நான் விழித்திருக்கும்
இதுபோன்ற இரவுகளில்…
சிலர்..
மனதைப் பதறவைக்கும் நாவலின்
கடைசி பக்கங்களை வாசித்துக்கொண்டு…
ஏமாற்றிய உறவுக்கு இன்னுமொரு
கடிதம் வரைந்துகொண்டு…
"பேய்" நினைவுக்குப் பயந்து
போர்வைக்குள் ஒளிந்துகொண்டு…
தன் உடலையோ/உயிரையோ ரசித்த
ஒருவனுடன்எல்லை தாண்டி ஓடிக்கொண்டு…
இன்னும் சிலர்…
தெருவோர சோடியம் விளக்கின் கீழ் தூங்கிக்கொண்டு…
நல்லதோர் "raak"இசை கேட்டுக்கொண்டு…
அபத்தமான அந்த சினிமாவின் கடைசி காட்சியை ரசித்துக்கொண்டு…
அலைபேசியில் அழுதுகொண்டு…
மற்றும் சிலர்…
எதையோ புகைத்துக்கொண்டு…
தூரதேசத்திற்கு பிரயாணித்துக்கொண்டு…
தன் பிள்ளைகளுக்காய் கன்னம் நனைத்துக்கொண்டு…
கலவியில் களைத்து…
வேறு சிலர்…
வானத்தை வெறித்துக்கொண்டு…
தனது அடுத்த கதையை படைத்துக்கொண்டு…
பூட்டிய கதவுகளை உடைத்துக்கொண்டு…
போருக்கு ஆயத்தமாகிக்கொண்டு…
ஒரு சிலர்…
ரேடியோவில் பேசிக்கொண்டு…
ஏதோவொரு சாதனையைப் படைத்துக்கொண்டு…
முதலிரவுக்கு ஆயத்தமாகிக்கொண்டு
வெகு சிலர்…
வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக்கொண்டு…
பிரார்த்தித்துக்கொண்டு…
பரீட்சைக்குப் படித்துக்கொண்டு…
கனவுகளில் ஓடிக்கொண்டு…
கணினியின் விசைப்பலகையைத் தட்டிக்கொண்டு…
நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டிக்கொண்டு…
தூங்கிப்போன தன் குழந்தைக்கு முத்தமொன்றை பரிசளித்துக்கொண்டு…
தோழனுக்கோ/தோழிக்கோ பிறந்த நாள் வாழ்த்துப் பகிர்ந்துகொண்டு…
புகைப்படமெடுத்துக்கொண்டு…
மேடையின் ஒளிவிளக்கை சரி செய்துகொண்டு…
தெருக்கூத்து இரசித்துக்கொண்டு…
துரிதமாய் சமைக்கப்பட்ட ஏதோவொன்றை உண்டு…
வேட்டையாடிக் கொண்டு…
பணத்தை எண்ணிகொண்டு…
சுவரொட்டிகள் ஒட்டிக்கொண்டு…
பேனாவில் உதிரம் நிரப்பிக்கொண்டு…
விபத்து ஒன்றில் சிக்கிக்கொண்டு…
சூதாடிக்கொண்டு…
சண்டையிட்டுக்கொண்டு…
விலைமகளுடன் சல்லாபித்துக்கொண்டு…
உயிரை மாய்த்துக்கொண்டு…
டைரி எழுதிக்கொண்டு…
இன்னொருவனது டைரியைப் புரட்டிக்கொண்டு…
எதையோ கொளுத்திக்கொண்டு
எதையோ மறைத்துக்கொண்டு
எதையோ மறக்க முயன்றுகொண்டு…
மீன் பிடித்துக்கொண்டு…
நீர் இறைத்துக்கொண்டு…
மருந்து பாட்டிலைத் தேடிக்கொண்டு…
யாரையோ சந்தேகித்துக்கொண்டு…
கடற்கரையில் உலவிக்கொண்டு..
தோற்ற காதலுக்காய் இன்னும் வருந்திக்கொண்டு…
திட்டங்கள் தீட்டிக்கொண்டு…
தசைவாளுடன் போராடிக்கொண்டு..
இணையத்தில் மூழ்கிக்கொண்டு….
இப்படியாய் கரைந்துகொண்டிருக்கின்றன இரவுகள்…
என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்"நான்"
1 comment:
எதற்காக இத்தனை நிகழ்வுகள்?
Post a Comment