Total Pageviews

Wednesday, April 4, 2012

மனமது செம்மையானால்........













மிஸ்டர் பரந்தாமன், உங்களுக்குத் தலைச் சுற்றல் வருதுன்னு சொன்னீங்க கவலையே படாதீங்க, நான் பாத்துக்கறேன், காரணத்தைக் கண்டு பிடிச்சிடறேன். என்னோட 20 வருஷ அனுபவத்திலே எவ்ளோ பேரைக் குணப்படுத்தி இருக்கேன். சரி இப்போ நான் கேக்கற கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க. காரணத்தைக் கண்டு பிடிச்சிடலாம். தலைச்சுத்தல் ஓடிப்போயிடும். பொதுவா காதிலே எல்லாருக்கும் ஒரு திரவம் இருக்கு, அது குறைந்தாலோ, பாதிக்கப்பட்டாலோ தலைச்சுற்றல் வரும். அதுனாலேதான் சின்ன வயசிலே தட்டாமாலை சுற்றிட்டு நின்னா தலை சுத்தும்.


நான் அதைச் செக் பண்ணிட்டேன் இந்தாங்க இதைப் பாருங்க, அது மாதிரி எனக்கு எதுவுமில்லே.


சரி, உங்களுக்கு ரத்த அழுத்தமும் இல்லே. சரி, பித்தம் அதிகமானா தலைச்சுற்றல் வரும், பித்தம் அதிகரிக்கும் ஏதாவது உணவுப் பொருள் அதிகமா சாப்டீங்களா?


இல்லே சார், நான் காலையிலே எழுந்தவுடனே ஓட்ஸ் கஞ்சி சாப்புடுவேன், மதியம் கீரை, காய்கறிகள் அதிகமா சாப்டுட்டு, அரிசி சாதம் கொஞ்சமா சாப்பிடுவேன். அப்புறம் இரவு ரெண்டு சப்பாத்தி ஒரு கப் பால் அவ்ளோதான்.
காப்பி அதிகமாக் குடிக்கறீங்களா?
காப்பியே குடிக்க மாட்டேன் 


ஆல்கஹால் சாப்புடுவீங்களா?
வழக்கமே இல்லே டாக்டர்
சிகரெட் பிடிப்பீங்களா?
யாராவது சிகரெட் பிடிச்சா, அந்த இடத்தை விட்டே போயிடுவேன்.
சரி, நான் எடுக்கச் சொன்ன எக்ஸ்ரே எடுத்தீங்களா?
எடுத்துட்டேன், இதோ பாருங்க.
கழுத்துலே இருக்கற எலும்பு தேஞ்சு போனா, அந்த எலும்புக்கு நடுவில ரத்தக் குழாய் மாட்டிண்டா மூளைக்கு ரத்தம் ஒழுங்கா போகாது. அதுனாலேயும் வரும், இந்த எக்ஸ்ரேவிலே, ஸ்கேன் ரெண்டும் பாத்துட்டேன் அப்பிடி எதுவும் இல்லே, எலும்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு. பொதுவா உடம்பிலே சர்க்கரை அதிகமானா தலைச்சுற்றல் வரும்.
இதோ பாருங்க நேத்து எடுத்த சர்க்கரைப் பரிசோதனை ரிசல்ட்.
அட! உங்களுக்குச் சர்க்கரை கட்டுக்குள்ளதான் இருக்கு. ஆமா கொழுப்பு செக் பண்ணீங்களா?
இதோ இந்த ரிசல்ட்டைப் பாருங்க
இல்லையே கொழுப்பும் சரியான அளவுதான் இருக்கு. அப்பிடீன்னா ஒரே ஒரு காரணம்தான் இருக்கும். உங்களுக்கு உடம்பிலே ஒரு வியாதியும் இல்லே.. பிறகு உங்களுக்கு எப்பிடித் தலைச்சுற்றல் வருது?
என்ன டாக்டர் என்னையே கேக்கறீங்க?. டாக்டர், காலையிலே 5 மணிக்கு எழுந்துடுவேன். பல் தேச்சிட்டு ஒரு சொம்பு நல்ல தண்ணீ குடிப்பேன், அப்பிடியே நிதானமா வாக்கிங் போயிட்டு வீட்டுக்கு வந்து கால் மணிநேரம் தியானம், அப்புறம் ஓட்ஸ் கஞ்சியைக் குடிப்பேன். இதான் என்னோட வழக்கமான நடைமுறை. வாரத்திலே ஒரு நாள் வேப்பம்பூ ரசம், ஒரு நாள் மிளகு ரசம், ஒருநாள் எலுமிச்சை ரசம், அதே மாதிரி சுக்கு மிளகுப் பொடி செஞ்சு அதைச் சுடு சாதத்திலே போட்டு நல்ல எண்ணை கொஞ்சமாக் காச்சி ஊத்திப்பிசைஞ்சு சாப்பிடுவேன். சளி ஜுரம் மாதிரி இருந்தா சுக்குக் கஷாயம், நெலவேம்புக் கஷாயம். அப்புறம் நல்லா வாஷ் பண்ண வாழை இலையிலேதான் சாப்பாடு சாப்டறேன். பூண்டுக் கொழம்பு சாப்புடுவேன். தேங்கா கூடிய வரையிலே சேக்கறதில்லே. உருளைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு இது மாதிரிக் கிழங்கு வகையெல்லாம் விட்டுப் பத்து வருஷம் ஆச்சு. எண்ணெயிலே பொறிச்ச எதையும் சாப்படறதில்லே,
திடீரென்று மருத்துவர் கீழே சாய்கிறார். அங்கே வந்த நர்ஸ் அவரைத் தாங்கிப் பிடிக்கிறார். என்ன ஆச்சு டாக்டர்?
தலை சுத்துதும்மா...........

மனமது செம்மையானால் மருத்துவமும் தேவையில்லை.....

1 comment:

Dr Shanthi said...

உண்மை ஐயா🙏

Post a Comment