Total Pageviews

Showing posts with label அவதூதர் கதைகள். Show all posts
Showing posts with label அவதூதர் கதைகள். Show all posts

Wednesday, May 25, 2011

பெரிய துறவி



ஒருமுறை ராமகிருஷ்ண பரமஹம்சருடன் செல்வந்தர் ஒருவர் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர், “சுவாமி, கடவுளுக்காகத் தங்களுடைய வாழ்க்கையையே துறந்து விட்டீர்களே?!” என்று நக்கலாகக் கேட்டார்.

அதற்கு ராமகிருஷ்ணர் புன்னகையுடன், “நான் ஒரு துறவியாக இருக்கலாம். ஆனால் என்னைவிட பெரிய துறவி நீங்கள்தான்!” என்று கூறினார்.

இதைக் கேட்ட செல்வந்தருக்கு தூக்கிவாரிப் போட்டது. “உங்களை விட நான் பெரிய துறவியா? எப்படி?!” என்று திகைப்புடன் கேட்டார்.

ராமகிருஷ்ணர் சிரித்துக் கொண்டே, “ஐயா, நானோ கடவுளுக்காக என்னுடைய வாழ்க்கையைத்தான் துறந்தேன். ஆனால் நீங்களோ, சுகபோக வாழ்க்கைக்காக கடவுளையே துறந்து விட்டீர்களே…. எனவே, என்னைவிட நீங்கள்தான் பெரிய துறவி!” என்றார்.

இதைக் கேட்டதும் செல்வந்தர் வெட்கத்துடன் தலைகுனிந்து கொண்டார்.

Wednesday, March 9, 2011

ஒரே வினாடி


....ஒரே வினாடி !!!



‘நான் நல்லா வாழ்ந்தேன்னு ஒருத்தன் சொல்றான்னா, அவனோட வயசு என்ன?’ என்று கேட்டார் அவதூதர்.

அவரது சீடர்கள் யோசித்தார்கள். ‘என்ன கேட்கறீங்க? சரியாப் புரியலையே!’

‘ஒரு நல்ல வாழ்க்கையோட ஆயுள் காலம் என்ன?’

‘நூறு வயசு?’ என்றார் ஒரு சிஷ்யர்.

‘ம்ஹூம். இல்லை!’ என்று உடனே மறுத்துவிட்டார் அவதூதர்.

‘அப்படீன்னா? 90 வயசு?’

‘அதுவும் இல்லை!’

‘80? 70? 60?’ இப்படிச் சீடர்கள் வரிசையாகப் பல விடைகளைச் சொல்ல, அவதூதர் எதையும் ஏற்கவில்லை. கடைசியாகப் பொறுமையிழந்த அவர்கள் ‘நீங்களே சொல்லுங்க’ என்று அவரிடம் வேண்டிக்கொண்டார்கள்.


‘ஒரு நல்ல வாழ்க்கை-ங்கறது, ஒரு விநாடிப் பொழுதுதான்!’ என்றார் அவதூதர்.

‘என்ன சொல்றீங்க குருவே? ஒரு விநாடியில என்ன பெரிசாச் செஞ்சுடமுடியும்? குறைந்தபட்சம் முப்பது, நாற்பது வருஷமாவது வாழ்ந்தால்தானே மனுஷ வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருக்கும்?’

‘அப்படியில்லை. ஒவ்வொரு விநாடியையும், அதுதான் உங்களுடைய வாழ்க்கையின் தொடக்கம் என்று நினைத்து அனுபவிக்கவேண்டும். பழையதை நினைத்துக் கவலைப்படக்கூடாது. கடந்தகாலத்தில் வாழக்கூடாது!’

‘அதேநேரம், அந்த ஒரே விநாடியை உங்களுடைய வாழ்க்கையின் முடிவு என்றும் நினைத்துக்கொள்ளவேண்டும். எதிர்காலக் கற்பனைகளில், எதிர்பார்ப்புகளில் அந்த விநாடியை வீணடிக்கக்கூடாது.’

‘சுருக்கமாகச் சொன்னால், நாம் ஒவ்வொரு விநாடியும் புதுசாகப் பிறக்கிறோம், அதை முழுமையாக அனுபவிக்கிறோம். அதுதான் நல்ல வாழ்க்கை. அதுதான் யோக வாழ்க்கை!’

Monday, January 24, 2011

ஒரே ஒரு பாட்டு


அன்று அந்த மண்டபத்தில் ஏகப்பட்டக் கூட்டம்.

இருக்காதா பின்ன ?   உலக அளவில் புகழ் பெற்ற பாடகருடைய கச்சேரி ஆச்சே. மாலை ஏழு மணிக்குத் தொடங்கப்போகும் நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கக் காலையிலிருந்தே ஒரு பெரிய வரிசையே நின்றது. ஒரு வழியாக மக்களெல்லாம் அடித்துப் பிடித்து டிக்கெட்வாங்கிக்கொண்டு மண்டபத்துள் சென்றார்கள்.

சரியாக ஏழு மணிக்குக் கச்சேரி தொடங்கியது.

அடுத்த சிலமணி நேரங்கள் . பாடகருடையப் பாட்டு எல்லோரையும் கட்டிப்போட்டிருக்கிறது.  அவருடைய சங்கீத ஞானத்தை மக்கள் வாயாரப் புகழ்கிறார்கள்.

நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம்.

அந்தப்பாடகரை சில வார்த்தைகள் பேசுமாறு அழைக்கிறார்கள்.

அவர் எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு , தனது குருநாதரைப் பற்றிப்  பேசினார்.

"அவர் வெறும் சங்கீத மேதை மட்டுமல்ல,  ஒரு அவதூது. அவர் தினமும் சங்கீதப் பயிற்சி செய்கிறாரோ இல்லையோ,   பலமணி நேரம் தியானம் செய்வார்.   நான் அவரிடம் சிஷ்யனாகச் சேர்ந்த போது தினமும் நான்கு மணிநேரம் கிளாஸ் .  அதுவும் ஒரே பாட்டைத்தான் மறுபடியும், மறுபடியும் சொல்லித்தருவார் .  அதுவும் பல மாசம் , பல வருஷம்!"

"ஒரு கட்டத்தில் எனக்குப் போரடித்துவிட்டது. குருநாதரிடம்
கோபித்துக்கொண்டு வந்துவிட்டேன்."

சிறிதுநாள் கழித்து

"ஒரு ஸ்கூல்ல பாட்டுப்போட்டி , கலந்துக்கிட்டாச் சாப்பாடு கிடைக்குமேன்னு நப்பாசையிலே கலந்துகிட்டேன்."

"இத்தனை வருசத்தில நான் கத்துக்கிட்டது ஒரே ஒரு பாட்டு.  அதைத்தான் அந்தப்போட்டியில பாடினேன். பாடி முடிச்சதும்,  அங்கிருந்த பசங்க, பெரியவங்க எல்லாரும், கை தட்டுறாங்க .     இந்த வயசுல இப்படி ஒரு ஞானமா? எனப் பாராட்டுறாங்க"

"நான் வெட்கத்தோட மேடையை விட்டு இறங்கிட்டேன் .  எனக்குத்தெரிஞ்சது ஒரேஒரு பாட்டுதான்னு சொல்லிக்க வெட்கமா இருந்திச்சு.  ஆனா அந்த ஒரு பாட்டுல என்னை என் குருநாதர் எந்த அளவுக்கு பலப்படுத்தி இருக்கார் என்பது எனக்கு அப்பத்தான் புரிஞ்சுது.  அடுத்து என்ன சொல்லித்தரப்போரார்னு கூடத் தெரிஞ்சுகாம, அவருக்கு ஒன்னும் தெரியாதுன்னு அவசரப் பட்டுட்டேனேனு கஷ்டமா இருந்திச்சு"

"ஒண்ணு, ரெண்டுன்னாலும் உருப்படியாத் தெரிஞ்சுக்கிறதுதான் வலுவான அடித்தளம்னு நல்லாப் புரிஞ்சுகிட்டேன்"

மேடையிலே இருந்து இறங்கினதும் என்னோட குரு வீட்டுக்கு ஓடினேன், அவர் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டேன்".

இப்படி அந்தப் பாடகர் சொல்லி முடிக்க, கூட்டம் எழுந்து நின்று கை தட்டியது.

இது நிஜக்கதை.  அந்தப் புகழ்பெற்ற பாடகரின் பெயர் என்ன தெரியுமா?

'கோஷிஜி"