபவித்திராத ஒரு புதிய அனுபவத்தைப் பெறப் போகிறாய். மனிதனாக இருந்தவன் தெய்வமாக மாறப் போகிறாய். போய் வா”.


பல ரகசிய தீட்சை முறைகளில் தெய்வீக நிலைக்கு முன் சில அபூர்வ சக்திகளைத் தந்து பயங்கரமான மோசமான நிலைகளைக் காண வைத்தனர் என்றும் அதில் தளர்ந்து விடாமல் தாக்குப் பிடிப்பவர்களையே அடுத்த தெய்வீக நிலைக்குத் தேர்வு செய்து அனுப்பியதாக சொல்லப்படுகிறது. அது போன்ற சில பயங்கரமான அனுபவங்களில் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நிலை கூட இருக்கும் என்றும் சரியான தகுதி இல்லாத நபர்கள் நிலை குலைந்து போகவோ, பைத்தியமாக மாறி விடவோ, இறக்கவோ கூட வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறார்கள். அந்த அபூர்வ சக்திகளை தன் வசப்படுத்தும் திறமையோ, தகுதியோ இல்லாதவர்களுக்கு அதைக் கற்றுத் தந்தால் கண்டிப்பாக அந்த மனிதர்களுக்கும், மற்றவர்களுக்கும் நல்லது நடக்காது என்கிற ஞானம் அவர்களுக்கு இருந்ததாகத் தெரிகிறது.


(இதையெல்லாம் படிக்கையில் மிக உறுதியும், வலிமையும் உள்ள மனிதர்கள் தான் இந்த தீட்சை முறைகளைப் பெற முடியும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிகிறது. ஞானமல்லாத வேறு நோக்கத்தோடு செல்பவர்கள், பலவீனர்கள் எல்லாம் ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்க்ள் என்பதால் கிடைக்கும் ஞானம் கலப்படமில்லாமல் தூய்மையாகவும் ரகசியமாகவும் பாதுகாக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. அதில் தேர்ந்த பின் தான் இறைநிலையை ஒருவரால் அடைய முடிகிறது. அந்த நிலை வார்த்தைகெட்டா நிலை, பேரமைதியும், பேரானந்தமும் உள்ள நிலை என்று கிட்டத்தட்ட எல்லா தீட்சை முறைகளிலும் பல விதமான வர்ணனைகளில் சொல்கிறார்கள்.)


தீட்சை முறையில் கிட்டத்தட்ட ஹிப்னாடிச முறையில் மயக்க நிலைக்கு ஒருவரை அழைத்துச் சென்று தான் வேறுபல அனுபவங்களையும், மேலான உணர்வு நிலைகளையும் அடைய வைக்கிறார்கள் என்றாலும் சாதாரண, நவீன ஹிப்னாடிசத்திற்கும், அக்கால தீட்சை முறை ஹிப்னாடிசத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. இன்றைய ஹிப்னாடிச முறையில் ஹிப்னாடிசம் செய்பவர் தான் செயல் புரிபவராகவும், ஹிப்னாடிசம் செய்யப்படுபவர் முன்னவர் விருப்பப்படி செயல்பட முடிபவராகத் தான் இருக்கிறார். ஹிப்னாடிசம் முடிந்த பின் என்ன நடந்தது என்பது கூடத் தெரியாமல் தான் ஹிப்னாடிசம் இருக்கிறார். ஆனால் அக்கால தீட்சை முறையில் உபயோகப்படுத்திய ஹிப்னாடிசத்தில் ரகசிய தீட்சை பெறுபவர் கிட்டத்தட்ட மரண நிலையிலேயே உடலளவில் ஆழமாகச் செல்லக்கூடிய அளவில் இருக்கிறார். ஆனாலும் கூட அவர் நடப்பவை அனைத்தையும் மிகத் தெளிவாக உணர முடிபவராகவும், அந்த அனுபவங்களில் முழுப்பங்கு வகிப்பவராகவும் இருக்கிறார். 


நவீன ஹிப்னாடிசத்தில் ஹிப்னாடிசம் முடிந்த பிறகு முன் போலவே ஹிப்னாடிசம் பெற்றவர் இருக்கிறார். ஆனால் ரகசிய தீட்சை ஹிப்னாடிசத்தில் எல்லா அறியாமைகளும் நீங்கி புது ஜென்மம் எடுத்தவராக தீட்சை பெற்றவர் நினைவு திரும்புகிறார். எல்லா விஷயங்களிலும் மேம்பட்டவராகவும், ஞானியாகவும் மாறுகிறார். சாக்ரடீஸ் சொல்கிறார். “இது போன்ற ரகசிய ஞானத்தைப் பெற்றவர்கள் உண்மையான மரணம் வரும் போது கூட நம்பிக்கையோ, தைரியமோ இழக்காமல் சற்றும் வருத்தமில்லாமல் இனிமையாக மரணத்தை சந்திக்கிறார்கள்”. உண்மைக்காக விஷம் தரப்பட்டு சாக முன் வந்த மனிதர் வாயால் அதைக் கேட்கும் போது அதில் உள்ள நூறு சதவீத உண்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 


பால் ப்ரண்டன் இந்த இடத்தில் அவருடைய நண்பர் ஒருவர் அனுபவத்தையும் கூறுகிறார். அவருடைய நண்பர் விமானப்படை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். ஆத்மா, இறந்த பின் உள்ள வாழ்க்கை என்பதில் எல்லாம் சிறிதும் நம்பிக்கை இல்லாதவர். அப்படிப்பட்டவருக்கு ஒரு அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து தரப்பட்டது. அது அவருக்கு நூதன அனுபவத்தை ஏற்படுத்தியது. உடல் உணர்ச்சிகள் அனைத்தும் அற்றுப் போன அவர் காற்றில் மிதப்பது போல உணர்ந்த பின்னர் தன்னுடைய அறுவை சிகிச்சையையே அடுத்தவர் அறுவை சிகிச்சையைப் போல அமைதியாகப் பார்க்க முடிந்ததாம். அந்த அனுபவம் அவரை முற்றிலும் புதியவராக மாற்றியதாக அவர் கூறுகிறார். இப்படி நம்மால் விளக்க முடியாத அபூர்வ நிகழ்வுகளிலும் அரைகுறையாக சில அனுபவங்கள் கிடைப்பதுண்டு.


ரகசிய தீட்சை விஷயத்தில் இன்னொரு உண்மையையும் நாம் கவனிக்க வேண்டும். ரகசிய தீட்சை பெற்றவர்கள் எண்ணிக்கை ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் கணிசமாக இருந்திருக்க வேண்டும். முன்பு சொன்ன அக்கால ஞானிகள் மட்டுமல்லாமல் பெயரே தெரியாத, பிரபலமல்லாத எத்தனையோ பேர் ஓசிரிஸ் கோயிலில் ரகசிய தீட்சை பெற்றிருந்த போதும் அத்தனை பேரும் அந்த ரகசியத்தைக் காத்த விதம் பிற்கால வரலாற்றாசிரியர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட ஆச்சரியத்தை அளிப்பதாகவே இருக்கிறது.


மொத்தத்தில் அன்றைய ரகசிய தீட்சை பெற்றவர்களிடம் தூய்மை, பொறுமை, மன வலிமை, ரகசியம் காக்கும் தன்மை ஆகிய நான்கும் பிரதானமாக இருந்ததாகத் தெரிகிறது.


அப்படி புனிதக் கோயில்களில் கிடைத்த ரகசிய தீட்சை என்ற ஆன்மிக ஞானம் காலம் செல்லச் செல்ல மறைந்தே போகிற அளவு ஆகக் காரணம் ஆன்மிகம் அமைப்புகள், மற்றும் மதம் சார்ந்த விஷயமாக பிற்காலத்தில் மாறியது தான் என்கிறார் பால் ப்ரண்டன். கலப்படம் ஆரம்பித்து உண்மையின் சாராம்சம் அதில் மிகவும் குறைந்து விட்டது என்று அவர் நினைத்தார்.


அடுத்த நூற்றாண்டில் இருக்கும் நமக்கும் அதை மறுக்க முடியவில்லை அல்லவா?


(தேடல் தொடரும்)