Total Pageviews

Thursday, May 3, 2012

பயணங்கள் முடிவதில்லை....


பயணங்கள் முடிவதில்லை......





முன்பெல்லாம் திருவண்ணாமலைச் செல்வதற்கு அதிக நேரம் தேவைப்படும்...புறவழிச்சாலைகள் போடப்பட்டப் பின் அண்ணாமலைப் பயணம் எளிதாகிவிட்டது.....அதிலும் ஸ்ரீதர் அண்ணன் டிரைவிங்கில் திருவண்ணாமலை போவது.....ஒரு சத்சங்க அனுபவமாகவே மாறியிருக்கிறது.......புறவழிச்சாலை திட்டமெல்லாம் நம் நாட்டில் மிகச் சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும் சங்கதிகள். நம் உடலுக்குள்ளானப் பயணப் பாதையெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய் போடப்பட்டுவிட்டது. ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையானப் பயணம் மேற்கொள்ளவில்லை எனச் சொல்லலாம்.

நம் உடல்..... -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் எத்தனைப் பொறியியல் வல்லுனர்கள் உண்டோ, அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி உருவாக்கின மாதிரி அப்படியொரு டிசைன்.

நமக்கு தேவையான உயிராற்றல்....ஆகாயப்பிராணனாய்... அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே இருக்கிறது. அது நம்முள் இறங்கி-நாம் எண்ணவும்-எண்ணியதை பேசவும்-பேசியதை செய்யவும்-பேசியதால்,செய்ததால் உண்டான விளைவுகளை எதிர்கொள்ளவுமான ஆற்றலை ஒவ்வொரு கணமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. எது ஒன்று வெளியிலிருந்து வந்தாலும் அதற்கு முறையான பாதை தேவைதானே?.....பாதையில்லா பயணம் துன்பத்தில் முடியும்தானே? இன்றைய நாட்களில் கூட நம் அன்றாட வாழ்வில்- உயிருக்கு துடிப்போரை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும்,அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கும் அவை தொய்வின்றி பயணிக்க எவ்வளவு நெரிசலான பாதையாக இருந்தாலும்......வழி ஏற்படுத்தி தரும் மனப்பாங்கை பெற்றிருக்கிறோம்.

உடலுக்குள்ளும் எந்த விதத்திலும் டிராபிக் நெரிசல் ஏற்பட்டுவிடாத வண்ணம்..இயற்கை செய்து வைத்திருக்கும் அமைப்புகள் அனேகம். அது ஒரு அதிசயம் என்றால், அதை கண்டுணர்ந்து சொன்ன யோகிகளின் ஞானம் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.ஆம் நம் உடலுக்குள்ளான நெடுஞ்சாலையை கண்டு சொன்னதோடு மட்டுமல்லாமல், அதை விரிவுபடுத்தி,நெறிபடுத்தி,பன்னெடும் நாட்கள் அக்கறையாய் தவமிருந்து, அவற்றின் செயல்பாடுகளை உற்று நோக்கி, பிரமானங்களாய் நமக்கு உருவாக்கி தந்திருக்கிறார்கள்.







முதலில் சாலை எங்கிருந்து எதுவரை..?

உச்சந்தலையில் இருந்து - தொடையிரண்டும் சந்திக்கும் புள்ளிவரை.
கபாலத்தில் துவங்கி- முதுகு தண்டுவடத்தின் வழியாய் போட்ப்பட்டிருக்கிறது இந்த சாலை.
உயிரும் உடலும் இயங்கத் தேவையான அத்தனை சக்தியும் இதன் வழியேதான் உடலின் மற்ற பாகங்களுக்கு 
கிளை சாலைகளான நாடி,நரம்பு,நாளம் வழியே பிரித்தனுப்படுகிறது.நாம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு வசதியான எல்லாமே நமக்கு இருக்குமாறு இயற்கை நம்மை வைத்திருக்கிறது. வெட்டாத நகம் நீண்டு வளர்ந்துகொண்டே இருக்கும். வெட்டாத முடியும் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் நம் புருவங்களுக்கு மீதான முடிக்கற்றை, ஒரு நிலைக்கு மேல் ஐ.ஆர்.8 உரம் பட்டாலும் வளராது. காரணம் அதுதான் நமக்கான இசைவாய் இயற்கை தந்தது. ஒருவேளை தலைமுடி போல் புருவ முடியும் வளர துவங்கினால், நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது கடினம்தான். ஒரு வணக்கம் சொல்லக்கூட ரொம்ப சிரமப்பட வேண்டும். நகம் வளர்கிற மாதிரி நம் பற்கள் வளர்ந்தால் என்ன ஆகும்..?
காலையில் பல் தேய்ப்பதன் கூடவே- ஒரு ராவு பட்டையை வைத்து தினமும் அது வளராமல் தேய்க்க வேண்டியிருக்கும்.
உண்மையில் இந்த மாதிரியான சோதனைகளை நாம் பெறவில்லை. அதுதான் மூலப்பிரகிருதி நம்மேல் வைத்திருக்கும் கருணை.

சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம் ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி. மனம் இயங்க மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி காற்றானது உச்சந்தலையிலிருந்து ,அடிவயிற்றின் மூலாதாரம் வரை தொடவேண்டும். அப்படி தொட்டு பயணிக்கவே இப்படி ஒரு நெடுஞ்சாலை

பயணப்பாதை விவரம்.
1.சகஸ்ராரம்
2.ஆக்ஞா
3.விசுக்தி
4.அனாகதம்
5.மணிபூரகம்
6.சுவாதிஷ்டானம்
7.மூலாதாரம்.

யோகவியல் வல்லுனர்கள் இதை ஆதார சக்கரம் என்கிறார்கள். சக்தி மையங்கள் என்கிறார்கள். இந்த ஒவ்வொரு புள்ளியும் ஒவொரு வகையான நாளமில்லா சுரப்பிகளை ஆதாரமாகக்கொண்டு இயங்கிவருகின்றன.



இம்மாதிரியான விஷயங்களை நான் கேள்விப்பட்டபோது உங்களைவிட மிகவும் சந்தேகப்பட்டேன்.தேடலும் அனுபவமும் குருவருளும், திருவருளும்தான் விடைகள் சொல்லித்தந்தன.


முதலில் இந்த மையங்களை உணர்ந்த நம் முன்னோர்கள் இதனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதியது உண்மையா..? ஆம்..உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் அதை நாம் தொடர்ந்து நடைமுறைப்படுத்த எல்லா ஏற்பாடையும் செய்திருக்கிறார்கள் என்றால் மிகை இல்லை.




எத்தனையோ திருமணங்களுக்கு நாம் சென்றுள்ளோம், நம் இல்லங்களிலியே நடத்தியும் இருகிறோம், இப்போது நாம் காட்டும் பார்வை உங்களுக்கு வியப்பாககூட இருக்கும். மணப்பெண் அலங்காரத்தில் நகை அணிவித்தல் என்பது இன்றியமையாத ஒன்று. அந்த மணப்பெண்ணின் நகை அணிகளை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இந்தக் கட்டுரையின் தேவை நிறைவேறிவிடும்.

1.உச்சந்தலையில் அணிவது "பில்லை"- சகஸ்ராரத்திற்கான அணிகலன்.
2.அங்கிருந்து அதை இணைத்து- நெற்றியில் தொங்கவிடும் "நெற்றி சுட்டி"ஆக்ஞாவிற்கான அணிகலன்.
3.கழுத்தில் நெக்லெஸ் என ஒன்று அணியப்படுகிறதே, அது விசுக்திக்கான அணி.
4.சங்கிலியோடு- ஒரு பதக்கத்தை இணைத்து (chain+dollar) மார்புவரை அணிகிறோமே அது "அனாகதத்திற்கான அணீ.
5.மார்புக்கும் இடுப்புக்கும் இடையில் - அழுத்தி பிடித்தமாதிரி அணியப்படும் "ஒட்டியாணம்"-மணிபூரகத்துக்கான அணி.
6.இடையில் தளர்வாய் தொங்கவிட்டமாதிரி அணியும் "மேகலை"- சுவாதிஸ்டானத்திற்கான அணி.
7.முலாதாரத்திற்கான அணியைப் பிள்ளை பருவத்திலேயே போட்டு பார்த்துவிடுகிறோம்.


மனமும் எண்ணமும்- புத்தியும்,சித்தியும்-விழிப்போடு தொட்டு செல்லவேண்டிய இந்த புள்ளிகளில்தான் இப்படி தங்கத்தை பூட்டி பார்க்கும் பழக்க்ம்.இப்போது அதன் முக்கியம் புரிந்திருக்கும் அல்லவா..?

அந்த ஏழு புள்ளிகளில் அப்படி என்ன நடக்கிறது..?


யோகவியலாளர்கள் எண்ணற்ற விளக்கங்களைத் தருகிறார்கள். ஆனால் யதார்த்தமாக எனக்குத் தோன்றுவதை கூறுகிறேன்.

சகஸ்ராரம் -எண்ணங்களற்ற இறைப்பெரு நிலை- சுகமாக சும்மா இருக்கும் இடம்.
ஆக்ஞா -நான் எனும் சுயம் வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளும் இடம்
விசுக்தி- நான் எனது அடையாளத்தை எண்ணிய எண்ணத்தின் மூலம்- பேச்சாய்-மொழியாய் வெளிப்படுத்தும் மையம்.
அனாகதம்-நான் பேசியதை அன்னிய காதுகள் கேட்டன - அவர்கள் என் பேச்சிற்கு உடன்பட்டோ,முரண்பர்ட்டோ காட்டும் பிரதிபலிப்பை உணரும் மையம்.
மணிபூரகம்-வெளி உலகில் பிரதிபலிப்பைக் கிடைத்த பிரசாதமாய் ஏற்று செரிக்கும் சுய ஏற்பு ஜீரணமையம்.
சுவாதிஷ்டானம்-செரிமானத்திற்குப் பின் சக்கைகளை, சத்துகளை தனிதனியே பிரிக்கும் மையம்
மூலாதாரம்- ஒரு அனுபவத்திலிருந்து சக்தி பெற்று- அடுத்த செயலுக்கு ஊக்கம் பெறும் மையம்.

இவ்வுல வாழ்க்கையில் -பொருளையும் கருத்தையும் நாம் இப்படித்தான் உள்வாங்குகிறோம்.உணர்கிறோம்,செரிக்கிறோம், தன்வயமாக்குகிறோம்.,சக்தி பெறுகிறோம்.இறைக்கு அர்ப்பணிக்கிறோம்

இந்த பின்வரும் சொற்களை கொஞ்சம் கவனித்து பாருங்கள்- 
"நான் நானாவே இல்ல" "நெனச்சிகூட பார்க்க முடியல"
"என்னால விழுங்க முடியல..""(i can't gulf it) ,"என்னால ஏத்துக்க முடியல" "என்னால செரிக்க முடியல" 

நான் நானா இல்லன்னா -பைத்தியம்
நெனச்சிக்கூட பார்க்க முடியாத நிலை -குழப்பம்
விழுங்க முடியலன்னா- வாந்தி.
ஏத்துக்க முடியலன்னா- மாரடைப்பு.


செரிக்க முடியலன்னா -டைரியா - இதெல்லாம் வெளியே இருந்து வரும் நம் உடலுக்குள் வரும் பொருளுக்கானது மட்டுமல்ல - கருத்துக்களுக்கும் ஆனது.

பயணம் சுகமானால்-எந்த மையத்திலும் குழப்பமில்லை என்று அர்த்தம்.

என்ன நண்பர்களே! உள்முகப் பயணத்தைத் துவக்கி விட்டீர்களா?

1 comment:

Chithra said...

பயணத்தின் பயணம் நன்றாக இருந்தது பயணத்தை எடுத்துரைத்த குருவின் பயணம் தொடர இறைவனை பிராத்திக்கிறேன் 

Post a Comment