Total Pageviews

Wednesday, June 8, 2011

மறுவாழ்வு மருத்துவம்



மனிதனின் ஆழ்மனம் ஆற்றல்மிக்கது. ஆழ்மன ஆற்றல் பெற்றவர்களே, ஆழ்மன ஆற்றலைப் பயன்படுத்துவோரே சாதனையாளர்கள். ஆழ்மன ஆற்றல் கட்டுப்பாடின்றி திசைமாறிச் செல்லுமானால் ஆனந்தம் அரிதாகிவிடும்.


ஆதவனின் ஒளிக்கதிர்களை ஆடியின் மூலமாக குவித்தால் ஆற்றலைப் பெறமுடிகிறதல்லவா! அதுபோல மனத்தின் சக்தியை ஒழுங்குபடுத்தி, ஒருமுகப்படுத்துவதின் மூலம் மனிதன் ஆனந்த வாழ்வடையலாம் என்பதனை கூறும் உள்நிலை விஞ்ஞானமே “யோகம்” .



மனத்தை அமைதியடையச் செய்து, மன ஆற்றலையும் ஆக்க சக்தியாக பயன்படுத்த முடியும் என்பதே சித்தர்கள் கண்ட விஞ்ஞானம். மன அமைதி பெறாதவன் சாதித்ததாக வரலாறு இல்லை நன்பர்களே!.   

உலக அதிசயங்களை எல்லாம் உருவாக்கும் திறன் கொண்ட கைகளில், மதுக்கோப்பைகளும், புகை போதைகளும் குடியிருந்தால் இது மாபெரும் மனித வீழ்ச்சியல்லவா?


“ஆணும் பெண்ணும் சமமெனக் கொள்வதால், அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்” என்றான் முண்டாசுக்கவி பாரதி. சமூகப் பொருளாதார அடிமைத்தனங்களிலிருந்து பெண்ணினம் விடுதலை பெற வேண்டும் என்பதே பாரதியின் கனவு. இன்றைய கல்வியும், சூழலும் மனித விடுதலைக்குப் பாதை காட்டாமல், போட்டி, பொறாமை, தீய பழக்க வழக்கங்கள் எனும் பள்ளத்தாக்கிலே பலரையும் தள்ளி விடுகின்றன. புகைபிடிக்கும் பெண்களும், மது அருந்தும் மங்கையரும், பான்பராக் சுவைக்கும் பாவையரும் ஆண்களுக்குச் சமமானவர்களா? இல்லை நண்பர்களே!பரிதாபத்திற்குரியவர்கள். ஆணின் கேடான குணங்களை நவீனப் பெண் பின்பற்றுவதா சமத்துவம்?


நம்மிடம் பெருகியுள்ள பழக்க அடிமைத்தனங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல; ஓராயிரம்! உணவுகளை ஓரங்கட்டிவிட்டு உடலைக் கெடுக்கும் தின்பண்டங்களிலேயே நாட்களை ஓட்டும் சிலர், எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் புகைபிடிக்காமலிருக்க முடியாது என்று செயின் ஸ்மோக்கர்ஸ் ஆகிவிட்ட சிலர், ‘கோப்பையிலே என் குடியிருப்பு’ என மதுப் பைத்தியங்களாய் மாறிப்போன சிலர், “உண்பது ஒன்றே உயர்ந்த கடமை” என்று நேரம் காலம் பார்க்காமல் சாப்பாட்டு ராமன்களாய் மாறிவிட்ட சிலர், வாழ்வதற்காகச் சாப்பிட வேண்டும் எனும் நிலை மாறி ”பீஸா” சாப்பிடுவதற்காகவே வாழ்க்கை எனும் நிலை. 


இணையதளம் எனும் சமுத்திரத்திற்குள் இறங்கி முத்துக்குளிப்பதற்கு பதில் குப்பைகளையும் கூழாங்கற்களையும் பார்த்து மோகித்து பார்வை கெட்டு பாறைகளில் மோதி ‘E-addiction’ எனும் வலையில் சிக்கித் திணறும் சிலர், இப்படி விதவிதமாய் வாழ்க்கையைத் தொலைப் போர் பட்டியல் வளர்ந்து கொண்டே போகிறது.




பழக்க அடிமைத்தனங்களில் பலர் மாட்டிக்கொண்டு குடும்பத்திலும் சமூகத்திலும் இரண்டற கலந்து வாழ முடியாத தனிமைத் தீவுகளாகின்றனர். பெருகிவரும் புகை, மது, போதைப் பழக்கங்களைப் பாரதம் போன்ற பாரம்பரிய பண்பாடுகள் நிறைந்த நாட்டில் முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளது. 




நமது உணவுப் பண்பாடுகளும் மேற்கத்திய மோகத்தால் சீரழிந்து விட்டன. கேடான பழக்கங்களில் வீழ்ந்து அடிமையாகும் தனி மனிதனின் உடல், உள்ள இயல்புகள் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சவாலாக உருவாகிக் கொண்டிருக்கிறது. பழக்க அடிமைத்தனம் என்பது தனிமனித வாழ்க்கையை சோகமயமான, துயரமான பயணமாக மாற்றிவிடும்.




ஒருவர் தன்னிடம் பழக்க அடிமைத்தனம் உள்ளதா? என்று எளிதில் அறியலாம். தவறான பழக்கம் என்று தெரிந்தும் அதே சிந்தனை நீடிக்கிறதா? சின்னச்சின்ன அன்றாடப் பிரச்சனைகள், கஷ்டங்கள் வந்தால்கூட தற்காலிகமாக விடுபட விரும்பி தவறான பழக்கத்திற்குச் செல்கிறீர்களா? சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி நடுங்கி செயற்கை உத்வேகம் கிடைப்பதாகக் கருதி தவறான பழக்கத்தையே பெரிதும் சார்ந்துள்ளீர்களா? செய்வது தவறு என்று நன்கு உணர்ந்திருந்த போதிலும் மீண்டும் மீண்டும் செய்கிறீர்களா? முயற்சித்தாலும் மீள முடியவில்லையா?



பழக்க அடிமைத்தனங்களிலிருந்து மீள பதஞ்சலி முனிவரால் வடிவமைக்கப்பட்ட இயற்கை மனநலச் சிகிச்சையான யோகமருத்துவம் பேருதவி புரிகிறது. மண் தின்னும் குழந்தை முதல் மது அடிமைத்தனங்களிலிருந்தும் யோகப் பயிற்சிகள் மூலம் மீள முடியும். யோக மருத்துவம் மனித குலத்திற்கு மருத்துவ உலகிற்குக் கிடைத்த மாபெரும் அற்புதக் கொடை. 




போதை வாழ்வில் அடிமைகளாகியவர்கள் யோகப் பயிற்சிகளை மேற்கொள்ளும் காலம் மலர்ந்தால் எண்ணற்ற உடல் மற்றும் உள்ள வீழ்ச்சிகளிலிருந்தும், அடிமையான பழக்கங்களிலிருந்தும் மீள முடியும். தனிமனித முன்னேற்றத்திற்குத் தடைக் கற்களாய் நிற்கும் போதை பழக்கத்திலிருந்தும் விடுபட முடியும்.




பழக்க அடிமைத்தனங்களிலிருந்து மீள்வதற்காக துயரத்தோடு யோகயுவ கேந்திராவிற்கு வந்து சிகிச்சைக்குப் பின் புதுவாழ்க்கை வாழக்கூடிய ஆண்களும், பெண்களும் யோக மருத்துவத்தின் சீரிய ஆற்றலுக்கு சிறந்த உதாரணங்கள். பழக்க அடிமைத்தனங்களிலிருந்து குழந்தைகளை, பருவவயதினரை, இளையோரை, தம்பதியரை, முதியோரை யோக மருத்துவ சிகிச்சை மூலம் குணமாக்குவதற்கு அவர்களின் குணநலன் பற்றிய ஆய்வும், அடிமைப்பட்டுள்ள பழக்கத்தின் தன்மைகளும், இதர பின்னணிச் சூழல்களும் அறியப்பட வேண்டும். 


யோகஆசனங்களாலோ,பிராணாயாமத்தாலோ, முத்திரைகளலோ அல்லது இவற்றின் கலவையாலோ , மனநிலை சம்பந்தமான நோய்களை, அனுபவமும், திறமையும், நிறைந்த யோக ஆசிரியரால் குணமாக்க முடியும். 






பொதுவாகப் பித்தப் பிரகிருதியில் உள்ளவர்களே போதை அடிமைத்தனங்களில் அதிகமாக மாட்டிக்கொள்பவர்களாக இருப்பதை எனது அனுபவத்தில் நான் பார்த்திருக்கிறேன். பதஞ்சலியின் ஆயுர்வேத சாஸ்திரமும், ‘குத்தூசி வைத்தியம்” எனப் போக மஹரிசியால் கற்றுக் கொடுக்கப்பட்ட அக்கு பஞ்சரும் இதனை உறுதிப்படுத்துகிறது. மனிதனின் “தனித்தன்மைக்கு” காரணமான கல்லீரலின் சக்தி, குறைந்த நிலையில் இருப்பவர்களே போதைவாழ்விற்கு எளிதில் அடிமையாகிறார்கள். 


தனது தனித்தன்மை பாதிக்கப்படும் போதோ அல்லது திறமை இருந்தும் சரியான சந்தர்ப்பம் கிடைக்காதபோதோ, தனது திறமையை வெளிக்காட்ட விடாமல் பிறரால் அடக்கப்படும் போதோ ஏற்படும் மன நிலை கோபமாக வடிவெடுக்கிறது. இந்த மன நிலை தொடர்ந்து நீடிக்கும்போது “கல்லீரல்” தனது ஆக்க சக்தியை அழிவு சக்தியாக மாற்ற முயல்கிறது. 


இந்த மன நிலையில் நோயாளி தனது சுற்றத்தையும், உலகத்தையும் புதிதாக கற்பனையில் சிருஷ்டி செய்ய முயல்கிறார். விளைவு தனி உலகத்தில் வாழ்வதாக கற்பனை செய்து கொண்டு போதைக்கு அடிமையாகி விடுகிறார்.




இந்த சூழலில் கல்லீரலுக்கு சக்தி தரக்கூடிய யோகப் பயிற்சிகளான யோகமுத்ரா, குமாராசனம் பார்ச்சுவயோகமுத்ரா, சைதல்யாசனம், பஸ்ஸிமதானாசனம், அர்த்தபத்ம ஜானுசிரசாசனம், பத்ம வக்ராசனம், போன்ற ஆசனங்களைச் செய்யலாம். 


அதுபோல சமான வாயுவை இயக்கக் கூடிய பயிற்சிகளான வியாக்ர பிரணாயாமமும், சூர்ய பேதனாவும், கல்லீரலை வலுப்படுத்தும். முத்திரைகளில் சூர்ய முத்திரை, லிங்க முத்திரை, ஆதித்ய முத்திரை போன்றவைகளும் கல்லீரலை வலுவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. போதை மருந்துகளுக்கு அடிமையானோர் தாம் செய்வது தவறு எனத் தெரிந்தும் அதனை வைராக்கியமாக விட முடியாமல் 
தவிப்பதைப் பார்க்கிறோம். 

இது போன்ற நிலையில் வைராக்கிய சிந்தையைஅதிகப் படுத்தும் ஆசனமான பகீரத ஆசனத்தினையும், சலபாசனத்தினையும் செய்யலாம்.

நண்பர்களே! யோக மருத்துவப் பயிற்சிகளை, 

ஒரு யோக ஆசிரியரின் நேரடிப் பார்வையில் செய்வதே சிறப்பு என்பதால் செய்முறைப்பயிற்சி பற்றிய குறிப்புகளை இங்கே தரவில்லை.ஒரு யோக ஆசிரியராலேயே உங்களுடைய உடல் தன்மையையும், உள்ளத்தன்மையையும் உணர்ந்து, பயிற்சி முறைகளை வடிவமைக்க முடியும்.





யோகேன சித்தஸ்ய பதேன வாச்சாம்
மலம் சரீரஷ்ய து வைத்ய கேன!
யோபாகரோத்தம் ப்ரவ்ரம் முனினாம்
பதஞ்சலிம் ! ப்ராஞ்சலிராந தோஸ்மி
     


      

Tuesday, June 7, 2011

பாசப்பறவைகள்


"பாசம்" பாமரர்களை மட்டுமல்ல நண்பர்களே,  பட்டற்ற ஞானிகளையும் பாடாய்ப் படுத்தி இருப்பதை ஆன்மீக வரலாற்றில் பார்க்க முடிகிறது. பட்டினத்தானையும் கூடப் பாசம் விட்டுவைக்கவில்லை அன்னை இறந்தவுடன் அழுது புலம்ப வைத்திருக்கிறது.  பால்பிரண்டன் பிரிந்து தனது சொந்த நாட்டிற்குச் செல்லும்போது ரமண பகவானும்,சோகத்தால் சோர்ந்து போயிருக்கிறார்.  ஹிருதயன் இறந்தபோது "என் போன்ற சாதுக்களையே பாசம் படுத்துகிறதே, பாமரர்கள் என்ன செய்வார்கள், பாவம்" என ராமகிருஷ்ணரும் கூறுவதைப் பார்க்க முடிகிறது.


பாசத்தினால், தேட்டமும் கவலையும், துன்பமும், உண்டு! நாம் யார் மீது பாசம் வைத்து உள்ளோமோ அவர்களைப் பிரியும் போது நம் உள்ளம் கடுமையாக பாதிக்கப் படலாம் என்பதை மனிதர்களாகிய நாம் யதார்த்தத்தில் அறிந்தே வைத்துள்ளோம். 


இன்று நான் பதிவு செய்ய நினைத்த செய்தி மனித பந்தம் பற்றியதல்ல நண்பர்களே!மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களில் பாசம் எனும் உணர்வு பாதிப்பை உண்டக்குகிறதா?இல்லையா?என்பதை பற்றியதே!


மிருகங்களுக்கும் பாச உணர்ச்சி உண்டு என்பதை ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன. இதில் சந்தேகப்படவோ ஆச்சரியப்படவோ ஒன்றுமில்லை. நம்மைப் போன்றே அவற்றுக்கும் மூளையின் “லிம்பிக்” எனும் அமைப்பு, உணர்ச்சிகள் எழும் மையமாக இருக்கிறது. சரி......... பாச உணர்வினால் இவைகள் என்னன்ன செய்கின்றன என்பதைப் பற்றியான ஆராய்ச்சியாளர்களின் முடிவுகளைப் பார்ப்போமா?


ஸீ லயன்கள் என்று சொல்லக்கூடிய கடல் சிங்கங்களின் குட்டிகளைத் திமிங்கலங்கள் கொன்று தின்னும்போது அவை துயரத்தில் ஓலமிடுகின்றனவாம். 



கடலினுள் இறந்து போன தன் குட்டியை டால்பின்கள் கடலின் மேற்பரப்புக்குத் தள்ளி வந்து உயிர்ப்பிக்க முனைகின்றனவாம். 


சிம்பன்ஸீ குரங்குகளும், யானைகளும் தங்கள் நட்பு மற்றும் சுற்ற வட்டத்தில் இழப்புகள் நேரும்போது வருந்துகின்றனவாம். 


கொரில்லாக்கள் இறந்தவர்களுக்காக இரங்கி அழுகின்றனவாம். பாஸ்டன் பிராங்க்ளின் ஜூவில் புற்றுநோயால் இறந்த தன் துணைக்காக ஒரு கொரில்லா ஓலமிட்டுத் தன் நெஞ்சில் அறைந்து கொண்டதாம்.. 

இறந்த ஒரு கொரில்லாவுக்குப் பிடித்தமான பண்டத்தை இறந்துபோன கொரில்லாவின் கையில் தந்து இறந்ததை எழுப்பப் பார்த்த அதன் சக கொரில்லாவின் பாசம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது

 [தன் இறந்த குழந்தைக்காக அழும் கொரில்லா]


மாக்பை என்ற சிறு பறவைகள், தம் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இறக்கும்போது அவற்றை எழுப்ப முயற்சி செய்கின்றதையும், அதன் அருகில் சுள்ளிகளை வைத்து அஞ்சலி செலுத்துகின்றதையும் ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

இறந்த ஒருவகை நரிகள் சக நரிகளால் புதைக்கப்படுகின்றனவாம். யானைகள் உடல் ஊனமுற்ற சக யானைக்காக நிதானித்து அதையும் தம்முடன் அழைத்துச் செல்கின்றனவாம்.

யானைகள் புதிதாக அறிமுகமாகிக் கொள்ளும்போது அவ்வளவு சீக்கிரம் பழகுவதில்லை. பாஸ்டன் பிராங்க்ளின் சரணாலயத்துக்கு கொண்டு வரப்பட்ட யானைகளில் இரு வயதான யானைகள் ஒன்றை ஒன்று கண்டதும் பிளிறி அழைக்கத் துவங்கின. அவை இருந்த கூண்டுகளின் கம்பிகளுக்கு இடையே தம் துதிக்கைகளை நுழைத்து ஒன்றை ஒன்று தொட்டுத் தடவின. என்ன நடக்கிறது இங்கே?, என்ற ஆச்சரியத்துடன், இந்த யானைகள் குறித்த ஆவணங்களைத் தேடிப் பார்த்தபோதுதான் இவை இரண்டும் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு சர்க்கஸ் கம்பெனியில் இணைந்திருந்திருக்கின்றன என்ற தகவல் தெரிய வந்ததாம். யானைகளின் பாசம்!   ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா!!!!! 


நம்ம ஊரில் நடந்த ஒரு பாசக் கதையைப் பார்ப்போமா! ஒரு குருவிக்கு நிகழ்ந்தது.............













ஒரு அதிகாலை நேரம். குதூகலமாக இரை தேடித், தாழப் பறந்த குருவியொன்று காரில் அடிபட்டுக் கீழே விழுந்தது. அது என்ன சக மனிதனா, இடித்தவர் இறங்கி வந்து காப்பாற்ற அல்லது உதவ ?




விழுந்த குருவியால் எழுந்து பறக்க முடியவில்லை. வீழ்ந்து தவிப்பதை அதன்சக குருவியொன்று கண்டது. அருகில் வந்து பார்த்தது. அதனைத் தூக்கிக் கொண்டு பறக்கும் எண்ணம் உதித்தாலும் அதனால் முடியவில்லை. 





செய்வதறியாது துடித்த சக குருவி, இரையெடுத்து வந்து, தன் அன்பையும் நேசத்தையும் அரவணைப்பையும் ஒன்றாகக் கலந்து மருந்தென அடிபட்ட குருவிக்கு ஊட்டியது.மீண்டும் இரையெடுத்து வந்து பார்த்தபொழுதில் அடிபட்டக் குருவியின் உயிர் விட்டுப் போயிருந்தது. அதை உணராச் சக குருவி, கண்ணீர் தளும்பிய விழிகளுடன் தனக்குள் அழுதது.

தன் சிறு கால்களால் தட்டித் தட்டி எழுப்பியது. குருவி எழவில்லை.சலனமற்ற குருவியின் பிரிந்து போன உயிருக்குக் கூடக் கேட்கும் வண்ணம் சக குருவி அழைத்தது, அழுதது, அலறியது, மன்றாடியது. எதையும் அறியாக் குருவியின் சடலம் காற்றுக்கு மட்டும் சிறு இறகசைத்தபடி வீதியிலே விழுந்து கிடந்தது.



ஆசையாசையாய்ச் சேமித்த வாழ்வின் கனவுகள் நடுவீதியில் கலைந்துபோயிற்று. இரை தேடிப் பறக்கும் எண்ணமின்றி, தன் கூட்டத்தைத் தேடியலையும் எண்ணமின்றி தனது எந்த ஆர்ப்பரிப்புக்கும் இறுதி வரை எழாத இறந்த குருவியின் அருகிலேயே உயிர்க்குருவி மௌனித்து அமர்ந்தது..........

பாழும் பாசம், பறவைகளையும் விட்டுவைக்காது போலும்!
தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை 
முத்திக்கு வித்தான முப்பாழைப் போற்றாமல்,
பற்றிப் பிடித்து யமன் பாசத்தால் கட்டும்வண்ணம் 
சுற்றி இருக்கும் வினை சூழ்ந்தனையே நெஞ்சமே பட்டினத்தார் 
          
நன்றி; ராஜகுமார்

Saturday, June 4, 2011

முடிந்தால் நீங்களும் தேடுங்கள்!



நான் யார்?
கற்பனையின் நிழலா?நிழலின் கற்பனையா?
கனவுகளின் நிஜமா?நிஜமான கனவா?நான் யார்?
தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவனா?;
விழித்துக் கொண்டிருக்கும் ஒருவனா?
 இந்த உலகம்இதன் வாழ்க்கை....
என்பதெல்லாம்,கனவுகளாநனவுகளா?
கனவுகள் என்றால்,
கனவுகளில்விழித்துக் கொண்டிருக்கும்
நான் யார்?
நனவுகள் என்றால்
நனவுகளில் கனவு கண்டு கொண்டிருக்கும் 
நான் யார்?
 நீண்ட பெரும் கனவின்
ஓர் அங்கம்தான் எனது விழிப்பா?
அந்த விழிப்பின்
அத்தியாயங்கள்
இரவும் பகலுமா?
இதில் 
நான் தூங்கி எழுந்தேனா? 
எழுந்தபின் தூங்குகிறேனா?
கனவுகள் மூலம் 
இந்த உலகத்தைக் காண்கிறேனா?
இந்த உலகத்தின் மூலம் 
கனவுகள் காண்கிறேனா?
நான் தூங்கினால்-
என்னோடு
இந்த உலகமும் தூங்கி விடுகிறது;


நான் எழுந்தால்-
என்னோடு 
இந்த உலகமும் எழுகிறது! 
இதோ:
என் முன்-
ஜீவராசிகள் எனும் பிம்பங்கள்.....
அவற்றின் இடையே-
நிறபேதங்கள்இனபேதங்கள்;
அசைவன;அசையாதிருப்பன;
தெரிவன;தெரியாதிருப்பன…….
இவை எல்லாம்
எதனுடைய அங்கங்கள்?
என்னுள்ளிருந்தே
இவையனைத்தும் தோன்றுகின்றன!
எனது விழிகளால்
பார்க்கிறேன்;
எனது செவிகளால் 
கேட்கிறேன்!
நானே தேடுகிறேன்;
நானே உண்கிறேன்!
அழுவதும் சிரிப்பதும்
ஆனந்திப்பதும் துயர்ப்படுவதும்
எண்ணுவதும் எண்ணாதிருப்பதும்
எல்லாம் நானே….

நான்’ எங்கிருந்து வந்தேன்?’
என்பது 
எனக்குத் தெரியாது…….

தாயின் கருவறை
என்று சொன்னால்….
அந்தத் தாயின் கருவறை 
எங்கிருந்து வந்தது?
கண்ணுக்குத் தெரிந்திராத
காற்றை
ரப்பர் பை ஒன்றில்
ஊதி அடைத்ததைப் போல்
உருவமாய் வந்த
நான்’ எனும் மூலம் எது?
 நான்
என்பதன் நோக்கம் என்ன?
 நான்’ விரும்பியே
வந்த-
இந்த வாழ்க்கை…..


இப்போது-
ஏன்
என்னை விலகுகிறது?
அல்லது விலக்குகிறது?
என்னைச் சுற்றியே
இந்த உலகம் இயங்குகிறது
நான்……
அந்த இயக்கத்தின் அச்சு:
காலச்சக்கரத்தின் சுழற்சியில்
அதன் அச்சு முறிந்தபின்னும்
சுழற்சி நிற்பதில்லை……
ஆரம்பம் எது?
என்பது தெரியாமல்
முடிவும் அறிவிக்கப்படாமல்
முடிந்து விடுகிற
எனது இயக்கத்தில்
கதா பாத்திரமாகிற
நான்’ யார்?
ஒரு நாள்-
இந்த உலகத்தை நானும்
இந்த உலகம் என்னையும்
கை விட்டு விடுவதற்காக….
இன்று-
இந்த உலகமும் நானும்
கை கோர்த்துக் கொண்டு
கையொப்பம் இடுகிற 
காட்சி அரங்கேறுகிறது!
இந்த அரங்கேற்றத்தின்
கதா நாயகனான 
நான்’ யார்?

ஆம்!
புறப்பட்ட இடம்
புரியாமல் புறப்பட்டுக் கொண்டும்......

போகும் இடம் 
தெரிந்தும்
சென்றடையாமலும்



பிறருக்கு- 
வழி காட்டிக் கொண்டே
பயணித்துக் கொண்டிருக்கும்
வழிகாட்டி;

குழப்பங்களை
ஒழிப்பதற்காகவே,
குழம்பிக் கொண்டிருக்கின்ற
கொள்கைவாதி;
ஓய்வு பெறுவதற்காக,
ஓய்வின்றி
உழைத்துக் கொண்டிருக்கின்ற 
உழைப்பாளி;
குனிந்திருந்தவர்களை 
நிமிரச் செய்து
தலை குனிந்து போன
உபதேசி;
அரண்மனை இல்லாத அரசன்; 
பாமரமாய்-
பட்டொளி வீசிக்கொண்டிருக்கும் பாமரம்”;
நிரந்தரமற்ற நிறந்தரம்;
பேசத் தெரிந்த ஊமை;
விலாசமுள்ள அநாதை;
பொய்யான மெய்யன்;
புழுங்கிக் கொண்டிருக்கின்ற விசிறி;
இருந்தும்,
இல்லை’ என்று பொருளுரைக்கும்
அருஞ்சொல் பதம்;

இருட்டைக் கவசமாக்கி
எரிந்து கொண்டிருக்கும்
அகல் விளக்கு!
இரவின் விடியலுக்கும்;
விடியலின் முடிவுக்கும்
விளக்கம் தரும்
முற்றுப் புள்ளி.

விலகிய இயல்பு





இயல்பை விட்டுவிலகியதாய்இந்த நாட்கள்
அகண்ட வெளியில்
அள்ளித்தெளித்த
துளிகளைத் தேடுவதினும்
கடினாமாகிப் போனது 
என் இயல்பை மீட்கப் போராடும் இந்த நாட்கள்

கனவில் தூக்கங்களை ரசிக்கும் 
புதிய உத்தியில் கைதேர்ந்தனவாய்
மாறியிருக்கின்றன எனது கண்கள்

ஆவல்கள் தானே உவந்து 
அரிக்கத் தொடங்கியிருக்கின்றன ஆவல்களை

எந்நேரமும் இயங்கும் எடைமேடை 
இதயம் பாரங்களின் மாறுதல்களைப் பழகிக்கொண்ட வண்ணம்

பாசம் என்ற புதிரில் 
தொலைந்தும் தொலையாமல் 
இயல்பை விட்டு விலகியதாய் இந்த நாட்கள்.

எதை எழுதுவது


நிறைய எழுதவேண்டியதிருக்கிறது'என்னை"ப் பற்றி.

எதையும் பற்றாமல் 
 எதைப்பற்றியும் இல்லாமல்
"என்னை"ப் பற்றிக்கொண்டு 
எழுதியாகவேண்டும்.
"எனக்கு" மட்டும் தெரிந்த
துரோகம்
வலி
கனவு
வாழ்க்கை
கண்ணீர்
கவிதை
பாசம் 
பரிதவிப்பு
ஏமாற்றம்
பட்டறிவு
அனைத்திற்குமான தீர்ப்புகள் 
எழுதியே தீர வேண்டும்.
ஆனால்உச்சரிக்கும் முன்பே
ஊமையாகிப் போன
பேனாவை வைத்துக்கொண்டு
எதை எழுதுவது?

Friday, June 3, 2011

வழுக்குமரம்



மாஸ்டர் வணக்கம்!
புகைவண்டியில் ஒருமணி நேரம் உங்களுடன் பயணம் செய்தது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாகவே நினைக்கிறேன்.  கிடைத்த சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்த நினைத்துப் பரஸ்பரம் நலம் விசாரிப்பதைக் கூட மறந்துவிட்டேன். மன்னிக்கவும்.     அக்கா நன்றாக இருக்கிறார்களா? தம்பி எப்படி இருக்கிறான்?

நமது பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள தொடர்பை புகைவண்டிப் பயணத்தில் எல்லோருக்கும் புரியும்படியாக கூறியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.   நீங்கள் ராஜபாளையத்தில் இறங்கியவுடன்,     உடன் இருந்தவர்களெல்லாம் உங்களைப் பற்றி விசாரித்தது எனக்குப் பெருமையாக இருந்தது.    உறியடித் திருவிழாவையும்,  வழுக்குமரம் ஏறுவதையும் பற்றி எழுதுவீர்களா?  ................டாக்டர்.     நம்பிநடராஜன்.



கண்ணன் பிறந்த நாள் கோகுலாஷ்டமியாகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பல கோயில்களில் உறியடி உற்சவமும் வழுக்கு மரம் ஏறும் போட்டியும் நடைபெறுகிறது. உறியடி உற்சவம், வழுக்கு மரம் இவை இரண்டுமே மனித வாழ்வின் தத்துவத்தை நமக்கு அழகாக எடுத்துரைக்கின்றன.

உறியடி உற்சவத்தில், உயரத்தில், மண் பானையில் பரிசுப் பொருள் கட்டப்பட்டிருக்கும். அதனை அடிக்க ஆசைப்படுபவர்களின் கண்ணும் கட்டப்பட்டிருக்கும். விளையாட்டில் பங்கேற்பவர்களில் பலரும் அங்கும் இங்கும் அலைமோதி, இறுதியில் ஒருவர் மட்டுமே பானையை உடைத்துப் பரிசைப் பெறுவார்.   பரிசு பெற்ற அனுபவங்கள் எனக்குண்டு. சந்தோஷமான தருணங்கள் அவை.

மண்பானை என்பது நமது உடலாகிய கடம். இந்த உடலாகிய கடத்தினுள் ஒழித்து வைக்கப்பட்டிருக்கிறது "முக்தி" எனும் பரிசுப் பொருள்.   ஆத்மனை உணர வேண்டும் என்ற ஆசையில்தான் மனித வாழ்க்கை ஆரம்பம் ஆகிறது. ஆனால் நடுவில் பல அலைக்கழிப்புகளுக்கு ஆளாகி பல ஜீவன்கள் ஆத்மனை உணர முடியாமல் போய் விடுகிறது. ஆனால் ஆத்மனை உணர வேண்டும் என்ற குறிக்கோளோடு உறுதியாகச் செயல்பட்டு, தேக அபிமானம் என்னும் பானையை உடைத்து விட்டால், முக்தி எனும் பரிசு கிடைத்து விடுகிறது!

அது சரி. ஏன் கண்ணைக் கட்டிக்கொள்ள வேண்டும்? மனிதனின் புறக் கண்கள் திறந்திருக்கும் வரை ஆசாபாசம், யாவும் அவனை அலைக்கழித்துக் கொண்டே இருக்கும். புறக் கண்களை மூடிவிட்டால், மனிதனின் அகக் கண்கள் தானே திறந்து விடும். இதனை உணர்த்தும் விதமாகவே உறியடி உற்சவம் கொண்டாடப்படுகிறது.
அடுத்து, வழுக்கு மரம்.

சாதாரண மரத்தில், வழுக்கும் தன்மையுள்ள பொருட்களை அரைத்துப் பூசி விடுகிறார்கள். அதன் உச்சியிலும் பரிசுப் பொருள் கட்டப்பட்டிருக்கும்.      மனிதன், வாழ்வில் முக்திபெறும் உணர்வுகொண்டு அதற்கான முயற்சியில் இறங்குகிறான். ஆனால் பிரச்சினைகள், கவலைகள் யாவும் அவனை பின்னோக்கி இழுத்து, வழுக்கி விடுகின்றன.  மீண்டும் அவன் முயற்சி செய்ய வேண்டியதிருக்கிறது.

வழுக்கு மரத்தில்,   வழுக்கும் பொருள்களை நாமே பூசி விடுவதுபோல,  வாழ்க்கை என்னும் மரத்திலும் பாசம் என்னும் வழுக்கும் பொருளை நாமே பூசிக்கொள்கிறோம்.   "பாசம்" வழுக்கத்தானே செய்யும். பாசம் எனும் அழுக்கைப் போக்க 'யோகம்" எனும் வேதிப்பொருள் தேவைப்படுகிறது

இப்படி பல தடவைகள் பல பிறவிகளில் வழுக்கி விழுந்து.....பின்பு,யோகப்பயிற்சிகளால் முயற்சி செய்தே ஞானத்தை, முக்தியை அடைய முடியும். இதனை நமக்கு வலியுறுத்தவே நம் முன்னோர்கள் இது போன்ற வைபவங்களை விளையாட்டாக்கி வைத்துள்ளார்கள்.

விளையாட்டுத் தத்துவத்தைப் புரிந்துகொள்வோம், விடாமல் முயற்சி செய்வோம்! முக்தி எனும் பரிசு கிடைக்க குருவருள் துணைபுரியும்.

அலகிலா விளையாட்டுடையார் அவர்- தலைவர்
அன்னவருக்கே சரணாங்களே- கம்பர்

Thursday, June 2, 2011

பிறவிப் பெருங்கடல்




போன ஜென்மத்தைக் காட்டுகிறேன் வாவென 
புருவப் பொட்டில் கை வைத்தார் குரு நாதர்.

அந்த ஜென்மத்தின் நினைவுகள் தெரியத் துவங்கியது.

அந்த ஜென்மத்தில்........ 

அடுத்த ஜென்மத்தைக் காட்டுகிறேன் வாவென 
புருவப் பொட்டில் கை வைத்தார் குரு நாதர்.


இப்படியே.......

குருவும் சீடனும் 
பிறவிச் சுழற்சியில் மாட்டிக்கொண்டார்கள்..!




பல ஜென்மங்களை காட்டுகிறேன் எனக் கூறுபவரை விட...

உனக்கு உன் இருப்பை மட்டுமே காட்டுகிறேன் என்ற விழிப்புணர்வைக் கொடுப்பவரே குருவாக இருக்க முடியும்.


வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடும் உந்திபற
வீடு தரலிலை உந்திபற