Total Pageviews

Tuesday, May 31, 2011

தர்மத்திற்கு மரணம்



நண்பர்களே! ..........  ஆத்மபதவி அடைந்த தர்மலிங்கராஜாவின் ஆத்மா சாந்தியடைய யோகயுவகேந்திரா ஆத்மார்த்தமாகப் பிரார்த்திக்கிறது.



ஆம்..... அது நடந்துவிட்டது



இரவு தூங்கும் நேரத்தில்........
கைப்பேசி வழியே
வருகிறது
மரணச் செய்தி ஒன்று


யோக யுவ கேந்திரா
உள்ளத்தின்
பள்ளத்திலிருந்து
துக்கம் பீறிடுகிறது.....


துயரம் சூழ்ந்த
கண்ணீர் துளிகள்
வியாபித்திருக்கிறது
மௌனித்திருந்த
அறையெங்கும்.............


புற்றே
உனக்கு ஒரு
புற்று வந்து
தொலையாதா?
எத்தனை இதயங்களை 
இன்று நீ
காயப்படுத்தி இருக்கிறாய்
என்பதை அறிவாயா?


தங்கத்தை, தர்மத்தை
அல்லவா அழித்திருக்கிறாய்!


பாடை சுமந்தவர்கள்
உள்ளமெங்கும் நிரம்புகிறது
பயம் சூழ்ந்த
துக்கப் பெருவெளியொன்று


இப்பொழுது
நெருப்பு விழுங்கிக் கொண்டிருக்கிறது
ஒரு பிரபஞ்சத்தின்
இறுதித் துளியை......

தர்மப் பெரியவரே!
உங்கள் அன்பிற்கு அடிபணிகிறது
யோகயுவ கேந்திரா.



Monday, May 30, 2011

உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்







பாஞ்சாலி அந்தக் காட்டையும் தன்னையும் ஒன்றாகவே உணர்ந்தாள். கதிரவனின் சூடு கொஞ்சம்கூடப் புகுந்துவிடாதபடி குளிர்ச்சியாய் இருந்தது அந்தக் காடு.    காடு தன் குளிர்ச்சியை பாஞ்சாலிக்குள்ளும் இறக்கியது. பாஞ்சாலியின் மனம் எங்கெங்கோ ஓடத்துவங்கியது.




காடு எப்போதுமே ஒரு ஆச்சர்யமான, மாய அழகுடன் கர்வம் கொண்டிருக்கிறது. கட்டுப்பாடில்லாத தனது எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே... சுதந்திரத் தென்றலைப் பரப்பிக்கொண்டே... காடு தனது அழகை யாரிடமும் அடகு வைப்பதில்லை... எல்லோரையும் தன்னுள் கவர்ந்து கொள்கிறது.


பாஞ்சாலி, ஏனோ அன்று தன்னுள் அதிகமான கர்வம் கொண்டிருந்தாள். நான் அரசி... என் கணவர்களே எனக்குப் பணியாட்களாகவும் இருக்கிறார்கள்... "நான்" இடும் கட்டளைக்காய் காத்திருக்கும் கணவர்கள் ஐவருக்குள்ளும் என் பாசத்தை நான் ஊற்றிக்கொண்டே இருக்கிறேன். ஐந்து பேர்... ஐந்து பேர்! என் கணவர்கள்.


அவளுள் ஒளிந்து எப்போதும் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டே இருக்கும் அந்தக் கோபத்தீ அன்று சற்றே சாம்பல் பூத்திருந்தது. அன்புக்காக அவள் மனம் ஏங்கியது அர்ஜுனனை அவள் எதிர்பார்த்திருந்தாள். அழகன்! கம்பீரன்! பௌருஷத்தின் பொக்கிஷங்களைத் தனக்குள் முதன்முதல் திறந்துவிட்டவன்!.


.........அர்ஜுனன் இன்னும் சற்று நேரத்திர்கெல்லாம் வந்துவிடுவான். யோசனைகள் உந்தித்தள்ள காட்டில் வெகுதூரம் வந்துவிட்டாள்.


அதோ... அதோ... மதங்கொண்டெழுந்த ஆண்யானை போல் அசைந்து வருகிறான் அர்ஜுனன்.


"பாஞ்சாலி! என்ன இது இவ்வளவு தூரம் நடந்து வந்துவிட்டாய்? உன் முகமும் மிகவும் பொலிவுடன் இருக்கின்றதே!" வாஞ்சையுடன் கரம்பற்றிய பாஞ்சாலியுடன் அர்ஜுனன் கரம்கோர்த்து நடக்கத் துவங்கினான்.


'இவனுக்கு மட்டுமே உரிமையாக இருக்க வேண்டியவள்...ஹ்ஹ்ம்ம்ம்!' அவளுள் மீண்டும் அந்தத்தீ சாம்பல் உதறக் காத்திருந்தது.  


 'பகிர்ந்து கொள்ளுங்கள்!'    
       
           குந்தியின் வார்த்தைகள் இப்போது ஒலிப்பதைப்போல      
 .         பாஞ்சாலி உணர்ந்தாள்


காதலுஞ்சரி... தாபமுஞ்சரி... கோபமுஞ்சரி....பாஞ்சாலி எப்போதுமே தீ போலத்தான்... எதுவுமே ஒரு காட்டுத் தீ போலத்தான் அவளுள் பரவும். தீயில் பிறந்தவள் அல்லவா!


காடு அர்ஜூனனுக்குள்ளும் ஒரு பாசத்தை விசிறிவிட்டுக் கொண்டிருந்தது. பாஞ்சாலி எது சொன்னாலும் கேட்கும் மனநிலையில் இருந்தானவன். நடந்து கொண்டிருப்பது விதியை நோக்கி என்பதறியாமல் இருவரும் நடந்தார்கள். ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் சுற்றி கொண்டே இருந்த பாஞ்சாலியின் கண்களில் விழுந்து சிரிக்கத்துவங்கியது அந்த நெல்லிக்கனி. உயரத்தில் ஒற்றையாய்....!


          "அர்ஜுனா! அந்த நெல்லிக்கனியைப் பாரேன்!      
           ......................அழகாக இல்லை?"


"உனக்கு வேண்டுமா பாஞ்சாலி? இதோ பறித்துத் தருகிறேன்!"


அர்ஜுனன் நினைத்தவுடன் செய்து முடித்தது காண்டீபம்! அறுந்து விழுந்த நெல்லிக்கனியை பொறுக்கக் குனிந்த அர்ஜூனனின் காதுகளில் விழுந்தது அந்த "ஐய்யோ!"


விறகு சுமந்துவந்து கொண்டிருந்த அமித்திர ரிஷியின் சீடன் பதறத் தொடங்கினான். "பன்னிரு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்... அதுவும் இந்த நெல்லிக்கனி மட்டும்தானே குருதேவனின் உணவு! அவருக்கென்று மட்டுமே படைக்கப்பட்டதை வீழ்த்தி விட்டீர்களே! அவர்வந்து சபிப்பாரே! உம்மைப்பார்த்தால் அரசகுலம்போல் தோன்றுகிறது. ஏன் இந்தப் புத்தி உமக்கு? கண்ணில் கண்டதெல்லாம் சொந்தமாக்கிக் கொள்ளும் நாகரீகவான்களின் புத்தியை காட்டுக்கு வெளியேயே கழற்றிவைத்து வரக்கூடாதா? என்ன செய்யப் போகிறீர் இப்போது?"


அர்ஜூனனும் பாஞ்சாலியும் பதறித்தான் போனார்கள். செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள். தர்மனுக்கும் செய்தி போனது. தம்பிகளோடு வந்து சேர்ந்த தர்மனும் குழம்பித் தவிக்க...


"அவசர போலிஸ்,ஆபத்பாந்தவன்... கண்ணனன்றி வேறு யார் இருக்கிறார் நம்மைக்காக்க?'      இது அனைத்தும் அறிந்த சஹாதேவனின் வார்த்தை.


பதறத்துவங்கும் போதெல்லாம் பாஞ்சாலியின் மனதில் பழைய நெருப்பும் சேர்ந்தே விசிறப்படும். இப்போதும்! குருவம்சத்தில் மணம் முடித்த எல்லாப் பெண்களுமே பாவப்பட்ட ஜீவன்கள் போல! தானும்... தன்னால்தான் இன்றைய பிரச்சினை எனினும் ஏன் வனம்புக நேர்ந்தது? புகுந்திராவிட்டால்..........


அர்ஜூனனைக் காதலித்தவளை ஐவருக்கும் மனைவியாக இருக்கச் சொல்லும்போது நானும் இதோ இந்தப் பழம் மாதிரித்தானே கிடந்தேன்! என் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு... சீந்துவாரின்றி... இந்த உலகம் ஆண்களால்தானே நிறைந்திருக்கின்றது?


குந்தியும்தானே துணைபோனாள்? மறக்கமுடியுமா அந்த வார்த்தைகளை... "பகிர்ந்துகொள்ளுங்கள்..." !
கல்யாணத்துக்கு முன்னரே கதிரவனால் கன்னித்தன்மை கழிக்கப்பட்டுக் கர்ணனைப் பெற்று அவனையும் தூக்கி வீசியபோதே பெண்மையின் உணர்வுகளையும் கழற்றி வைத்துவிட்டாள் போலும்! இல்லாவிடில் என்னைப் புரிந்திருப்பாள்.ஐவரையும் காலம் போகப்போக ஏற்றுக் கொள்ளத்துவங்கினாலும் என்னுள் அந்தத்தீ ஏன் இன்னும்...?—இது பாஞ்சாலி


பல்வேறு திசைகளிலும் சுழலத்துவங்கிய மனக்காற்றாடிக்கு அணை போட்டது கபடக்கண்ணனின் வருகை. விவரம் கேட்டறிந்தவன் கைகளால் முகவாய்க்கட்டைக்கு சிறிது நேரம் முட்டுக்கொடுத்திருந்தான். பின் வழக்கமான விஷமப் புன்னகையுடன் பேசத்துவங்கினான் விதியின் வேடிக்கை புரிந்தவனாய்.


"இதோ பார் தர்மா! தர்மம் எப்போதும் தனக்குப் பிடித்தவருடன் விளையாடிப் பார்ப்பதையே பொழுதுபோக்காய் வைத்திருக்கின்றது! இப்போது மீண்டும் உன் முறை. ஆட்டத்தைத் துவங்கியாயிற்று. நீதான் முடித்துவைக்க வேண்டும்!"


"இது என்ன சோதனை பரந்தாமா! என்ன செய்யச் சொல்கிறாய் என்னை?" தர்மனின் வாயிலிருந்து உதிர்ந்த சொற்கள் சற்றே நடுங்கின.


"ஒன்றும் பயப்படாதே தர்மா! இது அமித்திரமுனிவருக்குச் சொந்தமான கனி. அவர் வருவதற்குள் ஒட்டவைக்க வேண்டும். ஒரே உபாயம்தான் இருக்கிறது"
          "சொல் கண்ணா! செய்கிறோம். பிரச்சினை தீர்ந்தால் சரி"
"கடினமானது ஒன்றுமில்லை! “உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்” நீங்கள் ஒவ்வொருவரும் உம் மனதில் இருப்பதை ஒளிக்காமல் சொல்லுங்கள். இதுதான் உபாயம். நீங்கள் சொல்லச் சொல்ல கனி தானாகவே மேலேறும்.... ஒட்டிக்கொள்ளும்"


கண்ணன் பாஞ்சாலியை ஓரக்கண்ணால் பார்த்து லேசாய் சிரித்துக்கொண்டே சொன்ன கணத்தில் புரிந்து போனது பாஞ்சாலிக்குக்கு 'இது தனக்கு வைக்கப்பட்ட சோதனை' என்று. சிந்தனையில் ஆழ்ந்தாள்.


தருமன் மெல்ல வாய்திறந்தான்.


"நாடுநகரம் ஆளவேண்டும் என்றெல்லாம் எனக்கு ஆசை இல்லை கண்ணா!...."


மீதி ஐவரும் லேசாய்த் திடுக்கிடத் தொடர்ந்தான்... " நான் ஜெயிக்கவேண்டாம்.... எது தர்மமோ அது எப்போதும் ஜெயிக்க வேண்டும்"


'தர்மம்.... நீயா தர்மா தர்மம் பேசுவது! ஒரு பெண்ணின் காதலை வலுக்கட்டாயமாய் வரவழைத்த நீயா?' பாஞ்சாலி மனதில் தீ லேசாக சாம்பல் விலக்கி எட்டிப் பார்த்தது.


பீமன் சொன்னான் " பரந்தாமா! என்றும் நான் பிறன்மனை வேண்டேன். பிறர்வசை வேண்டேன்! பிறர் துயர் என் துயராகக் கொள்ளவே விரும்பினேன்!"


பாஞ்சாலி மனதுக்குள் புன்னகைத்தாள்


வெட்கத்தை விட்டுப் புகழ் மீது தனக்குள்ள போதையை ஒளிவு மறைவின்றி ஒப்புக்கொண்டான் அர்ஜுனன்.




" எத்தனை செல்வம் இருப்பினும் எத்தனை பலம் இருப்பினும், கல்வியின், ஞானத்தின் நிழல்படாதோரை என்றும் மதியேன் நான்" என நகுலனும், 


குந்தி என் தாயில்லை, தருமன் என் சகோதரன் இல்லை, பாஞ்சாலி என் மனைவி இல்லை, சத்தியமே தாய், தருமமே சகோதரன், சாந்தமே மனைவி என அணுகுண்டுகளை அடுக்கினான் அறிவாளி சஹாதேவன்.


கபடக் கண்ணன் பாஞ்சாலியிடம் திரும்பினான். திரௌபதி மனதில் தீ சடசடவென எரியத் தொடங்கியது.


"பலசாலிகளும், ஞானவான்களும், அன்பு மிக்கவர்களுமான ஐவரைக் கணவராகப் பெற்ற நான் அவர்கள் நன்மைதவிர வேறேது நினைக்கப்போகிறேன் கண்ணா?"


நெல்லிக்கனி அசையாதிருந்தது.


மாயக் கண்ணன் புன்னகைத்தான். "ஏன் பாஞ்சாலி... பொய் சொல்கிறாய்" வார்த்தைகளை கனமாக இறக்கினான்.


பாஞ்சாலியின் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. மெல்லக் கணவர்மார்களைப் பார்த்தாள். லேசாய்ப் பெருமூச்சும், குரூரமும் கலந்தெழ மெல்ல... மெல்ல வார்த்தைகளை எண்ணிக் கோர்க்கத் துவங்கினாள். காட்டுத்தீ பரவியது...


"ஐந்து கணவன்மார்களும் என் ஐந்து புலன்கள் போலத்தான் அண்ணா! ஆனாலும் மனிதர் ஆறாம் அறிவை நாடி ஏங்குவதுபோல என் மனமும் ஆறாவதாய் ஒருவனுக்காய் ஏங்குகிறதே.... என்ன செய்வேன்?!"


விண்ணதிர, மண்ணதிர கபடக் கண்ணன் சிரிக்கிறான்.
அண்ணண்தம்பி ஐவரும் சிலையாகினர்....அவர்களது ஆண்மையின் கர்வம் செத்திருந்தது...


அதன்பின் பாஞ்சாலியையைத் தொடும்போதெல்லாம் அவர்கள் இறந்து இறந்து உயிர்ப்பிக்கப்படுவதே விதிக்கப்பட்டதானது.


          அது சரி நண்பர்களே!
           பாஞ்சாலி தேடிய ஆறாவது கணவன் யாரென்பது
           உங்களுக்குப் புரிகிறதா?  











Sunday, May 29, 2011

சிட்டுக்குருவி





ஏனிந்தக் குருவியை

இன்னும் 

காணோம்

எனக்கு மகா செல்லம் அது

பழுப்புக் கலரில் அழுக்குக் குஞ்சு.


சின்ன இறக்கைகளில்

கறுப்புப்கோடு தெரியும்.

கண் மட்டும்

கண்ணாடிக்கல் மாதிரி

வெளிச்சத் துறுதுறுக்கும்.

உரிமையாய் கூடத்தின்

உள்ளே நுழைந்து நடக்கும்.


புத்தகம் ஒதுக்கி

அதையே கவனிக்கும் என்னை

அலட்சியப்படுத்தும்.


மாடி வெயிலில்

என் வேட்டியில் காயும்

வடகத்தை அலகால் நெம்புதல்,


தோல் உரிக்காது

நெல்லை விழுங்குதல்,

துணிக்கொடியில் கால் பற்றிக் 

காற்று வாங்குதல்,


அறைக் கண்ணாடியில்

தன்னைத் தானே 

கொத்திக் கொள்ளுதல்

அதற்குப் பிடிக்கும்.

நான் இறைக்கும்

தானியமணிகளை

அழகு பார்த்துத் தின்னும்

ரசனாவாதி.


ஏனிந்தக் குருவியை

இன்னும் காணோம்

அதுவரும் மாலை

மெதுவாய் நகருதே

கீழ்வானப் பரப்பில்

கண் விசிறித் தேடினும்

காணவில்லை, 

எங்கு போச்சோ

திடுமெனக் காதில் 

தித்தித்தது அதன் கீச்சுக்குரல்

ஜன்னல் பிளவில்

உன்னிப் பார்த்தால்

அடுத்த வீட்டு முற்றத்தில் 

மற்றொருவன் இடும் 

தானியம் பொறுக்கி

அழகு பார்க்கும் என் குருவி......


"பிசைக்காரத் தானியம் 

அதற்குப் பிடிக்கவில்லையாம்".


சிட்டுக்குருவி மற்றுமொருநாள் 

என் வீடு தேடி வரக்கூடும் 

ஆனால் 

எனக்குள் இருக்கும் 

கடவுள் காணாமல் போயிருந்தால்?..........

Friday, May 27, 2011

வாழ்க்கை









எத்தனையாவது
மனிதனுக்கான
சவப்பெட்டியிது?
எத்தனையாவது
மரத்திலிருந்து
செய்யப்பட்ட
சவப்பெட்டியிது?
எத்தனையாவது மனிதன்
உருவாக்கும்
சவப்பெட்டியிது?

தெரியாது.

பிறப்பின் காரணம்
ஏதுமில்லையெனில்
இறப்பின் காரணமும்
கேள்விக்குறிக்குள்

பிறக்கையில்
உன்னருகில்
 நீ
யாரெனத்
தெரியாத
நான்கு பேர்.
போகும்போது
நீ
யாரெனத்
தெரிந்த
நான்கு பேர்.


யார் யாரோடோ
பழகி
யார் யாரோடோ
விலகி
யார் யாரோடோ
வாழ்ந்து
யாருமேயற்ற
ஒருநாளில் பிரிந்து
எல்லோரின்
நினவிலிருந்தும்
மக்கிப் போகும்
பேரவஸ்தைக்கு
யாரோ வைத்த பெயர்
"வாழ்க்கை"

Wednesday, May 25, 2011

பெரிய துறவி



ஒருமுறை ராமகிருஷ்ண பரமஹம்சருடன் செல்வந்தர் ஒருவர் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர், “சுவாமி, கடவுளுக்காகத் தங்களுடைய வாழ்க்கையையே துறந்து விட்டீர்களே?!” என்று நக்கலாகக் கேட்டார்.

அதற்கு ராமகிருஷ்ணர் புன்னகையுடன், “நான் ஒரு துறவியாக இருக்கலாம். ஆனால் என்னைவிட பெரிய துறவி நீங்கள்தான்!” என்று கூறினார்.

இதைக் கேட்ட செல்வந்தருக்கு தூக்கிவாரிப் போட்டது. “உங்களை விட நான் பெரிய துறவியா? எப்படி?!” என்று திகைப்புடன் கேட்டார்.

ராமகிருஷ்ணர் சிரித்துக் கொண்டே, “ஐயா, நானோ கடவுளுக்காக என்னுடைய வாழ்க்கையைத்தான் துறந்தேன். ஆனால் நீங்களோ, சுகபோக வாழ்க்கைக்காக கடவுளையே துறந்து விட்டீர்களே…. எனவே, என்னைவிட நீங்கள்தான் பெரிய துறவி!” என்றார்.

இதைக் கேட்டதும் செல்வந்தர் வெட்கத்துடன் தலைகுனிந்து கொண்டார்.

Tuesday, May 24, 2011

துக்கப் படுகிறவன் பாக்கியவான்


மாஸ்டர்,  துரோகங்களை எப்படி ஜீரணிப்பது?    ஆண் அழக்கூடாதா?  இந்த துரோகங்களை எல்லாம் மறந்து எப்படித் தியானத்தில் ஈடுபடுவது?  ஆசைதான் துன்பத்திற்குக் காரணமென்றால் ஆசைப் படாமல் இருக்க முடியுமா?.....அக்சய்


உலக ஆசைகளுடனேயே எல்லா உலக வசதிகளையும், போகங்களையும் பெற்றுப் பற்றற்று வாழ்வது என்ற கருத்து மிகவும் புதியது. இது சித்தர் போகருடையது.
நம்முடைய உறவுகளும், நண்பர்களும், நம்மிடம் வேலை செய்பவர்களும் நமக்கு இழைக்கின்ற துரோகங்களாலும், ஏமாற்றங்களாலும் நமது மனம் பக்குவப்படுகிறது என்கிறார் போகர்.

அது மிகவும் உண்மை..அக்சய்!

சில அஹோரிகள் உடல் முழுவதும் ஊசியைக் குத்திக் கொள்கிறார்கள். 
சிலர் குத்திக்கிழிக்கின்ற முள் படுக்கையின் மீது படுத்துப் புரளுகிறார்கள். சிலர் இரும்பிலான ஆணிகளை விழுங்கிக் காட்டுகிறார்கள்.

இந்த யோக சாதனைகள் எல்லாம் உடலின் புறத்தோற்றம், அன்னமயகோசம் பதப்படுத்தப்பட்டு, பக்குவம் பெற்றுவிட்டதைக் குறிக்கின்றன.

கடும் பயிற்சிகளைத் தாங்கிக் கொள்வதன் மூலம் சரீரம் யோகம் செய்வதுபோல், பிறர் நமக்கு இழைக்கும் துன்பங்களை, துரோகங்களைத் தாங்கிக் கொள்வதன் மூலம், மனம் பயிற்சி பெறுகிறது,உள்ளம் தவம் செய்கிறது.

ஆரம்பத்தில் சிறிய துன்பமும், துரோகமும் கூட மலையளவு பெரிதாகத் தோன்றுகிறது.
அது தொடரத் தொடர மனம் மரத்துத் தவத்திற்குத் தயாராகிறது..

செல்கிற பாதையில் எதையும் எதிர் கொள்கிற சக்தி மனதிற்கு வந்துவிடுகிறது.

துன்பங்களாலும், துரோகங்களாலும், சுற்றத்தைக் கற்றுக் கொண்டவன் மெத்தப்படித்த அறிஞனை விடச் சிறந்த ஞானியாகி விடுகிறான்.

ஆரம்பகாலத் துன்பமும், துரோகமும் அழுகையை உண்டாக்குகிறது.

"ஆண்பிள்ளை அழக்கூடாதாம்".... இது அகந்தை உள்ளவவன் கூறியதாகவே எனக்குப் படுகிறது. "அழத்தெரியாதவன் ஆன்மீகத்திற்கிற்கு அருகதையற்றவன்" என்கிறார் பகவான் ஓஷோ. 

தொடர்ந்த துன்பங்களாலும், துரோகங்களாலும், மனம் பரி பக்குவ நிலை அடைகிறது, கண்ணீர் விடுவதைக்கூட மறந்து போய், வெறுப்பும் விரக்தியும் கலந்த சிரிப்பு வருகிறது. மன மரணம் இயல்பாகவே நிகழ்கிறது.

இதனால்தான் "துன்பப்படுகிறவன் பாக்கியவான் பரலோக சாம்ராஜ்யம் அவனுக்குரியது" என்றார் யோகி இயேசு. 
துயரங்களில் புதைந்து எழுந்தவனுக்கு எந்தத் துயரம் வந்தாலும் சிரிப்பது பழக்கமாகி விடுகிறது.
இதுவே ஞானம் வந்துவிட்டதென்பதற்கு அடையாளம்.


எங்கோ படித்த ஞாபகம்!ஒரு மனிதனுக்கேற்பட்ட துயர அனுபவமாம் இது!
ஒரே நேரத்தில் வரும் துயரங்களின் வரிசையைப் பாருங்கள்.

பசு மாடு கன்று போட்டதாம்.

அடாத மழை பெய்ததாம்.

வீடு விழுந்து விட்டதாம்.

மனைவிக்குக் கடுமையான நோய் வந்ததாம்.

வேலைக்காரன் இறந்து போனானாம்.

வயலில் ஈரம் இருக்கிறது.

விதைக்க வேண்டுமென்று ஓடினானாம்.

வழியில் கடன்காரர்கள் மடியைப் பிடித்து இழுத்தார்களாம்.

“உன் மகள் இறந்து போனாள்” என்று சாவுச் செய்தியோடு ஒருவன் வந்தானாம்.

இந்த நேரத்தில் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்து சேர்ந்தார்களாம்.

பாம்பு அவனைக் கடித்துவிட்டதாம்.

நில வரி வாங்க அதிகாரிகள் வந்து நின்றார்களாம்.

குருக்களும் தட்சிணைப் பாக்கிக்காக வந்திருக்கிறாராம்.

(ஆவீன மழைபொழிய இல்லம் வீழ

அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாக

மாவீரம் போகுதென்று விதைகொண் டோட

வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்

சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத்

தள்ளவொணா விருந்துவர சர்ப்பந் தீண்டக்

கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்

குருக்கள்வந்து தட்சணைகள் கொடு என்றாரே!)



ஒரே நேரத்தில் இவ்வளவு வந்து சேர்ந்தால் ஒருவனுக்கு அழுகையா வரும்?

இவ்வளவு துன்பங்களையும் சந்தித்த பிறகு, ஒருவன் மனம் மரத்துப் போகும்.

மரத்துப்போன நிலையில், துன்பங்களைக் கண்டு பிடிக்காமல் அலட்சியப்படுத்தத் தோன்றும். மன மரணம் இயல்பாகும்.

“அச்சமில்லை அச்சமில்லை” என்ற பாரதியின் தைரியம் நமக்கும் வந்துவிடும்.

பார்ப்பதெல்லாம் பரம்பொருளாகத் தோன்றும்; பேராசை அடிபட்டுப் போகும். தீக்குள் விரலை விட்டாலும் நந்தலாலனை தீண்டியதாகத் தோன்றும். எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா? என எக்காளமிடலாம்.

பல ஆண்டுகள் இயம, நியமங்களுடன் யோகம் செய்து பெறுகிற ஞானத்தை விட இந்த ஞானம் அழுத்தமானது; ஆழமானது; உண்மையானது; உறுதியானது.

துரோகங்களும், துன்பங்களும்தான் ஒரு மனிதனைப் பக்குவம் பெற்ற ஞானியாக்குகின்றன.

ஞானம் என்பது துரோக, துன்ப அனுபவங்களிலிருந்துத் திரட்டப் பெற்ற தொகுப்பு நூல் என்று யாராவது என்னிடம் கூறினால் அதற்கு வழிமொழிகிற முதல் நபர் நானாகத்தான் இருப்பேன்.

துரோக, துன்ப அனுபவங்களே உண்மையான பட்டறிவை உண்டாக்குகின்றன. 

வயிற்றிற்கு ஆகாத உணவைச் சாப்பிட நேரிடுகிறது. வயிறு கலாட்டா செய்கிறது. பேதியாகிறது, வாந்தியாகத் தள்ளுகிறது. மருத்துவர் உதவியுடனோ, உதவியின்றியோ சரியாகிப் போகிறது. ஆனால் மனத்திற்கு ஏற்காத பல விஷயங்களை உள்ளே செலுத்தி, இவற்றை ஜீரணிக்காமல் அல்லது வெளித்தள்ளாமல் நிரந்தர குப்பைத் தொட்டிபோல் மனத்தை ஆக்கிக் கொள்கிறோம்.

மகிழ்ச்சியான கணங்களிலெல்லாம் இந்த அடக்கி வைத்தத் துரோகத் துன்பங்களைக் கவனத்திற்குக் கொண்டு எத்தகைய மகிழ்ச்சியையும் துடைத்து எடுத்துவிடுகிறோம். 

நிரந்தரக் கவலைகளை ஜீரணிப்போம். மாற்றமுடியாத கவலைகளை ஏற்றுக்கொள்ளுவோம்.

‘மாற்றங்களைத்’ தேடுவோம். 

மிகப் பெரிய இழப்பா? கீதையின் தத்துவத்தை நம்புவோம். ‘என்ன கொண்டுவந்தோம் இழப்பதற்கு’ 

இழந்த உறவா? நட்பா? புதுப்பிப்போம்.


‘உறவுகள் துரோகம் பண்ணிட்டாங்க" என்ன செய்யலாம் என்கிறீர்களா அக்சய் ?  என்ன செய்வது, நாம் உறவுகளைத் தேர்ந்தெடுத்த விதம் அப்படி . இது கவலை அல்ல! அறியாமையால் செய்த தவறுக்குத் தரப்பட்ட விலை!

சிறு நரி துரோகம் செய்ததற்காகச் சிங்கங்கள் சோர்ந்து விடலாகாது. இந்த துரோகங்களும், துன்பங்களும் குருமார்கள் நமக்குக் கற்றுக் கொடுப்பதற்காக நடத்தியப் பயிற்சிப்பட்டறை எனக் கொள்வோம்.

நமது புகைவண்டி போய்க்கொண்டே இருக்கட்டும்.  ஏறுபவர்கள் ஏறிக்கொள்ளட்டும்.   இறங்குபவர்கள் இறங்கிக் கொள்ளட்டும்.  நமது இலட்சியப் பயணத்திற்கு குருமார்கள் துணை இருப்பார்கள்.
                                     கல்லான நெஞ்சே கவலைக் கருத்தாகிப்பொல்லாப் பவக்கடலில் போகாதே-எல்லாம்செலக்குமிழி என்றுநினை செம்பொனம் பலத்தைக்கலக்கமறப் பார்த்தே கரை.  -  பட்டினத்தார்      

Saturday, May 21, 2011

பைத்திய மருத்துவம்


  




கண்கள் மூடி
கவிழ்ந்து படுத்து
உறக்கமற்று
நீள்கிற இரவு.


கண்கள் விரித்து
காண்கிற காட்சி
என் உருவிலேயே
நிறைகிற நினைவு.


செய்கிற வேளையில்
சிந்தையின்றி
என்னைச் சுற்றியே
விரிகிற எண்ணம்.


உடல் உறங்கி
உள்ளம் உறங்கா
காலத்தின் நீட்சி.


விடிய விடிய
என் பெயரை
நான் 
மட்டுமே
உச்சரிக்கும்
விந்தை.


இவையெல்லாம்
என்னிடத்தில் 
சொல்கிறது
நான்
எனது மையம் நோக்கி 
செல்கிறேனென்று!.

மருத்துவரோ எளிதாய்
சொல்லிவிட்டார்
நீ சைக்கோ
ஆகி விட்டாயென்று!


வாழ்க! மருத்துவம்!

Saturday, May 14, 2011

புத்த பௌர்ணமி




தேடி அலைந்ததில் மிகவும் களைப்பாக இருந்தது அவனுக்கு. 


வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து போயிருந்தான். களைப்பாற நிழல் தேடினான். அவனது நிழலைத்தவிர வேறெதுவும் கண்ணில் படவில்லை.


களைப்புடன் சில அடிதூரம் நடந்தான். கண்காணும் தொலைவிலிருந்தது அந்த மரம்.   தாயைக் கண்ட சேய் போல உற்சாகமாக நடந்தான். களைப்பு காணாமல் போயிருந்தது.


நிம்மதியாய் மரத்தடியில் அமர்ந்தான். மரத்தை நன்றியோடு பார்த்தான். 'நான் தினமும் வெயிலில் அழைகிறேன்.  களைப்பாற நிழல் தேடுகிறேன்.   ஆனால் இந்த மரம்... அதே இடத்தில்தான் இருக்கிறது. தினமும் வெயிலில் காய்கிறது. ஆனால் மற்றவர்களுக்கு நிழல் கொடுக்கிறது.    பலருக்கும் நிழல் கொடுக்கும் மரம் வெயிலில் காய்ந்துதானே ஆகவேண்டும். அதுவுமில்லாமல் இது நம்மைப்போல அலைவதில்லையே! தேடி அலைந்தால்தான் களைப்புவருமோ?. இருந்த இடத்திலிருந்தே இந்த மரத்துக்கு எல்லாம் கிடைத்துவிடுகிறதே!. கொடுத்துவைத்த மரம்... அப்படியே சிந்தனையில் ஆழ்ந்து உறங்கிப்போனான்.


திடீரென்று அவன் முகத்தில் ஏதோ விழுந்தது. விழித்துக்கொண்டான்.


"என்ன நண்பா களைப்பு தீர்ந்ததா?"


குரலுக்குச் சொந்தமானவரைச் சுற்றிலும் தேடினான்.


"நான்தான் மரம் பேசுகிறேன்"


மரம் பேசுமா? ஆச்சரியத்துடன் மரத்தைப் பார்த்தான்


"இது கனவா? நனவா?"


"இது கனவேதான். நீ இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறாய். கொஞ்சம் பொறு அதற்குள் விழித்துவிடாதே!"


"விழித்துக்கொண்டால் என்னவாம்?"

"நீ தேடும் விடை உனக்குக் கிடைக்காமலே போய்விடும்"


"நான் தேடும் விடையா?"


"ஆம். நீ எதைத் தேடி அலைகிறாய்?"


"உலகமக்களெல்லாம் ஏன் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்? அவர்களுக்கு நோய், மூப்பு, பிணி இதெல்லாம் ஏன் வருகின்றன என்ற காரணங்களைத் தேடி அலைகிறேன்"


"தேடினால்தான் கிடைக்குமா??"


" தேடினால்தானே தேவையானது கிடைக்கும்?"


மரம் குலுங்கிச் சிரித்தது. அதனால் முதிர்ந்த இலைகள் சில உதிர்ந்தன. உதிர்ந்த இலைகளைப் பற்றி அது கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. சிரித்துக்கொண்டே சொன்னது, "என்னைப்பார்! நான் எதைத் தேடி அலைகிறேன்? எனக்கு எல்லாமே இருந்த இடத்திலிருந்தே கிடைத்துவிடுகின்றன."


"உனக்கு இங்கே என்ன கிடைக்கிறதோ அதையே வைத்துக் கொள்கிறாய். ஏனெனில் உன்னால் எதையும் தேடி அலையமுடியாது"


"ஆமாம். இங்கு என்ன கிடைக்கிறதோ அதையே வைத்துக் கொள்கிறேன். அதே சமயம் என்னிடம் என்ன இருக்கிறதோ அதைக் கொடுத்தும் விடுகிறேன், இப்போது நான் உனக்கு நிழலை கொடுப்பதுபோல. எது கிடைத்தாலும், எதை இழந்தாலும் நான் சும்மாவே இருக்கிறேன். நான் நானாகவே இருக்கிறேன். ஆனால் நீ நீயாகவே இருப்பதில்லையே ஏன்?"


"நான் நானாக இல்லையா? என்ன சொல்ல வருகிறாய்? எனக்குப் புரியவில்லை."

"நான் எதைத் தேடினாலும் என்னிலிருந்து தேடுகிறேன். எனக்குள்ளிருந்து தேடுகிறேன். ஆகவே நான் நானாக இருக்கிறேன். ஆனால் நீயோ எதைத் தேடினாலும் வெளியிலிருந்து தேடுகிறாய். அடுத்தவனின் அனுபவத்திலிருந்து தேடுகிறாய். அடுத்தவனின் அனுபவத்தைக் கூட உன் அனுபவமாகவேப் பார்க்கிறாய். அதனால்தான் சொல்கிறேன் நீ நீயாக இல்லை"


"அப்படியானால் விடையை என்னிலிருந்தே தேடச்சொல்கிறாயா?"


"ஆமாம். இப்போது நீயும் மற்றவர்களைப்போல அவதிப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறாய்?"


"உண்மைதான். நான் ஒரு இளவரசன். மனைவி மக்களோடு நலமாகத்தான் இருந்தேன். எனக்கு எல்லா சுகங்களும் கிடைத்துக் கொண்டுதான் இருந்தன. அப்போது எனக்கு எந்தக் குறையும் இருந்ததில்லை. ஆனால் இப்போது நானும் மற்ற சாதாரண மக்களைப்போல் உடல் மெலிந்து அலைந்து கொண்டிருக்கிறேன். அலைந்தால்தானே எதுவும் கிடைக்கும்?"


"நல்ல நிலையிலிருந்த உன் வாழ்க்கை தற்போது இல்லாமல் போனதற்கு யார் காரணம்?"


"நான்தான். உலக மக்கள் நிம்மதியாக இருக்கவேண்டுமென்று ஆசைப்பட்டேன். அதற்காக வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். இப்போது அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். சிறிது சிறிதாக அழிந்துகொண்டிருக்கிறேன்."


"அப்படியானால், உன் அழிவிற்கு உன் ஆசைதானே காரணம்?"

"ஆமாம்"


"அப்படியானால் மற்றவர்களின் அழிவிற்கும் அவர்களின் ஆசைதானே காரணம்?"


ஆச்சரியத்தில் எழுந்தபடி, "அட ஆமாம். அப்போ ஆசைதான் அழிவிற்குக் காரணமா?"

"ஆம் நண்பா! ஆசைப்பட்டது கிடைச்சா தெம்பு. கிடைக்கலேன்னா வம்பு. அதனால எப்பவும் உன்னை மட்டுமே நீ நம்பு."

"ஆனால் ஆசைப்படாமல் எப்படி வாழ முடியும்?"


" நீ இப்போது எதன்மீது நிற்கிறாய்?"


"ம்ம்ம் . . . பூமியின் மீது"


"அதாவது நீ உலகத்தின் மீது நின்று கொண்டிருக்கிறாய், சரிதானே?"


"ம்"


"உலகமே உன் காலடியில் இருக்குபோது எதற்காக நீ ஆசைப்படுகிறாய்? எல்லாமே உன்னுடையது எனும்போது எதற்கு ஆசைப்படுகிறாய்? ஆசை என்பது தேவையற்றதுதானே? தேவையற்ற ஆசை அழிவைத்தானே தரும்."


அவன் கண்களை மூடியபடி, "ஆஹா. அற்புதம்"


"இனி நீ தூங்க வேண்டியதில்லை. நீ விழித்துக் கொண்டாய்." என்ற மரம் குழுங்கியது. தூங்கிக் கொண்டிருந்த அவன் முகத்தில் இலைகள் விழுந்தன.


இலைகளை எடுத்தபடி அவன் எழுந்தான். அவன் ஒளி பெற்றிருந்தான்.

அவன் அமைதியாக தியானத்தில் அமர்ந்தான். முழு நிலவு தெரிந்தது. முழு நிலவில் அவன் முகம் தெரிந்தது. சித்தார்த்தன் புத்தி தெளிந்த புத்தனாக மாறிவிட்டான். 




புத்த பூர்ணிமா.

                                                           
                                                           
புத்தம் சரணம் கச்சாமி 
சங்கம் சரணம் கச்சாமி 
    

Monday, May 9, 2011

பயணங்கள் முடிவதில்லை










எதையெதையெல்லாமோ
சேர்த்து வைக்கிறோம்
தேவைப்படலாமென.
எதுவுமே
தேவையற்றுப்போவதாக
முடிவுற்று
நிறைகிறது பயணம்.

எதுவும் பேசமுடிவதில்லை
பயணிக்கையில்.
பேசாதும்
இருக்கமுடிவதில்லை


வாழமுடியாத போதும்
வாழ்ந்தபடி இருப்பது போல.
வாழமுடியாத போதும்
வாழ்கிறோம்.


செல்ல விரும்பாதபோதும்
செல்கிறோம்.
வாழ்க்கை நம் கையில்
என்றாலும்
வாழ்வதும் செல்வதும்
நம் கையில் இல்லை.

பயணங்கள்
துறவிகளை உருவாக்குகின்றன.
அதன்பின்
பயணங்களைத்
துறவிகள் உருவாக்குகின்றனர்.


உணரமுடிவதில்லை
துறவிகளுக்குள் நீளும்
பயணங்களையும்
மனதிற்கடியில்
உருளும் கற்களையும்.

Sunday, May 8, 2011

வஜ்ராயுதம்









இந்திரனின் வஜ்ராயுதம் மிகவும் பலம் வாய்ந்தது என்பது நமக்குத் தெரியும். வஜ்ராயுதத்திற்கு அவ்வளவு சிறப்பு, மற்ற ஆயுதங்களுக்கு இல்லாத வலிமை வஜ்ராயுதத்திற்கு எப்படி வந்தது தெரியுமா?


ததீசி முனிவர், பேராசையோ பொறாமையோ துளியும் இல்லாதவர். பாற்கடலைக் கடையும் பணி நடந்தபோது அவ்வளவு தேவர்களும், அஷ்டதிக் பாலர்களும், சகல தேவதைகளும் தாங்களது விசேஷமான சக்திகள் அடங்கிய ஆயுதங்களை ததீசி முனிவரிடம் தான் ஒப்படைத்தனர்.


ததீசி முனிவர் மிகசிறந்த ஆசாரசீலர். தன்னை நம்பி , பிறகு வந்து பெற்றுக் கொள்வதாகக் கூறி ஒப்படைத்த ஆயுதங்களைக் கண்போல் காக்க விரும்பினார் ஆனால் பாற்கடல் கடையப்பட்டு அமுதமும் கிடைத்து விட்ட நிலையில் தேவர்களுக்கு இனி அந்த ஆயுதங்கள் தங்களுக்குத் தேவையில்லை என்று தோன்றிவிட்டது.


ததீசிமுனிவரிடம் வந்து ஆயுதங்களைத்திரும்பக் கேட்கவே இல்லை. வெகு நாள்வரை பாதுகாத்து வைத்து இருந்த முனிவர் யாரும் வந்து கேட்காத நிலையில், அவற்றைத் தூக்கி எறிய மனமில்லாமல், அவ்வளவு ஆயுதங்களையும் பொடியாக்கி, அதை ஒரு உருண்டையாகச் சுருக்கி விழுங்கி, அந்த சக்திகள் அனைத்தும் தனதுமுதுகெலும்பில் உருக்கொள்ளுமாறு செய்து கொண்டார்.

இதனால் தான் அவரது முதுகெலும்பு உலகில் அவ்வளவு ஆயுதங்களாலும் ஏதும் செய்ய இயலாத ஒரு சிறப்பு கொண்டதாக மாறி இருந்தது.


அனைத்து ஆயுதங்களும் உருத்திரண்ட ததீசி முனிவரின் முதுகெலும்பால் ஒரு ஆயுதம் செய்தால், அந்த ஆயுதமே விருத்திகாசுரனை அழிக்கும் என்று விஷ்ணுமூர்த்தி இந்திரனுக்குக் கூறினார்.


தேவலோக சிற்பி விஸ்வகர்மா ததிசி முனிவர் உயிர் தியாகத்திற்கு பிறகு அவரது முதுகெலும்பிலிருந்து சக்தி வாய்ந்த வஜ்ராயுதத்தை வடிவமைத்து இந்திரனுக்குக் கொடுத்தார்.

சரி நண்பர்களே!  
இந்தக் கதையிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?

Saturday, May 7, 2011

சவப்பெட்டி







எத்தனையாவது
மனிதனுக்கான
சவப்பெட்டியிது?
எத்தனையாவது
மரத்திலிருந்து
செய்யப்பட்ட
சவப்பெட்டியிது?
எத்தனையாவது மனிதன்
உருவாக்கும்
சவப்பெட்டியிது?

தெரியாது.

பிறப்பின் காரணம்
ஏதுமில்லையெனில்
இறப்பின் காரணமும்
கேள்விக்குறிக்குள்

பிறக்கையில்
உன்னருகில்
 நீ
யாரெனத்
தெரியாத
நான்கு பேர்.
போகும்போது
நீ
யாரெனத்
தெரிந்த
நான்கு பேர்.


யார் யாரோடோ
பழகி
யார் யாரோடோ
விலகி
யார் யாரோடோ
வாழ்ந்து
யாருமேயற்ற
ஒருநாளில் பிரிந்து
எல்லோரின்
நினவிலிருந்தும்
மக்கிப் போகும்
பேரவஸ்தைக்கு
யாரோ வைத்த பெயர்
"வாழ்க்கை"

Friday, May 6, 2011

பாதாளக்கரண்டி





கிணற்றில் தொலைந்ததைத்
தேடிச் செல்கிறது
பாதாளக்கரண்டி.

தொலைந்ததெல்லாம்
கிடைத்ததில்லை.
என்றோ தொலைந்தது
எல்லாம் இன்றுதான்
கிடைக்கிறது.

தாத்தா தவறவிட்ட
கண்ணாடி-
பாட்டி தொலைத்த
காசிச் செம்பு-
காக்கா தள்ளிவிட்ட
வெள்ளித் தட்டு
இவை எல்லாம்
தாத்தா பாட்டியே
தொலைந்தபின் தான்
கிடைத்தது.

மெதுவாய்த்துளாவி
தட்டுப்படுகிறதா 
எனத் தேடிக்
கற்பனையில் 
பிடித்தெடுத்து
வெளியில் கொண்டுவர
கண்டிப்பாய் வேண்டும் 
மனதுள்
ஒரு பாதாளக்கரண்டி.

தொலைந்தது 
கிடைக்கலாம்.
கிடைத்தது 
தொலையலாம்.
தேடினால் 
கிடைக்கலாம்.
கிடைக்காமலும் 
போகலாம்.

ஏதோ ஒன்றை 
இழப்பதும்
ஏதோ ஒன்றைப் 
பெறுவதும்தான்
பாதாளக்கரண்டி சொல்லும்
தத்துவம்.

இழந்தது கிடைக்காத போது
கிடைத்தது தரும்
மனமாற்றம்தான்
பாதாளக்கரண்டிபோதிக்கும் 
ஞானம்.

அது போகட்டும்,
உங்களிடம் 
இருக்கிறதா 
பாதாளக்கரண்டி?

மூக்குப் பொடிச் சித்தர்





பௌர்ணமி, கிரிவலம், ரமண பகவான், சேஷாத்ரி ஸ்வாமிகள், மலை, குரங்கு, மயில்,தீபம், நிஜ மஹான்கள், போலி சாமியார்கள், கொளுத்தும் வெயில், கடும் பனி, குண்டும் குழியுமான தெருக்கள் ..... இது திருவண்ணாமலை.          
பித்தன், பைத்தியம், சித்தன், சாமி, என்று பலரும் இங்கே சுற்றித் திரிவார்கள் .

வெறித்த பார்வை, ராஜநடை, கையில் ஒரு தடித்த கம்பிளி, வெளுத்த தாடி, சிறுத்த உடல், வினோதமான ஆடை, காவிவேஷ்டி மேல் வேறு ஒரு கல்யாண வேஷ்டி,(வெள்ளை வேஷ்டியை ஒரு 10 வருடங்கள் துவைக்காமல் விட்டுவிட்டால் இருக்கும் நிறம், கருப்பு, காபி மற்றும் சிமெண்ட் கலர் கலந்த ஒரு புது நிறம்) சட்டைக்கு பதில் ஒரு ஸ்வெட்டர் சும்மா youth style ல button ஐ அவுத்து விட்டுவிட்டு super ஸ்டார்ஐ மிஞ்சும் அளவுக்கு body language, தோரணை ... (போதும்னு நினைக்குறேன்) இது தான் மூக்கு பொடிச் சித்தர்

திடமான மனம் உள்ளவர்கள் அருகே செல்லலாம்.. சில சமயம் அடி, உதை, கல்லெறி, அசிங்கமான வசவு, முறைப்பு, அரிதாக சிரிப்பு, அல்லது வேறு பக்கம் திரும்பிக் கொண்டு முகத்தை மறைத்துக் கொள்வது இவரின் பாவனைகள்.

இவரை பற்றி அறிந்தவர் சிலர், அதில் சில பிரபலங்களும் உண்டு. யாராக இருந்தாலும் அடி உதை திட்டு நிச்சயம். இவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது அவர் நினைத்தால் வருவார், விரும்பினால் சாபிடுவார், இல்லையேல் காதில் ரத்தம் வரும் அளவுக்கு திட்டுவார். இவரை தெரிந்தவர்கள் இதை மகிழ்ச்சியாக ஏற்று கொள்வார்கள்.... நல்லது நடக்கும். புரியாத பலர் லூசு, பைத்தியம் என்று நடையை கட்டுவார்கள். சுத்தமான கிராமத்தனத்துடன் இவர் பேசுவார். இப்படி ஒரு ஜீவன் எதற்காக இப்படி சுற்றி வருகிறது? இவரின் பின்னணி என்ன? எங்கே தங்குவார்? எதை சாப்பிடுவர் எப்போது குளிப்பார்? ஒரு பைசா குட இல்லாமல் ஒரு ராஜாவைப் போல சுற்றி திரியும் இவர் பித்தனா? சித்தனா?  சிவமா ????

சிவ தாளம் போட்டு இசை எழுப்பி டமாரம் அடிக்கும் இவரைப் பார்க்க வேண்டும் என்றால் நீங்களும் கிரிவலப்பாதையில் சுற்றித் திரிய வேண்டும், WONDERING SWAMY OF ARUNACHALA HILLS என்பதுதான் இவரின் முகவரி. சில சமயம்அலையா விருந்தாளியாக சில விடுதிகள் அல்லது டீ கடையில் ராஜபாட்டை நடத்திக்கொண்டிருப்பார்






சித்தர் என்றும் சிறியர் என்றும் அறியொணாத சீவர்காள்
சித்தரிங்கு இருந்த போது பித்தரென்று எண்ணுவீர்
சித்தர் இங்கு இருந்துமென்ன பித்தாயிருப்பீரே
அத்தன் நாடும் இந்தநாடும் அவர்களக்கெலாமோன்றே.