Total Pageviews

Wednesday, June 27, 2012

ஐ போன்- சொன்ன வேதம்








வணக்கம் நண்பர்களே! நான் தான் செல்போன் பேசுகிறேன்!

என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா?......உலகமே என் மூலமாக பேசும்போது நான் மட்டும் பேசக்கூடாதா என்ன?????


என்னுடைய பரிமாணத்தில் நான் இப்போது "ஐ போன்"


என் புத்தம்புதிய, அதிநவீன Android operating system என்ன! மினுமினுக்கும் user interface என்ன!... டச் ஸ்க்ரீன் என்ன!... 5G connectivity என்ன! ... உலகிலுள்ள எல்லப்பாடல்களையும் பதிவு செய்து வைத்துக்கொள்ளக் கூடிய அளவிற்கு ஜிகா பைட்ஸ் மெமரி மற்றும் MP4 player..கணக்கற்ற மெகா பிக்சல் கேமெரா என்ன?...கேம்ஸ் என்ன?... என்று என் பெருமைகளைக் கூறிக்கொண்டே போகலாம்......

எனக்குப் பெருமை தாங்கவில்லை....பின் இருக்காதா?.. இப்போது நான் ஒருவரோடு பேசப்பயன்படும் கருவி மட்டுமா என்ன?...."நான்" இல்லாவிட்டால் உலகமே ஸ்தம்பித்து விடும்.....பேச்சுக்காக மட்டுமே டெலிபோன் என்ற காலம் மலையேறிப்போச்சு.....

சரி விசயத்துக்கு வருவோம்....

என்னை முதன்முதலில் வாங்கியவர் ஒரு சில மாதங்களுக்கு எல்லோரிடமும் என்னுடைய சிறப்பம்சங்களைக் கூறித் தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தார்......மனிதர்களாகிய உங்களில் சிலர்...புதுசா கல்யாணம் ஆனவுடன்...புதுசா வேலை கிடைத்தவுடன்...அல்லது வியாபாரத்தில் லாபம் கிடைத்துக் கொஞ்சம் அதிகமான பணம் கையில் கிடைத்தவுடன்..."தலை-கால்" தெரியாமல் ஆடுவீர்களே!! அதுபோல்தான் "நானும்" ........எனக்கு ஒரே குஷி!!!!!!


என்னை வைத்திருந்தவருக்குக் கொஞ்ச காலம் என்னைப் பிடித்திருந்தது.......என்னுடைய பயன்பாடு முடிந்து விட்டதாகவும், வேறொரு "ஐ போன்" வாங்கப் போவதாகவும் அவருடைய நண்பரிடம் கூறிக்கொண்டிருந்தார்.... எனக்குத் தூக்கி வாரி போட்டது....ச்சே...இந்த மனிதர்களே இப்படித்தானா? பயன்பாடு முடிந்தவுடன் தூக்கிப் போட்டு விடுவார்களோ??? என்னுடைய பயன்பாடு முடிந்து விட்டதா????? அப்ப நான் இறந்து விடுவேனா?????? மரண பயம் என்னைப் பிடித்து கொண்டது....ரொம்ப கஷ்டப்பட்டேன்...எனக்கு ஒரு உண்மை புரிந்தது....எவ்வளவு தான் பெருமை பேசினாலும் ஒரு நாள் எல்லோரும் இறந்து விடுவோமோ?......மரண பயத்தினால் தூங்க முடியாமல் கஷ்டப்பட்டேன்......

அந்தக் குறிப்பிட்ட நாளும் வந்தது.....என்னவர் ஒரு புது போன் வாங்கிவந்தார்....எனக்குப் பயம்....அதிகமாகியது....என் உடலை இரண்டாகப் பிரித்து "என்னை" மட்டும் தனியாக எடுத்துப் புது போனில் மாட்டிக் கொண்டார்......

என்ன ஆச்சரியம் !!!!!! நான் இறந்து விடுவேன் என நினைத்தேன் ....ஆனால் இருக்கிறேனே....என் உடலாகிய போனைப் பிரிந்த பிறகும் இதோ உயிரோடு இருக்கிறேனே!!!!!!இந்த போன் "நானில்லையா"???? அப்ப இந்த சிம் கார்டு தான் "நானா"!!!!!!!!  

இத்தனைக்காலமும் இந்த உடலாகிய போன் தான் "நான்" என தவறாக நினைத்திருக்கிறேன்.....இப்போது மரண பயம் விலகியது.....கொஞ்சம் கொஞ்சமாக "ஞானம்" வரத் தொடங்கியது.......சந்தோசத்தில் உறங்கிப் போனேன்.....



காலையில் எழுந்து பார்த்தால் ....


எனக்கு மூச்சுமுட்டுகிறது...என்னால் சரியாகப்பேசமுடியவில்லை...ரொம்ப.....பயமாப்போயிட்டுது...


என்னவென்று விசாரித்துப்பார்த்ததில்......தமிழ்நாட்டில் கரண்ட் கட்டாம்..என்னோட பேட்டரில சார்ச் இல்லையாம்.......



இப்போதான் எனக்கு ஒரு உண்மை புரிஞ்சுது...

"பிராணசக்தி"யாகிய பேட்டரி இல்லைனா..."மனமாகிய சிம் கார்டு "வேஷ்ட்......."மனமாகிய" சிம்கார்டும் , பேட்டரியாகிய பிராணனும் இணைந்து செயல்பட்டால் தான் போனாகிய "இந்த உடல்" வேலை செய்ய முடியும் என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன்.....மின்சாரமாகிய .....பிராணசக்தியை இனி வேஸ்ட் பண்ணக்கூடாது என்ற உண்மை எனக்குப் புரிஞ்சுடுது!!!!!பிராண சக்திக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தேன்.........


நல்லாத்தான் வாழ்க்கை போயிட்டுருந்தது.....திடீரென ஒருநாள் என்னால செயல்பட முடியல .....பேட்டரில பிராண சக்தி இல்லையோன்னு நினைச்சேன்.....ஆனால் பேட்டரில "பிராண சக்தி" நல்லாவே இருந்துச்சு...பிறகு ஏன் என்னால் செயல்பட முடியவில்லை?????

விசாரித்துப்பார்த்ததில்.......சிக்னல் கிடைக்கலையாம்....."சிக்னல்" என்றால் என்னன்னு எனக்குள்ளேயே விசாரம் செய்ததில் "ஆத்மனாகிய சிக்னலே" "உண்மையான நான்" என உணர்ந்து கொண்டேன். உடலாகிய போன் இருந்தாலும்,இல்லாட்டியும்......மனமாகிய சிம்கார்ட் இருந்தாலும் இல்லாட்டியும்......மின்சாரமாகிய பிராண சக்தி இருந்தாலும் இல்லாட்டியும்........ஆத்மனாகிய சிக்னல் நித்தியமாக இதோ இருக்கிறேன். 

உடலாகிய போன் நானல்ல
மனமாகிய சிம்கார்டு நானல்ல
பேட்டரியாகிய பிராணனும் நானல்ல
ஆத்மனாகிய சிக்னலே நான்

பூரண ஞானம் என்னுள் ஒளிரத் தொடங்கியது......

என்ன மக்களே!! என்ன சொல்ல வாறேன்னு புரியுதா? 

நீங்களும் ,

இந்த உடல் நானல்ல ,
இந்த மனம் நானல்ல,
பிராணனும் நானல்ல,
பூரணமான,நித்ய,சுத்த,முக்த,உணர்வாகிய ஆத்மனே "நான்" என எப்போது உணரப் போகிறீர்கள்?

அறிவே இல்லாத" நானே" இந்த உண்மையை உணரும்போது ஆறறிவு பெற்ற நீங்கள் உங்களுக்குள் உண்மையாக உள்ள பொருளை உணர்வால் உணர வேண்டாமா?

தவளை வேதம் சொன்னால் அதனை `மாண்ட்டூக்ய உபநிஷதமாக எடுத்துக்கொள்வீர்கள்!!!!... பாம்பு யோகத்திற்கு சூத்திரம் சொன்னால் அதை பதஞ்சலி யோகசூத்திரமாக எடுத்துகொள்வீர்கள்...நான் வேதம் சொன்னால் எடுத்துக்கொள்ள மாட்டீர்களா?????
.













Friday, May 25, 2012

அன்பின் அருமை.....





அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! 

முன்னொரு காலத்தில் ஒரு தீவில் எல்லா மனித உணர்ச்சிகளும் வாழ்ந்து வந்தன. --மகிழ்ச்சி,வருத்தம்,அறிவு,அன்பு போன்ற அனைத்து உணர்ச்சிகளும். ஒரு நாள் அவைகளுக்குத் தெரிய வந்தது அந்தத் தீவு கடலில் மூழ்கப் போகிறதென்று. உடனே எல்லாம் படகு கட்டித் தீவை விட்டுப் புறப்பட்டன-அன்பைத்தவிர. 

கடைசி நொடி வரை அன்பு அங்கேயே இருக்கத் தீர்மானித்தது. அந்தத் தீவு கிட்டத்தட்ட மூழ்கி விட்ட நிலையில்,அன்பும் வெளியேறத் தீர்மானித்தது. அப்போது பணம் ஒரு அழகிய படகில் சென்று கொண்டிருந்தது. அன்பு அதனிடம் உதவி கேட்டது. “என் படகில் தங்கம்,வெள்ளி,வைரம் எல்லாம் இருக்கிறது.உனக்கு இடமில்லை” என்று சொல்லிச் சென்று விட்டது. அந்தப்பக்கம் சென்று கொண்டிருந்த வீண் பெருமையை உதவி கேட்டது அன்பு.

அது சொன்னது”நீ முழுவதும் நனைந்து போயிருக்கிறாய்.என் படகை நாசப்படுத்தி விடுவாய்” வருத்தத்தைக் கேட்க அது சொன்னது”எனக்கு அமைதி வேண்டும் .நான் தனியாக இருக்க விரும்புகிறேன்” மகிழ்ச்சி அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது,அன்பு கேட்டதே அதன் காதில் விழவில்லை. அப்போது ஒரு குரல் கேட்டது “வந்து என் படகில் ஏறிக்கொள்” ஒரு வயதானவரும் உடன் வேறு சில வயதானவர்களும் படகில் இருந்தனர். அன்பு படகில் ஏறிக்கொண்டது. படகு நல்ல தரையில் நின்றது. அன்பை அழைத்த அந்த உணர்வு நிற்காமல் போய்விட்டது. அன்பு அருகில் இருந்த அறிவு என்னும்முதியவரைக் கேட்டது “அது யார்?” “காலம்” பதில் வந்தது. “காலம் ஏன் எனக்கு உதவி செய்தது?” 

அறிவு ஒரு அறிவார்ந்த பார்வையுடன் சொன்னது ”ஏனென்றால், காலத்துக்குத்தான் தெரியும்,அன்பு எவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்று”

Wednesday, May 23, 2012

பயமே மரணம்....



மரணத்தைக் குறித்து
எந்த பயமும் எனக்கில்லை!
பூவின் மீது எழுந்த
பனித்துளியாய்
பொழுதுகளை கரைத்து விடுவேன்!


நிலவின் சின்ன
ஊழிக்காற்றில்
இரவுகளைக் கடந்து விடுவேன்!


சூரியனின்
உக்கிரமான சினேகத்துடன்
மதிய வேளைகளை
மயக்கி விடுவேன்!


எப்படியேனும்
இந்த வாழ்வை முழுதாய்
வாழ்ந்து விடுவேன்!


இப்பொழுதும் சொல்கிறேன்-எனக்கு
மரணம் குறித்து
துளியும் பயமில்லை
அந்த பனித்துளியைப் போல!


மரணம் எதுவெனில்


எனக்குத்தெரியும்
பயம் தான் மரணமென்று!!

Tuesday, May 22, 2012

முதுமக்கள் தாழி...

தாழி..!

தமிழன் தெரிந்துகொள்ளவேண்டிய தன் இனத்தின் பெருமை..!

அதை உலகிற்கே உரக்க சொல்லவேண்டியது ஒவ்வோர் தமிழனின் கடமை..

தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.

தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஆதிச்ச நல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[?]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது.

தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.

1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.

இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.

1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.

இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.

1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.

அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். "எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை.

இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.
இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு.

நன்றி: தமிழ்ச்சாரல்

Saturday, May 19, 2012

இறைதேடி.....





உயிரின் மூலாதாரங்களை
அகழ்ந்தாய்ந்திருந்தபோது தென்பட்டன
கடவுளின் காலடித் தடயங்கள்.
அடியொற்றியே தொடர்ந்தேன்.

 


கால வெளி எல்லைகள் தூர்ந்து
ஆதியும் அந்தமுமான பிராந்திய
வெளியெங்கும் விரவிக்கிடந்தேன் "நான்"
என்னெங்கிலும் பரவிக்கிடந்தது "வெளி"
விழித்தெழுந்த உடலணுக்கள் யாவிலும்
வெடித்துக் கிளம்பியது பேரானந்தக் கிளர்ச்சி
கருமக் கயிறுகள் அறுந்து
ஞான ஒளியூட்டம் நிகழ்ந்தது
சூன்ய பெருஞ்சூட்சமங்கள் தெரிந்தும், தெளிந்தும்
கண்ணெட்டியவரையில் காணக்கிடைக்கவில்லை
கடவுள் மட்டும்.

வந்த வழி வியந்தேன்.

இரண்டு சுவடுகளன்றி
இன்னொன்று ஏதுமில்லை.
இருந்த சுவடுகள் மீது
நின்றுகொண்டிருக்கின்றேன்
"நான்".
 

Wednesday, May 16, 2012

மீண்டும் ஒரு தேடல் 15


ரகசிய தீட்சை - இரண்டாம் பிறப்பு




ப்ரண்டனின் தேடல் 15



ரகசிய தீட்சை - இரண்டாம் பிறப்பு




ஓசிரிஸ் கோயில்கள் எப்போதும் இரண்டு பகுதிகளாக இருந்தன. முதல் பகுதி பொது ஜனங்கள் வந்து வணங்கிச் செல்வதற்காக இருந்தது. இரண்டாம் பகுதி ரகசிய தீட்சை தரும் இடமாகவும், அதைத் தரத்தக்க குருமார்களின் பயிற்சி, தியானம் மற்றும் பிரார்த்தனை இடமாகவும் இருந்தது. இந்த இரண்டாம் பகுதிக்கு சாதாரண பொது ஜனங்களுக்கு அனுமதி இருக்கவில்லை.


ரகசிய தீட்சை பெற சுயகட்டுப்பாடு அதி முக்கியமானதாகக் கருதப்பட்டது. அங்கு ரகசிய தீட்சை பெற்று ஆன்மிகப் பேருண்மைகளை அறிய விரும்புபவர்கள் உடனே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர்களைக் கடுமையாகச் சோதித்துப் பார்த்த பின்னரே ரகசிய தீட்சை பெற அவர்கள் அனுமதிக்கப்பட்டனர், அல்லது திருப்பி அனுப்பப்பட்டனர். அப்படி ரகசிய தீட்சை தருவது கூட எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவரவர் தன்மைக்கும், பக்குவத்திற்கும் ஏற்ப தருவதற்கு பல தரப்பட்ட தீட்சைகள் இருந்தன.


பால் ப்ரண்டன் அபிடோஸ் ஓசிரிஸ் கோயிலில் ரகசிய தீட்சை தரும் இரண்டாம் பகுதியின் சிதிலமடைந்த பகுதியில் உள்ள சிற்பங்களையும், சித்திரங்களையும் ஆராய்வதற்கு முன்பு அங்கு தியானத்தில் அமர்ந்து அங்கிருந்த ஆன்மிக அலைகளில் இருந்து அந்த ரகசிய தீட்சைகளின் சூட்சுமத்தை அறிய முற்பட்டார்.


(எதையும் அறிய முற்படும் போது பல நேரங்களில் உள்ளதை உள்ளபடி எடுத்துக் கொள்ளாமல் நம் மனநிலைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் தக்கபடி எடுத்துக் கொண்டு அதுவே உண்மை என்று கருதும் வழக்கம் நமக்கு உண்டு. அதனால் திறந்த மனத்துடன் நம் சொந்த அபிப்பிராயங்களை ஒதுக்கி விட்டு உண்மையான தகவலையும், ஞானத்தையும் நம்மால் பெற முடியாமல் போகிறது. அதுவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள ஒரு பழமையான நாகரிகத்தின் தகவலை கலப்படமில்லாத தூய்மையுடன் அறிய வேண்டுமானால் அது மிகவும் கஷ்டமான விஷயமே. எனவே தான் உண்மையான ஞானத்தைப் பெற விரும்பிய பால் ப்ரண்டன் அந்தக் கோயிலில் இரண்டாம் பகுதியில் இருந்த சித்திரங்களையும், சிற்பங்களையும் பார்த்து தனக்குத் தோன்றிய விதத்தில் எடுத்துக் கொண்டு விடக்கூடாது, அதன் உண்மையான தன்மையிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலேயே அப்படி தியானம் செய்து அந்த பழங்கால மகாத்மாக்கள் தந்த ஞானத்தின் தன்மையை அறிய முற்பட்டார்).


சுமார் இரண்டு மணி நேரங்கள் அங்கு அமர்ந்து தியானித்த அவர் அந்தக் காலத்திற்கே சென்று விட்டார் என்றே சொல்ல வேண்டும். அது மிக அருமையான அனுபவமாக இருந்தது என்று பின்னர் கூறுகிறார். ஓசிரிஸின் துண்டான உடல்கூறுகளும் அவை ஒன்று சேர்ந்து உயிர் பெற்றமையும் காட்சிகளாகத் திரும்பத் திரும்ப அவருடைய தியானத்தின் போது மனத்திரையில் வந்து நின்றன. ரகசிய தீட்சையில் அந்தக் காட்சி மிக முக்கியமான இடம் வகிப்பதாக அவர் நினைத்தார். அது ஏதோ உணர்த்த வருகிறது என்று அவர் உணர்ந்தார். 


பிரமிடுக்குள் ஒரு நள்ளிரவைக் கழித்த போது அவருடைய ஆன்மா உடலை விட்டு ஒரு பயணம் மேற்கொண்டது நினைவுக்கு வந்தது. தன் உணர்ச்சியற்ற உடலைக் கண்களின் துணையின்றித் தெளிவாகப் பார்த்ததும் பின்னர் தன் உடலுக்குள் திரும்ப வந்ததும் ஒரு விதத்தில் மரணமும், பின் ஜனனமும் போலவே அல்லவா என்று நினைத்தார். தியானம் முடிந்தபின் உள்ளே ரகசிய தீட்சை நடந்த பகுதிகளில் கண்ட சித்திரங்களும் சிற்பங்களும் அவர் தியானத்தில் உணர்ந்த உண்மைகளுக்கு வலுவூட்டுவதாகவே இருந்தன.


கோயில்களில் முதல் பகுதியில் கூட பூஜை நேரங்களில் கூட சத்தம் ஆரவாரம் எதுவுமில்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது என்று முன்பே சொல்லியிருந்தோம். உள்ளே இருந்த இரண்டாம் பகுதியில் வெளிப்புற அமைதி மட்டுமல்லாமல் மன அமைதியும் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. அபிடோஸில் இருந்த ஓசிரிஸின் அந்தப் பிரதான கோயிலில் உட்பக்கம் இருந்த இரண்டாம் பகுதியில் ரகசிய தீட்சை நடக்கும் இடத்தில் இருந்த சித்திரங்களிலும், சிற்பங்களிலும் இருந்த மனிதர்களின் முகத்தில் பேரமைதியைக் கண்டார் பால் ப்ரண்டன்.


அங்கு ஓசிரிஸின் மரணமும், உயிர்த்தெழுதலும் தத்ரூபமாக வரையப்பட்டும், செதுக்கப்பட்டும் இருந்தன. ஓசிரிஸின் உடற்கூறுகள் சிதறிக் கிடந்த காட்சிகளில் கூட அங்கு மரணத்தின் போது இருக்கும் ஒரு துக்ககரமான சூழ்நிலை தெரியவில்லை. மாறாக வாழ்க்கையைக் கற்றுக் கொள்கிற, வாழ்கிற ஒரு சூழ்நிலையே அங்கிருந்த குருமார்களின் முகத்திலும், ரகசிய தீட்சை பெற வந்தவர்கள் முகத்திலும் தெரிந்தது. ரகசிய தீட்சையின் சடங்குகள் கிட்டத்தட்ட ஓசிரிஸின் மரணம், உயிர்த்தெழுதல் போலவே தெரிந்தன. அங்கு ரகசிய தீட்சைக்கு வந்த அவர்கள் ஒரு விதத்தில் மரணித்து பின் புதிய பிறப்பு எடுப்பது போலவே சித்தரிக்கப்பட்டிருந்தது.


ரகசிய தீட்சை பெறத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவன் அஸ்தமன காலத்திற்குப் பின்னரே கோயிலுக்குள் இருக்கும் இரண்டாம் பகுதிக்கு அனுமதிக்கப் படுகிறான். மந்திர தந்திரங்களிலும், ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம் போன்ற கலைகளிலும் மிக மிகத் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்த அந்தக் கால எகிப்திய குருமார்கள் தங்கள் சக்தியால் அவனை மிக ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்துகிறார்கள். கிட்டத்தட்ட மரணிப்பது போலவே அந்தக் காட்சி சித்தரிக்கப்படுகிறது. உணர்ச்சியற்ற நிலையில் ‘எகிப்திய மம்மி’ போலவே கிடக்கும் அவனை ஒரு சவப்பெட்டியில் வைத்து இறுக்கமாக மூடி வைக்கிறார்கள். அவனுக்கு அந்த ஆழ்ந்த மரண நிலை மயக்கத்திலேயே குருமார்கள் பல வித அனுபங்களை ஏற்படுத்தி உண்மை ஞான நிலையை உணர வைக்கிறார்கள். அவனுடைய ஆன்மா வேறொரு மேலான உலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலான உண்மைகளை உணர்த்தப்படுவது போல காண்பிக்கப்படுகிறது.


அந்தக் காட்சிகளின் விளக்கச் சித்திரங்களில் அந்த ஆன்மாவின் பயணங்கள் மிக சக்தியும், நுண்ணிய உணரும் தன்மையும் வாய்ந்த குருமார்களுக்கெ முழுமையாகக் காண முடிவது போல் சித்தரிக்கப்படுகின்றது. அந்தக் குறிப்பிட்ட மாணவனின் தன்மைக்கும் தரத்துக்கும் ஏற்ற நிலைப்படி தான் அவனுக்கு அறிவிக்கப்படுகின்றது. அந்த தீட்சையின் கால அளவும் அதற்கு ஏற்றபடி கூடவோ, குறையவோ செய்கின்றது. அந்த உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியின் அருகிலேயே குருமார்கள் நிற்கின்றனர். அந்த நேரத்தில் இரவுப் பிரார்த்தனைகளும் மிகுந்த பக்தியுடன் செய்யப்படுகின்றன.


அந்த தீட்சைக்கு உட்படுத்தப்படும் மாணவனின் ஆன்மா ஓசிரிஸின் ஆன்மசக்தியுடன் இணைந்து அறிய வேண்டியவற்றை அறிந்து திரும்புவது போல ஐதிகம். ஓசிரிஸ் மரணித்தது போல அவனும் மரணிக்கிறான். ஆனாலும் உடல் உணர்ச்சியற்று இருப்பினும் ஆன்மாவின் நுண்ணிய பிணைப்பில் இன்னும் உடல் இருக்கின்றது. ஆன்மாவிற்கு உடல் ஒரு ஆடையைப் போன்றதே, மரணம் என்பது என்றும் ஆன்மாவிற்கு இல்லை, என்பதை தன் நிஜ அனுபவம் மூலமே அவன் சந்தேகத்திற்கிடமில்லாமல் அறிகிறான். இன்னும் பல்வேறு அனுபவங்களை அடைகிறான், தன் ஆன்மிக முன்னேற்றத்திற்கு வேண்டிய உண்மைகளை அறிகிறான். உடலோடு ஆன்மா இணைந்திருக்கும் போது அவன் உணர முடியாத எத்தனையோ ரகசியங்களை அந்த தீட்சையின் போது அவன் உணர்கிறான். தன் இயல்பான எத்தனையோ நன்மைகளையும், சக்தியையும் மறுபடி உணர்கிறான். ஓசிரிஸ் போல பலமடங்கு சக்தியுடன் அவன் மீண்டும் உயிர் பெறுகிறான். 


சடங்குகள் முடிந்து மதகுருமார்களின் அற்புத சக்திகளால் அவன் உணர்வுநிலை திரும்பவும் உடலுக்கு தருவிக்கப்படுகிறது. அந்த சவப்பெட்டியைத் திறந்து அதிகாலையின் சூரிய கிரணங்கள் அவன் மீது விழும் படி வைக்கிறார்கள். அவன் புதிய மனிதனாய் புத்துணர்வுடன் திரும்புகிறான். இந்த ரகசிய தீட்சை பெற்றவர்களை ‘இருமுறை பிறந்தவர்கள்’ அல்லது ‘வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டவர்கள்’ என்று எகிப்தியர்கள் அழைத்தார்கள்.


மதகுருமார்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவனை ஹிப்னாடிசத்திற்கு உள்ளாக்குவதற்கும், அவனை அந்த நிலையில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கும் மந்திரக்கோல் போன்ற ஒரு தடியை உபயோகப்படுத்துகிறார்கள். மதகுருமார்களின் ஹிப்னாடிச சக்திகள் இன்றைய ஹிப்னாடிச சக்திகள் போலவே வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும் அவர்கள் சக்திக்கும், இன்றைய ஹிப்னாடிச சக்திக்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது. இன்றைய ஹிப்னாடிச சக்தியில் அந்த நிலைக்குக் கொண்டு போகப்பட்டவன் விழிக்கும் போது அந்த நிலையில் நடந்த, உணர்ந்த எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. ஆனால் அந்த மதகுருமார்கள் ஏற்படுத்தும் ஹிப்னாடிச சக்தியில் அந்த உணர்வற்ற நிலையில் பெற்ற அனைத்து அனுபவங்களும் அவன் உணர்வுநிலைக்குத் திரும்பும் போது நினைவில் தெளிவாக இருக்கின்றன. அவன் இனி வாழப்போகும் நிலைக்கு வழிகாட்டும் உன்னத அனுபவப்பாடங்களாக அமைகின்றன.


ஆரம்பத்தில் எகிப்தியர்களுக்கு மட்டுமே இந்த தீட்சை தரப்பட்டது. பின்னர் காலப் போக்கில் தகுதி வாய்ந்த வெளிநாட்டினருக்கும் அந்த தீட்சைத் தரப்பட ஆரம்பிக்கப்பட்டது. அப்படி தரப்பட்டவர்களில் உலகப்புகழ்பெற்ற அறிஞர்கள் சிலர் அடங்குவர். அவர்கள் யார் என்பதையும், அவர்கள் அனுபவங்களையும் பார்ப்போமா?


(தேடல் தொடரும்)


















-கணேசன்