Total Pageviews

Tuesday, December 20, 2011

விலகிய பந்தம்







அடிக்கடி திரும்பி 
பார்க்கிறேன்
புதிதாய் விலகியவர்
யாரென தெரிந்துக்கொள்ள...

ஒவ்வோர் முறையும்
குழம்புகிறேன்
அவரா இப்படியென
யோசித்து யோசித்தே...

எல்லா விளக்குகளுக்கும்
குறையளவு எண்ணையூற்றி
இருப்பு தீர்ந்ததென
அணைத்து விடுகிறார்கள்...

பாதியிலே முடிகிறது
வெளிச்சத்துடன் இரவு
மீதியெல்லாம் கழிகிறது
இருட்டினிலே பொழுது...

வீட்டிலுள்ள அரிசியிலே
கல் பொறுக்கும்
கிழவியாய் ஏமாற்றங்களை
பொறுக்கி வீசுகிறேன்...

திரும்பி பார்த்தால்
நினைவு சின்னம்
எழுப்பும் அளவு
குவிந்திருக்கிறது கற்கள்...

யாரும் தொடர்வதில்லை
எப்போதும் தொடர்வதில்லை
அவரவர் நிழலானாலும்
அந்தந்த நேரமே...

ஆழ்மன குகையிருட்டில்
தேக்கி வைத்த
அர்த்தமற்ற உறவுகள்
அத்தனையும் போலிகள்...

பூத்துக் குலுங்கிய
மரக்கிளைகள் இன்று
மொட்டையாகி ஒதுங்கவும்
ஆள் அரவரமின்றி...

நேற்றுக்கும் இன்றைக்கும்
தொடர்பில்லாத நிமிடங்களில்
தேங்கி நின்ற
குட்டையாய் உறவுகள்...

ஆரம்பத்தில் இடிபோல
அதற்கடுத்து கண்ணீரோடு
அதைத்தாண்டி விரக்தியோடு
இப்போதெல்லாம் சிரிப்புடன்...

No comments:

Post a Comment