உயிரின் மூலாதாரங்களை
அகழ்ந்தாய்ந்திருந்தபோது தென்பட்டன
கடவுளின் காலடித் தடயங்கள்.
அடியொற்றியே தொடர்ந்தேன்.
கால வெளி எல்லைகள் தூர்ந்து
ஆதியும் அந்தமுமான பிராந்திய
வெளியெங்கும் விரவிக்கிடந்தேன் "நான்"
என்னெங்கிலும் பரவிக்கிடந்தது "வெளி"
விழித்தெழுந்த உடலணுக்கள் யாவிலும்
வெடித்துக் கிளம்பியது பேரானந்தக் கிளர்ச்சி
கருமக் கயிறுகள் அறுந்து
ஞான ஒளியூட்டம் நிகழ்ந்தது
சூன்ய பெருஞ்சூட்சமங்கள் தெரிந்தும், தெளிந்தும்
கண்ணெட்டியவரையில் காணக்கிடைக்கவில்லை
கடவுள் மட்டும்.
வந்த வழி வியந்தேன்.
இரண்டு சுவடுகளன்றி
இன்னொன்று ஏதுமில்லை.
இருந்த சுவடுகள் மீது
நின்றுகொண்டிருக்கின்றேன்
"நான்".
No comments:
Post a Comment