Total Pageviews

Friday, July 1, 2011

மனிதம்

பாதையில் போகும்போது
சாலையில் கிடந்த முள்ளை
அகற்றாமல் வந்ததற்கு
மனசு குத்தியதுண்டா ?

ஆசையுடன் வளர்த்து வந்த
மீனும் / நாயும் இறந்த வேளையில்
நெருங்கிய உறவை இழந்ததுபோல
துக்கப்பட்டதுண்டா?

அறிமுகமில்லாத ஒருவர்
வாழ்க்கையில் அல்லாடியபோது
வலியச் சென்று
வழிகாட்டியதுண்டா?



புகைவண்டிப் பயணத்தில்
நலிந்தவர் மூத்தவர்
நிற்கத் தடுமாற
சிரமப்பட்டுப் பிடித்த இடத்தை
விட்டுக் கொடுத்ததுண்டா?

விபத்தில் சிக்கி இறந்துபோன
 யாரோ ஒருவருக்காக
நெஞ்சு கிடந்து
அடித்துக்கொண்டதுண்டா?

பாதையைக் கடக்கையில்
அணிற்பிள்ளை குறுக்கிட
பதறியடித்து
பிரேக் போட்டதுண்டா?

அப்படியானால்
வாழ்த்துக்கள்

இன்னும் நீங்கள்
மனிதராய் இருக்கிறீர்கள்.

No comments:

Post a Comment