Total Pageviews

Friday, July 29, 2011

பாசத்தளை



அடர்ந்த காடு. யாருமே தனியாகப் போவதற்குப் பயம் கொள்வர். ஆனாலும் இரண்டு பெரிய நகரங்களுக்கு நடுவில் இந்தக் காடு இருந்ததால் பலருக்கு இந்தக் காட்டுப்பாதையின் வழியே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். எல்லோரும் கூட்டம் கூட்டமாகத் தகுந்த பாதுகாப்புடனேயே இந்தக் காட்டுப் பாதையில் செல்லமுடியும்.


வணிகர் கூட்டம் அடிக்கடி இந்த வழியே செல்வதால் வழிப்பறி செய்யும் ஒரு கொள்ளைக்கூட்டம் இந்த காட்டில் நிரந்தரமாகவே கூடாரம் இட்டு வாழ ஆரம்பித்தது. எத்தனைப் பாதுகாப்புடன் வந்தால் தான் என்ன, இந்த கொள்ளையர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டால் அவ்வளவுதான். தலை தப்புவது தம்பிரான்புண்ணியம் என்று ஆகிவிடும்.



அந்தக் கொள்ளைக் கூட்டத்துக்குத் தலைவன் ஒருவன் இருந்தான். பெயர் ரத்னாகரன்.பெரிய சம்சாரி. கொள்ளையடிப்பதில் மிகத் திறமைசாலி என்பதால் கொள்ளையர் பலர் அவனை அண்டி வாழ்ந்தனர்.

சில நேரம் அவன் தனியாகவே வழிப்பறி செய்யக் கிளம்பிவிடுவான்.என்ன செய்வது!!!!!  பெரிய குடும்பம்…காப்பாற்ற வேண்டாமா?




"மனைவியர்களும் குழந்தைகளும் உறவுகளும் என் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளனர்? எனக்காக அவர்கள் உயிரையும் கொடுக்க முன்வருவார்களே? அவர்களைக் காப்பது என் கடமையல்லவா?"என்று அடிக்கடி எண்ணிக்கொள்வான் அந்த தலைவன்.

ஒரு முறை அவன் தனியே கொள்ளையடிக்கச் சென்றபோது அவனிடம் மாட்டிக்கொண்டார் ஒரு முனி. கையில் தம்புரா வைத்துக்கொண்டு ‘நாராயண, நாராயண‘ என்று பாடிவந்த முனி முன்பு ரத்னாகரன் மலையென நின்றான்.




‘யாரப்பா நீ. உனக்கு என்னவேண்டும்?’




‘நான் யாராய் இருந்தால்உமக்கு என்ன? உம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து வையும்‘.


முனிவருக்கு அவன் கொள்ளைக்காரன் என்பது அப்போதுதான்புரிந்தது.

‘அப்பா. நீ செய்வது மகா பாவம் அல்லவா? இப்படி எல்லோரிடமும் கொள்ளையடித்துக் கொண்டிருந்தால் யமன்உன் உயிரைக் கொள்ளையடித்துச் செல்ல வரும் போது உனக்கு நரகம் தானே கிடைக்கும்." .




"முனிவரே,   தேவையில்லாமல்பேசி என் நேரத்தை வீணாக்காதே. என் மனைவி மக்கள் உறவுஎல்லோரும் இன்று என்ன கொண்டு வரப்போகிறேன் என்றுவழிமேல் விழிவைத்துக் காத்திருப்பர். நீர் சீக்கிரம் உம்மிடம் இருப்பதைக் கொடுத்தால் உயிர் பிழைக்கலாம். இல்லை இங்கேயே செத்துப்போக உம்மை தயார் செய்து கொள்ளும்".


இதற்குள் முனிவருக்கு ரத்னாகரன் மேல் அனுதாபம் வந்தது. இவன் அறியாமையில் இருக்கிறான் இவனை நல்வழிக்குத் திருப்பிவிடலாம் என்று அவன் மேல் கருணை கொண்டு மேலும் பேச ஆரம்பித்தார்.


‘அப்பா…நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குப் பதில் சொன்னபிறகு என்னிடம் இருப்பதை எல்லாம் நீ கொள்ளை கொண்டு போகலாம்‘


"சீக்கிரம் கேட்டுத் தொலையும்".


‘ நீ யாருக்காக இந்தக் கொடுமையான கொள்ளையும் கொலையும் செய்கிறாய்? ‘


‘வேறு யாருக்காக, என் மனைவி மக்களுக்காகத்தான். அவர்கள்தானே  எல்லா சுக துக்கங்களிலும் என்னுடன் இருக்கிறார்கள்.எனக்காக அவர்கள் உயிரையும் கொடுப்பார்கள்.’


‘உன் எல்லா சுகங்களிலும் பங்கு கொள்கிறார்கள். சரி. உனக்காக தங்கள் உயிரைத் தருவதாக எப்போதாவது சொல்லி இருக்கிறார்களா? இல்லை உன் பாவங்களில் தான் அவர்கள் பங்கேற்பார்களா? "



"என்ன இப்படி கேட்டு விட்டீர்கள். அவர்கள் வாய் திறந்து எனக்காக உயிரைக் கொடுப்பதாய் சொன்னதில்லைதான். ஆனால் என் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பு அளவு கடந்தது. முற்றும் துறந்து முனியான உமக்கு அதெல்லாம் புரியாது".





"அப்படியா? சரி......!. உன் பாவங்களில் அவர்கள் பங்குகொள்வார்களா?"


‘அதிலென்ன சந்தேகம். நான் கொள்ளையடித்துக் கொண்டு வருவதைப் பங்கு கொள்ளும் அவர்கள் என் பாவத்திலும் பங்கு கொள்வார்கள்‘.


‘அதை நிச்சயமாகத் தெரிந்துகொண்டாயா?’


‘இல்லை. அதற்குத் தேவையும் இல்லை‘.


‘அது அவசியம் தேவை. அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்ளமாட்டார்கள் என்கிறேன் நான். நீ அதை இல்லையென்று நிரூபிக்கமுடியுமா?’


‘ஆகா முனிவரே! தப்பித்துப் போக முயல்கிறீரா? இதெல்லாம் என்னிடம்முடியாது‘.


‘இல்லையப்பா. நீ வேண்டுமானால் என்னைக் கட்டிப் போட்டு விட்டுப் போ.போய் அவர்களிடம் கேள். அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்வதாய்க் கூறிவிட்டால் என்னிடம் உள்ளதை எல்லாம் எடுத்துக்கொள். அவர்கள் இல்லையென்று சொல்லிவிட்டால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும்.’


கொள்ளையர் தலைவன் யோசித்துப் பார்த்தான். அந்த முனிவர் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது. நாம் கேட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து அந்த முனிவரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு சென்றான்.


திரும்பி வந்த ரத்னாகரன் முற்றிலும் மாறியிருந்தான் . அவனுள் இருந்த பீஜம் முளைவிடும் நேரம் நெருங்கி இருந்தது. வந்தவன்முனிவரின் காலில் விழுந்து ‘சுவாமி, நீங்கள் சொன்னது சரிதான்‘ என்றுகண்கலங்கிய படியே முனிவரின் கட்டுகளை அவிழ்த்துவிட்டான்.


"என்னப்பா நடந்தது"


‘சுவாமி. நீங்கள் சொன்ன படி நான் போய் என் மனைவியர், குழந்தைகள்,நண்பர்கள், உற்றார் உறவினர் எல்லோரிடமும் என் பாவத்தில் பங்குகொள்வீர்களா? என்று கேட்டேன். எல்லோரும் ஒரே விதமாய் ‘எங்களைகாப்பாற்ற வேண்டியது உன் கடமை. நீ எப்படிப் பொருள் கொண்டுவருகிறாய் என்பது எங்களுக்குக் கவலை இல்லை. நீ பாவ வழிகளில் சம்பாதித்தால் அந்த பாவங்களை நீதான் அனுபவிக்க வேண்டும். அதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை" என்று கூறிவிட்டார்கள்.


"அவர்கள் சொன்னதில் தவறில்லையே. மனைவி மக்களைக் காப்பாற்றுவது உன் கடமை!!!. அதை நல் வழியில் செய்கிறாயா? இல்லையா ? என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை".


"ஆமாம் சுவாமி. அதை நான் இப்போது உணர்கிறேன். நீங்கள் தான், நான் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட ஒரு நல்ல வழி காண்பிக்கவேண்டும்‘


‘நீ செய்த பாவங்களுக்கு எல்லாம் தகுந்த பிராயச்சித்தம் ராம நாமத்தைச்சொல்லிக் கொண்டு இருப்பதே‘


‘சுவாமி. என்ன நாமம் அது?’


‘ராம நாமம்‘


‘என் வாயில் நுழையவில்லையே சுவாமி‘


‘கவலையில்லை. இதோ இங்கிருக்கும் மரத்தின் பெயர் என்ன?’


‘இதுவா சுவாமி. இது மரா மரம்‘.


‘நீ இந்த மரத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டிரு. அது போதும்‘.


‘ஆகட்டும் சுவாமி. நீங்கள் யார் என்று இன்னும் சொல்லவில்லையே‘


‘என் பெயர் நாரதன். திரிலோக சஞ்சாரி என்றும் சொல்வார்கள்‘.


‘நல்லது சுவாமி. நீங்கள் சொன்ன படியே இந்த மரா மரத்தின் பெயரைச்சொல்லிக் கொண்டிருக்கிறேன்‘ .


நாரதரும் தன் வழியே சென்றார்.


அவர் போனபின் அந்த கொள்ளையர் தலைவன் அங்கேயே அமர்ந்து தன்னை மறந்து ‘மரா மரா மரா‘ என்று ஜபிக்க ஆரம்பித்தான். அது ‘ராமராம ராம‘ என்று ஒலித்தது. விண்ணதிர, மண்ணதிர இடைவிடாத ஜபம். கடுமையானத் தவம். ராம மந்திரம் அவனது பாசத் தளையைத் தகர்த்து பாதை காட்டியது.


நாளடைவில் அவன் மேல் புற்று வளர்ந்தது.  ராம நாம ஜபத்தால்அவன் பாவமெல்லாம் அழிந்து ஞானம் பெற்றான். யோக தவத்தின் பயனால் ரத்னாகரன் மிக உயர்ந்த ஞானியானார்.புற்றிலிருந்து வந்ததால் ‘வால்மீகி‘ என்று அழைக்கப் பட்டார்.  பின்னர் இராமாயணம் எழுதி அழியா புகழ் பெற்றார் .



கட்டியனைத்திடும் பெண்டிரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்தி விட்டால்
கொட்டிமுழக்கி அழுவார்; மயானம் குறுகி அப்பால்
எட்டி அடி வைப்பரோ?  இறைவா! கச்சி ஏகம்பனே!





No comments:

Post a Comment