சக்தியின் சிருஷ்டி தன்னில்
சகலமும் மாறிப் போகும்;
இடம்,பொருள்,ஏவல் என்னும்
இலக்கணம் பொய்யே ஆகும்!
மலைகளும் மடுக்களாகும்;
மடுக்களும் மலைகளாகும்;
நிலை எல்லாம் மாறி மாறி
நிஜங்களும் பொய்களாகும்!
தலைமுறை மாறிப் புதிய
தத்துவம் தலையைத் தூக்கி
அலைகளைப் போல தோன்றி
அடுத்ததே புதுமையாகும்!
அறிவியல் பூர்வமான
அதிசயம் யாவும்;இந்த
முறையினில் மாறி இங்கு
முளைப்பதே மாயையாகும்!
காலங்கள் தோறும் மாறும்
கருத்துக்கள்;கண்டுபிடிப்பு
ஜாலங்கள் எல்லாம் இந்த
ஜனங்களின் திறமை யன்று!
வரைமுறை இதுதான் என்று
வரலாறு சொன்ன தெல்லாம்
சரியென்று ஏற்பதற்குள்
சரித்திரம் மாறிப் போகும்;
சக்தியின் செயலை இங்கு
சரி செய்ய வழியே இல்லை;
சரி பார்க்க யாரும் இல்லை!
அழிந்தவை இன்னோர் வடிவில்
ஆவதை அறிவியல் சொல்லும்;
அறிவியல் இதுதான் என்று
அகிலத்தில் முடிவே இல்லை!
கண்டவர் விண்டிலர்!
1 comment:
நான் என்பதும் உண்மையல்ல ,மனம் என்னும் குரங்கும் உள்ளிருந்து வதைக்கும் ,நாம் நினைத்தது எதுவும் நடக்கவில்லை ,நடப்பது எதுவும் நம் கையில் இல்லை,."விழி கிடைக்குமா ,அபயக் கரம் கிடைக்குமா" என்று மட்டுமே சரணடையத் தோன்றுகிறது.
ஸத் குருவே சரணம்.
Post a Comment