Total Pageviews

Tuesday, August 7, 2018

சாிரம் விழ்வதும் எழுவதும் காலகர்மங்களால் மாயாமனமேயறி.
தரித்துடல் பெரிதுஎன பேணியகாரியம் செய்தும் பயனில்லையறி பிணமேநீயறி.
விரித்த வெளிவிலாசமளிகையும் பிடிமண்ணும் மண்ணாகவே மரிப்பாயே.
சிரித்தேன் சீலத்தின் கூத்துகண்டே சிவகாமியின் மாயாவலைவிழ்த்தார் நிலைகண்டே

Tuesday, May 15, 2018

காலநீட்டிப்புக் கணிதம்.






பண்டைய தமிழனின் அரும்பெருஞ்சாதனை காலநீட்டிப்புக் கணிதம்..!


செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டு கூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் .

பண்டைய தமிழ்ச்சித்தர் ஏடுகளைப் புறட்டும்போது நம் இன்றைய அறிவியலுக்கும், சிலவேளைகளில் நம்மால் நம்புவதற்கு கடினமானதுமானதுமானதும், கற்பனைக்குக்கூட எட்டா முடியாத பல தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. இருந்தும் இவற்றை ஆய்வு செய்வது அவசியமாகின்றது. நம் முன்னோரின் அறிவாற்றல் கட்டற்றக் களஞ்சியமாகவுள்ளது. இவற்றில் பல கேட்பார் யாருமின்றி அழிந்துவிட்டன, இன்னும் பல அழிவின் விளிம்பிலுள்ளன என்பது கவலை தருகின்றது. இருந்தபோதும் நம்மால் இயன்றவரை தமிழர்களை விழிப்புணர்வு அடைய வைப்பதே நமது இந்தப் பகிர்வின் திடமான எண்ணமாகும்.

பண்டைய வானவியலில் ஒரு நாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர் . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இ
ருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள் 24*60=1440 ஆகும் .

வருடத்தின் சில நாட்களில் பகல் நீண்டு இருக்கும் சில நாட்களில் இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டு கூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலை முதன் முதலில் உலகிற்கு கூறினான்.

சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்

“ சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு
ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப்
பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும்
மின்னே விடுபூ முடி “


சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக( பகல்=30, இரவு =30 ) இருக்கும்
ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல் நீடிக்கும்
ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும்
பாடலின் கடைசி வரி " விடுபூ முடி " மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது இந்த வாக்கிய கணித முறை தான் சோதிடவியலுக்கு அடிப்படையானதாகும்.

வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்

பகல் நீட்டிப்பை காண
வி - டு - பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளை எடுத்துக்கொள்வோம் வி என்பது வைகாசி
டு என்பது ஆனி
பூ என்பது ஆடி
மு என்பது ஆவணி
டி என்பது புரட்டாசி
இது போலவே வி - டு - பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளை கொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்
மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை
வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே
வ = 1/4 நாழிகை
வா= 1/4 நாழிகை
வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பது ¾ நாழிகை பகல் நீடிக்கும் 3/4 நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்

இது போல வி - டு - பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல் எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது

பகல் நீட்டிப்பு
வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்

இரவு நீடிப்பு
கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்
மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்

Tuesday, February 6, 2018

பஞ்ச கல்பம்

பளிச்சிடும் கண் பார்வைக்கு பஞ்ச கல்பம் - உங்களுக்காக...!




பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் கண்ணொளி வழங்கும் சித்தர்களின் பஞ்ச கல்பம்:-
இக்காலத்தில் பல இளம் குழந்தைகளும் கண்ணுக்கு கண்ணாடி அணிந்து கொண்டும், பல பெரியவர்கள் வயதானால் கண்ணாடி அணிந்து கொள்வதையும், கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதையும் கண்டால் சித்தர் கண்ட தத்துவங்கள் எவ்வளவு வீணடிக்கப்படுகின்றன என்று வருந்தியிருக்கிறேன். கண்ணில் அறுவை சிகிச்சை செய்வதால் பிராணன் உலவும் இடமான கண்ணில் உள்ள பிராண சக்தி வீணடிக்கப்பட்டு ஆயுள் குறைகிறது. மாறாக கண்ணுக்கு வலிமை அளிக்கும் சித்த மருந்துகளைக் கையாள்வதால் கண்ணில் உள்ள பிராணன் வலுவாவதுடன் ஆயுளும் நீட்டிக்கப்படும்.

கண் பிராணன் நின்று உலவும் இடம், மேலும் இடது கண்ணில் தச(பத்து) நாடிகளில் ஒன்றான காந்தாரி என்ற நாடியும், வலது கண்ணில் புருடன் என்ற நாடியும் நின்றியங்குகிறது. நம் உடலை தச தேசம் என்று கூறுவார்கள். ஏனெனில் இது தச நாடிகளால் இயங்குவது. உயிர் இறப்பிற்கு பின்னும் இயங்கும் விதத்தைப் பற்றி வராகி மாலை, தச தேச விசால சுவடி இவற்றுள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,நம் உடலில் உள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளில், இரண்டு கண்களிலும் கண்ணுக்கு இரண்டாயிரம் நாடிகள் வீதம் நான்காயிரம் நாடிகள்

ஓடுகின்றன. கண்களில் போடும் மருந்து கண்ணிலுள்ள நாடிகள் மூலம், தச நாடிகளிலும் வியாபித்து உடலெங்கும் சில வினாடிகளில் பரவி விஷம், வாதம், சன்னி, பல கர்ம வியாதிகள், தோல் வியாதிகள், மனோ வியாதிகள் இன்னும் பல வியாதிகள் முதலானவைகளைக் கூட கண்டித்து எறியும் தன்மை உள்ளது. இப்படிக் கண்களில் பிரயோகிக்கும் மருந்தை கலிக்கம் என்பார்கள்.
இப்படிக் கண்ணில் போடும் மருந்து கண்ணுக்கு பார்வை அளிப்பதுடன் மேலும் பற்பல வியாதிகளை குணமாக்கும் வல்லமையும் பெற்று விளங்குகின்றன. ஏனெனில் அவை அளப்பரிய காந்த சக்தியுடன் செயல்படுகின்றன.
இப்போது தலையில் போடும் மருந்தால் கண்ணுக்கு வல்லமை அளிப்பதைப் பார்ப்போம். பஞ்ச கல்பம் என்றழைக்கப்படும் இது சித்தர்கள் கண்ட மருந்து.  இராமலிங்க வள்ளலாரும் இந்த மருந்தை மிகப் பெருமையாகக் கூறியுள்ளார். இது தலையில் உள்ள சஹஸ்ராரச் சக்கரத்திற்கு வலிமையளிப்பதுடன், நோய்கள் நம்மை அணுகாமல் காக்கும் வல்லமையுள்ளது.
பஞ்ச கல்பம் ஐந்து வகையான மூலப் பொருள்களைக் கலந்து தயாரிப்பதால் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது.
கீழ்க்கண்ட சரக்குகளை எடுத்துக் கொள்ளவும்.
1)வெள்ளை மிளகு (சுத்தி செய்தது)---150கிராம்
2)கடுக்காய்த் தோல் (சுத்தி செய்தது)-125கிராம்
3)வேப்பம் பருப்பு உலர்ந்தது---------100கிராம்
4)நெல்லி வற்றல்--------------------75கிராம்
5)கஸ்தூரி மஞ்சள்-------------------50கிராம்
மேற்கண்ட ஐந்து சரக்குகளையும் நன்றாகப் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி பொடியை சிறிது பால் விட்டு அரைத்து 50 மிலி பசுவின் பாலில் கலந்து காய்ச்ச வேண்டும். பஞ்ச கல்பம் தேய்த்து குளித்து வந்தால் சிறிதும் நோய்களுக்கு இடமில்லாமல் வாழலாம்.

Friday, January 26, 2018

யோகக்காவடி

யோகக்காவடி




அனைவருக்கும் தைப்பூச நன்னாள் வாழ்த்துக்கள்...

தமிழ் நாட்டை விடத் தெற்காசிய நாடுகளில் தைப்பூசம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூச நன்னாளில் முருகப்பெருமானுக்கு வேண்டிக்கொண்டு  பால்.பன்னிீர்.,புஷ்பம்.,என பலவித காவடிகள் தூக்கி ஆடுபவர்களைப் பார்த்திருக்கிறோம்..ஆட்டம் சரி..ஆனால் எதற்காக என உணார்ந்தாடுகிறோமா என்பதே கேள்வி????. 


காவடிகள் தூக்கி, நற்பாவடிகள் பாடிஉந்தன்
சேவடிகள் நாடிவாறோம் ஓடி....

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்......எனப்பாடல்கள் பாடுகிறோம்

பொருள் புரியாமல் செய்யும் எதற்குமே பலன் இருக்குமா என்பது ஐயமே.

"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் 
செல்லுவர்..சிவபுரத்தின்...."-என்பது மாணிக்கவாசகர் வாக்கு. 

எல்லாத் தெய்வங்களுக்கும் உரிய சில பொதுவான ஆகம,தாந்திரிகநியமங்கள்,நெறிகள்,வழிபாட்டு முறைகள்  அவரவர் ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப இங்கு இருந்தன என ஒரு கருத்துண்டு. நம்மிடையே உருவ,அருவ,உருவருவ வழிபாடு என்பது பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. அவரவர் அறிவுக்கேற்ப இங்கு வழிபாடும் இருந்து வருகிறது...இதனையே

அவரவர் தமதம அறிவறி வகைவகை 
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர், இறையவர்
அவரவர் விதிவழி அடியனின் றனரே!.... என்கிறார் நம்மாழ்வார்


நம் இந்திய வழக்காற்றில்..மதங்கள் என ஒன்றில்லை.சமயங்கள் மட்டுமே இருந்தன

1.சிவனை வழிபடு தெய்வமாகக் கொண்ட சைவம்(saivam)-இது இறைத்தன்மை ஒருமை நிலையில் இருக்கும் நிலை. 
2.சக்தியை வழிபடு தெய்வமாகக் கொண்ட சாக்தம்(saaktham)-இது இருமை நிலை 
3.விஷ்ணுவை வழிபடு தெய்வமாகக் கொண்ட வைணவம்(vainavam)-மும்மை நிலை. 
4.பிரம்மாவை வழிபடு தெய்வமாகக் கொண்ட சௌரம்(sauram)-நான்கு நிலை தன்மை. 
5.விநாயகனை வழிபடு தெய்வமாகக் கொண்ட காணபத்தியம்(ganapaththiyam) -ஐந்தாம் நிலை. 
6.முருகனை வழிபடு தெய்வமாகக் கொண்ட (kaumaaram)-இறை தன்மையின் ஆறாம் நிலை. 


இந்த சமயங்களின் முடிவான நிலைஎன்பதும், இதன் நோக்கமும் யாதெனில், மனிதன் இறையைத் தனக்குள் உணர்ந்து கடவுள் மயமாக வேண்டும் என்பதே....

சிவநிலை என்பது அடக்கமும்..ஒடுக்கமும்.


முருக நிலை என்பது அறிவும்,,விரிவும். 

சிவனிலை என்பது உடலையும்,உள்ளத்தையும்,  சகலத்தையும் கடத்தல்.

முருகநிலை என்பது..உடலுக்குள்ளும்..உள்ளத்துக்குள்ளும் நிலைத்தல்.

முன்னது அனைத்தையுமாண்டு அனுபவித்து..முற்றும் உணர்ந்து..அடங்கி ஒடுங்கும் நிலை. 
பின்னது..கையில் இச்சா சக்திஎனும் ஒரு பெரிய ஆயுதத்தை வைத்துக்கொண்டுத் தனக்குள் தன்னை முழுமை பெறவிடாமல் தடுக்கும் சூரத்தனங்களை எதிர்த்து நிற்கும்     நிலை. 


ஆக ஒருமைக்கு உட்பட்ட முதல் நிலையான சிவனிலையை நோக்கி..ஆறாம் நிலைக்கு


உயர்வதே மனித வாழ்வு.. 


முருகன் அவதரித்தது சிவனின் நெற்றி எனக்கொண்டால்..நெற்றி நம் ஒவ்வொருவரின்..சிரசாய் விளங்கும் குன்று. 
நெற்றி எனும் குன்றில் இளங்கும்..அறிவுக்கடவுளே முருகன். 
அறிவுக்கான ஆட்ட மைதானம் நெற்றியெனில்..அறிவை ஆட்டுவிப்பது மூளை. ஆம் 
மனித மூளை..நம் கபாலத்தில் காரணத்தோடு..மூன்று இடங்களில் 
பிரித்துவைக்கப்பட்டிருக்கிறது. 
வலது மூளை..இடது முளை..மையத்தில்..முகுளம். 
ஒருவன் மது அருந்தினால்..சாக்கடையில் விழுவான்.. 
அவனுக்குச் சாக்கடையில் இருக்கிறோம் எனத் தெரியும்..நாற்றமடிக்கிறது எனவும் தெரியும்.  இந்த இம்சையில்,இச்சையில்  
இருந்து விடு பட வேண்டுமெனவும் தெரியும்..ஆனால் எழுந்து செயல்பட 
முடியாது.காரணம்..முகுளம் பாதிக்கப்படுவதே. 
நம் அன்றாட வாழ்வின் கேள்விகளும் 
விடைகளும்..மகிழ்ச்சியும்.சோகமும்..ஏற்றமும் இறக்கமும்..வலது இடதாய் 
இருக்கிறது. வலதில் ஒரு கருத்து..இடதில் அதற்கு எதிரான கருத்து.. 
எதை எடுத்துகொள்வது..

அறிவுக் கண்கொண்டு பார்த்தால்..
இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை என்பதுதான் நிரந்தரம். அதுதான் அறிவு நிலை. 
சதா நம் கபாலத்தில்..வலது மூளையும்..இடது மூளையும்..செய்யலாமா 
வேண்டாமா..எனப் போராடியே..ஒரு முடிவை எடுக்கிறது. 
நம் எண்ண அலைகள்..கபாலத்தில்..வலதுக்கும் இடதுக்கும் ஆடும் ஆட்டம்.. 
கொஞ்சம் விழிப்புணர்வுடன் பார்த்தால்..ஒரு அரைவட்ட நாண் போல 
தெரியும்..அதாவது..காவடியின் மேற்பகுதி போல. 
காவடியாட்டத்தின் சிறப்பே அது விழாமல் இருப்பதுதான். 
in very simple words..kaavadi aattam is the balancing the thing in 
between left and right. 

எந்தப் பக்கமும் ஒருசார்பாய் சாய்ந்துவிடாமல்..நடுனிலையான அறிவுநிலையில்..நாம் வாழவேண்டும்..என்கிற உட்புற மன பயிற்சிக்காக வடிவமைக்கப்பட்ட உள்நிலை விஞ்ஞானமே காவடி தூக்குதல்....




காவடி ஆட்டம்.......


இது முகுளத்தை பக்குவமாக்கும் சுழிமுனைப் பயிற்சி,
  


.....இது நமக்குள் இருக்கும் சூரத்தனங்களை வென்று   இச்சைகளின் வசப்பட்டு வாடிக்கிடக்கும் மனத்தை விடுவித்து ஒருமையாற்றலுடன் மனதை வீறுகொண்டு எழச்செய்யும் பயிற்சி.    எனவேதான்   காவடி ஆட்டம் கெளமாரத்திற்குறிய யோகசாதனையாக இங்கு வடிவமைக்கப்பட்டிருக்கிறது 

இச்சையை வெற்றி கொண்டு இச்சா சக்தியாக்கிக்கொள்ளும் அற்புத உள்நிலை விஞ்ஞானம்  காவடி தூக்குதல்....காவடி என்பது  சரியையில் யோகம்.

தமிழ் மொழியில் காவுதல் என்றால் தூக்குதல் என்று பொருள். காவு+அடி = காவடி!!! அதாவது இறைவனின் தூக்கிய திருவடியைப் பிடித்து மேலேறிச் செல்வதற்கே காவடி எனப்பெயர்...


இயற்பியலில் Fulcrum,lever என்றெல்லாம் நாம் படித்திருக்கிறோம். A lever is a beam connected to a hinge,called a fulcrum. அதுவே Human Fulcrum ஆகும்போது அதே Lever காவடி ஆகின்றது! அதாவது இருபுறமும் எடை சமன் செய்தல் =  Balancing!  (mechanical advantage of a lever(MA) = Balance ofTorque,about the fulcrum; MA= m1/m2= a2/a1)



சம்காரம் செய்த கடவுளர்களில்..எதிரியை..மன்னித்து தன்னிடமே வைத்துக்கொண்ட 
ஒரே கடவுள் முருகன் மட்டுமே. 
அன்பும்..அறிவும்..விழிப்புணர்வும் இருந்தாலன்றி இது சாத்தியமில்லை. 
எனவே..வெளியே நாம் பார்க்கும் காவடி ஆட்டத்தை இன்றுமுதல்...நமக்குள் ஆடிப் பழகுவோம். 
வேண்டுதலிலும் விழாமல்..வேண்டாமையிலும் விழாமல்..நடு நிலையில்..நம் 
அறிவுக்காவடியை ஏந்தி பிடிப்போம். 
நமக்குள் உயிர் உள்ள ஒவ்வொரு நொடியும்..தைப்பூசமே. 

அரோகரா. 


Wednesday, January 10, 2018

பல்லாங்குழி....

பல்லாங்குழி....


மேலைநாட்டு வழக்கப்படி விளையாட்டுகளை..உள்ளரங்க விளையாட்டு, வெளியரங்க விளையாட்டு என பிரிப்பதுண்டு. அவ்வகையில் பல்லாங்குழி உள்ளரங்க விளையாட்டு . இருவராக ஆடக்கூடிய விளையாட்டுக்கள் நிறைய உண்டு. நம் விஸ்வனாதன்ஆனந்த் ஆடும் சதுரங்கம் முதல், உலகையே கலக்குதே அந்த கேரம் வரைக்கும் நிறைய ஆட்டம் இருந்தாலும்.. அவற்றிற்கெல்லாம் இல்லாத தனிபெரும் பழமையும், தத்துவ தன்மையும் பல்லாங்குழிக்கு உண்டு.
இருவராக விளையாடும் எல்லா ஆட்டங்களுமே எதிரில் விளயாடுபவர்களை வீழ்த்தும் ஆட்டம். பல்லாங்குழி மட்டுமே வெற்றிக்கும் தோல்விக்கும் பின்னால் ஒரு ஞானத்தையே உணரவைக்கும் ஆட்டமாகும். பல்லாங்குழி மனையின் அமைப்பை கவனித்தால் பெரும் வியப்பு தோணும் நமக்கு. ஆம்..ஒரு மீனின் வயிற்றை ஒரு பகுதியில் மட்டும் கிழித்து அப்படியே திறந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அமைப்பு.
ஒரே மனையாய் மூடியிருந்தது இப்போது பாதி பாதியாய் பிரிந்து, இந்த பக்க ஆட்டக்காரரக்கு பாதி அந்த பக்க ஆட்டக்காரருக்கு பாதி. அவரவர்களுக்கான பாதியில் இருப்பது ஏழேழு குழிகள். ஒன்று கூடாது..ஒன்று குறையாமல். ஏழேழு குழிகள். மூடிய போது ஏழு முழுக்குழிகளாய் இருந்தவை ஆட்டம் துவங்கியதும்..ஏழு அரைக்குழிகளாக பிரிந்துவிட்டது.
இந்த ஏழு என்றதும் பலருக்கும் பல உண்மைகள் தோன்றலாம்..அதென்ன மிக சரியாய் ஏழு என்று..?ஆம் நம் கலாச்சரத்தில் ஏழுக்குள் இருக்கும் முக்கியத்துவத்தை யாராலும் மாற்றமுடியாது. நாம்தான் இன்னும் உணராமல் இருக்கிறோம்.
இந்த பல்லாங்குழிமனையே ஒரு மனித உடல்தான். மனித உடல்தான் என்ற பிறகு அதைபோய் பிரிப்பானேன்..? பிரிக்கத்தான் வேண்டும். காரணம்..ஒவ்வொரு மனிதனும் அண்டமும் , பிண்டமுமாக இரண்டாகத்தான் இருக்கிறோம். மேலும்..இவ்வுலகின் ஒவ்வொரு ஆணும் பெண்ணுமே அர்த்தனாரிகள்தான். நம் உடலில் உச்சந்தலை சகஸ்ரம் உட்பட இருக்கும் ஆறு ஆதாரசக்கரங்களே இந்த ஏழு குழிகள். சிவபெருமான் தன் உடலில் பாதியை சக்திக்கு கொடுத்துவிட்ட கதை நமக்கு தெரியும். இதை நம் ஒவ்வொருவரின் வாழ்கையோடு பொருத்திபார்க்க முடியுமா..?
நிச்சயமாக முடியும். இந்த உலகமே ஈர்ப்பு தத்துவத்தின் அடிப்படையில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்மைக்குள்ளும் சரிபாதி பெண்மை இருக்கிறது. அதுபோலவே ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சரி பாதி ஆண்மை இருக்கிறது. அது மறைத்துவைக்கப்பட்டிருக்கிறது. இதை காலம் உணர்த்தும்போது ஒரு ஆண் தனக்குள் இல்லாததான பெண்மையை ஒரு பெண்ணிடம் தேடுவதும், ஒரு பெண் தன்னிடம் இல்லையென கருதும் ஆண்மையை ஒரு ஆணிடம் தேடும் தன்மைதான் உடல் ஈர்ப்புக்கான அடிப்படை.
அந்த ஈர்ப்பு ஒரு முடிவுக்கு வந்து பந்தத்தில் நிறைவுறும்போது - இணைகளாய் மாறிய அவர்கள் அர்த்தநாரிகள் ஆகிறார்கள்.தம் நேசங்களை நிறைவு செய்துகொள்ளும் பொருட்டு அன்பு காட்டுபவர்களாகவும், விட்டுதருபவர்களாகவும் மாறுகிறார்கள்.தனி தனி உடல் ஆனாலும் வாழ்வின் வெவ்வேறு தளங்களில் மனதால் இணைந்தே அவர்கள் முடிவெடுத்து வாழவேண்டியிருக்கிறது.
சரி பல்லாங்குழி ஆட்டத்திற்கும் இந்த தன்மைகளுக்கும் என்ன தொடர்பு...?
நம் வாழ்வின் ஆதாரமாய் விளங்கும் நம் ஆதாரசக்கரங்கள் ஆண் - பெண்ணாய் பிரிந்து அதே நேரத்தில் ஒத்த முடிவில் இணைந்து செயல்படும் தன்மையதாய் உள்ளதன் குறியீடே பல்லாங்குழியாட்டம்.
இன்னொரு விதத்தில் சொல்வதானால் - கோவில் அரசமரத்தடியில் இருக்கும் 'நாகல்' போல, நம் உடலின் ஆறு ஆதார மையங்களை உச்சி சகஸ்ராரத்தில் இணைப்பதான குண்டலினி பாம்பின் மடித்துவைத்த தோற்றமே பல்லாங்குழி மனை. மிக பழமையான பல்லாங்குழி மனைகளில் பாம்புகள் செதுக்கப்பட்டிருப்பதை நீங்களே பார்க்கமுடியும்.
ஆணின் குண்டலியினில் பெண்ணின் ஆளுமை, மற்றும் பெண்ணின் குண்டலியினில் ஆணின் ஆளுமை , இவற்றின் அடிப்படை அத்தியாவசியமே.. பல்லாங்குழி ஆட்டத்துக்கான மூலக்கரு. ஒரு ஆண் தனியாக முடிவெடுப்பதும், ஒரு பெண் தனியாக முடிவெடுப்பதும்..வாழ்வில் என்ன வகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு பெரிய உதாரணங்கள் தேவை இல்லை . மகாபாரதத்தில் சூதாடியபோது ஆண்கள் முடிவெடுத்தார்கள். இராமயணத்தில் மானுக்கு ஆசைப்பட்டு கணவன் ராமனையும், இலக்குவனையும் இயக்கியபோது சீதை முடிவெடுத்தாள்.
அரிச்சந்திரபுரானத்தில்- தன் உண்மை பேசும் கொள்கையிலிருந்து தவறக்கூடாது என்பதற்காக மன்னன் அரிச்சந்திரனும் - அவனது மனைவியும் சேர்ந்து முடிவெடுத்தார்கள்.
இருவர் ஒத்திசைந்து முடிவெடுத்து காலவோட்டத்தில் துன்பம் வந்தாலும் நிலையான இறுதி இன்பத்தை அடைய இப்படி எடுக்கப்படும் முடிவுக்கு பல்லாங்குழியாட்டத்தில் நிருபணம் உள்ளதா..?
உள்ளது.
அந்த ஏழு குழிகள் சொன்னோமல்லவா..? அவை வேறெதுவுமில்லை..
1.சகஸ்ராரம்

2.ஆக்ஞா
3.விசுக்தி
4.அனாகதம்
5.மணிபூரகம்
6.சுவாதிஷ்டானம்
7.மூலாதாரம்.

இந்த ஏழின் முழுமையும் இந்த ஆட்டத்தில் சரி பங்காய் பிரிக்கப் பட்டிருக்கிறது. நம் ஞானியரின் பார்வையில் இந்த ஏழு சக்கரங்களும் இன்னொரு பார்வையில் சுட்டிக்காட்டபட்டுள்ளன.
சகஸ்ரஹாரம் துவங்கி விசுத்தி வரை - ஆகாயம் அல்லது மேலோகம் எனவும், அனாகதம் துவங்கி சுவாதிஷ்டானம்வரை பூலோகம் எனவும், கடைசி மூலாதாரம் அதற்கு கீழ் நரகம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இப்போது பல்லாங்குழி மனையை விரித்துவைத்துக்கொள்ளுங்கள். சோவிகளை எடுங்கள். எவ்வளவு சோவிகள் தெரியுமா ஒவ்வொரு குழிக்கும் எட்டு எட்டு. இது எண்குணத்தின் குறியீடு. இந்த எட்டு குணங்களைக்கொண்டுதான் நாம் நம் ஒவ்வொரு உணர்வுகளையும் இந்த உலகை நோக்கி பிரதிபலிக்கிறோம்.
விளையாட இருவர் அமர்ந்தாயிற்று. அவர்தம் முறையே இடது பக்கம் ஒருவருக்கும் வலது பக்கம் ஒருவருக்குமாக இருக்கும் முதல் குழியே சகஸ்ரஹாரம். ஆட்டத்தை துவங்குபவர் எந்த குழியில் இருந்தானாலும் விளயாட்டை துவங்கலாம்.
permutation and combination தத்துவப்படி- முடிவுகள் வெவ்வேறாக இருந்தாலும் - மேலோகம் என்று சொல்லக்கூடிய முதல் மூன்று குழிகளிலிருந்து துவங்கப்படும் ஆட்டம் மிகுந்த லாபம் தரக்கூடியதாகவும், பூமி, நரகம் என்று சொல்லக்கூடிய பகுதியில் துவங்கும் ஆட்டத்தின் போக்குகள் வேறு மாதிரி இருப்பதையும் நீங்கள் விளையாடி பார்த்தால் கண்கூடாக அனுபவிக்கலாம்.
இந்த வாழ்வு எதிர்மறைகளுக்கு இடையில் ஒத்திசைந்து நேர்மறையாய் வாழவேண்டியதன் தேவையை பல்லாங்குழி ஆட்டம் உணர்த்துவதை நீங்களே உணரமுடியும்.
சிறு வயதில் என் காது கேட்காத பாட்டி - என்னோடு விளையாடும்போது ஜெயித்துக்கொண்டே இருப்பாள். நான் அழுவேன். ஒரு முறை சொன்னாள்.."இந்த குழியிலேர்ந்து எடுத்து ஆடு..நீயும் ஜெயிப்பே.."என்று .......ரகசியம் அதுதான். நம் முன்னோர்களின் அத்தனை உருவாக்கங்களும் ஞானமேயன்றி வேறில்லை.

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும், 

நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, 
அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!
அன்னவர்க்கே சரண் நாங்களே.

Friday, December 15, 2017

திருமந்திரத் தேன்துளி 1







திருமூலர் பெருமான் திருமந்திர மாலையில்  கதை ஒன்றைச் சொல்லி ஆத்மா, உயிர் ஆகியிவற்றின் இடையேயுள்ள உறவு முறையை அழகாக விளக்குகின்றார். இரண்டு அன்னங்கள் ஓர் ஆற்றில் இருக்கின்றன. இரண்டும் ஒன்றையன்று ஆழமாக நேசிக்கின்றன. ஒன்றை விட்டு ஒன்று பிரியாது. ஒன்று சீவன். மற்றொன்று சிவன். சிவனாகிய அன்னம் தான் வேறுபட்டது என்கிற உணர்வில் இருக்கும்பொழுது சிவத்தின் நிலையை அடையாது. ஆற்றங்கரை என்பது ஆற்று நீர். இரண்டு அன்னங்களும் ஆற்று நீரில் வாழ்கின்றன. சீவனாகிய அன்னம் நீரில் ஆனந்தமாய் நீந்தி அங்கும் இங்கும் சென்று மீன் போன்ற இரைகளைக் கவர்ந்து உண்கிறது. தன் செயலால் இன்பம், துன்பம் இரண்டினையும் நுகர்கிறது. சிவன் என்னும் மீன் நீரில் இருந்தாலும், உப்பு நீரில் வாழும் மீனின் உடலில் உப்பு ஏறாதது போல், தான் தானாய் இருந்து கொண்டு, எதனையும் நுகராமல், சீவ அன்னத்தின் செயல்களை சாட்சியாக மட்டும் பார்த்துக் கொண்டிருக்கின்றது. சீவ அன்னத்திற்கு அருளால் பாதுகாப்பாக இருந்து விடுகிறது. சிவ அன்னத்திற்கு ஆற்று நீரின் நிலையாமை தெரியும். சீவ அன்னமோ நிலையற்ற வாழ்வை நிலையானதாகக் கருதிக் கொண்டிருக்கின்றது. தன் போக்கிலேயே போய்கொண்டிருந்தால், தனக்குத் துணையாக, தன்னைப் பிரியாதிருக்கும் சிவ அன்னத்திடமிருந்து பெறக்கூடிய பெரும்பயனை இழந்து விடுகிறது. குருவருளால் ஒருநாள் சீவனாகிய அன்னம் இந்தக் கலக்கத்திலிருந்து தெளிவடைந்து விடுகிறது. தான் தேடும் இரையைவிடத் தான் வாழும் இடத்தைவிட மேலான இன்பத்தையும், இடத்தையும் வழங்கும் பேராற்றலுடையது தன்னைப் பிரியாதிருக்கும் அன்னம் என்று தெளிந்து அதனை ஆதாரமாகக் கொள்கிறது. அடைதற்கரிய பேரின்பத்தை அடைகிறது. குருவின் திருவருளாலே இது நடைபெறகிறது.
"அன்ன மிரண்டுள ஆற்றங் கரையினில்
துன்னி யிரண்டுங் துணைப்பிரி யாதன்னந்
தன்னிலை யன்னந் தனியன்ற தென்றக்கால்
பின் மடவன்னம் பேறணு காதே". (திருமந்திரம் - 2006)

சீவனென்ன சிவனென்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்த பின்
சீவனார் சிவன் ஆயிட்டிருப்பரே

Sunday, July 2, 2017

திரி சூலம்




மனித சரீரத்தின் வெளிப்பாடே கோவிலிலுள்ள கோபுரமும், கொடிமரமும்,  ஒருவகையில்  நமது       புராணங்களும்,   இதிகாசங்களும்   உருவச்சிலைகளும் ,அவற்றிற்குத் தொடர்புடைய சமயச்சின்னங்களும், சரீரம், மனம் மற்றும்  உயிர் இவற்றோடு தொடர்புடையவையே,,,,,,,


.  

வெறுமனே கோவிலுக்குச் செல்வதோடு  நின்றுவிடாமல் அனைத்தையும் ஒரு 
மறுஆய்வுக்கு உட்படுத்தி உண்மையை உணர வேண்டியது அவசியமாய் இருக்கிறது.



அன்பு என்பது ஓர் அகஉணர்வு. உயிர்கள் மட்டுமே இந்த உணர்வை அனுபவிக்க முடியும். உயிராகிய சிவமும் இந்த அன்பும் வேறு வேறு அல்ல  அதனால்தான் "அன்பும் சிவமும் இரெண்டென்பார் அறிவிலார்" என்று சொல்லப்பட்டது ...........




 அகத்தில் அன்புபொங்க புறத்தில்  உடல் மூலமாக அது செயல்படுத்தப்படுகிறது.

வெளிப்படுத்தப்பட்ட அன்பின் விளைவை உயிர் அனுபவிக்கிறது.

ஆக அன்போ அல்லது அதற்கு அபரமான காமமோ,
 மாற்றான கோபமோ எதுவாகினும் அது உணர்வாக மனதில்
தோன்றி சரீரத்தின் மூலமாக செயல்பட வேண்டியது கட்டாயமாகிறது . இவை அனைத்துக்கும்    
சாட்சியாக ஆன்மா சாட்சியாக   "சும்மா' இருக்கிறது.

அறிவியல் பூர்வமாக ஒரு உயிருக்குள் உணர்வு பயணிக்கும் தொனியை உணர முடியுமா..?   சிவச் சின்னங்களில் ஒன்றான திரி சூலத் தத்துவத்தை  உணர்ந்து கொண்டால் உணர்வு உயிருக்குள் பயணிக்கும் உள்அனுபவத்தை ஓரளவிற்கு புரிந்துகொள்ள முடியும்.


திரிசூலத்தைக் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் உண்மை விளங்கும்.



மனிதனின் ஆறறிவும் உடலில் ஒவ்வொரு புலனையும், பஞ்சபூதத்தையும் ஊடகமாக கொண்டு செயல்படுகிறது.

நிலம்-தொடு உணர்வு-உடல்(நிலத்தில் செடி உடலில் முடி)
நீர் _சுவைத்தல்-நாக்கு( நீர் ஊறும் புலன்)
நெருப்பு-ஒளி-கண்(உள்ளொளி கொண்டு அகவொளி காணல்)
காற்று-வாசம்-மூக்கு (சுவாசித்தல்)
ஆகாயம்-ஒலி-செவி (ஆகாசவாணியாய் ஓசையைக் கேட்டல்)

ஐம்புலன்களுக்கு ஐந்து பூதங்களென ஐந்து அறிவு வரை சூத்திரம் சரியே.

ஆறாவது அறிவு எது-  அது பகுத்தறிவு என நம் பிள்ளைகளுக்கு சொல்லி தந்தோமே தவிர

அதற்கு மேல் இம்மி அளவு கூட நாம் ஆறாவது அறிவு பற்றிய அறிதலில்

செயல்படவில்லை.

இத்தனைக்கும் பலாயிரம் ஆண்டுக்கு முன்பே ஆறாவது அறிவுக்கு ஒரு
தொல்காபபியன் பெயர் வைத்தும் இன்னும் நாம் அதை பயன்படுத்துவதில்லை.

ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அவற்றொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆற்றறிவதுவே அவற்றொடு மனனே..
நேரிதை உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.

இது தொல்காப்பிய சூத்திரம். ஆறாம் அறிவுக்கு பெயர் மனம்.
மற்ற ஐந்து அறிவுக்கும் உள்ளது போலவே மனதுக்கும் தான் செயல்பட ஒரு ஊடகம் தேவை.
மனதின் ஊடகம் மூளை.(இரண்டாவது மூளை; முதுகுத்தண்டு) மனதின் செயல் ஆணைகளை மூளை மூன்று வெவேறான தலங்களிலிருந்து செயல்படுத்துகிறது.



வலது மூளை-இடது மூளை-நடு மூளை(முகுளம்)
இப்படிகூடச் சொல்லாம்
இடகலை-பிங்கலை-சுழுமுனை.

இந்த மூன்று முனைகளைக் குறிக்கும் அடையாளமே திரிசூலத்தின் தலைப்பகுதி.

இரண்டு முனைகள் வலதிடதாய் இருக்க நடுமுனை வானம் பார்த்து இருக்கும்.
தெருவிளக்கு கம்பத்தில் உள்ள மின்சாரத்தை வீட்டிற்குள் கொண்டுவரும்போது

என்ன செய்கிறோம்..?

phase -nutral- என பிரித்து முறையாக wiring செய்கிறோம் அல்லவா..?

இதே அமைப்புதான் சமச்சீராய் பிரிந்திருக்கும் மனித உடலிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 

இடது பக்கத்திற்கும் வலது பக்கத்திற்கும் உயிராற்றல் என்கிற மின்சாரத்தை எடுத்து செல்ல wiring செய்யப்பட்டிருக்கும் பாதையே முதுகு தண்டுவடம்.


திரிசூலத்தின் தலைப் பகுதியோடு இப்பொழுது தண்டுவடத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.

எண்ணங்க்ள்தாம் செயல்கள். செயல்களால் விளைவு. அதற்கு பின் கிடைக்கிற அனுபவம் இன்பம் அல்லது துன்பம். இப்படி நிகழ்வது ஒரு சக்கரம்.


எண்ணங்கள் செயலாய் பரிணமிக்க மனம் நினைத்து-மூளை அதை வாங்கி-உடல்உறுப்புகளுக்கு ஆணையிட- அங்கங்கள் அதை செய்யும்.


இந்த நிகழ்விற்கு ஆதாரமாய் இருக்கும் மூன்று மூளையையும் உடலின் அனைத்து உறுப்புகளோடும் இணைத்து வைத்திருப்பது நரம்பு மண்டலம்.

அந்த நரம்பு மண்டலம் முறையாக நம் தண்டுவடத்தில் wiring செய்யப்பட்டிருக்கிறது.

தண்டுவடத்தை எந்த அளவிற்கு நிமிர்த்தி வைக்கிறோமோ..அந்த அளவுக்கு மினசாரப்

பகிர்மாணம் தடை இல்லாமல் இருக்கும்.

அன்பை காட்டுவதால் சிவனாகிப்போன நம் ஒவ்வொருவரும் நம் சூலத்தை எப்படி

நிமிர்த்தி வைத்திருக்க வேண்டுமென இப்போது புரியும்.

சூலம் சரி அது என்ன நடுவில் ஒரு உடுக்கை..?

இதுவும் உடல் தத்துவமே.

உடுக்கையைப் பிரித்து பாருங்கள். ஓசை எழுப்புக்கூடிய இரண்டு பக்கங்கள், தோலை வைத்து இறுக்கக் கட்டப்பட்டிருக்கும் விதம், இவையெலாம் சாதாரண சங்கதிகள் அல்ல. வலது புறம் இறுக வேண்டுமெனில் அதற்கான இறுக்கத்தை இடது பக்கத்திலும், இடது பக்கத்தை வலது புறமாய் இறுக்க வேண்டும். அதாவது நம் உடலில் வலது பக்கம் முழுவதையும் இடது மூளை கட்டுப்படுத்துகிறது.

இடது பக்கம் முழுவதையும் வலது மூளை கட்டுப்படுத்துகிறது.

உடுக்கையின் மையத்தில் உள்ள ஓசை எழுப்பும் மணியானது உடுக்கையை வலதிடதாய்

அசைக்கும்போது வலது பறையில் இடது மணியும்..இடது பறையில் வலது மணியும் ஓசை

எழுப்ப்ம் வண்ணம் ஏற்பாடு.(மணி என்றால் காற்று அதாவது நமது சுவாசம் எனப்பொருள்கொள்ளவேண்டும்)

அதனால்தான் வலது கையோ காலோ இயங்காமல் போனால் சிகிச்சை இடது மூளைக்கு

நடக்கும். இயக்கம் இடதில் தடைப் பட்டால் சிகிச்சை வலதுமூளைக்கு நடக்கும்.

நம் ஒவ்வொருவரின் உணர்வுகளும் உடலுக்குள் செயல்வடிவம் பெறுவதற்கான blueprint இதுதான்.

நமக்குள் இருக்கும் நம்க்குச் சொந்தமான திரிசூலத்தை இன்று முதல் நாம் பூஜிக்கலாமா..?

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்.
தேடுவோம்..அனைத்தையும் உள்முகமாய் தேடுவோம்
அறிவியல் ஆன்மீகம் அனைவர்க்கும் நலம் தரும்..
.