....ஒரே வினாடி !!!
‘நான் நல்லா வாழ்ந்தேன்னு ஒருத்தன் சொல்றான்னா, அவனோட வயசு என்ன?’ என்று கேட்டார் அவதூதர்.
அவரது சீடர்கள் யோசித்தார்கள். ‘என்ன கேட்கறீங்க? சரியாப் புரியலையே!’
‘ஒரு நல்ல வாழ்க்கையோட ஆயுள் காலம் என்ன?’
‘நூறு வயசு?’ என்றார் ஒரு சிஷ்யர்.
‘ம்ஹூம். இல்லை!’ என்று உடனே மறுத்துவிட்டார் அவதூதர்.
‘அப்படீன்னா? 90 வயசு?’
‘அதுவும் இல்லை!’
‘80? 70? 60?’ இப்படிச் சீடர்கள் வரிசையாகப் பல விடைகளைச் சொல்ல, அவதூதர் எதையும் ஏற்கவில்லை. கடைசியாகப் பொறுமையிழந்த அவர்கள் ‘நீங்களே சொல்லுங்க’ என்று அவரிடம் வேண்டிக்கொண்டார்கள்.
‘ஒரு நல்ல வாழ்க்கை-ங்கறது, ஒரு விநாடிப் பொழுதுதான்!’ என்றார் அவதூதர்.
‘என்ன சொல்றீங்க குருவே? ஒரு விநாடியில என்ன பெரிசாச் செஞ்சுடமுடியும்? குறைந்தபட்சம் முப்பது, நாற்பது வருஷமாவது வாழ்ந்தால்தானே மனுஷ வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருக்கும்?’
‘அப்படியில்லை. ஒவ்வொரு விநாடியையும், அதுதான் உங்களுடைய வாழ்க்கையின் தொடக்கம் என்று நினைத்து அனுபவிக்கவேண்டும். பழையதை நினைத்துக் கவலைப்படக்கூடாது. கடந்தகாலத்தில் வாழக்கூடாது!’
‘அதேநேரம், அந்த ஒரே விநாடியை உங்களுடைய வாழ்க்கையின் முடிவு என்றும் நினைத்துக்கொள்ளவேண்டும். எதிர்காலக் கற்பனைகளில், எதிர்பார்ப்புகளில் அந்த விநாடியை வீணடிக்கக்கூடாது.’
‘சுருக்கமாகச் சொன்னால், நாம் ஒவ்வொரு விநாடியும் புதுசாகப் பிறக்கிறோம், அதை முழுமையாக அனுபவிக்கிறோம். அதுதான் நல்ல வாழ்க்கை. அதுதான் யோக வாழ்க்கை!’
1 comment:
oru vinnadi story makes the life to live colourful and truthful
Post a Comment