Total Pageviews

Saturday, August 11, 2012

தத்தரிகிட..தத்தரிகிட..தித்தோம்





புகைக்கு நடுவே இருந்து ஒரு வன்மம்

மனதிற்குள் கனன்று கொண்டிருக்கிறது ..



திருப்பி அடிக்கச்சொல்லிக் கேட்டுக்கொண்டேயிருக்கிறது

விடாது மூளைக்குள் ஒரு சிலந்தியின் குரல் …



என்றோ கற்றுக்கொண்ட

கெட்ட வார்த்தைகள்

தொண்டைகுழி தாண்டி நாவிற்குள்

சற்று முன்பு தூண்டிலில் இருந்து பிரிக்கப்பட்ட மீன் போல

வெடுக்கென்று தெறித்து விழ தருணம் பார்த்து

இறந்தது போல நடித்துக் கொண்டிருகின்றன …



யாரையும் காயப்படுத்திவிடுவேனோ

என மௌனித்திருந்த


பேசப்படாத வார்த்தைகள் மொத்தமும்

பரிசீலனைக்கு அருகதை இல்லாதவர்களுக்காய்

தன்னைத் தானே வதைத்துக் கொள்வது

படு முட்டாள்தனமான காரியமென

மீண்டுமொருமுறை காட்டிவிட்டன …



நான் காயப்படக்கூடும் என்ற

எவ்விதப் பிரக்ஞையுமின்றி

என்னைப் பற்றிய மதிப்பீடொன்று 

எய்யப்பட்டு விடும் முன்

எதிராளியை வீழ்த்த என்ன அவதூறு

பேசலாமென்ற சிந்தனையிலேயே

அர்த்தமற்ற வார்த்தைகளால்

நிரம்பிவிடுகின்றன 

எல்லா உரையாடல்களும் …



கவனிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன்

எனது ஒவ்வொரு செயல்களுக்குமாய்

தரம்பிரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன்

என் படுக்கை அறையின் ஜன்னல்கள்

களவாடப்பட்டிருக்கின்றன

எனது வார்த்தைகள் யார் யாராலோ தீர்மானிக்கப்படுகின்றன

எனது நாட்குறிப்புகள் எவனோ ஒருவனால்

எழுதப்படுகின்றன

குடைக்குள் வர மறுக்கின்றன

மழையும் மழை சார்ந்த எதுவும் …



கண்ணீரும் கவிதையும் இசையும்

தருவிக்கப்பட்ட புன்னகையும்

நிரந்தர ஆறுதல்கள் இல்லையென்று

தெரிந்துபோன

இச்சபிக்கப்பட்ட தருணத்தில்------மீண்டும்

ரௌத்திரம் பழகத் துவங்கியிருக்கிறேன்.......

No comments:

Post a Comment