Total Pageviews

Friday, September 16, 2011

ஊழிக்கூத்து!



சக்தியின் சிருஷ்டி தன்னில்
சகலமும் மாறிப் போகும்;
இடம்,பொருள்,ஏவல் என்னும் 
இலக்கணம் பொய்யே ஆகும்!

மலைகளும் மடுக்களாகும்;
மடுக்களும் மலைகளாகும்;
நிலை எல்லாம் மாறி மாறி
நிஜங்களும் பொய்களாகும்!

தலைமுறை மாறிப் புதிய 
தத்துவம் தலையைத் தூக்கி
அலைகளைப் போல தோன்றி
அடுத்ததே புதுமையாகும்!

அறிவியல் பூர்வமான 
அதிசயம் யாவும்;இந்த
முறையினில் மாறி இங்கு
முளைப்பதே மாயையாகும்!

காலங்கள் தோறும் மாறும் 
கருத்துக்கள்;கண்டுபிடிப்பு
ஜாலங்கள் எல்லாம் இந்த
ஜனங்களின் திறமை யன்று!

வரைமுறை இதுதான் என்று
வரலாறு சொன்ன தெல்லாம்
சரியென்று ஏற்பதற்குள்
சரித்திரம் மாறிப் போகும்;

சக்தியின்  செயலை இங்கு
சரி செய்ய வழியே இல்லை;

சக்தியின் சிருஷ்டிக் காலம்
சரி பார்க்க யாரும் இல்லை!

அழிந்தவை இன்னோர் வடிவில்
ஆவதை அறிவியல் சொல்லும்;
அறிவியல் இதுதான் என்று
அகிலத்தில் முடிவே இல்லை!


கண்டவர் விண்டிலர்!
விண்டவர் கண்டிலர்!





1 comment:

abarnavijay said...

நான் என்பதும் உண்மையல்ல ,மனம் என்னும் குரங்கும் உள்ளிருந்து வதைக்கும் ,நாம் நினைத்தது எதுவும் நடக்கவில்லை ,நடப்பது எதுவும் நம் கையில் இல்லை,."விழி கிடைக்குமா ,அபயக் கரம் கிடைக்குமா" என்று மட்டுமே சரணடையத் தோன்றுகிறது.
ஸத் குருவே சரணம்.

Post a Comment