Total Pageviews

Thursday, March 29, 2012

எழுத்தின் இலக்கே

அவ்வை சொன்னாள்; அகரம் எனக்கு;
அதுவே என்றன் வாழ்வின் கணக்கு;
கவ்விய மனது; கருதுவ தெல்லாம்
கவிதையை இங்கு விதைப்பதன்பொருட்டு!


வள்ளுவன்,மூலன்,வார்த்தைகள் எல்லாம்
வரிசை கட்டிய தமிழ் ஊற்றாக
வள்ளல் பெருமான் போன்றோர் வடிவில்
வந்த ஞானியர் யாவரும் இங்கு


விதைத்துச் சென்ற வித்துக்கள் மண்ணில்
விளைந்தவை இங்கு அடர்வனம் ஆக;
புதையலைப் போலத் தேடி அவற்றைப்
புலவோர் பலரும் பொங்கலிட்டனர்!


சித்தரும் முத்தரும் சிந்தித்த மொழியென
பித்தன்யானும் பேயாய் அலைந்து-
புத்தியில் அவற்றைப் புரிந்து கொண்டே
புதுப்புது விளைச்சலை அறுவடை செய்து-


நட்ட நிசியிலும் நடுநின்றுணர்ந்து
எட்டிப் பிடித்ததை இம்மொழியாக்கி,
எட்டுத்திசையிலும்கொட்டி முழங்கி
எவரும் உண்ணத் தகுந்தவை என்றே-

கம்பன் இளங்கோ,காட்டிய தமிழில்
கொம்பன் பாரதிகூறிய வாறே
நம்தொழில் எழுத்தென;நாட்டுக் கீந்து,
நல்லவை நவின்று சோரா திருப்பது!


நம்பிக்கை கொண்டு நாடிடுவோர்முன்
நாளும் இதையே நந்தா விளக்கென-
தெம்புடன் சொல்லித் தெளிவுடன் வாழ்வது:
தேசம் இதனைத் தெரிந்து கொள்க!


எதையும் இங்கு எதிர்கொண் டிருந்து
எதிலும் கலங்கா மலைபோல் நின்று
விதியை மாற்றும் விதியை எழுதி
விதைப்பது தான்என் எழுத்தின் இலக்கு!

No comments:

Post a Comment