Total Pageviews

Monday, January 31, 2011

மூடநம்பிக்கை-ஹைக்கூ



குறுக்கே சென்றதால்


சகுனம் சரி இல்லை


பேருந்தில் அடிபட்டது


"பூனை"



இதெல்லாம் சைவ உணவா?



புலால் உணவு/மிருக பகுதிகள் தவிர்த்த அனைத்தும் சைவ உணவு என்பதும், தாவரங்கள் சார்ந்த, செடிகளில் இருந்து கிடைக்கும் தானியங்கள், காய் கறிகள், பழங்கள், மர வகை உணவுகள், பால், வெண்ணை, நெய் அனைத்தும் சைவ உணவுகள் என்பதும் பொதுவான கருத்தாகும். இது சரிதானா?

ஐஸ் க்ரீம்கள், சாக்லேட்டுகள், கேக்குகள் போன்றவை குளிர் சாதனப் பெட்டிக்குள் இல்லாத சமயங்களில் அதன் திடத் தன்மையை நீடிக்க ஜெலாட்டின் என்ற மிருகக் கொழுப்பு வகையும்,முட்டையும் சேர்க்கப்படுகிறது.

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அப்படியே சாப்பிடும் உணவு வகைகள்(ஃப்ரெஞ்சு ஃப்ரைஸ் போன்றவை) பெருப்பாலும் மாட்டுக் கொழுப்பு கலந்த எண்ணையில் தான் பொறித்து எடுக்கப் படுகிறது.

துரித உணவு வகைகளின் (பாஸ்ட் புட்) அடிப்படையான சீஸில் கன்று குட்டியின் குடலிலிருந்து எடுக்கப்படும் என்சைம்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பால் சார்ந்த இனிப்பு வகைகளின் (மில்க் ஸ்வீட்) மேல் ஒட்டப்பட்டிருக்கும் பளபளப்பான வெள்ளி இழைகள் (சில்வர் லேயர்) மெல்லியதாக தயாரிக்க மாட்டின் குடல் உபயோகப்படுத்தப் படுகிறது. மாட்டின் சூடான இரண்டு குடல் தட்டுகளுக்கு இடையே வெள்ளி மூலப்பொருள் வைக்கப்பட்டு அழுத்தம் கொடுத்து மெல்லிய இழைகளாக மாற்றப்படுகிறது

ஆப்பிள் போன்ற பழங்கள் நீண்ட நாள் வாடாமல் இருக்க மெழுகும்,கொழுப்பும் கலந்த கலவை பூசப்படுகிறது

தாணியங்கள், காய்கறிகள் நல்ல விளைச்சலைத் கொடுக்கவும் நெடு நாள் கெடாமல் இருக்கவும் அவற்றின் விதைகளில் மரபணுச் சோதனைகள் மூலம் மிருக மூலக்கூறுகள், அணுக்கள் (டி என் ஏ) சேர்க்கப்படுகின்றன.

இப்பொழுது சொல்லுங்கள்; சைவ உணவு என்று ஒன்று உள்ளதா என்ன?!!


புலால்புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுகிறீர்?
புலாலை விட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்கனே?
புலாலுமாய்ப் பிதற்றுமாய்ப் பேருலாவும் தானுமாய்ப்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன் காணும் அத்தனே!-
                                                                                                                     சிவவாக்கியார்-

                                                                                                            

பேஸ் மேக்கர்








இருதய ஆபரேஷன் செய்து கொள்பவர்களில் சிலர் ‘பேஸ் மேக்கர்’ என்னும் கருவியை உடம்போடு பொருத்திக் கொள்கிறார்கள். இந்த பேஸ் மேக்கரின் வேலை என்ன தெரியுமா?

ஒரு மனிதனின் இருதயத் துடிப்பு சீராக இருக்க வேண்டும். ஆரோக்கியமான மனிதர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் இதய நோயாளிகளின் இருதயத் துடிப்பு தினத்துக்கு தினம் மாறுபட்டுக் கொண்டிருக்கும். இதை சரி செய்ய கண்டுபிடிக்கப்பட்ட கருவியின் பெயர்தான் பேஸ் மேக்கர். 


இதனுடைய வேலை, ஒரு இதய நோயாளியின் இதயத் துடிப்பை சம்பந்தப்பட்ட நோயாளியின் உடல் நிலைக்கு ஏற்ப தானே சரி செய்து கொண்டு கூடுதலாகவோ... குறைவாகவோ தானாகவே இயங்கும். பேஸ் மேக்கர் நிமிடத்துக்கு 60 முதல் 140 தடவைகள் நோயாளியின் இருதய நிலைமைக்கு ஏற்றவாறு துடிக்கும். இதன் காரணமாக நோயாளிகள் தங்களின் வழக்கமான பணிகளை சிரமம் இல்லாமல் செய்து வரலாம்.

பேஸ்மேக்கர்கள் இப்போது புதிது புதிதாய் வந்து கொண்டிருக்கின்றன. சிறிய பேட்டரியில் இங்கும் இந்த பேஸ் மேக்கரில் உள்ள மோட்டார் அதிர்வுகளை உண்டாக்கி இதயத் துடிப்பை சீராக வைத்திருக்கும் பணியைச் செய்கிறது. இதய நோயாளி ஒருவருக்கு இந்த பேஸ் மேக்கர்கள் பொருத்தும் போதே அதில் உள்ள ‘கம்ப்யூட்டர் சிப்’பில் கீழ்கண்ட தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. 


1.இதய நோயாளியின் இதயத் துடிப்பை ஒவ்வொரு நிமிடமும் கணக்கிட வேண்டும். 

2. இதயத் துடிப்புகள் கூடும்போதோ குறையும்போதோ அது பற்றிய தகவலை டாக்டருக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். (டாக்டரின் செல்போன் எண் மற்றும் ஹாஸ்பிட்டலின் கம்யூட்டர் கட்டுப்பாட்டு அமைப்புக்கு தொடர்பு வசதி இந்த பேஸ் மேக்கரில் உண்டு.) 

3.இதயத் துடிப்பில் ஏற்படும் மாற்றத்தை பேஸ்மேக்கர் கருவியே டாக்டரின் செல்போனுக்கு SMS மூலம் தகவல் கொடுத்துவிடும். டாக்டர் அந்தத் தகவலைப் பெற்று போன் மூலம் அடுத்த ட்ரீட்மெண்ட் கொடுப்பார்.



பேஸ் மேக்கர் சரி.............. பீஸ்(peace) மேக்கர் இருக்கிறதா?

கனவுச் சுமைதாங்கி-கவிதை


கனவுகள் சுமக்கும் சுமை தாங்கி
நகர்ந்து கொண்டிருக்கிறது 
உடல் என்று பெயரிட்டு 
ஒற்றை மனிதனுக்கு ஆயிரம் பெயர்கள் நேற்று .
பணத்தினால் ஒன்று,
 பதவியினால் ஒன்று 
பாசத்தினால் ஒன்று, 
கோபத்தினால் ஒன்று 
சாதனையினால் ஒன்று,
 சண்டையினால் ஒன்று 
அத்தனையும் மாறிப்போனது 
இறந்துபோன சில நொடிகளில் 
நெற்றியில் ஒட்டிவைத்த அந்த ஒற்றை நாணயத்தால்! 

"பிணமென்று"

Saturday, January 29, 2011

உடற்கூறு ஓவியம்

திருவண்ணாமலையில், மலைமீதுள்ள ஆலமரத்துக் குகையில் ரமண பகவான் தங்கிஇருந்ததாகக் கூறுவார்கள்.
ஆலமரத்து குகையின் அறக்கட்டளை மண்டபத்தில் யோகா உடற்கூறுகளை விளக்கும் அரிய ஓவியம் ஒன்றைப் பார்த்தேன்.   யோகா யுவ கேந்திரா மாணவர்களின் பார்வைக்கு அது இங்கேப்
பதிவாக்கப் படுகிறது.


Add caption












Friday, January 28, 2011

ஜோதிடம் உண்மையா?






மாஸ்டர், ஜோதிடம் உண்மையா? நம்பலாமா?.........by.கல்யாணி


விக்கிரமாத்திதனின் அரசவையில் ஒரு ஜோதிடர் இருந்தார் அவருடைய பெயர் "மிஹிரர்". ஜோதிட சாஸ்திரத்தின் தந்தை எனப்போற்றப்படுபவர் இவரே. இவருக்கு "வராஹ மிஹிரர்"என இன்னொரு பெயர் வந்ததற்குக் காரணம் இருக்கிறது!

அரசன் விக்கிரமாதித்தனுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது . ஜாதகம் கணித்த மிஹிரர், "இன்ன வருடம், இன்ன நாளில், இத்தனை நாழிகையில்,இந்தக் குழந்தைக்கு காட்டுப்பன்றியால் மரணம், ஏற்படும்" எனக்கூறுகிறார்.

"அப்படி நடக்காது, நடக்கவும் விடமாட்டேன் "என்கிறான் அரசன்.


மிஹிரரோ, "ஜோதிடக்கணிப்பு பொய்யாகாது"என்கிறார்.


அப்படி நடக்கவில்லை என்றால் மிஹிரரின் தலையைக்
கொய்து விடுவதாகக் கூறுகிறான் அரசன்.



வருடங்கள் கடந்தன.............



மிஹிரர் குறிப்பிட்ட நாளில் அந்தத் துயரச் சம்பவம் நடந்தேறவே செய்தது.


பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்ட அந்த அரண்மனையின் மொட்டை மாடியில், விளையாடிக்கொண்டிருந்த இளவரசனின் தலையில் உலோகத்தால் செய்யப்பட்டக் காட்டுப்பன்றியின் சிலை விழுந்ததில் இளவரசன் பலியானான்.

விக்கிரமாதித்தனது அரசுச் சின்னம் காட்டுப்பன்றி. அரசு சார்ந்த இடம் எதுவானாலும், காட்டுப்பன்றியின் சிலை வைப்பது வழக்கம். காட்டுப்பன்றியின் சிலை இளவரசனைக் கொல்லும் என யாரும்எதிர்பார்க்கவில்லை.

இந்த சம்பவத்தைச் சரியாகக் கணித்ததாலேயே மிஹிரருக்கு,"வராஹ மிஹிரர்"எனப் பெயர் வந்தது.

"இதைத் தவிர்த்திருக்க முடியாதா?" எனக் கேட்டஅரசனுக்கு , மிஹிரரின் பதில்
என்ன தெரியுமா?

"ஜோதிடர்களால், கணித்து சொல்ல முடியும். ஆனால் ஒரு நல்ல யோகியால்
நடக்க இருப்பதையும் மாற்ற முடியும்"

மனிதனின் சுவாசம் எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மையான, மகத்துவம் பொருந்திய ஒரு கலைதான் ஜோதிடக்கலை. இது நமது பாரதக் குருமார்களால், இந்த உலகத்திற்கு அளிக்கப்பட்ட அருட்கொடை.

நண்பர்களே! ஜோதிடமும், யோகமும், ஒரே மரத்தின் இரு கிளைகள். அதனால்தான் ஜோதிடம் பார்த்து "யோகத்தை" கூறுகிறார்கள். "சரம்பார்ப்பான், பரம்பார்ப்பான்" என்றொரு பழமொழி உண்டு. சரம் என்றால் மூச்சு, பரம் என்றால் மறைந்திருக்கும் இரகசியம் ,எனப்பொருள்..

மூச்சின் இரகசியத்தைத் தெரிந்தவனால் வாழ்க்கையில் மறைந்திருக்கும் இரகசியத்தையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

சூரியனையும், சந்திரனையும் அடிப்படையாக வைத்துதான் ஜோதிட சாஸ்திரம் வந்தது. சந்திரன் மனோகாரகன். சூரியன் ஆத்மகாரகன். சூரிய
குடும்பத்தில்,சந்திரன் தாய் என்றால் , சூரியன் தகப்பன்.

"ஹ" என்றால் சூரியன். "ட" என்றால் சந்திரன். சூரியனையும், சந்திரனையும் இணைப்பதுதான் "ஹட யோகம்"

"அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது." என்பதற்கிணங்க நமது உடலில்,
சூரியன், சூரிய கலையாகவும், சந்திரன், சந்திர கலையாகவும்
பரிணமித்துள்ளது. இதனை உணர்ந்து கொண்டால் ஜோதிடம் எளிதாகிவிடும்.

அமாவாசை, பௌர்ணமிகளில், மனிதனுடைய மன நிலையில் மாற்றம் ஏற்படுவதை நவீன கால விஞ்ஞானமும் ஏற்றுக்கொள்கிறது.

ஜோதிடக்கலை, மறுக்கமுடியாத உண்மை!

ஆனால் நவீன காலச் சோதிடர்கள்........................?






"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர் இல்லை

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளருக்குக்
கூற்றை உதைக்குங் குறியதுவாமே."



ஓம் தத் சத்

Wednesday, January 26, 2011

புத்தரின் ஆசை-ஜென் கதை




டங்ஷன் லியாங்ஜெ என்பவர் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற ஜென் துறவி. அவரைச் சந்திப்பதற்காக உலகின் பல மூலைகளில் இருந்தும் மக்கள் வந்து சென்றார்கள்.அப்படி ஒரு பயணியிடம் டங்ஷன் கேட்டார்.

‘நீங்க எங்கிருந்து வர்றீங்க?’’

அதோ அந்த மலையிலேர்ந்து.’’

ஓ! உங்களுக்கு மலை ஏறின அனுபவம் உண்டா?’

‘நிறைய!’

‘மலை உச்சியைப் பார்த்திருக்கீங்களா?’

’பலதடவை பார்த்திருக்கேன்.’

‘அங்கே யார் இருக்காங்க?’

‘யாருமே இல்லை!’

‘அப்படீன்னா, நீங்க மலை உச்சியைப் பார்க்கவே இல்லைன்னு அர்த்தம்’ என்றார் டங்ஷன்.

‘நீங்க மலை உச்சியை அடைஞ்சிருந்தா அங்கே நீங்க ஒருத்தர்மட்டுமாவது இருந்திருப்பீங்க, யாருமே இல்லை-ங்கறது பொய்.’

’இல்லை. நான் மலை உச்சிக்குப் போனது உண்மைதான்’ என்றார் அந்தப் பயணி. ‘இல்லைன்னா, அங்கே யாரும் இல்லை-ங்கறது எனக்கு எப்படித் தெரிஞ்சிருக்கும்?’

‘சரி. மலை உச்சிக்குப் போன நீங்க அங்கேயே இருந்துடவேண்டியதுதானே? ஏன் இங்கே திரும்பி வந்தீங்க?’

‘நான் அங்கேயே தங்கியிருந்தா புத்தருக்குக் கோவம் வந்திருக்கும்.

’இந்த பதிலைக் கேட்டவுடன் டங்ஷனுக்கு மகிழ்ச்சி. ‘நீங்கள் உண்மையான ஞானி’ என்று பாராட்டினார்.என்ன காரணம்? எதற்கு இந்தப் பாராட்டு?மலை உச்சியைமட்டுமில்லை, எந்த ஒரு விஷயத்திலும் கஷ்டப்பட்டு உச்சியை அடைந்தவர்கள் அங்கேயே தங்கிவிடக்கூடாது. கீழே இறங்கிவந்து அந்த ஞானத்தை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளவேண்டும். அதைத்தான் புத்தர் விரும்புவார்

Tuesday, January 25, 2011

வழிபாடு


மாஸ்டர்,  வழிபாடு செய்வது தவறு என்கிறீர்களா?.  நீங்கள் நாத்திகரா?........(என் பெயரை வெளியிட வேண்டாமே)



நண்பர்களே,     நாம் வழி பாடுகளுக்கே முதலிடம் தருகிறோம். அந்த வழிபாடு யாரைக்குறித்து நிகழ்த்தப்படுகிறதோ அந்த வஸ்துவை புறக்கணித்து விடுகிறோம். "கடவுள்' என்ற சொல்லை ஆராய்கிறோம். கடவுளின் உண்மையை அலட்சியப்படுத்துகிறோம்.

ஒருவர் கதவை மூடிக்கொண்டு வழிபாடு செய்கிறார். கதவு தட்டப்படுகிறது. "யார்' என்று கேட்கிறார். "நான்தான் கடவுள்' என்று பதில் வருகிறது. "சற்று நேரம் இருங்கள். நான் வழிபாட்டை முடித்துக்கொண்டு வந்து கதவைத் திறக்கிறேன்' என்கி றார் அவர்.

எவரைக் குறித்து வழிபாடு செய்கிறோமோ அவரை விட்டுவிட்டு புற வழிபாட்டைத்தான் செய்கிறோமே தவிர - வழிபாடு என்ற பெயரில் உண்மையை மறக்கிறோம். சப்தங்களுக்கு முக்கியத்துவம் தரும் நாம் சப்தங்கள் தரும் அர்த்தத்தை, உண்மையை உணர மறக்கிறோம். வார்த்தை ஜாலங்களிலேயே திருப்தி பட்டுக் கொள்கிறோம்..


வழிபாடு என்றால் பயணப்படக்கூடிய பாதை என்று தானே பொருள். பயணத்தின் இலக்கு தெரியாமல் எப்படிப் பயணப் படமுடியும்?.பாதையிலேயே நின்று கொண்டிருந்தால் இலக்கை அடைய முடியுமா?
வழிபாடு தேவை இல்லை என நான் கூறவில்லை. ஆரம்பகால சாதகனுக்கு அவசியம்தான். ஆனால் வழிபாட்டின் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டாமா? 



புத்த பகவான் சொல்லும் ஒரு கதை...

ஓரிடத்தில் வெள்ளம் வந்துவிட்டது. மக்கள் தவிக்கின்றனர். அங்கு ஒரு படகு வருகிறது. மக்கள் படகில் ஏறி அமர்ந்து வெள்ளத்தைக் கடந்து கரை சேர்கின்றனர். கரை சேர்ந்ததும் அந்தப் படகைத் தலையில் சுமந்து கொண்டு திரிகிறார்கள்.

கரை சேர்ந்தபின் படகு தேவையில்லை; படகையே தூக்கி வைத்துக்கொண்டு திரிவது நன்றாகவா இருக்கிறது?

தூண்டில்மேல் கவனம் செலுத்த வேண்டும். எதுவரை? மீன் தூண்டிலில் சிக்கும்வரை. மீன் பிடித்ததும் தூண்டிலைச் சுமந்து திரிவது அறிவார்ந்த செயலா?. "வழிபாடு உண்மையை (உங்கள் புரிதலுக்கேற்ப, கடவுள் )உணர்வதற்கே... உணர்ந்தவுடன், அந்த உண்மையான வஸ்துவின் மேல் கவனத்தைக் கொண்டுவரும் நிலையே சிறந்ததாகும்.

பகவான் ரமண மகரிஷியை ஒரு ஜெர்மானிய அறிஞர் பார்க்க வந்தார். அவர் ரமண மகரிஷி யிடம், ""பகவானே! நான் ஆன்மீகம் நிறைய கற்றுள்ளேன். நிறைய பட்டங்கள் பெற்றுள்ளேன் . நிறைய ஆராய்ச்சி களைச் செய்துள்ளேன். உங்களிடம் புதிதாய் நான் எதைக் கற்றுக்கொள்ளப் போகிறேன்'' என்று கேட்டார்.

அதற்கு பகவான் ரமணர், ""நீ கற்றதனைத்தையும் மறந்துவிட வேண்டும். அதுவே நீ இங்கு கற்க வேண்டுவது'' என்றார்.

உணரும் வரைதான் வழிபாடு,  வழிபடுகிறவனை உணர்வதே வழிபாட்டின் நோக்கம்..

பகவான் ராமகிருஷ்ணர் சொல்கிறார்:

""வண்டு பூவின்மேல் அமர்ந்து மதுவை உறிஞ்சி ருசிக்கும் வரைதான் சிறகுகளை அடித்து ரீங்கார சப்தமிடும். தேனை ருசிக்க ஆரம்பித்துவிட்டால் சிறகடிப்பது ஓய்ந்துவிடும்; சப்தம் இருக்காது.''

"சும்மாயிரு சொல்லற' என்று ஞானியர் சொல்வதும் இதைத்தான்.

சீடன் ஒருவன் குருவை நாடிச் சென்று தனக்கு உபதேசம் செய்ய வேண்டினான். தான் பல நூல்களைக் கற்றவனென்றும் கூறினான்.

அதற்கு குருநாதர், ""உனக்கு உபதேசிக்க வேண்டுமானால் மற்ற சீடர்கள் தருவதைவிட இரண்டு மடங்கு அதிகமான குரு தட்சிணையை நீ தர வேண்டும்'' என்றார்.

""ஏன் குருநாதா, நான் பல விஷயங்களைக் கற்றவன். இவர்களோ ஒன்றும் அறியாதவர்கள். அவர்களைவிட என்னிடம் அதிகமாக தட்சிணை கேட்கிறீர்களே...'' என்று கேட்டான்.

""நீ கற்றவற்றை மறக்கச் செய்ய ஒரு மடங்கு; புதிதாய்க் கற்பிக்க ஒரு மடங்கு. ஆக இரண்டு மடங்கு தட்சிணை'' என்றார் குருநாதர்.


ஒரு நாத்திகர் தலைமை விஞ்ஞானியாக உள்ள நாட்டில், ஒரு விண்வெளி விஞ்ஞானி, விண்வெளியில் ஆய்வு செய்தார். அங்கு அவர் இறையின் இருப்பை உணர்ந்தார். பின் பூமி திரும்பி, தலைமை விஞ்ஞானியிடம் வந்தார்.

தலைமை விஞ்ஞானி, ""நீ விண்வெளிப் பயணத்தில் என்ன கண்டாய்?'' என்று கேட்டார்.

""இறைவனின் இருப்பை'' என்றார் விஞ்ஞானி.

""என்னிடம் சொன்ன "இறையிருப்பு" பற்றி வேறு யாரிடமும் சொல்லி விடாதே... நான் நாட்டில் இறைவன் இல்லை என்று கூறி, நாத்திகவாதத்தை கூறி வந்துள்ளேன். நீ உணர்ந்த "இறையிருப்பு" உண்மை உன்னுடனே இருக்கட்டும்'' என்றார்.

அந்த விஞ்ஞானியை ஒரு ஆன்மீகவாதி சந்தித்தார்.

அவர், ""நீ இறைவனைக் கண்டாயா?'' என்று கேட்டார். ""இல்லை'' என்றார் விஞ்ஞானி. அதற்கு அந்த ஆன்மீகவாதி, "நீ இதை வெளியில் யாரிடமும் சொல்லிவிடாதே. நானும் இறைவன் இல்லை என்பதை அறிவேன். ஆனால் நான் இறைவன் உண்டு என்று பிரசாரம் செய்து வருகிறேன். இறைவன் இல்லையென்று நீ உணர்ந்ததை வெளியில் சொல்லிவிடாதே'' என்றார்.

ஆகவே இறையிருப்பு என்பது அவரவர் உணர்வைப் பொறுத்தது. வழிபாடுகளாலோ- பிரார்த்தனைகளினாலோ ஏற்படுவதல்ல இறையுணர்வு. இது ஒவ்வொரு மனிதனுடைய உணர்வை பொறுத்த விஷயம்

ஒரு அருமையான சிலையை அதன் பெருமை தெரிந்த ஒருவர் பத்தாயிரம் கொடுத்து வாங்கினார். அதைப் பார்த்த ஒருவன், ""இவ்வளவு அரிய சிலையை வெறும் பத்தாயிரத்திற்கு விற்று விட்டானே'' என்றான்.

இன்னொருவன், ""இந்த அற்பமான கல்லுக்கு பத்தாயிரம் கொடுத்து வாங்குகி றானே. இவன் எவ்வளவு பெரிய மடையன்'' என்றான்.

ஆக கொடுப்பவனின் மனப்பான்மை - வாங்குபவனின் மனப்பான்மையைப் பொருத்தது அதன் மதிப்பு!


வழிபாடு என்பது இறைத்தன்மையை உணர்வதற்காகச், செல்லக்கூடிய பயணம். பிரார்த்தனையோ, வேண்டுதலோ அல்ல.

இறைவன் இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட உணர்வு.  ஆனால் என்னுடைய வகுப்புகளில் யாரையும் இறை எதிர்ப்புக்கு கட்டாயப்படுத்தவில்லை.இது அவரவர்களின் உணர்வைப் பொறுத்த விஷயம்.(அதிகாரி பேதம்)

 இறைவன் இல்லை என்பது தான் என்னுடைய உணர்வே தவிர,   இறைத்தன்மையை இல்லை என நான் மறுப்பதற்கில்லை.அந்த இறைத்தன்மையை அகத்தில்தான் உணரவேண்டுமே தவிர புறத்தில் இல்லை.


"இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞானத்தங்கமே"


    கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
    கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
    கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
    ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.

    செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
    செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
    உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
    அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமே!
ஓம் தத் சத் 

என் தங்கைக்கு-கவிதை


என் தங்கைக்கு..............

வானம் பார்த்து படுத்திருக்கும்
மொட்டைமாடி இரவுகளில்
நிலவு நினைவுபடுத்துகிறது
நீ செய்த உதவிகளை
நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்...

உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும்!!!
உன்னால் அனுபவிக்கும்
தனிமையின் வலியை
உனக்கும் தர மனமில்லை
அதனால் அனுப்புகிறேன்
உனக்கு துணையாய்
என் கவிதைகளை......

Monday, January 24, 2011

கம்ப்யூட்டரில் அதிகமாக வேலை செய்பவரா?-இதைப் படிங்க






சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். அமிதிஸ்ட் கல்லை கம்ப்யூட்டர் ஸ்கீரினில் ஒட்டிவைத்தால் கம்ப்யூட்டரில் இருந்து வரக்கூடிய கதிர் இயக்கத்தைக் குறைக்க முடியுமாம்.



இதுபோல கம்ப்யூட்டர் கதிரியக்கத்தைக் குறைக்க ஒரு எளிமையான வழி இருக்கிறது நண்பர்களே !




வெங்காயச்சருகுகளை துணியில் வைத்துத் தலையணை போல் தைத்து அதன் மேல் உட்கார்ந்து கொண்டால் கதிரியக்கத்தைக் குறைக்கமுடியும்.

பொக்ரைனில் அணுகுண்டு வெடித்து பரிசோதனை செய்யப்பட்டபோது, இந்தியா கூறிய பிறகே உலக நாடுகளால் அறிய முடிந்தது . அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கூட ஆச்சரியப்பட்டன. எந்த ஒரு சேட்லைட்டாலும் முன் கூட்டி அறிய முடியவில்லை.



என்ன காரணம் தெரியுமா?

அனுகுண்டைச் சுற்றி வெங்காயச்சருகுகளால் மூடப்பட்டிருந்ததே! வெங்காயச்சருகுகளுக்குள் எந்தவொரு கதிரியக்கமும் நுழையமுடியாது என்பதை கண்டு பிடித்துக் கொடுத்தவர் பதினெண் சித்தர்களில் ஒருவரான போக மகரிஷி.




விஸ்வாமித்ரப்புல்(லெமன் கிராஸ்) என்ற ஒரு புல் வகை இருக்கிறது, தர்ப்பைக்கு நிகராக விசஸ்வமித்ரரால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு புல் வகை எனக்கூறுவார்கள். இந்தப் புல்லினால் செய்யப்பட்ட இருக்கைகளை உபயோகப்படுத்தும் போதும் கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்தமுடியும்.








கம்ப்யூட்டரில் அதிகமாக வேலைசெய்யும் இளைஞர்களுக்கு, ஆண்மைக்குறைவும், பிறக்கக்கூடியக் குழந்தைகள் ஊனமாகவும் பிறக்க வாய்ப்பு இருப்பதாகவும் வரக்கூடிய செய்திகளைப் படித்திருக்கிறேன்.

அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் வேலை முடிந்தவுடன் தூங்கச் செல்வதற்கு முன்பாக உப்பு (சோடியம் குளோரைடு) கலந்த நீரில் குளித்தால், இந்தப்பிரச்சினையைத் தவிர்க்கலாமே!

ஒரே ஒரு பாட்டு


அன்று அந்த மண்டபத்தில் ஏகப்பட்டக் கூட்டம்.

இருக்காதா பின்ன ?   உலக அளவில் புகழ் பெற்ற பாடகருடைய கச்சேரி ஆச்சே. மாலை ஏழு மணிக்குத் தொடங்கப்போகும் நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கக் காலையிலிருந்தே ஒரு பெரிய வரிசையே நின்றது. ஒரு வழியாக மக்களெல்லாம் அடித்துப் பிடித்து டிக்கெட்வாங்கிக்கொண்டு மண்டபத்துள் சென்றார்கள்.

சரியாக ஏழு மணிக்குக் கச்சேரி தொடங்கியது.

அடுத்த சிலமணி நேரங்கள் . பாடகருடையப் பாட்டு எல்லோரையும் கட்டிப்போட்டிருக்கிறது.  அவருடைய சங்கீத ஞானத்தை மக்கள் வாயாரப் புகழ்கிறார்கள்.

நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம்.

அந்தப்பாடகரை சில வார்த்தைகள் பேசுமாறு அழைக்கிறார்கள்.

அவர் எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு , தனது குருநாதரைப் பற்றிப்  பேசினார்.

"அவர் வெறும் சங்கீத மேதை மட்டுமல்ல,  ஒரு அவதூது. அவர் தினமும் சங்கீதப் பயிற்சி செய்கிறாரோ இல்லையோ,   பலமணி நேரம் தியானம் செய்வார்.   நான் அவரிடம் சிஷ்யனாகச் சேர்ந்த போது தினமும் நான்கு மணிநேரம் கிளாஸ் .  அதுவும் ஒரே பாட்டைத்தான் மறுபடியும், மறுபடியும் சொல்லித்தருவார் .  அதுவும் பல மாசம் , பல வருஷம்!"

"ஒரு கட்டத்தில் எனக்குப் போரடித்துவிட்டது. குருநாதரிடம்
கோபித்துக்கொண்டு வந்துவிட்டேன்."

சிறிதுநாள் கழித்து

"ஒரு ஸ்கூல்ல பாட்டுப்போட்டி , கலந்துக்கிட்டாச் சாப்பாடு கிடைக்குமேன்னு நப்பாசையிலே கலந்துகிட்டேன்."

"இத்தனை வருசத்தில நான் கத்துக்கிட்டது ஒரே ஒரு பாட்டு.  அதைத்தான் அந்தப்போட்டியில பாடினேன். பாடி முடிச்சதும்,  அங்கிருந்த பசங்க, பெரியவங்க எல்லாரும், கை தட்டுறாங்க .     இந்த வயசுல இப்படி ஒரு ஞானமா? எனப் பாராட்டுறாங்க"

"நான் வெட்கத்தோட மேடையை விட்டு இறங்கிட்டேன் .  எனக்குத்தெரிஞ்சது ஒரேஒரு பாட்டுதான்னு சொல்லிக்க வெட்கமா இருந்திச்சு.  ஆனா அந்த ஒரு பாட்டுல என்னை என் குருநாதர் எந்த அளவுக்கு பலப்படுத்தி இருக்கார் என்பது எனக்கு அப்பத்தான் புரிஞ்சுது.  அடுத்து என்ன சொல்லித்தரப்போரார்னு கூடத் தெரிஞ்சுகாம, அவருக்கு ஒன்னும் தெரியாதுன்னு அவசரப் பட்டுட்டேனேனு கஷ்டமா இருந்திச்சு"

"ஒண்ணு, ரெண்டுன்னாலும் உருப்படியாத் தெரிஞ்சுக்கிறதுதான் வலுவான அடித்தளம்னு நல்லாப் புரிஞ்சுகிட்டேன்"

மேடையிலே இருந்து இறங்கினதும் என்னோட குரு வீட்டுக்கு ஓடினேன், அவர் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டேன்".

இப்படி அந்தப் பாடகர் சொல்லி முடிக்க, கூட்டம் எழுந்து நின்று கை தட்டியது.

இது நிஜக்கதை.  அந்தப் புகழ்பெற்ற பாடகரின் பெயர் என்ன தெரியுமா?

'கோஷிஜி"

   

இயல்பே ஜென்- ஜென் கதை




ஜென் ஆசிரியர்கள் தமது மாணவர்கள் தம்மை சுயமாக வெளிப்படுத்த பயிற்றுவிப்பது வழக்கம். இரு வேறு ஜென் மடாலயங்களில் இரண்டு சிறுவர்கள் படித்து வந்தார்கள். ஒரு சிறுவன் தினமும் காலை மடத்துக்காக காய்கறிகள் வாங்கப் போவான். வழியில் இருவரும் ஒருவரையொருவர் சந்திப்பார்கள்.


ஒருநாள், “நீ எங்கே செல்கிறாய்?” என்று கேட்டான் முதலாமவன்.


“எங்கே என் கால்கள் என்னை இட்டுச்செல்கிறதோ அங்கே செல்வேன்,” என்றான் இரண்டாமவன்.


இந்த பதிலால் குழம்பிய முதல் சிறுவன் தன் ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப் போனான். அவனது ஆசிரியர், “நாளை நீ அந்தச் சிறுவனை சந்திக்கும் போது இதே கேள்வியை மீண்டும் கேள். அவன் அதே பதிலை மீண்டும் சொல்வான். அப்போது “உனக்கு கால்களே இல்லாவிட்டால் நீ எங்கே செல்வாய் எனக் கேள், அவன் மாட்டிக்கொள்வான்,” என்றார்.


மறுநாள் காலை மீண்டும் இருவரும் சந்தித்தனர்.


“நீ எங்கே செல்கிறாய்?” என்றான் முதலாமவன்.


மீண்டும் குழம்பிப்போன முதல் சிறுவன் தன் ஆசிரியரிடம் சென்றான். “காற்றே இல்லாத பட்சத்தில் அவன் எங்கே செல்வான் எனக் கேள்,” என்றார் ஆசிரியர்.“எங்கெல்லாம் காற்று வீசுகிறதோ அங்கே செல்கிறேன்,” என்றான் மற்றவன்.


மறுநாள் மூன்றாம் முறையாக இருவரும் சந்தித்தார்கள்.


அவனை மடக்கி விடலாம் என்ற சந்தோஷத்துடன் “நீ எங்கே செல்கிறாய்?” என்றான் முதலாமவன்.


“நான் மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்கச் செல்கிறேன்” என்றான் இரண்டாமவன் அமைதியாக.

சொர்க்கத்தின் கதவுகள் - ஜென் கதை







போர்வீரன் ஒருவன் ஜென் குருவை அணுகிக் கேட்டான். 


"ஐயா, சொர்க்கம் அல்லது நரகம் என்று உண்மையிலேயே ஏதாவது இருக்கிறதா?'' 

அவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்துக் கேட்டார் குரு-





"நீ உண்மையிலேயே ஒரு போர்வீரனா? பார்த்தால் பிச்சைக்காரன் போல இருக்கிறாய். உன்னைத் தன் படைவீரனாக நியமித்திருக்கும் உன்னுடைய அரசன் எப்பேர்ப்பட்ட பிச்சைக்காரனாக இருப்பான்?''


போர்வீரன் கடுங்கோபத்துடன் வாளை உறையில் இருந்து உருவத் துவங்கினான்.

ஓஹோ. வாளை வைத்திருக்கிறாயோ? அதற்கு என் தலையை சீவும் வல்லமை இருக்கிறதா என்று கேட்டார் குரு. அவன் ஏறத்தாழ அவர் தலையை சீவத் தயார் ஆனான். அவன் கையைப் பிடித்து நிறுத்தி குரு சொன்னார்

"இப்போது நரகத்தின் கதவுகள் திறக்கின்றன''


அவன் ஒருவாறு சமாளித்து தலைகுனிந்து வெட்கி அவரை வணங்கி நின்றான். குரு சொன்னார்-



"இப்போது சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டன''.

Sunday, January 23, 2011

நடை கவனி வளி தெரியும்- விளக்கம்







நடை கவனி
வளி புரியும்
வளி கவனி
ஒளி தெரியும்
ஒளி கவனி
"நான்' அழியும்
சத்குருவே
'நான்" அழிய வரம் தா.

Sir I cannot understand. please explain. by Shankar

வணக்கம் சங்கர்,,

உங்களது மின்னஞ்சல் பார்த்தேன்.

நடை என்றால் மூச்சோட்டம் எனப்பொருள் . நமது மூச்சு நடந்து கொண்டிருக்கக்கூடிய ஸ்டைல். அதாவது நமது மூச்சோட்டம் ஒவ்வொரு குறிப்பிட்ட சூழ்நிலையிலும் மாறுபடுகிறது. உதாரணமாக ,நாம் செல்லமாகக் கோபித்துக்கொள்ளும்போது உள்ள மூச்சோட்டத்திற்கும் , உண்மையிலேயே கோபித்துக்கொள்ளும்போது உள்ள மூச்சோட்டத்திற்கும் வேறுபாடு இருக்கிறது சங்கர். இரண்டு மூச்சோட்டமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.


நமக்கு பயம் வரும்போதோ , பாசம் அதிகமாகும்போதோ , பொறாமை கொள்ளும்போதோ , தோல்விகளைக்கண்டு துவண்டு விழும்போதோ, வெற்றியைக்கண்டு ஆனந்தப்படும்போதோ , இப்படி பல்வேறு உணர்ச்சி நிலைகளில், நமது மூச்சோட்டம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அந்தந்த உணர்ச்சிகளுக்கு தகுந்த மாதிரி கூடுதலாகவோ, குறைவாகவோ, ஆழமாகவோ,அல்லது ஆழமற்றதாகவோ தானே மூச்சோட்டம் நடைபெறுகிறது.,


இதைத் தெரிந்து கொண்டால் என்ன பயன் என்கிறீர்களா? பயன் இருக்கிறது சங்கர், உதாரணமாக பயம் வரும்போது கவனித்தால் இதயம் வேகமாகத்துடிக்கும். ஓடிவந்த மாதிரி சீக்கிரம் சீக்கிரமாக மூச்சு வரும். அந்த நேரத்தில் வேண்டுமென்றே மூச்சு ஓடும் ஸ்டைலை மாற்றினால் பயம் போய்விடும். பயம் வரும்போது ஒரு நாலைந்து மூச்சு நீளமாக இழுத்து விட்டால் பய உணர்வு குறைந்துவிடும்.


கோபத்தில் உள்ள மூச்சோட்டத்தை மாற்றி பக்தியில் உள்ள மூச்சோட்டம் மாதிரி, விட முயன்றால் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கோபம் பக்தியாக
மாறிவிடும். பக்தியில் உள்ள மூச்சோட்டத்தை மாற்றி செக்ஸில் கொண்டுவந்தால் காமம்கூட புனித உறவாகிவிடும்!.(ஓஷோவிற்கு நன்றி)


அதாவது இந்த மூச்சோட்டத்தை வேண்டுமென்றே மாற்றுவதன் மூலம் உணர்ச்சிகளை மாற்ற முடியும். மூச்சை மாற்றுவதின் மூலம் ஒரு மனிதனுடைய குணத்தையே மாற்ற முடியும். சீர்திருத்தப் பள்ளிகளிலும், சிறைச்சாலைகளிலும் கொண்டுவரமுடியாத மாற்றத்தை மூச்சுப்பயிற்சி சாதித்துவிடும். அதனால்தான் நவீனகால குருமார்கள் கைதிகளுக்கெல்லாம் மூச்சுப்பயிற்சி கற்றுக்கொடுக்கிறார்கள்.


ஒரு மனிதனுடைய மூச்சோட்டம் 18 நிலைகளில்(style) நடக்கிறது. இதைத்தான் நடை என்கிறார்கள் யோகிகள். மன அமைதி பெற்றவனுடைய மூச்சோட்டம் எப்படி இருக்கும் என்பதை மட்டுமாவது தெரிந்துகொண்டு அதைப்போல நமது மூச்சோட்டத்தையும் ஒவ்வொரு நாளும் மாற்ற முயன்றாலே போதும். வாழ்க்கையில் ஒரு பெரிய வெற்றி நம்மை வந்து சேரும். ஏனென்றால் மன
அமைதி பெறாதவன் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.

அமைதியானவனுடைய மூச்சோட்டம் என்பது rythamic ஆன மூச்சோட்டம்தான். அதை எப்படி ஏற்படுத்துவது, அதற்கு நம்மை எப்படி தயார் செய்து கொள்வது எவ்வளவு நேரம் செய்வது என்பதெல்லாம் உங்கள் விருப்பத்தையும், உங்களது குருவின் கருணையையும் பொறுத்தது. மூச்சுப்பயிற்சியின் முக்கியத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இங்கே மூச்சைப் பற்றிய உண்மைகளை பதிவு செய்திருக்கிறேன்.

ஒரு குருவின் முன்னால் நாம் அமரும்போது நமக்கு அமைதி ஏற்படுவதற்குக் காரணம் என்ன தெரியுமா? அவருடைய மூச்சின் லயத்திற்கு நமது மூச்சோட்டமும் மாறியிருப்பதால்தான்.அதனால்தான் குருவின் சத்சங்கம் அடிக்கடி வேண்டும் என்று கூறுகிறார்கள். குருவின் அருகாமையில் இருந்திருந்து அந்த மூச்சோட்டம் நமக்கு பரிச்சயமாகிவிட்டால் நாளடைவில் குருவை நினைக்கும்போதெல்லாம் நமக்கு மூச்சில் அந்த லயம் ஏற்பட்டுவிடும். இதைத்தான் "தெளிவு குருவுரு சிந்த்திதல்தானே" என திருமூலர் கூறுகிறார்.

நடை என்றால் மூச்சோட்டம் எனப்புரிந்திருக்கும். "வளி" என்றால் காற்று. (வளிமண்டலம் என்று கூறுகிறோமே. ).

"ஒளி" என்றால் உயிர் பற்றிய தகர(ஆகாய)ஞானம்(wisdom).

" நான்" என்பது அஹங்காரம(ego)


நடை கவனி
வளி புரியும்
வளி கவனி
ஒளி தெரியும்
ஒளி கவனி
"நான்' அழியும்
சத்குருவே
'நான்" அழிய வரம் தா.




இப்ப, இந்தக்கவிதைக்கு அர்த்தம் புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்.



         மூச்சை கவனித்தால் நமது முழு வாழ்கையையும் கவனிப்பதாக அர்த்தம். மூச்சைப் பற்றிய அறிவு இல்லையென்றால் நமது வாழ்க்கையைத் தூக்கத்திலேயே கழித்துக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

            தன்னை அறிதல்(self realisation) என்ற தத்துவத்தின் முதல்படி மூச்சை அறிந்து கொள்வதுதான்.ஞானம் பெறுவதற்காகப் புத்தரின் கடைசிப்  பயிற்சியாக இருந்த மூச்சுப்பயிற்சி நமது வாழ்வில் முதல் பயிற்சியாக இருந்தால் நல்லது.


குருவருள் துணை புரிய வாழ்த்துக்கள்.

                                                          ஓம் தத் சத்


Saturday, January 22, 2011

நானே முதல் குற்றவாளி- கவிதை

தூக்கம் இருண்டுபோன
இந்த மெல்லிய இரவில்
விழித்திருக்கும் என்
உணர்வுகளைச் சுட்டி
எதைப்பற்றி நான்
எழுதப் போகிறேன்?

பாசம் மனசு நட்பு
எல்லாமே பொய்யாகிவிட்ட
வாழ்க்கையை இனியும்
வாழ்ந்து எதை
சாதிக்கப்போகிறது
எனது எதிர்காலம்..

வலிக்கிறது
என் விரல்களும் இதயமும்..

கருகிப்போன கனவுகளை
மீண்டும் யாசிக்கிறது
என் கண்கள்..
உருகிப்போன நினைவுகளை
மீண்டும் வேண்டுகிறது
என் கணங்கள்

வலிகளில் நிறைந்து போன
என் விழிகளைப்பற்றி
ரணங்களில் புதைந்து போன
என் ஆத்மார்த்தம் பற்றி
துயரப்பாடல்கள் உச்சரிக்கும்
என் பேனா பற்றி
காயங்களின் சுவடுகளை ஏந்தி நிற்கும்
என் பாவப்பட்ட இதயம் பற்றி
இனிப்பேச யாருமில்லையா?

உலுக்கி எடுக்கும்
அதிர்வுகளைத் தாங்கி
வாழ்தல் மீதான பயணம்
நீள்வது அத்தனை எளிதில்லை

இனியும் என்ன இருக்கிறது?

சேரத்து வைத்த ஆசைகள்
அநாதையான பின்பும்
நம்பியிருந்த உறவுகள்
சுக்கு நூறான பின்பும்
தேக்கி வைத்த நம்பிக்கை
வேரிழந்த பின்பும்

இனியும் என்ன இருக்கிறது?

காலியாகிப்போன பாசப்பைகளில்
இனி நான் இடப்போவதில்லை
சில்லறை மனிதர்களை..

எல்லா இதயங்களிலும்
போர்வைகள்..
எல்லா முகங்களிலும
முகமூடிகள்..
எல்லா புன்னகைகளிலும்
விஷங்கள்..
எல்லா பார்வைகளிலும்
வக்கிரங்கள்..

உறவென்னும் தேசத்தில்
அகதியாக்கப்பட்டவன் நான்

மனிதர்களைத் தேடிய
என் நித்திய பயணத்தில்
எப்போது நிகழும்
திடீர் திருப்பம்?

யாரையும் குற்றம் சாட்டவில்லை
காரணம் முதல் குற்றவாளி
நான்தானே?

தூக்கம் இருண்டுபோன
இந்த மெல்லிய இரவில்
விழித்திருக்கும் என்
உணர்வுகளைச்சுட்டி
இன்னும்
எதைப்பற்றி நான்
பாடப்போகிறேன்?

உன் அண்ணன்

உறவுகள் சாதகமில்லை
உணர்வுகள் புரியவில்லை!
உணவு இறங்கவில்லை
உறங்கவும் முடியவில்லை!

பாசத்தை எதிர்பார்த்து
மானமும் போய்விட்டது!
வினாடிகளை எண்ணிக்
காலத்தைக் கரைக்கிறான்!
மரணம் இவனுக்கு
மட்டும் முரண்டு பிடிக்கிறது!

Friday, January 21, 2011

நான் அழிய வரம் தா




நடை கவனி


வளி புரியும்


வளி கவனி


ஒளி தெரியும்


ஒளி கவனி


'நான்' அழியும்


சத்குருவே


'நான்" அழிய வரம் தா

Thursday, January 20, 2011

ஜென் என்றால் என்ன?





ஜென் என்கிற சொல், சம்ஸ்கிருத சொல்லாகிய தியான் என்கிற சொல்லில் இருந்து வருகிறது.

கெளதமபுத்தர் தியானம் சொல்லித்தந்தார்.போதிதர்மா சீன நாட்டுக்கு தியானத்தை சொண்டு சேர்த்தார்.அது அங்கே சீயான் என்று ஆனது.

இந்த சீயான் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்ற போது ஜென் என்று ஆனது.ஜென் என்பது வேதங்கள் இல்லாத, விதிமுறைகள் இல்லாத,குறிப்பிட்ட பயிற்சிகள் இல்லாத ஒரு தன்மை. அது வரையறுக்கப்படாத பாதை. அது யோகாவிலிருந்து வேறுபட்டதல்ல அது தான் யோகா.



விவரிக்க முடியாத நிலையே ஜென் . பாதையும் , பயணமும், பயணத்தின் முடிவும் அதுவே . ஜென் ஒரு புரிந்து கொள்ளலே . அதையும் மீறி ஜென்னைவிமர்சிக்க முயற்சி செய்தால் அது ஜென்னை இழிவு படுத்தியதற்க்குச் சமம் ..............



ஜென் மார்க்கத்தில் ஹீயூட்டி என்று ஒருவர் இருந்தார். அவர் யாருக்கும் ஜென் போதித்ததில்லை .ஆனால் குருமாராக அறியப்பட்டார். எல்லோரும் அவரை குரு என்று மதித்தார்கள்.

ஆனால் அவர் எந்த போதனைகளையும் தந்ததில்லை. தோள்களில் ஒரு பெரிய பையை அவர் சுமந்து கொண்டு செல்வார்.அதில் பெரும்பான்மையானவை இனிப்புகளாக இருக்கும். அவர் போகிற ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகள் அவரை சூழ்ந்து கொள்ளுவர். அவர் இனிப்புகளை வினியோகிப்பார் பிறகு சென்றுவிடுவார். அவ்வளவு தான் .

மக்கள் அவரிடம் வந்து போத்னைகளை கேட்பார்கள். அவர் சிரித்து விட்டு சென்று விடுவார்....

இன்னொரு குரு என்பனின் என்பவர் மிகவும் புகழ்பெற்றவர். அவர் ஹீயூட்டியை சந்திக்க வருகிறார். அவர் ஹீயூட்டி உண்மையாகவே ஜென் மார்க்கத்தில் இருக்கிறாரா??? இல்லையா ?? என்பதை தெரிந்து கொள்ள வந்தார்.

அவரிடம் ஜென் என்றால் என்ன??? என்றார். உடனே ஹீயூட்டி கையிலிருந்த சாக்கை நழுவவிட்டு நேராக நின்றார். அவர் அடுத்து ஜென்னின் நோக்கம் என்னவென்றார்??? ஹீயூட்டி அந்த சாக்கை எடுத்து தன் தோள்களில் போட்டுக்கொண்டு நகர்ந்து விட்டார்.

இது தான் யோகா என்பது எனவே நீங்கள் யோகாவையோ ஜென்னையோ அடைய வேண்டும் என்று விரும்பினால் உங்களிடம் இருக்கிற சுமையை கீழே போட்டு விட்டு எல்லாவற்றையும் விட்டுவிட்டு சுதந்திரமாக நேராக நிற்கவேண்டும். இது தான் முக்கியம்.சில சமயம் சுமையோடும் அதை செய்ய முடியும். அது மிக மிக அரிது . லட்சத்தில் ஒருவரால் அது முடியும். எனவே சுமையை இறக்குங்கள்


ஜென் என்றால் என்ன?..” கேள்வி எழுந்தது ஒரு மாணவனிடமிருந்து.





துறவி அவனைச் சற்று நேரம் ஆழ்ந்து பார்த்துவிட்டுச் சொன்னார், “யாரும் அதைத் தெரியும் என்று சொன்னாலும் அல்லது தெரியாது என்று சொன்னாலும் அது பொய்யாகத்தான் இருக்கும்”





மாணவன் விடுவதாய் இல்லை “அப்படியனால் சுவாமி. ஜென் என்னதான் சொல்லுகிறது?”





“zen teaches nothing. ஜென் சொல்லித்தருவது எதுவுமில்லை”.





“அப்படியானால்…..” மாணவன் இழுத்தான்…





“சும்மாயிரு..” வெகு வேகமாய் குருவின் குரல்.





மாணவன் தெளிந்தான்.

Tuesday, January 18, 2011

சிசேரியன் தேவையா?



Sir, இன்று நெறைய பேர் சிசேரியன் விரும்பி செய்கிறார்களே... பிரசவ வலி இல்லை, இரண்டு நாள் tour போறமாதிரி ஆஸ்பத்திரி போயிட்டு வந்திடுறாங்க. இது சரிதானா? விளைவுகள் தான் என்ன?       S. ARAVIND






அமெரிக்காவிற்கும், ஈராக்கிற்கும் சண்டை வரக்கூடிய சூழல் உண்டானபோது சண்டை வந்து விட்டால் சரியான மருத்துவ வசதிகள் கிடைக்காதே என்பதற்காக ஏராளமான பெண்கள் சிசேரியன் செய்து கொண்டார்கள் என்பதை நான் கேள்விபட்டிருக்கிறேன். அதுபோல 2௦௦௦ ஆண்டு முடிந்து புதிய நூற்றாண்டு பிறக்கிற நேரத்தில் தனது குழந்தை பிறக்க வேண்டும் என்கிற நோக்கில் உலகம் முழுக்க சிசேரியன் செய்து கொண்டவர்கள் அதிகம்.


ஆனால் நமது நாட்டில் எந்த காரணமும் இன்றி சிசேரியன் அதிகரித்து வருவது வருந்தத்தக்க விஷயமாகவே இருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் 15 சதவீதத்திற்கு மேல் சிசேரியன் பிரசவங்கள் தேவை இல்லை என உலக சுகாதார மையம் கூறிய போதும் இந்த குறிப்பிட்ட அளவை விட ஏழுமடங்கு அதிகமான சிசேரியன் நடை பெறுவதாக ஆய்வுகள்தெரிவிக்கின்றன.


அதிலும் நம்ம தமிழ் நாட்டில் அதிகமான சிசேரியன் நடைபெறுவதாக புள்ளிவிவரம் கூறுகிறது. அரவிந்த் கூறியதுபோலஇரண்டு நாள் டூர் போயிட்டு வருவது போல சிசேரியன் பண்ணிட்டு வந்துடுறாங்க. ஆனால் இதனோட பின்விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை.


மனித உடல் மிகவும் சூட்சுமமாக செய்யப்பட்ட இயந்திரம். இந்த இயந்திரத்தில் உள்ள நரம்புகள் மட்டுமே நவீன கால மருத்துவத்திற்குத் தெரிந்திருக்கிறது. இதற்கும் மேலாக பிராண சக்தியைக் கொண்டு செல்லக் கூடிய நாடிகளைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு ஏற்பட வேண்டும். நமது சித்தர்களும், யோகிகளும் இந்த நாடிகளைப் பற்றிக் கூறும்போது மேலை நாட்டவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.


காரணம், நரம்புகளைப் பற்றிய நுட்பங்களைத் தெரிந்துகொள்ள MRI Scan இருப்பது போல நாடிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள மருத்துவ கருவிகள் இல்லாமல் இருந்ததே. ஆனால் சமீப காலத்தில் கிரிலியன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டக் கருவியால் நாடிகளையும் படமெடுக்க முடிகிறது . இந்த கருவியால் படமெடுக்கும்போது நாடிகள் மட்டுமல்லாது நமது யோகிகள் கூறிய யோகச்சக்கரங்களையும் பார்க்க முடிகிறது.








                                                           





                                                       (KRILIAN PHOTOGRAPHY)




நமது உடலில் 72000 நாடிகள் இருக்கிறது.

(இருப்பான தேகம் எழுபத்திரண்டாயிரமான நாடிதனில்,

ஏலப்பெரு நாடி ஒக்கத் தசமத் தொழிலை

ஊக்கத் தசவாயுக்கள் தக்கபடியானதே சார்பு.- அகஸ்தியர் )

இந்த நாடிகளில் முக்கியமான நாடியாக சுழுமுனை நாடி சொல்லப்படுகிறது.
சுழுமுனை நாடியிலிருந்தே பிற நாடிகளுக்கு vital energy எனச் சொல்லக்கூடிய பிராண சக்தி பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இந்த சுழுமுனை நாடியே உடல் உள்ளுறுப்புகளுக்குப் பிராண சக்தியை வழங்கக்கூடிய முக்கியமானஓடுபாதை .

சுழுமுனை நாடி உடலின் மையத்தில் முன்னும் பின்னுமாகச் செல்கிறது(REN channel,  DU channel) இதனை போகமஹரிஷியால் கற்றுக்கொடுக்கப்பட்ட சீன வைத்தியமும் ஏற்றுக்கொள்கிறது. சிசேரியன் செய்யும்போது இந்த முக்கியமான நாடி வெட்டப்படுகிறது. இதன் காரணமாக மண்ணீரல்(sp12, sp13)., கிட்னீ,(ki12, ki13) பித்தப்பை போன்ற உள்ளுறுப்புகளுக்குச் செல்லக்கூடிய பிராண ஒட்டப்பாதை தடை செய்யப்படுகிறது.


இதன் தொடர்விளைவுகள் என்னவென்று பார்ப்போமா!



மண்ணீ ரலுக்குச் சக்திக்குறைவு ஏற்படும்போது, மண்ணீரலின் விஷேச குணமான "பிடித்து வைக்கும் தன்மை" குறைகிறது. இதனால் உடல் பருமன் உண்டாகிறது.  குடல் இறக்கம், மூலம், உதரவிதான இறக்கம், கர்ப்பப்பைஇறக்கம் , போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.







கிட்னியின் சக்திக்குறைவால் அடி முதுகு வலி ஏற்படலாம். நரம்புகளிலும் எலும்புகளிலும் கால்சியத்தின் அளவு குறையலாம். செவித்திறன் குறையலாம். பித்தப்பையின் சக்திக்குறைவினால் உடம்பில்அளவுக்கதிகமான கொழுப்புப்படிமம் ஏற்படலாம். நமது உடலில் தசை நார்களின் கட்டுப்பாடு பித்தப்பையில் இருப்பதால் தசை நார்களின் ஆற்றல் குறையலாம். இத்தனை சிரமங்களையும் ஏற்றுக்கொண்டு சிசேரியன் தேவையா?

சிஷேரியனுக்கு மருத்துவர்களின் பணம் பண்ணும் ஆசை தான் முக்கிய காரணம் என்று சொல்வதை என்னால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.சில ஆராய்ச்சிகள் இன்றைய நடுத்தரவர்க்கத் தாய்மார்கள் தாங்களாகவே முன்வந்து சிசேரியன் மூலம் குழந்தைபெற்றுக்கொள்கிறார்கள் என்ற உண்மையையும் வெளிக்கொண்டு வந்திருக்கின்றன.


இதற்கு முதன்மையான காரணம் பிரசவ வலியின் வேதனையை அவர்களால் தாங்கமுடியாததுதான் என்றாலும், சில தாய்மார்கள் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தனது செல்வச் செழிப்பின் ஒரு குறியீடாகக் கொள்வதாகச் சில ஆய்வுகள் சற்று திடுக்கிட வைக்கின்றன. (அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பெருமையாக சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்)..


இன்னொரு முக்கியமான செய்தி, ஜோதிடம் என்ற மூடநம்பிக்கையினால் விளைவது. சில குடும்பங்கள் தங்கள் ஜோதிடர்களிடம் ஆலோசனை செய்து சிசேரியன் மூலம் இன்ன நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லது என நினைத்து மகப்பேறு மருத்துவர்களிடம் சிசேரியன் பிரசவம்தான் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதும் நடைபெறுவதுமுண்டு.

இதுபோன்று இன்னும் எத்தனையோ படித்த குடும்பத்தில் உள்ளவர்கள் இன்னும் மூடநம்பிக்கையில் நாகரிகம் என்ற பெயரில் தெரிந்தே இதுபோன்ற ஆபத்துக்களை தங்களுக்கு தாங்களே ஏற்படுத்திக் கொள்கிறார்கள் . நண்பர்களே ஒருவேளை உங்களிலோ அல்லது உங்களுக்கு தெரிந்த யாரேனும் இதுபோன்ற எண்ணங்களில் இருந்தாலோ அல்லது கேட்க நேர்ந்தாலோ உடனே இன்றே அவற்றை அடியுடன் நிறுத்திவிடுங்கள் . அறிவியல் வளர வளர அன்றாட வாழ்க்கைமுறை மாறுகிறது .


இன்றைய அறிவியல் வளர்ச்சி நமது வாழும் நாட்களை அதிகரிக்கப் போவதாக எண்ணி அதில் சிக்கி சீரழிந்து விட வேண்டாம் . அறிவியல் வளர்ச்சிகளை நம்மால் இயலாத செயல்களை செய்வதற்கு பயன்படுத்துங்கள் . நம்மால் இயன்ற செயல்களை அழிக்கும் வகையில் அவை அமையவேண்டாம் . அப்படி ஒருவேளை அமைந்தால் அப்பொழுது இந்த உலகத்தில் மனிதர்களாகிய நாம் முழுவதும் அழிந்து நாம் உருவாக்கிய அறிவியல் வளர்ச்சிகள் மட்டுமே மீதம் இருக்கக்கூடும் இந்த உலகத்தில். சற்று சிந்தித்து செயல்படுங்கள் . இனியாவது நாம் வாழப்போகும் இந்த சிறிது காலத்தை இயற்கையுடன் இணைந்து இனிமையாக வாழுங்கள் . இயந்திரங்களுடன் சேர்ந்து இழந்துவிட வேண்டாம் .

சிலநேரங்களில், தவிர்க்க முடியாத காரணங்களால் சிசேரியன் தவிர்க்க முடியாது தான். குழந்தையின் தலை திரும்பாத நேரங்களில் சிசேரியன் தவிர்க்க முடியாது. ஆனாலும் இந்த சூழ்நிலை ஏற்படாமல் இருக்கத் , துவிபாதபீடம் நல்லமருந்து. இடம் மாறியுள்ள சிசுவை சரியான நிலைக்குத் திருப்பிவிடுவதற்குத் துவி பாத பீடம் , வெற்றிகரமாக கையாளப்பட்டுள்ளது. முதல் இரண்டு மாதங்கள் துவிபாதபீடம் செய்பவர்களுக்கு சிசேரியன் செய்யத்தேவையில்லை என்பதை என்னால் உத்திரவாதத்துடன் உறுதிகூறமுடியும்.குழந்தை கொடி சுற்றி பிறக்கிறது என்று சொல்கிறார்களே, இந்த நிலையையும்  துவி பாதபீடம், உத்தான பாதாசனா, பூரண தித்திலிகிரியா சரிசெய்யும்.


நண்பர்களே! மற்றொரு பதிவில் சிசேரியனுக்கான காரணங்களையும், தவிர்க்கும் வழி முறைகளையும் பற்றிப் பார்ப்போம்

Monday, January 17, 2011

உன்னையே நீ அறிவாய்




கி.மு.469 ல் கிரேக்க நாட்டில் ஓர் ஏழைச் சிற்பியின் மகனாகப் பிறந்தவர் சாக்ரட்டீஸ்.
 "நீ யார்?, எதற்காக வந்திருக்கிறாய்? என்ன செய்யப்போகிறாய்? என்பதை முதலில் தெளிவாக அறிந்துகொள், பின், அதன்படி நட!" என்றார் அவருடைய அப்பா. தனது நாற்பதாவது வயதுவரை ஒதுங்கி இருந்த சாக்ரட்டீஸ்அதன் பின்பு தன் எண்ணங்களை தைரியமாக, பேசத்தொடங்கினார்.


கடவுளை அவர் மறுக்கவில்லை, ஆனாலும் கடவுள் பெயரால் நடைபெறும் முட்டாள்தனங்களை எதிர்த்தார். உருண்டையான சப்பை மூக்கு , பிதுங்கி நின்ற கண்கள், குட்டையான உருவம், அசிங்கமான தோற்றம் இதுதான்
சாக் ரட்டீஸ்.ஆனாலும் அவர் பேச்சைக் கேட்க இளைஞர்கள் கூட்டமாக வந்தார்கள்.

எழுபதாவது வயதில் இளைஞர்களைக் கெடுக்கப் பார்க்கிறார் எனும்குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டது . "மன்னிப்பு கேட்டால் உயிர் பிழைக்கலாம் என நீதிபதிகள் சொன்ன போதும் "உயிரை விட என்னுடைய
கருத்துக்கள் உயர்ந்தவை" என்று உயிர்விட தயாரானார்.




மரணத்தேதி குறித்த அந்தக் குறிப்பிட்ட நாளும் வந்தது .


"நீங்கள் வாழ்வதற்கு தயாராகுங்கள் நான் விடை பெறுகிறேன்" என சுற்றி நின்ற, சீடர்களைப் பார்த்து புன்னகைத்து விட்டு மகிழ்ச்சி குறையாமல் தனக்கான நஞ்சுக்கொப்பையை வாங்கிக் கொண்டார் சாக்ரட்டீஸ். " நஞ்சினை இப்பொழுதே குடிக்க வேண்டாம் சற்று நேரம் கழித்து குடிக்கலாம்" என சீடர்கள் சொல்ல 'காலம் தாழ்த்துவதால் நீங்கள் வீடு திரும்ப நேரமாகலாம் " எனக்கூறி விஷத்தை ஒரு சொட்டுக் கூட மிச்சம் வைக்காமல் குடித்து முடித்தார்.


"உங்கள் இறுதிச்சடங்கு எப்படி அமைய வேண்டும்," என சீடர்கள் கேட்டனர் .



"மரணத்துக்குப் பின் என்னை நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது, என் உடலை என்ன செய்தாலும் எந்தப் பயனும் இல்லை" எனக்கூறி விடைபெற்றார் சாக்ரட்டீஸ்.




அந்த மாமனிதன் நமக்காக செய்த உபதேசம் என்ன தெரியுமா?




"உன்னையே நீ அறிவாய்"




"நண்பர்களே ! உண்மையான அறிவு என்ன தெரியுமா? தன்னை அறிவது தான்."

தன்னை அறிந்தால் மட்டுமே சுற்றி உள்ள உண்மைகளை உள்ளது உள்ளபடி அறிய முடியும். வாழ்வை வெல்லமுடியும்.







"தன்னை அறிந்தால் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே ."





                                                                         ஒம்தத் சத் 

Saturday, January 15, 2011

இதுவும் கடந்து போகுமா............

" நான்" எனும் பாதரசம் பூசிய

மாயக் கண்ணாடி என் மனம்.....


முகம் பார்க்கும் மாயக் கண்ணாடியில்
உலகம் பார்க்க நினைத்தது யார் குற்றம்?


மாயக் கண்ணாடி
அந்தப் பாதரசம் இழக்கத் தயாராயில்லை
உலகம் காட்டவும் தயாராயில்லை

தனக்கான முகங்களை மட்டும்
தப்பிக்க விடாமல் தன்னுள்
பத்திரப் படுத்திக் கொண்டேயிருந்தது...........

தப்பியோட முடியாத பிம்பங்கள்
விட்டு விலகாத "நான்" பிம்பங்கள்
சுகமாய்த்தான் இருந்தது
அந்த" அன்பு மழையில்"
நனையும் வரை


அந்த அன்பெனும் அடைமழையில்
நனைந்தது மாயக் கண்ணாடி


 மழை நின்றாலும் பரவாயில்லை
காணாமல் போய்விட்டது. 
உதிர்ந்து கரைந்தது பாதரசம்
"நான்" இழந்தது மாயக் கண்ணாடி.