Total Pageviews

Monday, January 10, 2011

தத்தாத்ரேயமகரிஷி




என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விஎன்ன தெரியுமா? உங்கள் குரு யார்? என்பதே. நான் அவர்களுக்கு கூறிய அதே பதிலை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.


எனக்கு ஒரு குரு என என்னால் கூற முடியவில்லை. எனக்குள் இருந்த யோக விதையை எனக்கு அறிமுகப்படுத்தியவர், சண்முக அண்ணன். சபரி ஸ்டுடியோ இளங்கோ அண்ணாச்சி,அதன் பிறகு அனுமந்த்ஜி, கிரிநாத்ஜி, , சதானந்தன், கணபதி சாமிகள்,வாசியோகி ராமன்சாமிகள்,.............. அண்ணாமலையில் அவதூதாக இருந்துவரும் சாமி மகேஸ்வரன் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. எத்தனையோ குருமார்கள் பெயர் சொல்லாமலேயே பிட்சையிட்டு இருக்கிறார்கள். வடகரை வள்ளல் சிவானந்த பரமஹம்சர் அவனவன் மனமே அவனுக்கு முதல் குரு என்கிறார். பகவான் ரமணர் தத்தாத்ரேயர் பற்றி நிறைய இடங்களில் கூறி இருக்கிறார். அதனை இங்கே பதிவு செய்கிறேன்.




தத்தாத்ரேயர் , அத்திரி முனிவர்- அனுசூயா தம்பதியின் புதல்வர். பெரிய ரிஷியாக விளங்கினார்.கர்நாடகத்தில் ராகவேந்திர சுவாமிகளுக்குப் பெரிய பக்தர் கூட்டம் இருப்பது போல, மஹாராஷ்டிரத்தில் தத்தாத்ரேயருக்கு ஏராளமான பக்தர்கள் உண்டு. மஹாராஷ்டிரத்தில் கோதவரி நதிக்கரையில் பிறந்த இந்த யோகி, வட இந்தியா முழுவதும் நிர்வாணமாகச் சுற்றியவர். அவதூத சந்நியாசப் பரம்பரையைச் சேர்ந்தவர்களால்தான் இது சாத்தியம். அவதூதர் என்றால் 'எல்லாவற்றையும் விட்டவர்' என்று பொருள்!






யோகி தத்தாத்ரேயர் காலையில் கங்கையில் குளிப்பார். மதியம் கோலாப்பூரில் சாப்பிடுவார். துங்க பத்திரையில் நீர் குடிப்பார். இரவு மாயாபுரியில் தூங்குவார். அவருக்கு எல்லாம் பரப்ப்ரும்மம்தான்; உலகமே பிரம்ம மயம்தான். அவரது தத்துவன் ' நினைத்ததைச் சொல்; சொன்னதைச் செய். இந்த உலகில் வாழும் ஒவ்வொரு நிமிடமும் இறைவனோடு கலக்க முயற்சி செய்ய வேண்டும். அந்த நிலையை நோக்கித்தான் நாம் போக வேண்டும். அதற்கு முக்கியமானது...ஆசையும், கோபமும், அகந்தையும் நம்மை விட்டு விலக வேண்டும்'. அதைத்தான் தொடர்ந்து போதித்தார்!

( நான் போகிறேன், நான் செய்கிறேன், நான் விரும்புகிறேன் என்று சொல்லிப் பாருங்கள். ஏன், ஏன் என்றுதான் முடியும். நாம் போகிறோம், நாம் செய்கிறோம் என்னும் போது ஓம்..ஓம் என்ற பிரணவம் ஒலிக்கும். என்ன அர்த்தம்? நான் எனும் அகந்தை இருக்கும் வரை இறைவன் உன்னை நெருங்கமாட்டான்.                   

......... சாமி )

தத்தாத்ரேயர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார் என்பதையும் கேட்டான்.




"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்




இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.




அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...' என்றார் தத்தாத்ரேயர். மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...




"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;

தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.

பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.

எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது;

பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.

"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

"வேடன் ஒருவன் புறாக்குஞ்சு களைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.

பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.

"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.

பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

"பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.

"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்...' என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.




இதைக் கேட்ட அரசன், தன் பதவியையே உதறித் தள்ளி விட்டு, ஆன்மிகத்தில் ஈடுபட்டான்.

தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே! எனக்குள் யோக விதையிட்ட சண்முகஅண்ணனின் தாழ்பணிந்து இங்கே இந்த பதிவை முடிக்கிறேன்.



ஓம் தத்
சத்

1 comment:

gayathri said...

சிறந்த பாடத்தை இக்கதையின் கற்று கொடுத்த தங்களுக்கு நன்றி

Post a Comment